இளங்கவிதைகள் (1)

உன் வரவிற்காகவே
இந்த கதிரவன்
கிழக்கில் காத்திருந்தான்
பூபாளம் இசைத்துக்கொண்டு!

அன்பே
விடியலை நோக்கிப் பயணித்த எனக்கு
ஒரு நிலவு முகத்தின் தரிசனம்
எப்படி கிடைத்தது?

என் எண்ணம் –
கடற்கரை ஈர மணலில்
கானல் வரிகள்
எழுதிக் கொண்டிருந்த
என் இதயம்,
இன்று
உன் திருமுக தரிசனத்தால்
புதிய திருப்பத்தில் –
அதிசய ராகமிசைக்கும்
ஓர் அற்புத வீணையாக!

இந்த வசந்த காலக் குயிலின் வரவால்
என் சோக ராகங்கள்
வறண்டது உண்மைதான்!

என் இதயக்கதவை யாரோ தட்டுகிரார்கள்!
காலடிச் சத்தம் கேட்கிறது உரசலாக –
யாராயிருப்பினும் பரவாயில்லை!
நான் திறக்கப் போவதில்லை!

சுவடுகள் வீட்டு வாசல் வரை
பதிந்துள்ளன –
அட! யாரது?
என் எண்ணக் கதவைத் திறந்து,
என் இதய வீட்டில்
இடம் பிடித்து அமர்வது?
என் மன மாளிகையை
நான் யாருக்கும்
வாடகைக்கு விடுவதில்லையே?

ஓ!
நீ நிரந்தரமாய்
குடியிருக்க வந்துள்ளாயா?

உன் வருகை உதயம்
என் கனவுக் கோட்டைக்கு
புதிய விடியலாக இருக்கட்டும்!

About The Author