வயதென்ன (2)

மீன் மொழி
கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த்
திடுக்கிட்டான்

நீரில் பதிந்த விழிகளை
நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன்
கவியிதழ் விரித்தான்

ஓ…. நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது
ஒன்றாகவும் இருக்கும்
ஒரு
யுகமாகவும் இருக்கும்

எந்த வயதுக்குள்
நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல
வெளிவந்து விழும்போது

மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான்
பிறக்கிறான்
நல்ல
இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ… போ….
உனக்கொன்றும்
இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த
ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப்
புதைத்துக்கொண்டான்

கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்…
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும்
தேன் கவி வரிகள்

இப்போது
என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை

எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை
வேர்களாகக் கேட்டது

* (ஜூன் 2003)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author