ஆமைவடை மற்றும் மசாலா தயிர் வடை

தேவையான பொருட்கள்:

உருண்டை உளுத்தம்பருப்பு – 1 1/4 கப்
துவரம்பருப்பு – 1 கப்
உப்பு சேர்த்து இடித்த பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை – சிறிது, பொடியாக நறுக்கியது
சுவைக்கு தேவையான உப்பு
வடைகள் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்.

பிறை குத்தின கட்டித்தயிர் – 1 லிட்டர்
வறுத்த கடலைப்பருப்பு – அரை கப்
பச்சை மிளகாய் – அவரவர் விருப்பத்திற்கேற்ப
ஜீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் -1/2 கப்
உப்பு – சுவைக்கு
தாளிக்க கடுகு (விருப்பப்பட்டால்) மற்றும், எண்ணெய்

வடை செய்முறை:

இரண்டு பருப்பு வகைகளையும் நன்றாகக் கழுவி தேவையான அளவிற்கு மாத்திரமே நீர் ஊற்றி ஊற வைக்கவும். வடைக்கு அரைக்கும்பொழுது சிறிது சிறிதாக நீர் தெளித்துக் கெட்டியாக, பதமாக அரைக்கவும்.  உப்பு, பச்சை மிளகாய் விழுதையும், தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையை சேர்த்துக் கலந்து, எண்ணெயை காயவைத்து உங்கள் விருப்பத்திற்கேற்ப சிறியதாகவோ, பெரியதாகவோ உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  எண்ணெயை நன்றாக வடிய விட்டு சூடாகவே மோர்க்குழம்பில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

மோர்க்குழம்பு செய்முறை :

பிறை குத்தின கட்டித் தயிரை கால் கப் தண்ணீரை ஊற்றிக் கடைந்து கொள்ளவும்.  வறுத்த கடலைப் பருப்புடன் பச்சை மிளகாய், ஜீரகம், தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்துக்கொண்டு, அரைத்த விழுதை கடைந்த தயிரில் நன்றகக் கலக்கி விட்டு தேவைக்கேற்ப கலந்து வைக்கவும். ஆமை வடைகளை ஊற வைத்து உண்ண, சுவையோ சுவை.

About The Author