பால் பொங்கல்

நிலாச்சாரல் வாசகர்கள் அனைவருக்கும் 2011 ஆம் ஆண்டின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

"சுழன்றும் ஏர் பின்னது உலகம் – அதனால்
உழந்தும் உழவே தலை"

என்ற நம் வள்ளுவனார் வாக்கிற்கேற்ப புத்தாடை அணிந்து புது அரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள், நாட்டுக் கறிகாய்களுடன் கால மாறுபாடுகளுக்கேற்ப அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்றவாறு கிராமங்களில் மண்பானையிலோ, நகர்ப்புறங்களில் நவீன வசதிகளுடன் கூடிய காஸ் அடுப்பிலோ பொங்கல் செய்து உலகைக் காக்கும் சூரிய பகவானுக்குப் படைத்து தத்தம் சுற்றத்தாருடன் உண்டு களிக்கும் தமிழ் மக்களுக்காக இங்கு பால் பொங்கல் தயாரிக்கும் சில குறிப்புகளைத் தருகிறோம்.

பால் பொங்கல் :

தேவையான பொருட்கள்:

பால் – நான்கு லிட்டர்
புது அரிசி – ஒன்றரை கப்
உப்பு – அரை தேக்கரண்டி.

செய்முறை:

பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். நன்றாகப் பொங்கி வரும் போது, அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவிய அரிசியைப் போட்டு தழலை ஏற்றியும், இறக்கியும் நன்றாகக் கலந்துக் கொண்டே இருக்கவும். அரிசி பாலில் நன்றாகக் குழைந்து வெந்த பிறகு உப்பைக் கலந்து விடவும்.

‘பொங்கல் பொங்கி வருதம்மா!’ என்று மழலைச் செல்வங்களும், சுற்றத்தினரும் வாழ்த்துச் செய்தி பாட, பாலில் வெந்த சுவையான பொங்கல் தயாராகி விட்டது.

பின் குறிப்பு : பால் பொங்கல் சற்று அதிகமாக மீந்து விட்டால், அதனுடன் நீர் விட்டு மூடி வைத்து, மறுநாள் இட்லியும், தோசையும் கூடத் தயாரிக்கலாம்.

பொங்கல் இட்லி :

தேவையான அளவு பொங்கலுடன் இட்லி ரவையைக் கலந்து கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துண்டுகள், ஊறவைத்த கடலைப் பருப்பையும் ஆகியவற்றை சேர்த்து, கடுகைத் தாளித்துப் போட்டு ஓரிரவு புளிக்க வைத்து விடவும். மறுநாள் இட்லி தயாரித்து தேங்காய் சட்னியுடன் பா¢மாறலாம்.

பொங்கல் தோசை

பொங்கலுடன் அரிசி மாவைக் கலந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகள், கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை, இடித்த பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் மொருகலாக சுட்டெடுக்க, சுவையான தோசை தயார்.

About The Author