கூந்தல்

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் ஒரு காலும் இருக்கமுடியாது – வாசனாதி திரவங்களின் மூலமாகத்தான் மணம் இருக்கமுடியும் என்று சிவபெருமானுடன் வாதிட்டார் புலவர் நக்கீரனார் என்பது திருவிளையாடல் புராணம்.

ருசிமிக்க உப்புமாவின் அழகு காந்தல்: குணமிக்க பெண்களின் அழகு கூந்தல். அன்று முதல் இன்று வரை பெண்களின் கூந்தல் அழகிற்கு மயங்காதவர் உண்டோ? வர்ணிக்காத கவிஞர்களும் உண்டோ? நீளமான – குட்டையான – அடர்த்தியான – சுருட்டையான – செம்பட்டையான- வெண்ணிற என்று கூந்தலில் பலவகையுண்டு.

அவளுக்கென்ன கூந்தல் இருக்கு: கொண்டை போட்டுக்குகிறா! என்று கூந்தலில்லாதவர்கள் ஆதங்கப்படுவதும் உண்டு.
கூந்தலின் அலங்காரம் பலவகையுன்டு.

வயது வந்த பெண்டிற்கு கூந்தலைப் பின்னி பூச்சூடி குஞ்சலம் வைத்து அலங்காரம் செய்வித்து அழகு பார்ப்பது தனிச்சிறப்பு. பெண்கள் கூந்தலைப் பின்னிக்கொள்ளாமல் அப்படியே அள்ளி முடித்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. பழங்காலத்தில் முடியாத கூந்தலுக்கு அமங்கலம் என்று ஒரு காரணப் பெயர் உண்டு.

மகாபாரதத்தில் பாஞ்சாலி தன் கூந்தலை அவிழ்ந்து விட்டு பாண்டவர்கள் கௌரவர்களை வீழ்த்தும் வரை கூந்தலை முடியேன் என்று சபதம் இட்டதாக நிகழ்வு. கற்புக்கரசி கண்ணகியும் தன் கணவனுக்கு நேர்ந்த கதியை மன்னரிடம் சென்று தன் கூந்தல் அவிழ்ந்த நிலையில் போராடினாள் என்பதும் வழக்கு. கூந்தலை முறையாகப் பின்னி நன்கு பராமரிப்பது என்பது சிரமமான காரியம். அது ஒரு கைவந்த கலை. நாள்தோறும் தேங்காய் எண்ணை தடவி வாரம் இருமுறை (பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி) நல்லெண்ணை தேய்த்து, மாதம் இருமுறை ஷாம்பு தேய்த்துக் குளித்து வந்தால் கூந்தலின் அழகோ அழகு.

கூந்தல் அதிகம் இல்லாதவர்கள் சவுரி வைத்துப் பின்னுவதும் உண்டு. பெண்களில் சிலர் கூந்தலை கொத்தமல்லிக் கட்டு அல்லது கீரைக்கட்டு போல் வைத்திருப்பர். சிலர் நன்கு திரிக்கப்பட்ட கயிறுபோல் இறுகப் பின்னியது போல் வைத்திருப்பர். சிலர் கூந்தலை சிறிதும் முடியாமல் நீண்ட சேமியா போல் அப்படியே விட்டு விடுவர். குட்டை முடியுள்ளவர்கள் ஒரு கிளிப் அல்லது பேண்ட் மூலம் கட்டியிருப்பர். ஒரு சிலரது கூந்தல் ஒட்டடைக் குச்சியின் நார்போல் பின்னாமல் குட்டையாக இருக்கும். இந்தியாவில் அதுவும் தென் இந்தியாவில் கருநிற கூந்தலுக்கு தனி ஒரு மதிப்பு. மரியாதை. கௌரவம்.

வெளிநாட்டில் நீண்ட கூந்தலை ஒரு சாதனையாகவே கருதி வளர்த்து வருகிற பெண்களும் உண்டு. அதற்கான போட்டியும் அவ்வப்போது நடைபெறுவதும் உண்டு.

வேடிக்கையான கதை ஒன்று உண்டு. தனது திருமணத்திற்கு நிபந்தனை விதித்தான் ஒரு மணமகன். தனக்கு வரப்போகும் பெண்ணிற்குக் கூந்தல் நீளமாகவும் நன்கு அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்பது அந்த நிபந்தனை. அவ்வகையில் ஒரு பெண் அந்த மணமகனைத் திருமணம் செய்துகொண்டாள்.

முதல் இரவில் மணமகளிடம் உனது கூந்தலின் அழகில் மயங்கித்தான் உன்னைத் திருமணம் செய்துகொண்டேன் – உன் கூந்தலைத் தொட்டுப் பார்க்க அனுமதி தருவாயா? என்று கேட்டான். உடனே மணமகள் உங்களுக்கு நான் அழகாய் தெரியவில்லை – என் கூந்தல் தான் அழகாய் தெரிகிறதா? என்று தன் தலையில் மாட்டியிருந்த ‘விக்’ கை கழட்டி மணமகன் கையில் கொடுத்துவிட்டாள்.

இதனைப் படித்த பிறகு முடியைப் பிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

About The Author

6 Comments

  1. chitra

    கூந்தல் அழகிற்கு மயங்காதவர் உண்டோ? நன்று பசந்தி அடுத படைப்பு மயக்கதிலிருந்து மீட்பதா?? ஆவலுடன் காத்திருக்கிறோம்

  2. k Narasimhan

    பொதுவான தகவல் தந்ததர்க்கு நன்றி. கல்யாணத்திர்கு முன்பே கூந்தலை செக் செய்திருக்கலாம்.

  3. sriraam

    ரொம்ப நல்லா இருக்கு, எரவன் அருலலில், ஒஙல் பனி தொடர வல்துகல், நன்ட்ரி

  4. S. Subramanian

    இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுறை. நீங்கள் நீண்ட கூந்தலில் மயங்கி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமுன் அவளுடைய கூந்தலை நன்றாக இழுத்துப் பார்க்கவும். இல்லையேல் மோசம் போய் விடுவீர்கள். பெண்களே கல்லைக் கீழே போடுங்கள்!

Comments are closed.