சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே,

எப்படி இருக்கீங்க? தீபாவளியெல்லாம் எப்படிப் போச்சு? எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் (கொஞ்சம் தாமதமாச் சொல்லிட்டேனோ??) இந்த தீபாவளிக்கு வித்தியாசமா ஏதாவது செய்திருந்தீங்கன்னா, அதைப் பத்தி எழுதி அனுப்புங்களேன்.

இந்தத் தடவை, பொண்ணுங்களுக்கெல்லாம் விதவிதமா ‘தீபாவளிக்கு புதுசு’ன்னு மசக்கலி, வஸ்த்ரகலா (இந்த பேரை இரண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி போத்தீஸ் விளம்பரத்துல பார்த்த ஞாபகம், பெண்கள் யாராவது தகவல் தெரிஞ்சா சொல்லுங்களேன்!), அனன்யான்னு அர்த்தம் புரியாத பேரிலெல்லாம் உடை தயாரிச்சிருக்காங்க. நமக்குத்தான் எதுவும் கிடையாது. ஏன் ஆம்பிளைங்களுக்கு இந்த மாதிரி புதுப் பேர்ல கால்சட்டையும், சட்டையும் விக்கக் கூடாது? உதாரணத்துக்கு ஜரிகை வேலை செஞ்ச துணிக்கு ஜால்ரா (தலை தீபாவளி – புது மாப்பிள்ளைக்கு), நிறைய பை வச்ச கால் சட்டைக்கு 20-20 (ஒரு காலுக்கு 20ன்னா, இரண்டு காலுக்கு 20-20 தானே?) இப்படி விதவிதமா.. உங்களுக்குத் தோணுற பேரையும் எழுதி அனுப்புங்களேன். சிறந்த பேர் எழுதறவருக்கு "சிறப்பு" பட்டம் குடுத்துடுவோம்.

தினமும் கணினியில் எந்தத் தளத்துக்குப் போறோமோ இல்லையோ, கூகுள் முகத்தில் முழிக்காம இருக்க மாட்டோம். கூகுள்ன உடனே எனக்கு ஞாபகம் வர்றது ரிஷி தாங்க. அவர் கூகுளைப் பத்தி பகிர்ந்துக்கிட்ட உபயோகமான விஷயங்களையும், வெட்டியா நாங்க அடிச்ச அரட்டையையும் இங்க பார்க்கலாம்!

https://www.nilacharal.com/ocms/log/01190920.asp 

இப்ப விஷயம் கூகுள் இல்லை, பிளாக்கிள். பொதுவா எல்லா இணையதளமும் வெள்ளை நிறப் பின்னணியில்தான் இருக்கும். நம்ம கணினியோட உள்கட்டமைப்பு பொறுத்து ‘காந்தி’ (brightness), ‘மாறுபடும் தன்மை’ (contrast) வேறுபடும். ஆனாலும் சிலரோட கணினித்திரையெல்லாம் பார்த்தா பளீர் வெள்ளையா, கண்ணீரே வரவழைக்கிற அளவுக்கு இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த அதிகப்படி ஒளி உமிழலால் மின்சாரமும் கூடுதல் செலவாகும். இப்பத்தான் உள்ள வர்றார் பிளாக்கிள்.

http://www.blackle.com

கூகிள் இணையதளத்தோட அதே செயல்பாடுதான், ஆனா கறுப்புப் பின்னணியில். எந்தக் கணினித்திரையில் பார்த்தாலும் கண்ணை உறுத்துவதில்லை, மின்சாரமும் சேமிக்கப்படுது. அடிக்கடி உபயோகிக்கிற தளம் கூகிள்ங்கறதால, நம்ம கண்களைக் காக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும், பிளாக்கிள் உபயோகிச்சுப் பார்க்கலாமே.

சில சமயம் மகிழ்ச்சியாக இருக்கும்போது பாடல்களை வாய் மூடி முணுமுணுப்பதுண்டு. வியாழன் கிரகம் எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கும்போல. அதனோட முணுமுணுப்பைக் கேளுங்களேன்.

http://www.interestingfacts.org/fact/facts-about-jupiter 

ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடுறது சில சமயம் சிரமமா இருக்கு. அப்படிக் கண்டுபிடிக்கிற வார்த்தைக்கு திரும்ப அகராதியைப் புரட்டணும். தமிழ் வார்த்தைகள் வழக்கொழிந்து போனதுதான் காரணம். தமிழ் வார்த்தைகளை அதிகமாப் புழங்கணும். உலகத்தில் ஒரு இனத்திற்கு இருக்கிற ஒரே அடையாளம் மொழிதான். நம்ம மொழியை நாமே பேசக் கூசினா, நாளைக்கு ‘தமிழன்’ங்கற அடையாளமே இல்லாமப் போய்டும். பெரும்பாலானவர்களுக்கு இந்த உணர்வு இருக்கிற மாதிரிதான் தோணுது. ஆனாலும் வெளிப்படுத்தத் தயங்குறாங்க.

யாரோட பிறந்தநாளோ, பண்டிகையோ, எந்த வைபவம்னு அழைத்தாலும் நான் தமிழில்தான் வாழ்த்துமொழி சொல்வேன் – தெரிஞ்சவங்களா இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி. பிறந்தநாள் வாழ்த்துக்கள், முன்கூட்டிய திருமண நாள் வாழ்த்துக்கள், நன்றி இப்படி சொல்றதுதான் வழக்கம். ஆரம்பத்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க (நானே முதலில் தயங்கித்தான் ஆரம்பிச்சேன்!!). ஆனா பின்னாடி அவங்களும் என்கிட்ட இப்படிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க – மகிழ்ச்சியோட தாங்க… நன்றின்னு தமிழில் சொல்லும்போது எதிரில் இருக்கறவங்க முகத்தில் ஒரு ஆனந்தம் வரும். ஏன்னா, சம்பிரதாயமா ‘THANKS’ சொல்றவங்க மத்தியில் தனியா ஒரு ‘நன்றி’ வரும்போது ஒரு கணம் கவனம் நம்ம பக்கம் திரும்புது. கூடவே, அவங்களுக்கு நாம மதிப்பளிக்கிற மாதிரி ஒரு எண்ணம் வருதோ என்னவோ! எனவே நண்பர்களே, நீங்களும் உங்கள் வட்டாரத்தில் தமிழில் பேசிப் பார்த்துட்டு சொல்லுங்களேன் (முழுக்க ஆங்கிலம் கலக்காமப் பேசச் சொல்லலைங்க, அதற்கு முதலடி எடுத்து வைங்கன்னுதான் கேட்டுக்கறேன். செய்வீங்களா?)

கூடவே, ஆங்கிலம் – தமிழ் அகராதிக்கு ஒரு நல்ல இணையதளமும் கண்டுபிடிச்சுட்டேன்.

http://www.tamilvu.org/tvuuni/library/dicIndex.htm

இப்ப ‘புதிய தலைமுறை’ன்னு ஒரு பத்திரிக்கை வந்திருக்கு. சில பல செய்திகள் நல்லாவே இருக்கு. உதாரணத்துக்கு, இந்த மாங்குடி பள்ளிக்கூடத்தைப் பத்தின கட்டுரை. படிச்சுட்டு அசந்து போய்ட்டேன், அரசாங்கப் பள்ளிக்கூடமா இதுன்னு. அந்தப் பள்ளியோட தலைமையாசிரியர் ஜோதிமணி பாராட்டப்பட வேண்டியவர். நீங்களும் படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.

http://www.luckylookonline.com/2009/10/blog-post_03.html

ம்ம்.. இந்த மாதிரி எல்லா அரசு ஊழியர்களும் இருந்துட்டா…?!

சரிங்க, கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு. இந்த வாரம் ஏதும் கதை இல்லையான்னு கேட்கிற நண்பர்களுக்கு இந்தப் பக்கம் :

https://www.nilacharal.com/ocms/log/05260807.asp

நீங்களும் பழைய கதைகளுக்கு புது முடிவு யோசிச்சு வச்சிருக்கீங்கன்னா, எழுதுங்க.

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது,
ஜோ

About The Author

16 Comments

  1. P.Balakrishnan

    ஒரு காலுக்கு 50 மட்டும்தான்னு டிவி விளம்பரம் வருது. நீங்க ஒரு காலுக்கு 20ன்னு சொல்றது ரொம்ப சீப் ரேட் தான்!

  2. DeviRajan

    ப்ளாக்கிள் சூப்பர் ஜோ! அப்ரம் ஜோ, எங்களை மாதிரி தோடு போட்டுடீங்க, பின்னால முடி வளத்து ரப்பர் பேண்ட் போட்டுட்டீங்க, நாங்க போடற சுடிதார் மாதிரி ஷெர்வானி போட்டுட்டீங்க. இப்போ புடவைல கண்ணு வச்சுட்டீங்க. கொஞ்ச நாள்ல அதுவும் உங்களுக்கும் வந்துரும். கவலைப்படாதீங்க.

  3. kalayarassy

    உலகத்திலேயே தாய் மொழியில் பேச வெட்கப்படும் ஒரே இனம் நம் தமிழ் இனம் மட்டுமே. இதே நிலை நீடித்தால் தமிழன் என்கிற சொந்த அடையாளத்தையும் இழந்து விரைவில் இரண்டுங் கெட்டான் நிலைமைக்குத் தள்ளப் படுவோம்.
    தக்க சமயத்தில் இது பற்றிய உங்களது ஆதங்கத்தை வெளியிட்டு தமிழ்த்தாய்க்கு உங்களால் ஆன தொண்டினைச் செய்துள்ளீர்கள். உங்களது முயற்சி தொடரட்டும்.

  4. Jo

    வணக்கம் தேவி! என்ன தான் நாங்க முயற்சி பண்ணினாலும் எதுவும் எங்களுக்கு எடுபட மாட்டேங்குதே… உங்களுக்குத் தான் எல்லாம் பொருந்துது.. எங்களுக்குன்னு எதையாவது விட்டு வச்சா, நாங்க உங்க வழிக்கு வருவோமா?

  5. Dr. s. Subramanian

    கலையரசி:
    நீங்கள் உங்கள் பெயரை (அழகான பெயர்) ஆங்கிலத்தில் எழுதும் போது மாற்றி எழுதவும். நீங்கள் எழுதியிருப்பது கலயரஸ்ஸி” என்று படிக்க வேண்டியிருக்கிறது”

  6. Jo

    கலையரசி, இந்த வெட்கும் நிலை மாறும் என்று நம்புவோம்.

  7. Rishi

    ஜோ
    வழக்கம்போல கலக்குறீங்க..! இன்னும் கொஞ்சம் (ஒன்றிரண்டு) பிட்ஸ் கூடுதலாக சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    அது சரி.. பிரைட்நஸ்ஸுக்கு ஏன் தமிழ்ல காந்தி”ன்னு சொல்றீங்க..? விளக்கம் சொல்லுங்களேன்.”

  8. Kalayarassy G

    நான் புதுச்சேரியைச் சேர்ந்தவள். எனவே என் பெயரைப் பிறந்த பதிவில் பிரெஞ்சில் எழுதி விட்டார்கள். எனவே பின்னால் குழப்பம் ஏதும் வராமலிருக்க எல்லாப் பதிவுகளிலும் அதே போல் எழுதும் படி ஆகிவிட்டது.

  9. Dr. S. Subramanian

    Rishi:
    kAnthi means light or rays of light (oLi or kiraNam in Thamizh). The flower sUryakAnthi is so called because it keeps facing the sun along its trajectory throughout the day (since it is attracted by the rays of sun). In Thamizh Is it called Agupeyar? Sunray (sUryakAnthi) becoming the appropriated name for the flower which is attracted by the sunray.

  10. Rishi

    தகவலுக்கு நன்றி டாக்டர்.
    காந்தி என்றால் கிரணமா.. சரி.. ஆனால் கிரணம் என்பது தமிழ் வார்த்தைதானா? அதை brightnessக்கு அர்த்தமாகக் கொள்ளமுடியுமா? அல்லது ஒளி உமிழ்வு என்று சொல்லலாமா? (Radiating or reflecting light என்று விக்கிப்பீடியாவில் சொல்கிறார்கள்)

  11. mano

    ஜோ நல்லா கலக்குறீங்க அசத்துங்க அசத்துங்க…….

  12. Jo

    நன்றி மனோ! ரிஷி, உங்கள் கேள்விக்கு ஒரு பதில் பின்னூட்டம் எழுதியிருந்தேன்.. அது உங்களுக்குக் கிடைச்சுதா?

  13. Rishi

    ஜோ
    நீங்க அனுப்பினது ஒன்னும் கிடைக்கலையே! ரெகுலராக பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.

Comments are closed.