நம்பிக்கைகள் (1)

நம்பிக்கைகள் இல்லாமல் மானுடம் இல்லை. நம்பிக்கை என்ற வித்தே மனிதனை ஆல மரமாக்கி, நற்செயல்களை
அவன் மூலம் கனியச் செய்கிறது.

நம்பிக்கைகள் கணக்கிலடங்காதவை- மனிதனுக்குப் பலவாக நாட்டுக்கு நாடு வேறுபடுபவை.

இக்கட்டுரையில் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம்:

குறிப்பு- இக்கட்டுரை,
1. நம்பிக்கைகளின் தன்மையை விவாதிக்கவில்லை.
2. நம்பிக்கைகளின் விவரங்களை மட்டும் பதிவு செய்கிறது.

நம்மிலிருந்து…..

1. உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலுக்குத் தமிழக அமைச்சர்கள் செல்வதில்லை. காரணம், கோவிலுக்குச் சென்ற பின் பதவி போய் விடும் என்ற நம்பிக்கைதான்.

2. (புதுச்சேரி–விழுப்புரம்) சாலை – வில்வநல்லூர்-(வில் வீரர்கள் வாழ்ந்த ஊர்=வில்லியனூர்) இங்குள்ளது வில்வநாதர்-கோகிலாம்பிகை ஆலயம்- இந்த பக்தர்களின் நம்பிக்கைகள்-

 சுகப்பிரசவம் வேண்டி, அம்மனுக்கு முன்னுள்ள நந்தியை நேர் எதிராகத் திருப்பி வைத்து வேண்டுதல். பிரசவம் நல்லபடியாக முடிந்ததும், மீண்டும் அம்மனை நோக்கித் திருப்பி வைத்து விடுவர்.

 இந்த அய்யனுக்குப் பூசை செய்த வெண்ணையை உண்டால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

 ஊரில் மழை பெய்யாவிட்டால் இங்குள்ள வருண லிங்கத்தைச் சுற்றித் தொட்டி கட்டி நீர் நிரப்பி விடுவார்கள். (இதற்குப் பின் மழை பொய்த்தது கிடையாது).

3.விழுப்புரம்-7 தலைமுறைகள் கண்ட, 150 பேர் கொண்ட குடும்பத்தின் தலைவி, 102 வயது ஜைன மூதாட்டி, பெயர் அஞ்சி பாய்.
இவர் பரமபதம் அடைய, 58 நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கடும் தவமிருந்து, வைகுண்ட ஏகாதசியான 30.12.06 அன்று காலை 6 மணிக்கு உயிர் நீத்தார். தினமலர்.-31.12.06.

4. "கல்கி பகவானின் பாதுககைகளை வீட்டில் வைத்துப் பூசித்து, விருப்பம் பிரார்த்தித்துத் தொட்டுக் கும்பிட்டால், பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், பாதுகைகள் நகரும். லக்னோவில் ஆயிரக்கணக்கானோர் நம்பிக்கையுடன் பிரார்த்தனை." D.C. 28.12.06

5. திருப்பதி ஏழுமலையான், ஏகாதசியன்று உற்சவராக, "உக்கிர சீனிவாசராக", நரசிம்மர் வடிவத்தில் உலா வருவார். முன்னொரு காலத்தில் பகல் நேரத்தில் இவ்வாறு உலா வந்த போது, சுற்றுப்புறத்திலுள்ள இடங்கள் தீயில் எரிந்ததால், பகல் உலா நிறுத்தப்பட்டு, தற்போது அதிகாலை 3 மணிக்கு உலா நடத்தப்படுகின்றது. உலா நேரத்தில் அப்பகுதியில் அனைத்து வியாபாரங்களும் (பயத்தால்) நியாயமான விலைக்கே நடக்கும். தி.ம.30.12.06.

6. அரியாக்குறிச்சி கிராமம் – உடையாள் என்ற வீரப் பெண்மணி வெட்டுடையார் காளியம்மனாக வழிபடப்படுகிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் மந்திரித்துத் தரப்பட்ட நாணயத்தை வேண்டிக் கொண்டு இரண்டு துண்டாக வெட்டிப் போடுவதன் மூலம் எட்டு நாட்களில் நியாயம் கிடைக்கப் பெறுவார்கள். இங்கு தினமும் குறைந்தது 50 பேராவது பிரார்த்தனை செலுத்துகின்றார்கள்.

(தொடரும்)

About The Author