மஹாதேவ் ஆலயம்

வட இந்தியாவில், பாகல்பூர் ஜில்லாவில் சுல்தான்கஞ்ச் என்கிற நகரம் உள்ளது. இங்குள்ள குன்றின் மேல்தான் மிகவும் புகழ்பெற்ற ‘அஜ்கெய்பிநாத் மஹாதேவ் ஆலயம்’ உள்ளது.

இங்கு கங்கை நதி பாய்வதால் மகாதேவருக்கு கங்கை நீராலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது! தெற்கிலிருந்து வடக்குப் பக்கம் ஓடுவதால் கங்கை இங்கு உத்தரவாஹினி ஆகிறாள். கங்கைக்கு இங்கு ஜானவி என்ற பெயரும் உண்டு. கங்கை எப்படி ஜாஹ்னவி என்று பெயர் பெற்றாள்?…

பழங்காலத்தில், ஜாஹ்னு என்ற முனிவர் இங்கு குன்றின் அருகில் ஆஸ்ரமம் அமைத்துத் தன் சிஷ்யர்களுக்கு வேதப் பயிற்சி அளித்து வந்தார். அதனால் இந்தக் குன்றுக்கு ‘ஜாஹ்னு கிரி’ என்று பெயர். ஒரு சமயம், அவர் தீவிரமான தவத்திலிருந்த நேரம், பகீரத முனிவர் தன் முன்னோர்கள் பரமபதவி பெற கங்கை நதியை வேண்டிச் சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தார். சிவனும் மனமகிழ்ந்து கங்கையைத் தன் ஜடாமுடியில் தாங்கிப் பூமிக்கு இறக்கினார். அவ்வளவுதான், கங்கை கட்டுக்கடங்காமல் பூமியில் கொட்டியது! தவத்தில் மூழ்கியிருந்த ஜாஹ்னு முனிவர் மேல் பாய்ந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வால் சீற்றமுற்ற முனிவர் கங்கையைத் தன் சக்தியால் அப்படியே விழுங்கிவிட்டார். பகீரத முனிவர் அங்கு வந்து, கங்கையை வரவழைத்த காரணத்தைக் கூறி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். கங்கையைத் திருப்பித் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். ஜாஹ்னு முனிவரும் தன் தொடையைக் கீறி கங்கையை வெளியே விடுத்தார். ஜாஹ்னு முனிவரிடமிருந்து வந்ததால் கங்கையும் ஜானவி என்ற பெயர் பெற்றாள்.

இங்குள்ள சிவன் சுயம்புவாகத் தோன்றியவர். ஆற்றின் நடுவில் இருக்கும் இந்தக் குன்றுக்குப் போக, முன்பு படகை உபயோகித்து வந்தனர். ஆனால் இப்போது, கரையிலிருந்து குன்றுக்குச் செல்லப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் மேல் கோயிலைத் தவிர, ஒரு மசூதியும் இருக்கிறது! இந்த மசூதி இக்தியார் முகமது கில்ஜியால் கட்டப்பட்டது.

சிவனின் ஆலயம் வட இந்திய பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. அவர் ‘கெய்பிநாத்’ என்ற பெயரில் ஜடாமுடியுடன் காட்சி தந்து அருள்புரிகிறார். குன்றில் இருக்கும் குகையில் பல சித்திரங்களைக் காண, நமக்கு அஜந்தா, எல்லோரா நினைவு வருகிறது. சுவர்களில் புத்த சமயச் சித்திரங்கள், ராமாயணக் காட்சிகள், மகாவிஷ்ணு, நரசிம்மர் போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வெறும் கல்தூண்கள் மட்டும் நிற்கின்றன. அங்கு கோயில் இருந்து பின்னால் அழிந்துபோயிருக்கலாம்.

ராமாயணத்தில், ஜனகரிடம் ஒரு வில் இருந்ததும், அந்த வில்லுக்கு நாண் பூட்டும் ஆண்மகனுக்குத்தான் தன் மகள் சீதையை மணமுடித்துத் தரமுடியும் என்று ஜனகர் நிபந்தனை விதித்ததும், ராமர் அந்த வில்லை அனாயாசமாகத் தூக்கி நிறுத்தி நாண் பூட்டியதும், அப்போது அது உடைத்ததும் நம் எல்லோருக்கும் தெரியும். அந்த வில்லை வட இந்தியாவில் ‘அஜ்கெய்ப் தனுஷ்’ என்கிறார்கள். விசுவகர்மா பிரத்யேகமாகச் சிவனுக்கென்று தயாரித்த இந்த வில்லை இந்தக் குன்றின் மேல்தான் சிவன் பெற்றுக் கொண்டாராம்.

இந்த வில் பற்றிய ஒரு புராணக் கதையைப் பார்ப்போம்!
ஒரு முறை நாரதர், சிவன் பராக்கிரமசாலியா விஷ்ணு பராக்கிரமசாலியா என்று ஒரு கலகத்தைத் தூண்டி விட்டார். இருவருக்குமிடையில் போட்டி நடத்துவதென்று முடிவானது.

இதற்கென்று சிவனுக்கு ஒரு வில் தயாராயிற்று. வில்லைச் செய்தவர் தேவசிற்பி விஸ்வகர்மா. அதன் பளு சொல்லமுடியாது! பல சக்கரங்கள் கொண்ட வண்டியில்தான் அதை ஏற்றி வரமுடியும். அந்த வண்டியைத் தள்ளவும் நூற்றுக்கணக்கானவர் வேண்டும். அவர்களும் நடு நடுவே ஓய்வு எடுத்துக்கொண்டு இந்தக் கனத்தைத் தள்ள ஒன்றேகால் நாழிகை ஆகுமாம்! ஆனால் பரமேஸ்வரனோ தானே அதை எளிதாகக் தூக்கி நிறுத்திக்கொண்டார்.

போட்டி ஆரம்பமாயிற்று! ஆனால், விஷ்ணுவிடம் அது போல் வில் இல்லாததால் அதேபோல் ஒரு வில்லை விசுவகர்மா மகாவிஷ்ணுவுக்கும் செய்து கொடுத்தார். போர் தொடங்கியது. இருவரும் சளைக்காமல் பல தேவ ஆண்டுகளாகப் போரிட்டுக் கொண்டே இருந்தனர். இருவருக்குமே வெற்றி, தோல்வி கிடைக்காததால் தேவர்கள் போரை நிறுத்துமாறு வேண்டினர். மகாவிஷ்ணு பின்னர் அந்த வில்லை ரிசிகா முனிவரிடம் கொடுத்தார். அவர் பிற்காலத்தில் அதை ஜமதக்னி முனிவரிடம் கொடுக்க, கடைசியில் அது அவர் மகனும் மகாவிஷ்ணுவின் அவதாரமுமான பரசுராமரிடமே வந்து சேர்ந்தது.

அதே போல், சிவன் தன் வில்லை அப்போதைய மிதிலை தேச மன்னரிடம் கொடுத்தார். அது ஏழு தலைமுறை கடந்து ஜனகரிடம் வந்து சேர்ந்தது. ஜானகி அந்த வில்லைச் சிவபெருமான் போலவே வெகு எளிதாகக் கையில் ஏந்திவிடக்கூடியவள் என்பதால், அவளை மணப்பவரும் அவளுக்குச் சமமான பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்று ஜனகர் விரும்பினார். ஸ்ரீராமனும் வில்லை ஏந்தி உடைத்து சீதையை மணம் புரிந்தார்.

தன்னுடைய இந்தப் பழைய போர்க் கோலத்தை நினைவூட்டும் விதமாக, இங்கு தாமிரக் கலவையைக் கொண்டு 151 அடி உயரத்துடன் ‘அஜ்கெய்ப்’ என்ற சிவன் தனுர்தாரியாக கம்பீரமாய் வானளாவி நிற்கிறார்.

இந்தச் சிவனைத் தரிசிக்க சுல்தான்கஞ்சில் எப்போதும் மக்கள் கூட்டம் திரளாக வருகிறது. பிரதோஷம், கார்த்திகை சோமவாரம் போன்ற சிறப்பு நாட்களில் இந்தக் கோயிலைப் பார்க்க மனம் பரவசமாகிறது!

About The Author