வள்ளலாருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள் கற்பனை, பதில்கள் திருவருட்பா நூலிலிருந்த)
நீங்கள் இறைவனிடம் வேண்டுவது என்ன?

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று நீங்கள் கூறிய
மனிதாபிமான வாசகத்தை இன்று உலகமே பாராட்டுகிறதே!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்

நீங்கள் கூறிய எல்லாவற்றையும் மக்கள் ஏற்றார்களா?

"கடை விரித்தோம் கொள்வார் இல்லை, கட்டிவிட்டோம்"

நீங்கள் ஏதோ ஒரு புது ‘ஸ்வீட்’ வைத்திருக்கிறீர்களாமே?

தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே
தனித்த நறுந்தேன் பெய்து பசும் பாலும் தெங்கின்
தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பிடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளம் சூட்டில் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே
அனித்த மறத் திருப் பொதுவில் விளங்கு நடத்தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல் அணிந்தருளே

நீவீர் யாரை மறக்க மாட்டீர்?

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் இமைப்பது மறந்தாலும்
நற்றவத் தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே

(அடடா, என்ன அற்புதமான வரிகள்!!)
 
சென்னையைச் சுற்றி ஏராளமான பாடல் பெற்ற தலங்களும் ஐம்பதுக்கும் மேலான சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இருப்பதாகப் படித்தேன். அது உண்மைதானா?

தருமமிகு சென்னையில் கந்தகோட்டதுள் வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்ய மணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே!

கருணை உள்ளம் படைத்த வள்ளலே? யார் எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா?

ஈயென்று நான் ஒருவரிடம் நின்று கேளாத
இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது
இடு என்ற போதவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்
நீ என்றும் எனை விடா நெறியும்………..

புரிகிறது, புரிகிறது உங்கள் கொள்கை. ஆமாம் தந்தை தாயிடம் அடி வாங்கி இருக்கிறீர்களா?

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய்
அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.

இறைவனிடம் நாங்கள் என்ன கேட்க வேண்டும்?

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்களுக்கு எலாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்றே
எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலை மேல் சுத்த சிவ மார்கம்
திகழ்ந்து ஓங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ, நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே

அஹம் பிரம்மாஸ்மி என்ற அத்வைத தத்துவத்தை அறிவீரோ?

நாம் பிரமம் நமையன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மை தீமைகளும் இல்லை.

வடலூரில் தைப்பூச சோதி கண்டேன் என்ற பாடல் கேட்கிறதே. சோதி வழிபாட்டில் உங்களுக்கு ஈடுபாடு அதிகமோ?

அருட் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

அற்புதமான தெய்வீக பாடல்களை ஈந்த வள்ளலே, நன்றி!

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    ஒரு சிறிய திருத்தம்.
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

Comments are closed.