அக்னிப் பிரகாசம் (2)

அப்பாவின் உதவியால் அம்மாவை வழிக்குக் கொண்டு வந்து லாவண்யாவை சிரமமில்லாமல் கைப்பிடிக்கலாம். ஆனால்… லாவண்யாவின் அம்மாவைக் குறித்து அப்பா கவலை கொண்டதாய்த் தெரிந்ததே அது ஏன்?

“தம்பி, இப்படி ஓரமாப் பார்க் பண்ணிட்டு எறங்குங்க” என்று அக்கவுன்ட்டன்ட், இடம் வந்ததை நினைவுபடுத்தினார்.

ஸி.ட்டி.ஓ.விடமிருந்து அழைப்பு வந்ததும் ரெண்டு பேரும் அறைக்குள்ளே போனார்கள்.

படபடக்கும் நெஞ்சோடு தன்னுடைய வருங்கால மாமியாரின் முன்னே அமர்ந்தான் ஆனந்த்.

“தம்பி யாரு?”

“எங்க எம் டி யோட ஸன் மேடம். ஒரே மகன். ஒரே வாரிசு.”

“ஸ்மார்ட் லுக்கிங் பாய்.” மாமியாரின் முதல் ஸர்ட்டிஃபிகேட் ஆனந்துக்கு சந்தோஷந் தந்தது.

லாவண்யாவின் முக ஜாடை அம்மாவிடம் இருந்தது. இன்னும் முப்பது வருஷங் கழித்து இவனுடைய லாவண்யா இப்படித்தான் இருப்பாள்.

“புக்ஸ் எல்லாம் நேத்தே கொண்டு வந்து வச்சுட்டுப் போய்ட்டேன் மேடம். நீங்க பாத்துக் கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா முடிஞ்சிரும்” என்று அக்கவுன்ட்டன்ட் ஆரம்பித்தார்.

“அதென்ன, அஞ்சு நிமிஷ வேல. கவர் கொண்டு வந்திருக்கிங்கல்ல?”

‘கவர்’ என்றதும் கலவரமானார் அக்கவுன்ட்டன்ட். “ஒரு நிமிஷம் மேடம். இதோ வந்துடறோம்” என்று ஆனந்தை இழுத்து கொண்டு அறைக்கு வெளியே வந்தார்.

“தப்புப் பண்ணிட்டேன் தம்பி. கவர் எடுத்தேன். காஷ் எடுக்க மறந்துட்டேன். ஒங்கட்ட பணம் இருக்குமா தம்பி?”

“எதுக்கு ரஹீம் சார்?”

“கப்பங்கட்டத்தான், இந்த பொம்பளக்கி ரெண்டாயிரம் ரூவா கவர்ல வச்சுக் குடுக்கணும். அப்பத்தான் சனியன் கையெழுத்துப் போடும்.”

“லஞ்சமா?”

“அப்படித்தான் வச்சுக்குங்க. ஒங்கட்ட காஷ் இருக்கா தம்பி?”

“நாமதான் நேர்மையான பிஸினஸ் பண்றோமே ரஹீம் சார், பின்னே எதுக்கு லஞ்சம் குடுக்கணும்?”

“அதனாலதான் ரெண்டோட போகுது. கோல்மால் பிஸினஸாயிருந்தா பத்து பதினஞ்சுன்னு கறந்துருவாங்க. இது வருஷா வருஷம் அஸஸ்மென்ட் டைம்ல கட்ற மாமூல் தம்பி. கேள்வி கேக்கவே முடியாது. இந்த மாதிரி ஜென்மங்களைப் பாக்க ஒங்க அப்பாவுக்குப் புடிக்கவே புடிக்காது. அதான் அவர் இங்கேயெல்லாம் வர்றதில்ல. சரி அதிருக்கட்டும், ஒங்கட்டக் காஷ் இருக்கா இல்லியா?”

“சட்டுப்புட்டுன்னு இந்த லஞ்ச லாவண்யாவுக்கு அழுதுட்டுக் கெளம்புவோம்.”

லஞ்ச லாவண்யா! இவனுடைய லாவண்யாவின் அம்மா. வருங்கால மாமியார்.
ஆனந்த் ஜடமாகிப் போனான். எந்திரம் மாதிரி பான்ட் பாக்கெட்டில் கையை விட்டு வாலட்டை எடுத்து அக்கவுன்ட்டன்டிடம் நீட்டினான்.

அவர், பிரித்துப் பார்த்துவிட்டு, “ஆயிரம் ரூவா இருக்கு எடுத்துக்கவா” என்றார்.

இவன் தலையாட்டினான்.

அக்கவுன்ட்டன்ட்டுக்கு திருப்தியில்லை. “ரெண்டாயிரம் தரணும். ஷைத்தான் என்ன சொல்லப் போகுதோ. ட்ரை பண்ணிப் பாப்பம் உள்ள வாங்க தம்பி.”

உள்ளே போய் உட்கார்ந்தார்கள்.

எதிரேயிருந்த தாய்க்குலத்தை ஆனந்த் ஆத்திரத்தோடு பார்த்தான். ”முப்பது வருஷங் கழித்து கடவுளே என்னுடைய லாவண்யா இவளைப் போல இருக்கக் கூடாது. இருக்கவே கூடாது.”

தயங்கித் தயங்கி அக்கவுன்ட்டன்ட் சுவரை நீட்டினார்.

“எவ்வளவு சார் இருக்கு?”

“தவ்ஸண்ட் இருக்கு மேடம்.”

“ஏன் சார், நீங்க என்ன மொதல் தடவையா வர்றீங்க? ரேட் தெரியாதா ஒங்களுக்கு?”

“பாலன்ஸ் நாளக்கிக் கொண்டு வந்து தர்றேன் மேடம்.”

“அப்ப புக்ஸ் எல்லாம் இங்க இருக்கட்டும். நாளக்கி பாலன்ஸ் கொண்டு வந்து குடுத்துட்டு எடுத்துட்டுப் போங்க.”

ஆனந்தைக் கூட்டிக் கொண்டு அக்கவுன்ட்டன்ட் வெளியேறினார்.

ஆஃபீஸில் அப்பாவின் முன்னால் போய்த் தொப்பென்று உட்கார்ந்தான். நடந்த விஷயங்களை அக்கவுன்ட்டன்ட் சொல்லி விட்டுப் போனார். அவர் போன பின்னால் அப்பா இவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“என்ன ராஜா, மாமியாரப் பாத்தியா?”

ஆனந்த் ஒன்றும் பேசாமலிருந்தான். அப்பாவே தொடர்ந்து பேசினார்.

“ஆனந்த், பழைய சினிமாப் பாட்டு ஒண்ணு எனக்கு ஞாபகத்துக்கு வருது. சிவாஜி நடிச்ச தெய்வப்பிறவி படம். கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்ங்கற அந்தப் பாட்டுல ஒரு வரி வருது பார், மட்டச்சுத்தம் பாத்து வீட்டக் கட்ட வேணும். மாமியாளப் பாத்துப் பொண்ணக் கட்ட வேணும்னு அருமையான வரி அது. மாமியாள நீ பாத்துட்ட. இனி என்ன செய்யப் போற?”

ஆனந்த் மெல்ல வாயைத் திறந்தான். “லாவண்யா அவங்க அம்மாவப் போல இல்ல டாடி.”

ந‎ன்றி : க்ருஹஷோபா, அக்டோபர் 2003
(சுட்டும் விழிச்சுடராய்)

==================================================

About The Author