இடமாற்றம் (2)

பயிர் முளைத்துக்கொண்டிருந்த இடங்களில் புதிதாய் கட்டடங்கள் எழும்ப ஆரம்பித்திருந்தன. தலைக்கிராப்பாய் பச்சைப்புல். நடுவே நரைபோல சர்வே கற்கள். தெருவுக்கு வந்திருந்த தவளை ஒன்று கார் சத்தத்தில் ஐயோ என்று திரும்ப புல்கற்றைக்குள் பாய்கிறது. வண்டியை ஒரு ஓரமாக விட்டுவிட்டு இறங்கினார்கள். தெரு சீரற்றுக் கிடந்தது. கண்ணாடித் தாளாய் சேறுமேல் தண்ணீர் பளபளத்தது. இதற்குப் பிறகு வெளி. தெரு எண் போட்டு பலகையெடுத்திருந்தார்கள். சாஸ்திரி நகர் 27வது தெரு, மனை எண்கள் 437 முதல் 468 வரை…. என ஒரு பலகை. ”பாத்து வாங்க” என்றபடி அப்பா ஒரு ஆர்வப் படபடப்புடன் முன்னே போகிறார்.

நல்ல ஒரு கிரவுண்டு இடம். வாங்கிப்போட்ட அன்றைக்கு அவர் ரொம்ப சந்தோஷமாய் இருந்தார். வாழ்க்கை ஒரு சுற்று முடித்து அடுத்த சுற்றுக்கு வந்துவிட்டாப் போலிருக்கிறது அவருக்கு. வீட்டைப் பற்றிய கனவுகளை அவர் மனசில் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்து விட்டாப் போலிருந்தது. முதல் காரியமாக காம்பவுண்டு போட்டு வாசல் கதவில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை சின்னங்களைப் பொறித்திருந்தார்.

அம்மாவும் சவிதாவும் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். ”எங்க கல்யாணத்துல கூட இவருக்கு இத்தனை சந்தோஷம் இல்லைடியம்மா…” என்று அம்மா புன்னகைக்கிறாள். பொதுவாக தன் சந்தோஷங்களைக் காட்டிக்கொள்ளாத அப்பா காட்டிக்கொள்கிற சந்தர்ப்பம் வாய்த்ததில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் மகிழ்ச்சியே. முதலில் காம்பவுண்டு எடுத்துவிட்டார்கள். ஒதுக்குப் புறமாகக் குடிவருவதில் மாடிவீடாய்க் கட்டினார் அப்பா. ”கீழ நாம இருப்பம். மாடிய வாடகைக்கு விட்டால் உனக்குத் துணையாச்சில்லியா…”. ”நான் ஏற்கனவே அக்கம் பக்கத்துல நல்ல தொணையோடதான் இருந்தேன்…” என்றாள் அம்மா. ”இங்கயும் அதுமாதிரி இருக்க வேணாமா இவளே…” என்று புன்னகைக்கிறார் அப்பா. அம்மா அவரைப் பார்த்தாள். பின் அவளும் புன்னகைக்கிறாள்.

வெளியே சிரித்தாப் போல நடமாடினாலும் கணேசனுக்கு ஆயிரம் கவலைகள் இருந்தன. கைமீறிய பெரிய எடுப்பு எடுத்திருப்பதாய் உள்ளே திக் திக் என்று அடித்துக்கொண்டே யிருந்தது. வங்கிக்கடனில் கட்டி முடிக்க வேண்டிய வீடு. இடம் வாங்கவே கைமுதல் கரைந்தது. முதல் இருபது சதம் கைக்காசை வைத்து வேலையில் இறங்கினால் கட்டம் கட்டமாய் கட்டடம் எழும்ப வந்து பார்த்துவிட்டு பணங் கொடுப்பார்கள். ”நோ பெய்ன் நோ கெய்ன்…” என்பார் தந்தை. அது ஞாபகம் வந்தது கணேசனுக்கு.

காம்பவுண்டுக்குள் யாரோ தோட்டவேலை செய்துகொண்டிருந்தார்கள். ”யாருப்பா ஆளு புதுசாயிருக்கே…”

”ஆமாம்மா. போனதடவை வந்தப்ப இந்தப் பக்கமா திரிஞ்சிட்டிருந்தாரு. என்னவோ தோணிச்சி கூப்பிட்டுக் கேட்டேன்… நம்ம இடத்லியே குடிசை போட்டுக்கிட்டு வாட்ச்மேனா இருக்காரு.”
வணக்கம் சொன்னார் அவர்.

அவர்கள் கடைசியாக வந்துபோன இந்த ரெண்டு மாதத்தில் கட்டடத்தைச் சுற்றி அநேக மாற்றங்கள். வெறும் அஸ்திவாரம் பார்த்த இடத்தில் கட்டடம் தோளுயரம் எழும்பியிருந்தது. கர்ப்பப்பை சிசுவுக்கு கைகால் முளைக்கிறாப் போல…

காம்பவுண்டுக்கு மேலே தலையை வெளியே நீட்டி ஆடிக்கொண்டிருக்கும் செம்பருத்திச் செடி. சிவப்பாய் இல்லாமல் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருந்தன. சிறு காற்றுக்கும் அவை தலையாட்டும் அழகு அம்மாவைக் கிறங்கடிக்கிறது. கிராமத்தில் சீரியல் செட் சவுண்ட் சர்விஸ்காரன் கொண்டுவரும் ஒலிபெருக்கிக் குழாயின் சின்ன வடிவம் இது… ஹலோ மைக் டெஸ்டிங். ஒன் டூ த்ரீ…

அம்மா எதிர்பார்க்காத விஷயம் இது. அவள் முகமே சந்தோஷத்தில் வீங்கியது. ”உங்க பேர் என்ன?” என்று கேட்டாள் அவரிடம்.

”ராமலிங்கம்…”

உள்ளே போனார்கள். வீடு இப்போது அறை அறையாய் அடையாளம் காட்ட ஆரம்பித்திருந்தது. உள்ளே நுழைந்ததுமான அகலமான பெரிய கூடத்தில் வருகிறவர் பார்க்கிறாப் போல, ”இங்க பெரிசா ஸ்ரீ அன்னை படம் வைக்கணும்டி” என்று அப்பா பாதி கனவு பாதி நினைவாய்ப் பேசுகிறார்.

கட்டடம் போக மீதியிடத்தில் பாதையெடுத்து ஓரங்களில் வரிசையாய்ச் செடிகள் நட்டிருந்தார் ராமலிங்கம். நாம வர்றதுக்குள்ள இந்த இடமே ‘அப்பிடி’ ஆயிரும்போலுக்கே…” என குழந்தையாய்க் குதூகலித்தாள். சின்ன வீட்டில் மூச்சுத் திணறலுடன் அஞ்சு குழந்தைகளும், அப்பா அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கையில் சங்கீதமோ, வீட்டுத் தோட்டமோ சாத்தியம் இல்லாததில் இப்போது அவளது தாமரை மடல்விரிக்கிறதோ என்னமோ?

செடிகளைத் துழாவி சிலுசிலுத்து வரும் காற்று. பயண வெக்கைக்கு இதமாய் இருந்தது. நல்ல ருசியான ஆழ்குழாய்த் தண்ணீர். கையில் ஏந்தவே சில்லென்றிருந்தது. அப்படியே முகத்தில் வாரியடித்துக் கொண்டாள் சவிதா. ”நம்ம ராமலிங்கம் ரொம்ப பாவண்டி…” என்று பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

ஏழை விவசாயி ராமலிங்கம். பயிர்க்கடன் வாங்கிவிட்டு சூழல் கைவிரிக்க நொடித்து, வட்டிகட்ட முடியாமல் நிலத்தையே இழந்திருந்தார் ராமலிங்கம். மனைவி இறந்தபின் அந்த ஊரே பிடிக்காமல் போனது. வெளியேறும் போது அவருக்கு ஒரே நினைப்புதான்… நிலத்துக்கு சொந்தம் உண்டா. விலை உண்டா. இழப்பு உண்டா… கால்போன போக்கில் நடை. கிடைத்த இடத்தில் கிடைத்தால் உணவு. அதைப்பத்தி என்ன… எப்படி இங்கே வந்தடைந்தார் அவருக்கே தெரியாது.

வந்து நின்றிருந்தவரைப் பார்த்து அப்பா சாப்பிடத் தந்தபோது மறுக்கத் தோன்றவில்லை. என்ன தோணியதோ அப்பா சட்டென்று கேட்டார். ”இங்க இருந்திர்றீங்களா?”

ராமலிங்கம் புரியாமல் அப்பாவைப் பார்த்தார்…

”இடத்தைப் பாத்துக்கங்க. சிமென்ட் இறங்கும். கம்பி இறங்கும்… பாத்துக்கணும்னேன். சரின்னு தலையாட்டினாரு, அவ்ளதான்…”

குடிசையெடுத்து ராமலிங்கம் தங்கிக் கொண்டார். நிலவை மீறிய வெளிச்சம் ஏது. தாவரம் மீறிய துணை ஏது…
நாம் மண்ணைப் பிரிகிறோம். மண் நம்மைப் பிரியுமா என்ன?

பின்பக்கம் அவர்கள் பார்த்தார்கள். வாழை தலையெடுத்து குருத்து குருத்தாய்க் கொப்பளித்து இடுப்புயரம் நின்றது. கட்டட எழுச்சியில் தாவர இனமே ஆவேசப்பட்டாப் போலிருந்தது…
ஆகா, என நினைத்துக் கொண்டாள் சவிதா. எனக்கொரு யோசனை. கல்லூரிக்கு தினசரி இங்கேயிருந்து போய்வர வேண்டும். பஸ் வந்து நிற்கிற இடத்துக்கே நெடுஞ்சாலைக்கு நாலைந்து கிலோமீட்டர் போகவேண்டும்…

அம்மாவுக்கானால் மயிலாப்பூர் கச்சேரி சார்ந்த, அதை இழக்கிற கவலைகள். அப்பாவுக்கு நல்லபடியா கட்டி முடிக்க வேண்டும். பணத் திகைப்பு வந்திறக் கூடாது… என்று உள்ளே போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. நாங்கள் மூவருமே முன்னைவிட வசதியாகி விட்டு அதுசார்ந்த கவலைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். படிக்காத ராமலிங்கத்திடம் என்ன தெளிவு, இழப்பில் இழந்தபின் நிறைவு காணும் மனம்…

திரும்பி ராமலிங்கத்தைப் பார்த்தாள். எதைக் கொண்டுவந்தாய் இழப்பதற்கு… பகவத் கீதை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்களே. வசதி பெருக்கிக்கொண்டு இடமாற்றம் பெற்றபடி நாங்கள் அலுத்துக் கொள்கிறோம். இருப்பதை இழந்து கிடைத்த இடமாற்றத்தில் அமைதியடைகிறார் இவர்… ராமலிங்கம். வலது ஓரமாய் அவர்களது படுக்கையறை. அதன் வெளிப்பக்கத்தில் செடி ஒன்று.

”என்ன செடி அது ஐயா?” என்று கேட்டாள் சவிதா.

”நந்தியாவட்டை… ராத்திரி படுக்கையறைக்குள்ள நல்லா வாசனையா இருக்குந் தாயி…” என்றார் ராமலிங்கம்.

கையில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பிரித்து அங்கேயே சாப்பிட்டார்கள். பார்வதி ராமலிங்கத்துக்கும் ஒரு தட்டில் வைத்து நீட்டினாள். திரும்பிப் போகையில் மூன்று பேருமே ஆசுவாசப்பட்டாப் போலிருந்தது. ”அம்மா, நல்லாதான் பேர் வெச்சிருக்காங்க அவருக்கு… ராமலிங்கம்…” என்று புன்னகைத்தாள் சவிதா.

”ஏன்?” என்று அம்மா திரும்பிப்பார்த்தாள்.

”வள்ளலார் பேராச்சே…” அப்பா இப்போது பதில் சொன்னார். கார் திரும்பவும் நெடுஞ்சாலையை எட்டியிருந்தது.
(நன்றி : தினமணி கதிர் – 23.01.2011)

About The Author

1 Comment

Comments are closed.