உறுத்தல்

அலுவலக விலாசத்திற்கு வழக்கமாய் எனக்குக் கடிதங்கள் வருவதில்லை. அட்டெண்டர் திடீரென ஒரு கடிதத்தை என் மேஜை மீது வீசி விட்டுப் போனதும் முதலில் புரியவில்லை.

"யாருக்கு லெட்டர்?" என்றேன்.

"ஒங்களுக்குத்தான்" என்றார் போகிற போக்கில்.

மஞ்சள் கவரில் நீண்ட உறை. பார்த்தாலே உள்ளுக்குள் சற்று உதறும். பத்திரிக்கைகள் திருப்பி அனுப்பும் கதைகள் சாதாரணமாக அலுவலக விலாசத்திற்கு வருவதில்லை. அதெல்லாம் வீட்டோடு சரி. பின் இந்தக் கடிதம் யாரிடமிருந்து? மாற்றலாகிப் போன நண்பன் எழுதியிருப்பானோ?

வீசிய வேகத்தில் கீழே விழுந்திருந்த கடிதத்தை எடுப்பதற்குள் மனசுக்குள் ஆயிரம் யோசனைகள். குனிந்து எடுத்தேன். பெறுநர் விலாசத்தில் என் பெயர்தான். அனுப்புனர் பெயர் மனோகர் என்றிருந்தது. கீழே வேலூர் சிறைச்சாலை என்ற வார்த்தை என்னை உலுக்கி விட்டது.

"யார் லெட்டர் போட்டிருக்காங்க?" பக்கத்திலிருந்து டைப்பிஸ்ட் கேட்டார்.

"ஃப்ரெண்ட் தான்" என்றேன் அவசரமாக.

கவரைப் பிரிப்பதற்குள் மனக்குரங்கு மறுபடி தாவி வித்தை காட்டியது.

‘ஏதாவது கதையைப் படிச்சுட்டுத் திட்டி எழுதியதா?’
கை நடுங்கப் பிரித்தேன்.

‘மதிப்பிற்குரிய எழுத்தாளர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.’ என்று ஆரம்பித்திருந்தது.

ஆயுள் தண்டனை பெற்ற கைதியாம். சிறைச்சாலை அவரைப் புடம் போட்டுக் கொண்டிருக்கிறதாம். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறாராம். ஓம் முருகா என்று தினம் 108 தடவை எழுதுகிறாராம். ஜெயிலர் ஒரு தடவை கையில் வைத்திருந்த சிறுகதைத் தொகுப்பைப் பார்த்தாராம். படிக்கக் கேட்டிருக்கிறார்.

‘உங்கள் கதைகள் எனக்கு இப்படித்தான் அறிமுகம் ஆயினது. ஜ்வாலை கதையைப் படித்து விட்டு அன்றிரவு முழுக்கத் தூக்கம் வராமல் புரண்டேன். அடுத்த கதையினை என்னால் உடனே படிக்க முடியவில்லை. ஜ்வாலை அப்படியே என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. எழுத்துக்கு சக்தி உண்டு என்று இதற்கு முன்பு சிலர் சொன்னபோது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போதோ எனக்கு அதன் வலிமை புரிகிறது.’

என்னதான் சொல்லுங்கள்.. பாராட்டு எந்த திசையிலிருந்து வந்தால்தான் என்ன.. அது தருகிற உற்சாகமே தனி.
கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

‘உங்களுக்கு சிரமம் எதுவும் இல்லையென்றால் பதில் போடுங்கள்’

எனக்கும் பதில் எழுத ஆர்வம் இருந்தது. எழுதிவிட்டேன்.

‘நன்றி. வேறு புத்தகங்கள் வேண்டுமானால் எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன். விடுதலை ஆனதும் புது வாழ்வு அமைய நல்வாழ்த்துகள்’

விலாசம் எழுத முனைந்தபோது சட்டென்று அறிவு விழித்துக் கொண்டது. ‘வீட்டு விலாசம் வேண்டாம். எதற்கு வீண் வம்பு’
பதிப்பகத்திற்குத்தான் எழுதிக் கேட்டிருக்கிறார். அவர்கள் என் அலுவலக விலாசம் கொடுத்திருக்கிறார்கள். அதுவே இருந்து விட்டுப் போகட்டும்.

கடிதத்தை போஸ்ட் செய்து விட்டேன். பத்தே நாட்களில் பதில் வந்து விட்டது.

‘நீங்கள் பதில் போட மாட்டீர்கள் என்று இங்கு ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை, உங்கள் பதில் வருமென்று. என் நம்பிக்கை வீண் போகவில்லை’

ஜானகிக்கு – என் மனைவி – கடிதங்களைக் காட்டினேன்.

‘பாவம் அவனுக்கு ரெண்டு தண்டனையா?’

‘யார் யார் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே முடியலே’ என்றேன் பொதுவாக.

வீட்டு விலாசமே கொடுத்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது. மாதம் 3 கடிதங்களுக்குக் குறையாமல் கடிதப் போக்குவரத்து. கிருஷ்ணன் பிறப்பு பண்டிகையன்று கைமுறுக்கு, சீடை பார்சல் அனுப்பினேன். நன்றி சொல்லிக் கடிதம் வந்தது. விஷயம் இத்தோடு முடியவில்லை. என்னிடம் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அல்லது அவன் என்னைத் தொடர்பு கொண்டதே இந்தக் காரணத்திற்குத்தானோ? அவர் விரித்த புகழ் வலையில் சுலபமாய் விழுந்திருக்கிறேன்.

‘அய்யா.. எனக்கு உங்களால் ஒரு உதவி ஆக வேண்டியிருக்கிறது. ஒரு விலாசம் தருகிறேன். உங்கள் பகுதிதான். மாதாமாதம் உங்கள் பெயருக்கு எம்.ஓ. என்னிடமிருந்து வரும். அந்த விலாசத்தில் உள்ளவர்களிடம் சேர்க்க வேண்டும். செய்ய இயலுமா? உங்கள் பதில் பார்த்து எம்.ஓ. அனுப்புகிறேன். சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும்’

ஜானகியிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

"புரியவே இல்லை. இவரே நேரடியாக அனுப்பிடர வேண்டியதுதானே" என்றேன் குழப்பமாய்.

டி.வி. சீரியல் பார்க்கிற ஜோரில் பதில் சொன்னாள்.

"அவன் ஏதோ தப்பு பண்ணிட்டு உள்ளே போயிருக்கான். அவங்க குடும்பம் அவமானம் தாங்காம ஊரை மாத்தி இங்கே வந்திருக்காங்க போல. அவனுக்கு மனசாட்சி உறுத்துது. ஜெயில்ல சம்பாதிக்கிற பணத்தைக் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கிறான்னு நினைக்கிறேன். நேரடியாக் கொடுத்தா வாங்க மாட்டாங்க. உங்க மூலமா ஏதாச்சும் பொய் சொல்லிப் பணம் தர முயற்சி பண்ணறான்னு நினைக்கிறேன்"

அவள் சொன்னதில் லாஜிக் இருந்தது.

ஆனாலும் நான் வெறும் சம்மதம் மட்டும் சொல்லிக் கடிதம் எழுதவில்லை. என் சந்தேகத்தையும் சேர்த்து எழுதினேன்.
‘அய்யா.. என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்குமானால் செய்து கொடுங்கள். நிச்சயமாக என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது’

அடிமனதில் எல்லோருக்கும் எப்போதாவது ஒரு த்ரில் வேண்டியிருக்கிறது. எனக்கு இப்போது அந்த நேரம் போலும்.
‘முழு சம்மதம்’ என்று எழுதினேன்.

மாதாமாதம் எம்.ஓ. வர ஆரம்பித்தது. முதல் மாதம் அவன் கொடுத்த விலாசத்திற்குப் போனேன். விதவைத் தாய், 3 பெண்கள், கடைக்குட்டிப் பையன். குடும்பத் தலைவர் புகைப்படம் சந்தனப் பொட்டுடன் சுவரில் தொங்கியது.

"உங்க விலாசம் ஒருத்தர் கொடுத்தாரு.. உங்க குடும்பம் மேல அக்கரை உள்ள ஒருத்தர். நாங்க உதவி தேவைப்படற குடும்பத்திற்கு சேவை செய்யற அமைப்பு வச்சிருக்கோம். இது இனாம்னு நீங்க நினைக்க வேணாம். நல்ல நிலைமைக்கு வந்ததும் நீங்களும் இந்த அமைப்புக்குப் பணம் தரலாம். அடுத்தவங்களுக்கு உதவலாம்." என்றேன்.

எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டார்கள். மூத்த பெண் வந்து தொகையை வாங்கிக் கொண்டாள். எனக்கு காப்பி கொடுத்து உபசரித்தார்கள். என் வீட்டு விலாசம் கொடுத்தேன். அரை மணி நேரம் பேசி விட்டுத் திரும்பியபோது மனசு நிறைந்திருந்தது.
முதலில் நான் ஏன் தயங்கினேன் என்று கூட வெட்கப்பட்டேன். நாம், நம் குடும்பம் என்று ஒரு வட்டத்தில் சுழல்கிறோம். அதை விட்டு விலகி வந்து பிறர் நலம் நினைக்கும்போது அதனால் வரும் மன நிறைவே தனி. மனோகர் என்னை ஒரு புது அனுபவத்திற்குத் தயார் செய்திருக்கிறார்.

(தொடரும்)

About The Author