கல்யாண விருந்து (2)

"சொல்லுங்கோ.. என்ன போடலாம்?"

ராஜப்பா மெனுவைப் பற்றி விசாரிக்க பாலா சொல்லிக் கொண்டிருந்தான்.

நகர்ந்தேன். கொல்லைப்புறம் விளக்கு வெளிச்சம் இல்லை. நூறடி நடந்தால்தான் டாய்லட் வசதி.

"இருட்ல எப்படி போறது..?"என்றேன் கவலையாக.

"குச்சி நட்டு டியூப்லைட் வச்சிருவான்.எல்லாம் ஏற்பாடு ஆயிடுத்து…"என்றார் மாமா.

திரும்பி வந்ததும் பாலா மீண்டும் என்னை ராஜப்பாவிடம் அறிமுகப்படுத்தினான்.

"என்ன சாமான் வேணும்னாலும்.. இதோ .. இவர்தான்."

"பேஷா .."என்றார் சர்ரென்று பொடியை உறிஞ்சி.

மாப்பிள்ளை அழைப்பன்று இரவு முகூர்த்தப்பை போடும் நேரம் பாலா என்னுடன் இருந்தான்.

சக்தி கண்ணனின் வாழ்த்துத் தந்திகள் வந்தன. ஏதாவது சமாதானம் சொல்லிவிடுவார்கள், திரும்பிப்போனதும்.

மற்ற நேரங்களில் என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும், கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு சொத சொத வென்ற தரையும், கலவையான நெடிகளும் விட்டு எப்போது ஓடலாம் என்கிற மனோநிலையும்தான்.

*****

ராஜப்பா கடைசிவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.

"அண்ணா..சாம்பாருக்கு.."

"ஊறுகாய்க்கு இது போதுமா…"

"கோசுமல்லிக்கு"

அளவுகளை சரிபார்க்கச் சொன்னார்கள். முறத்தோடு உப்பை அள்ளிப்போய் பாத்திரத்தில் கவிழ்த்தார்கள். மிளகாய் பொடி நெடி கமறியது.

"அய்யோ… அண்ணா… இப்பத்தான் நான் உப்பு போட்டேன்.. சாம்பாருக்கு..".

இரண்டாவது தடவை போட்டுவிட்டான் தவறுதலாய். ராஜப்பா நிதானமாய் பொடி உறிஞ்சிவிட்டுச் சொன்னார்.

"உருளைக்கிழங்கு இருக்காடா?"

"ஆயிடுத்து…"

"போடா மடச்சாம்பிராணி… எடுரா… இந்த சைசுக்கு. சாதத்தைக் கெட்டியாப் பிடி…போடு அதை சாம்பார்ல…"

பின்பு சாப்பிட்டவர்கள் எந்த குறையும் சொல்லவில்லை என்றதும் எனக்கு ஆச்சரியம்.

"ஸாரை நன்னாக் கவனிடா. நம்ம கூட வெந்துண்டு இருக்கார்…"என்றார் நடுவில் என்னையும் கவனித்து.

"ஒண்ணும் பசியே இல்லே…எதுவும் பிடிக்கலே" என்றேன்.

"என்னது …நீங்கதான் சர்டிபிகேட் தரணும்…போடுரா இலையை…"
என்று சகாவை அதட்டினார்.

கை நீட்டி மறுத்தேன். இலையில் வைத்த சாதம் திணறியது.

"என்ன இப்படி முழிக்கிறீங்க.கோஸ்கறி போடு.."

"வேணாம்…ஒரு அப்பளம் வைங்கோ…" என்றேன்.

என்னருகில் நகர்ந்து வந்தார். பக்கத்தில்தான் இலை போடப்பட்டு இருந்தது.

"போடுரா அப்பளத்தை…"என்றவர், அவன் நகர்ந்து போனதும் சொன்னார்.

"உங்களுக்குத் தெரியாதது இல்லே. டவுன்ல இருக்கிறவா படிச்சவா… கொறிக்கிறது இப்ப நாகரிகம். நாங்க அந்தக்காலம். வேணுங்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே… எங்களுக்கு எப்படி சார் திருப்திவரும்?"

சுரீலென்றது. சைகை செய்ததும் ஒவ்வொன்றாய் ஒரு கரண்டி பரிமாறப்பட்டது. "கஷ்டப்படுத்தலே..டேஸ்ட் பாருங்கோ. போதும்"

அஸிஸ்டெண்ட் எதிரில் வந்தான். "அண்ணா கரைச்சாப்ல கொண்டு வரவா.."

"ம்…"என்றார்.

மோர் சாதம் கரைத்துத் தரப்பட்டது.

"போதும்டா…எதேஷ்டம்…"

கடகடவென்று குடித்தார்.

"நீங்க போங்கோ…கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா…நிம்மதி. சாயங்கால காரியம் இருக்கே…டேய்…அங்க பாரு… அடுப்புல தீயறது…”என்றார் சட்டென்று திரும்பி.

கையலம்ப எழுந்துபோனபோது, இந்தக் கல்யாணத்தை மறக்க மாட்டேன் என்று தோன்றியது.

About The Author