பெஸ்ட் மாப்பிள்ளை!!

மாலதியின் கல்யாணம்.

வீடே களைகட்டியிருந்தது.

மாலதி என் சித்தப்பாவின் ஒரே மகள். நிறைய பிரார்த்தனைகளுக்குப்பின் பிறந்தவள்; வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பெண். கேட்கவா வேண்டும், கொண்டாட்டத்திற்கு?

ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து செய்து கொண்டிருந்தார் சித்தப்பா. பொறுப்பை யாரிடம் ஒப்படைத்திருந்தாலும், தானே ஒருமுறை சென்று சரிபார்த்து வந்தார். மாப்பிள்ளை பார்த்த விதமும் இப்படித்தான். மாலதியோ இவரை விட ஒரு படி மேல். எல்லா வகையிலும் மாப்பிள்ளை பெஸ்ட்டாக இருக்க வேண்டுமென்று பார்த்துப் பார்த்து செலக்ட் செய்யப்பட்டவர்தான் ஆனந்த். சந்தோஷம் பொங்க மணமேடை ஏறினாள் மாலதி.

ஸ்மார்ட்டான மாப்பிள்ளையாய் எல்லாரையும் கவர்ந்தார் ஆனந்த். ரிசப்ஷனிலும் மாலதியின் ஃப்ரெண்ட்ஸ் ஆனந்தை கலாட்டா செய்ய, ஆனந்தும் சளைக்காமல் பதிலடி கொடுத்து ஸ்கோர் செய்தார். கல்யாண கலாட்டாக்கள் ஓய்ந்து ஆனந்த் வீட்டுக்குப் புறப்பட்டனர் மணமக்கள்.

மறுவீடு முதலான எல்லா சடங்குகளும் அவசர கதியில் நிறைவேற, பெங்களூருவில் குடியேறினர் மணமக்கள். ஒரு வாரமே கடந்திருக்கும். சித்தப்பாவுக்கும், சித்திக்கும் மகளைப் பார்க்க ஆசை வந்து விட்டது. என்னதான் மணிக்கணக்காய் மொபைலில் பேசினாலும் நேரில் பார்த்துப் பேசுவது போலாகுமா? கிளம்பி விட்டனர் சென்னை டூ பெங்களூரு.

இரண்டே நாட்களில் மகள் வீட்டிலிருந்து திரும்பி விட்ட சித்தப்பாவும் சித்தியும், சற்று கலங்கித்தான் போயிருந்தனர்.

என்ன சித்தப்பா, ஒரு மாதிரி இருக்கீங்க? மாலதி நல்லாத்தானே இருக்கா? நேத்து கூட பேசினேனே! ஏதும் சொல்லலியே?" என்னவென்று விசாரிக்க, புறப்பட்டது பூதம்.

"என்னன்னு சொல்றதுடா செந்தில்? பார்த்து பார்த்து தேடிப் பிடிச்சோம் இந்த மாப்பிள்ளையை. ஒண்ணும் குறை சொல்றதுக்கில்ல! ஆனா அவருதான் எப்பவும் மாலதிய குறை சொல்றாராம். எது எடுத்தாலும் உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றாராம். படிப்பு, சம்பாத்தியம், வெளி உலகப் பழக்கம்னு எல்லாத்திலேயும் மாலதிய விட மாப்பிள்ளை பெஸ்டாயிருக்கிறதால, மாலதியால ஒண்ணும் பேச முடியல. நம்ம வீட்ல சுதந்திரமா இருந்த பொண்ணாச்சே, அதான்! சொல்லிட்டு வந்திருக்கோம். இருந்தாலும் இந்தக் காலத்து பிள்ளைகள் சட்டுனு முடிவெடுக்குறவங்களா இருக்காங்களே, அதான் ஒரு பயம்!"

"பயப்படாதீங்க சித்தப்பா, நானும் மாலதிகிட்ட பேசறேன். அக்கறையாலதான் மாப்பிள்ளை இப்படி நடந்துக்கறார்னு புரிய வைப்போம்" என்று ஆறுதல் கூறி விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

மாலதியிடம் இது பற்றிப் பேசி முடித்தபோது, பெஸ்ட் மாப்பிள்ளை என்று தேடிப்பிடித்த மாலதிக்கு, ‘மாப்பிள்ளைக்கு தான் பெஸ்ட் இல்லையோ’ என்ற உணர்வு வரத் தொடங்கி இருந்ததை உணர்ந்தேன்.

About The Author

2 Comments

Comments are closed.