மெட்டி (2)

இத்தனை ஆசை வைத்திருக்கிறான். விசித்திரம் தான். சந்தோஷ் போலவே! இருவருக்கும் என்ன வித்தியாசம்?. பெண் பார்க்க வந்தவன் படபடப்பாய் அந்த நிமிடமே சம்மதம் சொல்லி அவள் விருப்பம் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தான்.

"என்னம்மா சொல்றே? நீ பிரைவேட்டா கிளினிக் வச்சுக்கிறதுல அவருக்கு ஆட்சேபணை இல்லியாம்… உன்னோட படிப்பு வீணாகப் போகக் கூடாதுன்னு சொல்றாரு. இன்ஃபாக்ட் வைத்தியம் பார்த்து நீ சம்பாதிக்கிறதைவிட, நிறைய குணப்படுத்தி பேர் வாங்கினா… அதுவே பெருமையாம்…" அப்பா சொல்லிக் கொண்டே போனார்.

சந்தோஷ் சற்றுத் தள்ளி நின்றிருந்தான். என்ன பதில் சொல்லப் போகிறான்?

"சரிப்பா.."

பதில் ஒருவனை உற்சாகப்படுத்தியது. அடுத்தவனை ஸ்தம்பிக்க வைத்தது. அவசரமாய் வெளியே போக நகர முயன்றவனை வார்த்தையால் நிறுத்தினாள். "சந்தோஷ்"

நின்று திரும்பிப் பார்த்தான்.

"அப்பாவால எல்லா வேலையையும் கவனிக்க முடியாது.." என்றாள்.

"கவலைப்படாதே கெளரி. நான் இருக்கேன்" என்றான் முகம் சுளிக்காமல்.

செய்துவிட்டான் இதுவரை.

******

முதலில் அவன்தான் பெண் கேட்டது.

"கெளரியை நான் கல்யாணம் செஞ்சுக்கப் பிரியப் படறேன். அம்மாவே வந்து கேட்கறேன்னு சொன்னா. நானே கேட்கறேன்னு தடுத்துட்டு வந்தேன்."

"என்னம்மா கெளரி?" அப்பா கெளரியைப் பார்த்தார்.

"நான் வேற மாதிரி நினைச்சேன்பா"

"என்ன சொல்றே?"

"நாம வேற எடத்துல மாப்பிள்ளை தேடலாம்பா"

சந்தோஷை சங்கத்துடன் திருப்பிப் பார்த்தார் அப்பா. அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

"சரி மாமா. வரட்டுமா கெளரி?"

மனிதன்தானா? உன்னால் எப்படி சாத்தியம்?

******

முரளி மீண்டும் அவளை இடித்தான். "மறுபடி என்ன யோசனை?"

"உங்களை மாதிரிதான்… ஏன் இன்னமும் டைம் ஸ்லோவாப் போகுது?"

"கெளரி… ஜ லவ் யூ.." என்றான் தணிந்த குரலில்.

திரும்பிப் பார்த்தான். நேசம் மட்டுமே பிரதானமாய் எழுதிய ஆழமான பார்வை. கெளரி அவனது கையைப் பற்றி அழுத்தினாள்.

******

முடிந்துவிட்டது. ஒவ்வொரு சாமானாக ‘பாக்’ செய்து கொண்டிருந்தார்கள். கெளரி கிளம்பப் போகிறாள். சந்தோஷ்தான் வேன் ஏற்பாடு செய்தது. "எல்லாம் ரெடி கெளரி.." என்றான் அவளிடம் வந்து. முரளி எங்கோ வெளியே போயிருந்தான்.

"சந்தோஷ், நீ எனக்கு பரிசு எதுவுமே தரலியே?" என்றாள் ஏக்கம் தொனிக்கிற குரலில்.

முதன் முறையாய் சந்தோஷிடம் தயக்கம் தென்பட்டது. சுதாரித்து ஷர்ட் பாக்கட்டில் கைவிட்டு எடுத்தான்.

"பார்த்தியா? நான் கேட்டாதான் தரணும்னு வச்சிருக்கே.." என்றாள் கைநீட்டி வாங்கி.

சிறிய அட்டை டப்பா. திறக்க, உள்ளே அழகாய்… டிசைனாய்… இரு மெட்டிகள் வெள்ளியில்.

"சந்தோஷ்.." திகைப்புடன் நிமிர்ந்தாள்.

"எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்னப் பொண்ணு.. ஏழெட்டு வயசு இருக்கறப்ப சொன்னது.. ‘ டேய்… சந்தோஷ் நான் பெரியவளாகி ஃ பர்ஸ்ட் ஆசையா எது வாங்குவேன் தெரியுமா? மெட்டி… ஆமாண்டா.. வேற யாரையும் என்னால மெட்டி வாங்கித் தான்னு இந்தக் காலை வச்சுண்டுக் கேட்க முடியாது… நானா வாங்கிக்கணும்’ னு சொன்னா… அந்த இனிமையான நினைவுக்கு இந்தப் பரிசு"என்றான் நிதானம் பிசகாத குரலில்.

நேசம் மட்டுமே பிரதானமாய்க் கொண்டு நிமிர்ந்து நின்றவனைக் கண்கள் பனிக்கப் பார்த்தாள் கெளரி. அவள் கைகளில் மெட்டி மின்னியது.

About The Author

2 Comments

  1. mathu

    அதை புரிந்து கொள்ள முடிவது கஷ்டம் தான்! உண்மையாய் சொல்கிறேன் மனித உள்ளம் எழுத்தாளருக்கு நன்கு புரிகிறது! நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Comments are closed.