‘விறகு’ – வெட்டி

""தர்மப்பிரபு, உங்கள் பரிவுப் பார்வையை என் மீது செலுத்துங்கள்! நான் மூணு நாளா எதுவுமே சாப்பிடவில்லை, கடவுளாணை! குளிருக்கு ஒதுங்க விடுதிச் செலவுக்கான அஞ்சு கோபெக், அதுவே என்னிடம் கிடையாது. ஒரு கிராமத்தில் அஞ்சு வருஷம் நான் பள்ளிக்கூட வாத்தியாரா வேலை பார்த்தவன். ழெம்ஸ்ட்வோ விவகாரத்தில், அதில் சம்பந்தப்படவே இல்லாதபோது, எவனோ என்னையும் மாட்டிவிட்டுட்டான். இப்ப வேலையிழந்து நிற்கிறேன். ஒரு வருஷமாய் இப்படி போக்கத்துப் போயி அல்லாடித் தவிக்கிறேன்…""

இவர் ஸ்கோர்த்சவ், பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் வழக்கறிஞர் அவனைப் பார்த்தார். கந்தையான அவனது கருநீல மேல்கோட்டு, இரத்த சோகையான குடிபோதைக் கண்கள், செம்மைப்பட்ட கன்னங்கள்… அவனை எங்கேயோ பார்த்தாப்போல் இருந்தது.

""… இப்ப எனக்கு காலுகா மாநிலத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு…"" அவன் தொடர்ந்தான். ""என்கிட்ட தம்பிடி கிடையாது. எப்படி அங்க நான் போக முடியும்? கருணை காட்டுங்க புண்ணியவான்! கேட்க அவமானமாகத்தான் இருக்கிறது. ஆனால்… என் சூழல்… எனக்கு வேற வழியில்லை…"" 

அவன் ஷூக்களின் பனியுறைகளைப் பார்த்தார் அவர். ஒண்ணு பாதி அளவே மறைத்திருக்க, மற்றது உயர்காலணி போலக் காலுக்கு மேல் வரை போர்த்தியிருந்தது. ஆ, ஞாபகம் வந்தது.

""தபாரு! நேத்து முந்தாநாள் நான் சதோவாய்த் தெருவில் உன்னைப் பார்த்தேன். அப்ப என்ன சொன்னே? கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியார்னு நீ உன்னைப் பத்திச் சொல்லலியே? ஒரு மாணவன், உன்னை வெளிய அனுப்பிட்டாங்கனு சொன்னே?""

""இல்ல, இல்லவே இல்லே! அப்படி இருக்க முடியாது ஐயா!"" அவன் குரலெடுக்காமல் திணறலாய்ச் சொன்னான். ""நான் கிராமத்து வாத்தியார்தான்… வேணுன்னால் என் அடையாளக் காகிதங்களைக் காட்டுவேன் ஐயா!""

""பொய் மேல் பொய்யா? போதும் எனக்கு. நீ மாணவன்னுதான் சொன்னே. எதுக்காக உன்னை வெளியேத்தினாங்க, அதைப் பத்தியும் என்ன சொன்னே, ஞாபகம் இருக்கா?"" ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் அவர் முகம் சிவந்தது. அந்தப் பராரியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ""இது கண்டிக்கத்தக்க பித்தலாட்டம். அப்படியே உன்னைப் போலிசில் பிடிச்சிக் கொடுப்பேன்… ராஸ்கல்! நீ ஏழை. பசித்திருக்கிறாய்… ஆனால் அதுக்காக இப்படி வெட்கங்கெட்டு, பொய் சொல்லிப் புரட்டித் திரிய உனக்கு எந்த உரிமையும் இல்லை!""

வீட்டின் வாயிற்கதவை அந்தப் பராரி இறுகப் பற்றிக்கொண்டான். எழுந்து பறக்க வாட்டம் பார்க்கும் பறவையாய் வெறிக்கும் பார்வை.

""நான்… பொய் சொல்லல்ல ஐயா"" என அவன் முணுமுணுத்தான். ""என் காகிதங்களை வேணா காட்டறேன்றேன்ல?…""

""அதை யார் நம்பறது?"" அவருக்கு இன்னும் ஏமாற்றப்பட்ட கடுப்பு. கிராமத்து மத்த வாத்திமாரின், பிற மாணவர்களின் இரக்கத்தைச் சம்பாதிக்க உனக்கு இப்படி ஒரு நாறப் பொழப்பு. கேவலமான ஈனப் பொழப்பு. உன்னையெல்லாம் சும்மா விடறதாவது?""

ஆத்திரக் குமுறலில் அவர் அவனை வசைமாரி பொழிந்தார், இரக்கமேயில்லாமல். பொய் அவருக்குப் பிடிக்காது. துக்கப்பட்டவரிடம் இரக்கம் காட்டுவது அவர் சுபாவம். ஆனால், பொய் சொல்லி அதைச் சம்பாதிப்பது? அவருக்கு ஆத்திரமும் வெறுப்பும் மண்டியது. அவரது நன்னடத்தையில் அவன் சாணியடித்தான். அவர் மனசாரச் செய்ய நினைக்கிற உதவி, ஏழைகளுக்கு அவரால் முடிந்த உபகாரம்… அதையே அவன் கேலியாக்கி விட்டான்…

பிச்சைக்காரன் முதலில் சமாளிக்கப் பார்த்தான். சத்தியம் பண்ணிப் பார்த்தான். அப்புறம் அப்படியே தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றுவிட்டான்.

""ஐயா…"" நெஞ்சில் கை வைத்துச் சொன்னான். ""உண்மையாய்ச் சொன்னால்… நான்… சொன்னது பொய்தான் ஐயா! நான் மாணவனுமல்ல, வாத்தியாருமல்ல… எல்லாமே இட்டுக்கட்டியவை. ருஷ்யாவின் இசைக்குழுவில் நான் இருந்தேன். எனது
மொடாக்குடியினால் என்னை அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். ஆனால் நான் என்ன செய்ய, சொல்லுங்கள்! கடவுளாணை, நம்புங்க! பொய் சொல்லாமல் நான் எப்பிடி வாழறது?… நிசத்தைச் சொன்னால் யாராவது எனக்குப் பிச்சை போடுவார்களா? நிசத்தைச் சொன்னால் எனக்கு வயித்துல ஈரத்துண்டுதான். பசியிலும், தங்க விடுதி கிடைக்காமல் இந்தக் குளிரிலும் நான் விறைத்துப் போவதே கண்ட பலன். நீங்க சொல்றது சரி. எனக்குப் புரியுது. ஆனால்… நான் என்ன செய்ய?""

""என்ன செய்யன்னா கேட்கிறே?"" அவன் அருகே போனார். ""எதாவது வேலை செய்து… உழைச்சி வாழணும்!""

""உழைப்பு… எனக்குத் தெரியாம என்ன? எனக்கு எங்க வேலை கிடைக்கும்?""

""பைத்தாரத்தனம்… நீ இளமையா, உடம்பு வலிமையோட, கிழங்காட்டம் இருக்கே. நீ தேடினால் உனக்கு வேலை கிடைக்கும். ஆனால் நீ சோம்பேறி சுப்பன். உடம்ப அசக்கவே யோசிக்கிறாய். குடி வேற. விடாக்குடி மொடாக்குடி! இப்ப நீ செஞ்சிட்டிருக்கறதெல்லாம் வெறும் பொய்யி, பித்தலாட்டம்… உன் உடம்புலயே ஊறிப்போன குணங்கள் அவை. பொய் சொல்றது, பிச்சை எடுக்கறது, அதைத் தவிர வேற எதுக்கும் லாயக்படமாட்டே. ஒழுங்கான மரியாதையோட நீ வேலை ஏத்துக்கிட நினைச்சால், இந்நேரம் நீ எந்த அலுவலகத்திலாவது வேலையில் இருப்பாய். ருஷ்ய இசைக்குழுவில் இருப்பாய். பில்லியர்ட் பந்து பொறுக்கிப் போடக்கூடப் போகலாம். லேசான வேலை. சம்பளம் உண்டு. உடல் அலுப்பு கிடையாது. ஆனாத் ….. நீ உடம்பு வணங்க வேலை செய்ய மனசு வைக்கல. வீட்டு உதவியாளாகவோ, கம்பெனி எடுபிடியாகவோ கூட நீ சரிப்பட்டு வரமாட்டே. யாருக்கும் அடங்கிப்போக, பணிய உனக்கு வணங்காது. நீ உடம்பை அசக்கவே யோசிக்கிறாய்.""

""நீங்க சொல்றது…"" என்றான் அவன். ஒரு வறண்ட புன்னகை. ""உடம்பு வளைச்சிச் செய்யிற எந்த வேலை எனக்குக் கிடைக்கும்ன்றீங்க? ஒரு கடைக்காரனா ஆக எனக்கு வயசு தாண்டிட்டது. கடை வைக்க சிறு பையனா ஆரம்பித்து, படிப்படியா வரணும். வீட்டு வேலைக்கு என்று என்னை யார் வெச்சிக்குவா? நான் அப்படி ஆள் அல்லன்னு பார்த்தாலே தெரியுது. தொழிலாளியாப் போறது… அதுக்கும் அந்த வேலை தெரியணும். எனக்கு அதொண்ணும் தெரியாதுங்களே!…""

""இழவெடுத்தவனே! எதுக்கும் சாக்குப் போக்கு சொல்றதே உனக்கு வழக்கமாயிட்டது. அட வெறகு வெட்டறதுகூட வேலைதான். நீ அதை விரும்புவியாக்கும்?""

""அந்த வேலைகூட கிடைக்கணுமே ஐயா! கிடைச்சால் மறுக்கமாட்டேன். இப்ப வழமையா வெறகு வெட்டிப் பிழைக்கறவனுகளே வேலையில்லாமல் அலைகிறார்கள்…""

""வெட்டி வீரமணிகள் எல்லாரும் பேசும் பேச்சு இது. வேலையைச் சொல்லுங்கன்றே, வேலை தந்தால் உடனே தட்டிக் கழிக்கறே. நான் வேலை தரேன். விறகு வெட்டும் வேலை… செய்யறியா?""

""நிச்சயமா… செய்யறேன் ஐயா!""

""ஆகா! பார்க்கலாம்… நல்லது, ரொம்ப நல்லது…"" அவர் படபடத்தார். உள்ளூரச் சந்தோஷத்துடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார். சமையல் அறையில் இருந்து சமையல்காரியை அழைத்தார்.

""பாரு ஓல்கா,"" ""இந்தாளை லாயத்துக்குக் கூட்டிப்போ! கொஞ்சம் விறகு பிளக்கட்டும்…"" என்றார்.

திகைப்புடன் தோளைக் குலுக்கியபடி, வேண்டா வெறுப்பாக அவன் சமையல்காரியைப் பின்தொடர்ந்தான். அசமந்த நடை. அதிலேயே தெரிகிறது… பசிக் கொடுமையாலோ, பணம் கிடைக்கும் என்றோ அவன் அவளுடன் போகவில்லை. அவரது குத்தல் வார்த்தைகள் ஏற்படுத்திய அவமானம்… அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட நேர்ந்துவிட்ட சூழல், அதுவே அவனைக் கால்நகர்த்திச் செல்கிறது. குடித்திருந்த வோத்கா வேறு, ஆளைத் தள்ளாட்டிச் சென்றது. உடம்பு ஜுரம் கூட இருக்கலாம். அவனுக்கும் வேலை செய்கிற யோசனையே இருந்ததாகத் தெரியவில்லை.

அவர் கிடுகிடுவென்று உணவுக்கூடத்துக்கு வந்துவிட்டார். அங்கிருந்து லாயமும் தெரியும். ஜன்னல் வழியே வெளிமுற்ற நடவடிக்கைகளையும் பார்க்கலாம். சமையல்காரியும் அந்தப் பராரியும் பின்வாசல் வழியே முற்றத்துக்கு வந்து பனிச்சேற்றை மிதித்தபடி லாயத்துக்குப் போவது தெரிந்தது. ஓல்கா அவனைக் கோபத்துடன் பார்க்கிறாள். தாடையை இடித்துக்கொண்டு ஆத்திரமாய் லாயத்தின் கொண்டியைத் திறந்தாள். கிளாங்கென ஓலமிட்டு விரியத் திறந்து கொண்டது கிராதிக்கதவு.

நானும் இவனுமா, அவ காப்பி நேரத்தில் இடைஞ்சலாயிட்டம்… என நினைத்தார் அவர். என்னமாய்ப் படம் எடுக்கிறாள் இவள்!

அந்தப் போலி ஆசிரியன், அதாவது போலி மாணவன்… ஒரு மரத்துண்டுக் குவியலில் அமர்ந்தான். அவர் பார்த்தார். அப்படியே, சிவப்புப் புள்ளியிட்ட கன்னங்களைக் கையால் தாங்கிக்கொண்டான். எதோ யோசனை செய்தான். சமையல்காரி, அவனைப் பார்க்க ஒரு கோடரியை எறிந்தாள். ஆத்திரமாய்க் காறித் துப்பினாள். அவளின் உதடுகளின் துடிப்பில்… வசைமாரி பொழிகிறாள் என்று புரிந்துகொண்டார். அவன் வேணாவெறுப்பாய் ஒரு மரத்துண்டைத் தன் பக்கமாய் இழுத்துத் தன் கால்களுக்கு இடையே போட்டுக்கொண்டான். கோடரியை ஏனோதானோவென்று அதன்மேல் வீசினான். மரத்துண்டு ஒரு சிறு துள்ளலில் நழுவி விழுந்தது. திரும்ப அதைத் தன்பக்கமாய் இழுத்து… கையை ஊதிக்கொண்டான். திரும்பக் கோடரியை உயர்த்தி, பூட்சையோ விரலையோ வெட்டிக்கொள்கிற பயத்துடன்… மரத்துண்டு திரும்ப உருண்டது. அவரது கோபம் இப்போது அடங்கிவிட்டிருந்தது. தன் மீதே அவருக்கு வெட்கமாய்ப் போயிற்று. அட ஒண்ணுக்கும் உதவாத ஒரு உதவாக்கரையை, குடிகாரனை, ஒருவேளை காய்ச்சல் கூட அவனுக்கு இருக்கலாம்… கடுமையான, கரடுமுரடான வேலை கொடுத்து, அதுவும் இந்தக் குளிரில், வாட்டுகிறோம்.

ம்… பரவாயில்லை. அவன் செய்யட்டும்… என நினைத்தபடி, எழுந்து உள்கூடத்துக்குப் போனார். அவன் கஷ்டப்படட்டுமே! அவன் நல்லதுக்குத்தானே நான் அவனை இப்படி வேலை வாங்குகிறேன்?…

ஒரு மணி நேரத்தில் ஓல்கா வந்து, விறகு வெட்டப்பட்டு விட்டதாகச் சொன்னாள்.

""இந்தா! இந்த அரை ரூபிளை அவனிடம் கொடு"" என்றார் அவர். ""அவனுக்கு இஷ்டமானால் பிரதி மாதம் முதல் தேதி வரலாம், வந்து விறகு வெட்டித் தரலாம். அவன் எப்ப வந்தாலும் நான் வேலை தருவேன்னு சொல்.""

அடுத்த முதல் தேதி அந்தப் பிச்சைக்காரன் திரும்ப வந்து, திரும்ப அரை ரூபிள் ஊதியம் வாங்கிக்கொண்டான். அவனால் நிற்கவே முடியவில்லை. அதன்பின், அடிக்கடி அவன் வந்துபோக ஆரம்பித்தான். அவன் வரும்போதெல்லாம் எதாவது வேலை, இருந்தாலும் இல்லாவிட்டாலும், புதிதாய்க் கண்டுபிடித்தாவது தந்தார். வெளிமுற்றத்துப் பனியைக் கூட்டச் சொன்னார். லாயத்தைச் சீரமைக்கச் சொன்னார். மிதியடிகளை, தரைக் கம்பளிகளை உதறித் தூசி தட்டச் சொன்னார். எப்பவுமே அவனுக்கு முப்பது முதல் நாற்பது கோபெக்குகள் சம்பளம் தந்தார். ஒருதடவை பழைய கால்சராய் கூடக் கொடுத்தனுப்பினார்.

ஓர் இடமாற்றத்தின்போது, அவனையும் சாமான்களைக் கட்டவும் எடுத்துச் செல்லவும் உதவச் சொன்னார். அந்தச் சமயம் அவன் ரொம்ப அயர்ச்சியாய், மயக்கத் தள்ளாட்டமாய் உம்மென்று இருந்தான். சரக்குவேனில் மேசைநாற்காலிகள் ஏற்றும்போது கூடத் தலையைத் தொங்கப் போட்டபடி நடமாடினான். அவற்றை அவன் தொடவே இல்லை. குளிரில் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது சோம்பலையும், பலவீனத்தையும் பார்த்துச் சாமான் ஏற்ற வந்தவர்கள் கேலியடித்தபோது அப்படியே திகைத்தாப்போல நின்றான். ஒரு காலத்தில் நல்ல உடுப்பாய் இருந்திருக்கலாம் என்கிற அவன் கோட்டின் கிழிசல்கள் அவர்களுக்கு வேடிக்கையாய் இருந்தன. வேலையாட்கள் போனதும் அவர் பராரியைக் கூப்பிட்டு விட்டார்.

""ம். என் உபதேசங்களை நீ காதுகொடுத்துக் கேட்டிருக்கே. அவற்றுக்கு நல்ல பலன் கிடைச்சாப்ல நினைக்கிறேன்…"" என்றபடி அவனுக்கு ஒரு ரூபிள் தந்தார். ""நீ வேலை செய்யச் சுணங்கவில்லை. துடிப்பாய் ஆகி வருகிறாய்… உன் பேர் என்ன?""

""லுஷ்கோவ்.""

""இதைவிட நல்ல வேலை தரலாம்னு பார்க்கிறேன் உனக்கு. இந்தளவு கடும் வேலை அல்ல, லுஷ்கோவ். உனக்கு எழுத வருமா?""

""வரும் ஐயா!""

""நான் ஒரு சீட்டு தரேன். நாளை இதை எடுத்துக்கிட்டுப் போ! என் சிநேகிதன் உனக்கு நகல் எடுக்கிற வேலை தருவான். ஒழுங்கா வேலை செய்! குடிக்காதே! நான் சொன்னதை மறக்கக் கூடாது நீ. வாழ்த்துக்கள்!""

அவருக்கு, ஒரு மனிதனை நல்வழிக்குக் கொண்டுவந்ததில் திருப்தியாய் இருந்தது. லுஷ்கோவைத் தோளில் தட்டிக் கொடுத்தார். அவன் கிளம்பியபோது கை கூடக் குலுக்கினார்.

அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டு போனவன்தான். லுஷ்கோவ் பிறகு விறகு உடைக்க என்று வரவேயில்லை.

இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஒருநாள், திரையரங்கு ஒன்றில் நுழைவுச் சீட்டு வாங்க என வரிசையில் நின்றால், பின்னால்… ஒரு சின்ன உருவம். ஆட்டுக் கம்பளி கழுத்துப்பட்டி வைத்த உடை. தொப்பி கூடப் பூனைத் தோல். கோபெக்காகச் சில்லரைகளை எடுத்து, மெல்லிய குரலில் அவன் காலரிக்குச் சீட்டு வாங்கிக்கொண்டான்.

""ஏய் லுஷ்கோவ்! நீயா?!"" அட நம்மாள்… ""என்னப்பா பண்ணிட்டிருக்கே இப்ப? எப்பிடி இருக்கே?""

""நல்லா இருக்கேன் ஐயா! இப்ப ஒரு நோட்டரிகிட்ட வேலையா இருக்கிறேன். 35 ரூபிள் தர்றாரு…""

""ஆகா… கடவுள் சித்தம்! யதேஷ்டம்தான். ரொம்ப சந்தோஷப்படறேன் அப்பா! ரொம்ப… ரொம்ப சந்தோஷப்படறேன். லுஷ்கோவ், உனக்குத் தெரியுமா? ஒருவகையில் நீ எனக்குக் கடவுள் கொடுத்த பிள்ளை போல. நான்தானே உனக்கு நல்வழி காட்டிவிட்டது? அப்ப, அன்னிக்கு நான் உன்னை என்னவெல்லாம் திட்டினேன், ஞாபகம் இருக்கா? அந்த வசவு தாளாமல் அப்படியே தரையோடு குறுகிப் போயிட்டே, இல்லியா? ம். நல்லது! என் வார்த்தைகளை அப்படியே பிடிச்சிக்கிட்டு, ஞாபகம் வெச்சிக்கிட்டு… நீ… இவ்வளவு தூரம்…""

""உங்களுக்கும் நன்றி ஐயா"" என்றான் லுஷ்கோவ். ""அன்னிக்கு உங்க வீட்டாண்ட நான் வந்திருக்காவிட்டால், நான் வாத்தியார்னும் மாணவன்னும்தான் சொல்லித் திரிஞ்சிக்கிட்டிருந்திருப்பேன். உங்க வீட்லதான் எனக்கு விமோசனம் கிடைச்சது. உண்மைதான் அது. நான் பாதாளத்தில் இருந்து மேலேறி வந்திட்டேன்…""

""எனக்கு அதுல அபார சந்தோஷம் அப்பா!""

""உங்க நல் உபதேசங்களுக்கும் உபகாரங்களுக்கும் நன்றி ஐயா! அன்னிக்கு நீங்க குடுத்த டோஸ்… அருமை! உங்களுக்கும் உங்க சமையல்காரிக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அந்த நல்ல மனசுப் பெண்ணைக் கடவுள் காப்பாற்றுவார். அன்னிக்கு நீங்க குடுத்த அறிவுரை, அருமை! என் வாழ்நாள் முழுக்க நான் அதற்காக உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன். அது உண்மை! ஆனால் உங்க சமையல்காரி, ஓல்கா, அவள்தான் என்னைக் கடைத்தேற்றியது…""

""அதெப்படி?""

""ஆமாம். அது எப்பிடின்னா… நான் விறகு வெட்டன்னு உங்ககிட்ட வருவேன். வந்தால் அவள் ஆரம்பிப்பாள். ஆ குடிகாரா… கடவுளே கைவிட்ட கபோதி நீ. இன்னும் உனக்கு இழவு வரமாட்டேங்குதே… என்றெல்லாம் என்னைத் திட்டியபடியே என் எதிரே உட்கார்ந்து கொள்வாள். வருத்தத்துடன் என் முகத்தைப் பார்ப்பாள். அரற்றுவாள். ஏ துக்கிரி! உலகத்தில் சந்தோஷமே பார்க்காதவனே! நீ போய் எரிஞ்சி சாம்பலாகப் போறதும் நரகத்தில்தான்… கேடுகெட்ட குடிகாரா! அழுமூஞ்சிப் பீடை!… அப்படியே புலம்பிக்கிட்டே இருப்பாள். என்னைப் பார்த்ததில் அவள் அப்படியே நிலைகுலைந்து விடுவாள். மாலை மாலையா கண்ணீர் விடுவாள். ஆனால் என்னை எது ரொம்ப பாதிச்சது தெரியுங்களா ஐயா? எனக்காக அவள்தான் விறகு உடைத்தாள்! உங்களுக்குத் தெரியுமா ஐயா, ஒரு துண்டைக் கூட நான் பிளந்ததே இல்லை. அவளே எல்லா விறகையும் பிளந்து போட்டாள்! என்னை எப்பிடிக் காப்பாற்றி விட்டாள்! என்னை அவள் எப்படி மாற்றிக் காட்டினாள்! அவளைப் பார்த்தபடி நான் எப்படிக் குடியை நிறுத்தினேன்… எனக்கு விளக்கத் தெரியவில்லை. அவள் சொன்னதும், அவள் என்னிடம் காட்டிய புனிதப் பண்பும்தான் என் ஆழ் மனசில் பதிந்து என்னை மாற்றியது என்று சொல்லலாம். நேரமாச்சி ஐயா! மணி அடிக்கப் போறாங்க…""

லுஷ்கோவ் குனிந்து வணங்கிக் காலரியைப் பார்க்க நகர்ந்தான்.

(அன்டன் செகாவின் "தி பெக்கர்" சிறுகதையின் தமிழாக்கம்).

About The Author