கிங்.. க்வீன்.. ஜாக் (7)

இனிப்புப் பெட்டியுடன் உமா வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு இன்னொரு உலக யுத்தம் பாதி நடந்திருந்தது. அம்மாவின் எதிரே ஆக்ரோஷமாய் அப்பா.

"முடிவா நீ என்னதான் சொல்றே?"

"….."

அம்மா இந்த மனிதரிடம் இனி பேசிப் பயனில்லை என்கிற தோரணைக்குப் போய்விட்ட நிலை.

"நான் வாக்கு கொடுத்தாச்சு. நீ எப்படி தடுக்கறேன்னு பார்க்கறேன்"

ஏதோ ஒரு கவரை ஆட்டி ஆட்டிப் பேசினார். அதற்குள் என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை உமாவால்.

உமாவைப் பார்த்ததும் ஏனோ பேசாமல் போய்விட்டார்.

"என்னம்மா கலாட்டா"

எப்போதேனும் மனசு உற்சாகமாய் உணரும்போது, உடனே ஸ்வீட் வாங்கிக் கொடுப்பது உமாவின் பழக்கம்.

“எனக்கு ஹேப்பியா இருக்கு இப்ப.. இனிப்பு எடு.. கொண்டாடு”

அவளுக்கு ஆபீசில் இதனாலேயே ‘ஸ்வீட்டி’ என்று செல்லப் பெயர் வந்து விட்டது.

தினகர் அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருந்தான். ‘உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..’

அவன் வார்த்தைகள் சுட்டன. ஆனால், எதுவும் பேசாமல் விட்டு விட்டாள். இந்த குணமும் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

"என்னம்மா பிரச்னை?"

"உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார்"

"நல்ல விஷயம்தானே"

பெண்ணின் கிண்டலை ரசிக்க அம்மாவுக்கு முடியவில்லை.

"ரெண்டாம் தாரம்.. பத்து வயசுல ஒரு பொண்ணும், எட்டு வயசுல ஒரு பையனும் இருக்காங்களாம். இவரோட சீட்டு விளையாடறவரோட பையனாம். நாப்பத்தஞ்சு வயசு. ஃபோட்டோ பார்க்கறியான்னு கேட்டார். சண்டை ஆரம்பிச்சுது"

"அப்பா ஃபோட்டோ காட்டுங்க" உமாவே தேடிப் போனாள்.

அப்பா இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று அவர் திணறலிலேயே புரிந்தது.

"எ..ந்த ஃபோட்டோ"

"எனக்காக நீங்க பார்த்த மாப்பிள்ளை"

"அ..து எதுக்கு"

பக்கத்திலேயே கவர் கிடந்தது.

"ரெண்டு குழந்தைகளாப்பா"

"ம்"

"இப்ப யார் பார்த்துக்கறாங்க"

"மாமனார் வீட்டுல விட்ட்ருக்கார். இவருக்கு அம்மாவும் இல்லே"

அப்பா இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டார். பதில்கள் நிதானமாக வந்தன.

"எப்ப தவறிப் போனா..? முதல் மனைவி"

இந்தக் கேள்வியே அநாவசியம் என்று அப்பா முகத்திலேயே தெரிந்தது. இரண்டாவது பையனுக்கு எட்டு வயசு. பிரசவத்திலேயே போயிருந்தாலும் எட்டு வருடங்கள்.

"அது ஞாபகம் இல்லை. பிரைவேட்ல வேலை. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. மாமனார், மாமியாருக்கும் சிரமம் தரவேணாம்னு யோசனை. போய்ப் போய் பசங்களைப் பார்த்துட்டு வர கஷ்டம் வேற. வீட்டோட ஒருத்தி இருந்தா இந்தச் சிக்கல் இல்லை பாரு."

"நானும் வேலைக்குப் போறேனேப்பா"

"அதனால என்ன.. பசங்க பெரியவங்க. சோறு ஊட்ட வேணாம். அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்கற மாதிரி"

"நைஸ் பா"

உமாவுக்கு நிஜமாகவே சந்தோஷம் வந்தது அதைக் கேட்டு.

"அப்புறம் என்ன.. பேசாம ரெண்டு பேரையும் கூடவே வச்சுகிட்டா.. இவர் ஆபீஸ் போகறவரை இருக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்ததும் அவங்களோட இருக்கலாம். அதுக்கு எதுக்குக் கல்யாணம்?"

அப்பாவின் முகம் மாறியது. உமா தன்னுடன் விளையாடுகிறாள் என்று நினைத்து எரிச்சலானது புரிந்தது.

"உனக்குப் புரியாதுடி. அவனுக்குச் சின்ன வயசுடி. அதுக்குள்ள தனியாளா நிக்கணுமா?"

"ஏம்பா தனியாளு.. அவரோட அப்பா.. ரெண்டு பசங்க.. ஹேப்பியா இருக்கலாமே"

"போடி"

அப்பாவுக்கு மூச்சிரைத்தது. பெண்ணுடன் எந்த அளவு இறங்கி வந்து உரையாடல் நிகழ்த்துவது என்கிற குழப்பம் தெரிந்தது.

"ஸோ.. அவருக்கும் ஒரு மனைவி தேவை.. அதானே"

"ஆமா.."

"குழந்தைங்க மேனேஜ் பண்ணும்.. அம்மா இல்லாம.. ஆனா இவரால முடியலே"

"உளறாதே.. புரியாம பேசாதே"

"நம்ம வீட்டுலயும் நீங்க ரெண்டு பேரும் வெளி உலகத்துக்குத்தான் கணவன், மனைவி.. எப்படி மேனேஜ் பண்றீங்க"

உமாவின் கன்னத்தில் விழுந்த முதல் அறை. சட்டென்று நிகழ்ந்து விட்டது.

அம்மா ஓடி வந்தாள். தன் துக்கம் மகளுக்கும் தொடர்கிறது என்கிற பதட்டம்.

"கோபப்படாதீங்க.. யோசிங்க"

உமாவின் கண்கள் கலங்கி இருந்தாலும் குரலில் நிதானம் தப்பவில்லை.

(தொடரும்)

About The Author