தரைக்கு அடியில்
1 கிலோ மீட்டரிலிருந்து 6 கிலோ மீட்டர் வரையான பகுதியில்
காணப்படும் பிசு பிசுப்பான, குழம்பு போன்ற எண்ணெய்ப்
பொருளைக் கனிம எண்ணெய் என அழைப்பர். உலகின் இன்றைய பல
கண்டுபிடிப்புகளுக்கு இந்த எண்ணெய்ப் பொருளே மூல காரணமாய்
விளங்குகிறதெனலாம். சுமார் 90% புதிய பொருட்களின்
கண்டுபிடிப்புகளுக்கு இதுவே மூலப் பொருளாக விளங்குகிறது.
எட்வின் எல்.
டிராக் (Edwin
L Drake)
என்ற எழுத்தறிவற்ற, வேலை ஏதுமில்லாத அமெரிக்கர் ஒருவரே
1859இல் இந்த எண்ணெயைக் கண்டுபிடித்தவர். அவருக்கு
இக்கண்டுபிடிப்புக்கான ஊக்கம் அளித்தவர் நியூயார்க்
வழக்குரைஞர் ஒருவராவார். ஜார்ஜ் எச். பிசெல் எனும் அந்த
வழக்குரைஞருக்கு, 1854ஆம் ஆண்டு குளிர்காலத்தில்
பேராசிரியர் ஒருவர் கனிம எண்ணெயின் சிறிதளவு மாதிரியைக்
காட்டினார். இப்பேராசிரியர் தமது ஆய்வுக்கூடத்தில்
அம்மாதிரியைப் பயன்படுத்திச் சில பரிசோதனைகளை மேற்கொண்டார்.
சோதனைக்குப் பின்னர் பேராசிரியர், "இந்த எண்ணெயைச் சரியான
முறையில் தூய்மைப் படுத்திப் பயன்படுத்தினால்
நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு மாற்றாக
விளக்கு எரிக்கப் பயன்படுத்தலாம்" என்று பிசெலிடம்
உறுதியாகக் கூறினார். திமிங்கில எண்ணெய், மெழுகு
ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியிலிருந்து
எண்ணெய் எடுக்கும் பரிசோதனை அக்காலத்தில் மிகுதியாக
மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பேராசிரியரின் கருத்துகள்
பிசெல் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. கனிம எண்ணெயைத்
தூய்மைப் படுத்துவதற்கான புதிய நிறுவனம் ஒன்றை அவர்
நிறுவினார். இதன் விளைவாக கெரசின் எனப்பட்ட மண்ணெண்ணெயை
பீப்பாய் ஒன்றுக்கு 20 டாலர் வரை கொடுத்து வாங்க
வர்த்தகர்கள் முன்வந்தனர்.
ஆனால்
பிசெலின் முயற்சிகள் வெற்றியடையவில்லை; கையிலிருந்த பணம்
எல்லாம் செலவழிந்து விட்டது. இந்நிலையில் எட்வின் எல்
டிராக் தம் முயற்சிகளைத் தொடர்ந்தார். டிட்ஸ்வெல்
என்னுமிடத்தில் எண்ணெய்க் கிணறு ஒன்றைத் தோண்டினார்.
உள்ளூர் மக்கள் அவரை நையாண்டி செய்த போதிலும் அவரது முயற்சி
வெற்றி பெற்றது; ஒரு நாள் 69 அடி ஆழத்தில் எண்ணெய்
வெளிப்பட்டது. எண்ணெய் பம்பின் துணை கொண்டு டிராக் ஒவ்வொரு
நாளும் 20 பீப்பாய் எண்ணெயை வெளிக்கொணர்ந்தார்.
1867ஆம்
ஆண்டு வாக்கில் நிலக்கரி எண்ணெய்க்குப் பதிலாக, முழுதுமாய்
மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்க நாடுகளின்
உள்நாட்டுப் போரின் போதும் இந்த மண்ணெண்ணெயே
பயன்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பருத்திக்குப்
பதிலாக இந்த எண்ணெயைக் கொண்டு அந்நியச் செலாவணி
ஈட்டப்பட்டது. சண்டைக்குப் பின்னர் அமெரிக்காவின்
தொழில்மயத்துக்கு மண்ணெண்ணெய் பேருதவி புரிந்தது. பின்னர்
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் பல இடங்கள்
ஆகியவற்றில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் மத்தியக்
கிழக்கில், எண்ணெய் வளப் பகுதிகள் கண்டுகொள்ளப் படாமலே
இருந்தன.
1870ஆம்
ஆண்டில் லார்ட் ராய்ட்டர் கனிமம் மற்றும் எண்ணெய்க்கான
உரிமைகளைக் குத்தகையாக பாரசீக அரசிடமிருந்து பெற்றார்.
ராய்ட்டரைத் தொடர்ந்து, வில்லியம் காக்ஸ் டா உர்ச்சி
இத்துறையில் நுழைந்தார். இவர் ஆஸ்திரேலியத் தங்கச்
சுரங்கங்களிலிருந்து ஏராளமாகப் பொருளீட்டியவர். இவர்
இருபதாயிரம் பவுண்டுகளைப் பாரசீக அரசுக்கு அளித்து சுமார்
ஐந்து இலட்சம் சதுர மைல் பரப்பில் எண்ணெய் எடுக்கும்
உரிமையைப் பெற்றார். ரேனால்ட்ஸ் என்ற ஓய்வு பெற்ற அரசு
அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் எண்ணெய் எடுப்பதற்கு,
நிலத்தைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1904ஆம் ஆண்டு
ஜனவரியில் நிலத்தடியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது
முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் அக்கிணற்றில் எண்ணெய்
உடனடியாக வறண்டு விட்டது. இதற்குள் டா உர்ச்சி சுமார்
ஒன்றேகால் இலட்சம் பவுண்ட் பணத்தை, மத்தியக் கிழக்கு
நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கும் முயற்சியில்
செலவழித்தார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர்
ரேனால்ட்சின் முயற்சி 1908 மே 26இல் வெற்றியடைந்து
பாரசீகத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலோ
பெர்சியன் எண்ணெய்க் கம்பெனி என்றதொரு நிறுவனம்
உருவாக்கப்பட்டது. சுமார் 130 மைல் நீளத்திற்கு எண்ணெயை
எடுத்துச் செல்வதற்கான குழாய் ஒன்றைப் புதைக்க வேண்டி
இருந்ததாலும், ஒரு சொட்டு எண்ணெயைக் கூட விற்க
முடியாததாலும் கம்பெனி நட்டத்தில் இயங்கிப் பொருளாதார
நெருக்கடி உண்டாயிற்று. இந்த நிலையில் பிரிட்டனின் கப்பல்
துறை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் பாரசீக எண்ணெய்த்
தொழிலின் கொள்கையை மறு பரிசீலனை செய்து எண்ணெய்க்குப்
பதிலாக நீராவியைக் கப்பலின் எரிபொருளாகப் பயன்படுத்த
முடிவெடுத்தார். இதனால் பாரசீகத்தின் நலிந்த எண்ணெய்த்
தொழில் புத்துயிர் பெற்றது. இதற்குள் முதல் உலகப் போரின்
போது மத்தியக் கிழக்கின் எண்ணெய்த் தொழில் புத்துயிர்
பெற்று வளர்ச்சி அடைந்ததோடு, பிரிட்டனும் வலிமையடைந்தது.
இந்தியாவில் எண்ணெய்க் கண்டுபிடிப்பு
இந்தியாவின்
முதல் எண்ணெய்க் கிணறு 1866ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில்
நஹர் பங்க் என்னுமிடத்தில் தோண்டப்பட்டது. ஆனால்
இக்கிணற்றில் எண்ணெய் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும்
அசாமின் மகம் எனுமிடத்தில் 1867இல் தோண்டப்பெற்ற கிணற்றில்
எண்ணெய் கிடைத்தது. அசாம் இரயில்வே கம்பெனி மற்றும்
சிண்டிகேட் ஆகியன 1890-93 ஆம் ஆண்டுகளில் நான்கு எண்ணெய்க்
கிணறுகளைத் தோண்டின. இரு கம்பெனிகள் சார்பிலும் சுமார் 15
எண்ணெய்க் கிணறுகள் 1898ஆம் ஆண்டுவரை தோண்டப்பெற்று அவை
பெரும் வெற்றி பெற்றன. பின்னர் இரு கம்பெனிகளும்
ஒன்றிணைந்து அசாம் எண்ணெய்க் கம்பெனி என்ற பெயரால்
விளங்கியது. சில காலம் கழித்து 1901ஆம் ஆண்டு கச்சா எண்ணெய்
தூய்மைப்படுத்தும்சாலை ஒன்று திக்பாய் என்னுமிடத்தில்
உருவாக்கப்பட்டது. 1920ஆம் ஆண்டு வாக்கில் அசாம் எண்ணெய்
ஆலை 80 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி நாளொன்றுக்கு 14000
காலன் கனிம எண்ணெயை வெளியேற்றியது. அதே ஆண்டு பர்மா
எண்ணெய்க் கம்பெனி இதன் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.
1959ஆம்
ஆண்டில் குஜராத் மாநிலம் காம்பத் என்னுமிடத்தில்
முதன்முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காம்பத்
தவிர குஜராத்தின் அங்க்லேஷ்வர் மற்றும் கல்லோல் ஆகிய
இடங்களில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இந்தியாவின்
எண்ணெய்க் கண்டுபிடிப்புக்கு, சோவியத் ஒன்றியம் பேருதவி
புரிந்துள்ளது. எண்ணெயைக் கண்டுபிடித்தல், வெளிக்கொணர்தல்,
தூய்மைப்படுத்தல் ஆகிய அனைத்திலும் அந்நாடு உதவியுள்ளது.
அவர்கள் கருத்துப்படி நமது நாட்டில் தற்போது சுமார் 4
மில்லியன் டன் அளவுக்கு எண்ணெய் வளம் உள்ளது; அடுத்த 20
ஆண்டுகளில் சுமார் 150 மில்லியன் டன் எண்ணெயை நமது நாடு
உற்பத்தி செய்ய இயலும். இதற்கேற்ப பல இடங்களில் எண்ணெய் வள
ஆய்வும், புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணியும்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிற
நாடுகளில் எண்ணெய் உற்பத்திப் பணிகள்
எண்ணெய்
வளத் தொழில் இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில்
பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது உலகம் முழுதும்
வட துருவம் முதல் தென் துருவம் வரை எண்ணெய் வள ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மத்தியக் கிழக்கு
நாடுகள் எண்ணெய் வளத்தில் மிகவும் சிறந்து விளங்குகின்றன.
மத்தியக் கிழக்கு நாடுகள் தவிர்த்து ரஷ்யா, ருமேனியா ஆகிய
நாடுகளிலும் எண்ணெய் வளம் மிகுந்திருக்கிறது. தொழில்
வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாகரீக, பண்பாட்டு
வளர்ச்சிக்கும் இது இன்றியமையாததாக விளங்குகிறது.
போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பிளாஸ்டிக், நைலான்,
டெரிலின், சிந்தெட்டிக் பொருட்கள் ஆகிய அனைத்திற்கும்
எண்ணெய் வளம் மிக, மிகத் தேவை. எண்ணெயிலிருந்து புரதச்
சத்தும் கூடத் தயாரிக்கப்பட முடியும் எனக்
கண்டறியப்பட்டுள்ளது. எனவே எண்ணெய் வளம் மனித குலத்தின்
ஆக்கத்திற்குப் பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை.
*******