<<<முந்தைய பக்கம்
தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ்
டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான
மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்
பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola
pages)
தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு
வந்திருந்தார்: "இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து
மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும்
இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்" என்பதே
அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில்
இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து
வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.
இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை
அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை
டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு
ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred
Russel Wallace)
என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க
நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின்
டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச்
சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில்
இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும்
இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை.
எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை
வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப்
பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள்
இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean)
சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய
ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக்
கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம்.
இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய "இயற்கைத் தெரிவின்
வழி உயிரினங்களின் தோற்றம் (The
Origin of Spices by Means of Natural Evaluation)"
என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார்.
முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத்
தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும்
ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred
Newton)
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்;
ஹென்ரி ஹக்ஸ்லி (Henry
Huxley)
என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே
மாறிவிட்டார்.
டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே
உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட
நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்;
ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள
வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல்
முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது;
அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ்
(Wilberforce)
டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின்
அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை
நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: "டார்வினைப் போன்றே,
உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?". ஹக்ஸ்லி
உறுதியாகக் கூறிய விடை இதுதான்: "வஞ்சனையும், பயனற்ற அறிவும்
கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என்
மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை."
பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில்
டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக்
காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின்
பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism)
உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து
பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப்
பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு
மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத்
தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும்.
வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள்
வாழ்ந்தன;
அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது
இக்கொள்கைகளையெல்லாம் "இயற்கையின் தெரிவுமுறை (Natural
Selection)",
தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival
of the Fittest)"
என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.
டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில்
மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics),
கருவியல் (Embryology)
மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology)
ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக்
கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம்
முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர்
உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை
புலப்பட்டது.
இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை
டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற
வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது
எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல்
வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது.
இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.
அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel's
Laws),
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக்
கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச்
செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக்
கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய்
ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால்
இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை
வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள்
ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன்
அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.
பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது
வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது
போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த
அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள்,
வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது
கருத்தாகும்.
*******