<<<சென்ற வாரம்
1. சூரியன்
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம்
இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம்
தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில்
இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த
பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.
கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!
ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக்
கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு)
இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள்
இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம்
செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும்
நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும்
நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.
நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை
செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும்
விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை,
மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு,
தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல்,
எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப்
பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள்
இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை,
திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி,
நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள்,
கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு,
ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை
இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.
ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு
பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை
இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்
என்று அர்த்தம். மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு
மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக
உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால்,
நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.
நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும்
தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன்
என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும்.
இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா
என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.
இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக்
கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம்
எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது.
எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில்
ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.
என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன்.
அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை
மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற
விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து
நற்பலன்கள் அதிகரித்துவிடும்.
நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான்
ஆகவேண்டும். கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி
அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக
பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா
விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை)
மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம்
அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?
இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த
நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான்
உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும்
பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய
தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை
உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ,
யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச்
சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத்
தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள்
தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில்
நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு)
மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால்
அப்புறப்படுத்தவும்.
(தொடரும்)