<<<சென்ற வாரம்
6. சனி
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான்
அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது.
ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச்
சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை
அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம்
நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி
என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு
படுத்திக்கொள்ளுங்கள்.
மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும்
காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,
காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல,
ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை
ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும்
உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை
வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள்
நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு
விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும்.
நான்
குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி
பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான்
குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால்
முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத்
தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே
விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும்
போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு
பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை
தரமாட்டேன்.
1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச்
சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது,
ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும்.
எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே
தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப்
படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும்.
சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12
ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது
வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது
தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை
வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை
வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன்.
நான்
கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும்
போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும்
கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில்
சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என்
தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும்
கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ,
சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி!
சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள்,
கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம்,
சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள்,
தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய்
வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள்,
உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும்
தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய
பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம்
இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி,
நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம்
இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர்
ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான
பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல்,
சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த
விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்'
என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல
நிலையில் இருக்கிறேன் என்று பொருள்.
மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம்,
தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள்
பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று
பொருள்.
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும்
பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள்
குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.
2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை
அதிகம் உபயோகியுங்கள்.
3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும்
இரும்பு தானம் செய்யவும்.
4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.
5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய்
அதிகம் உணவில் சேர்க்கவும்.
6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது
முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு
மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது
நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.
7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக்
கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.
8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.
9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல
விலகி விடுங்கள்.
10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை
வழிப்படுங்கள்.
11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி,
சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள்.
பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.
12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.
13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
(தொடரும்)