நான் மகான்
அல்ல
“சராசரி சக்தி படைத்த ஒரு சராசரி மனிதனை விட நான் உயர்ந்தவன்
என்று எப்போதும் நினைததில்லை. எந்த ஆணும் அல்லது பெண்ணும்
முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்திருந்தால் நான் செய்ததை
அவரோ அல்லது அவளோ சாதித்திருக்க முடியும் என்பதில் எனக்கு
எள்ளளவு கூட சந்தேகம் இல்லை. நம்பிக்கையின்றிப் பணி செய்ய
முயல்வது, புரிவது ஒரு முடிவில்லாத அதல பாதாளத்தைம் அடைய
முயற்சி செய்வது போலத்தான்., எந்தப் பிரச்னைக்கும் ஒரு தனி
மனிதனுக்கும் சரி, அல்லது தேசத்திற்கும் சரி வாய்மையையும்
அகிம்சையும் அவசியம் என்பதுதான் நான் சொல்லும் செய்தி.
அகிம்சை வழிக்கு இருமுனை நம்பிக்கை அவசியம் - இறைவனிடம்
நம்பிக்கை, சகமனிதனிடம் நம்பிக்கை - மகாத்மா காந்தி
இழப்பு யாருக்கு?
சமாதானத்திற்கான நோபல் பரிசை மகாத்மா காந்திக்கு அளிக்காமல்
விட்டுவிட்டோமே என்று நார்வே நாட்டு நோபல் பரிசுக் குழுவினர்
வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். ஐந்து முறை அவருடைய பெயர்
பரிசுக்கான பட்டியலில் இருந்த போதும் அவர் முழு நேர அரசியல்
தலைவரோ அல்லது முழு நேர மனித உரிமைகள் பாதுகாப்பு சேவகரோ
அல்ல என்ற தவறான கருத்தினால் அவரைத் தேர்வு செய்யவில்லை என
நோபல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஒரு பேட்டியில்
தெரிவித்திருக்கிறார்.
நோபல் பரிசு தனக்குக் கிடைக்க இருந்த ஒரு பெரும் பேற்றை
இழந்து விட்டது.
காந்தி ஜெயந்தி நிகழ்வுகள்
மகாத்மா காந்தியின் சிந்தனைகளை சோனியா காந்தி தெள்ளத்
தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லத
தோன்றுகிறது. சர்வதேச அகிம்சை தினமான அக்டோபர் 2 அன்று அவர்
ஆற்றிய உரை நினைவு கூர்ந்து பாராட்டத் தக்கது.
"அகிம்சை என்பது பலவீனம் அல்லது கோழைத்தனத்தின் அடையாளம்
என்ற வாதம் தவறானது, உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
அகிம்சையை அதன் சரியான பொருளில் கடைப்பிடிப்பதற்குத்
தேவையாவன: கடுமையான மனக்கட்டுப்பாடு, தாக்குதலைச் சந்திக்கும்
தைரியம், எடுத்த காரியத்தில் துணிந்து நிற்கும் உறுதி., அதே
நேரத்தில் எதிராளியிடம் துவேஷம் பாராட்டாமல் இருப்பதற்கான
மனவலிமை. காந்தியத் தத்துவத்தின் மையக் கருத்தே வலிமை என்பது
நேர்மையினால் வருவது, உடல் வலிமையினால் வருவதல்ல, அதிகாரம்
என்பது சத்தியத்தினால் வருவது, பதவியினால் அல்ல, வெற்றி
என்பது தார்மீகத் துணிச்சலினால் வருவது, மற்றவர்களை அடிபணிய
வைப்பதால் அல்ல; குறிக்கோளும் வழிமுறைகளும் வேறு வேறானவை
அல்ல, உள்ளபடியே வழிமுறைகளே குறிக்கோள்களை நிர்ணயிக்கின்றன
என்றார் காந்தஜி. நெறி தவறிய வழிமுறைகள் குறிக்கோளை
நிறைவேற்றித் தர முடியாது என்றார் காந்தி"
அரங்கு முழுவதும் சோனியாவை கவனத்துடன் கேட்டது. கரவொலி
எழுப்பிப் பாராட்டியது. முத்தாய்ப்பாக சோனியா காந்தி சொன்னது,
"இன்றைய பிரச்சினை காந்தீயம் இன்றைய நிலைமைக்குப் பொருந்துமா
பொருந்தாதா என்பதல்ல; பிரச்சினை காந்திஜி வாழ்நாள் முழுதும்
எந்தத் தத்துவத்திற்காக வாழ்ந்து உயிர் விட்டாரோ, அவற்றைப்
பின்பற்றும் தைரியம் நமக்கிருக்கிறதா என்பதுதான்" ஆணி
அறைந்தாற்போல் பேசினார் சோனியா, அரங்கு முழுவதும் அவரை
ஆமோதித்தது.
காந்திஜியைப் பற்றிய ஒரு விஷயம் மனதுக்கு சரியென்று பட்ட
விஷயம் எதுவானாலும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதை
நடைமுறைப்படுத்தத் துவங்கிவிடுவார் அவர். சோனியாவும் உலகத்
தலைவர்களும் இந்த விஷயத்தில் காந்திஜியைப் பின்
பற்றுவார்களானால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறிவிடாதா?
****
சென்னை மெரினா
கடற்கரையில் அக்டோபர் 2ம் தேதி காலையில் காந்தி ஜெயந்தி
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கவர்னர் திரு. பர்னாலாவும்
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் காந்திஜியின்
உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சர்வதேச அகிம்சை தினத்தை உத்தேசித்து கவர்னர் சமாதான பலூன்களை
விணணில் பறக்கவிட்டார். பள்ளி மாணவ மாணவியரும் கதருடை அணிந்த
மகளிரும் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
கலைஞர் வந்து அமர்ந்தபோது அவர்கள் பாடிக் கொண்டிருந்த பாடல்,
"ஹே ராம ராம ராம ராம ராம்!," ஏதோ குறுகுறுப்பால் கலைஞரின்
முகபாவத்தைப் பார்த்தோம். சலனமில்லாமல்தான் இருந்தது. நம்
கவனத்தை ஈர்த்த மற்றுமொரு காட்சி - முன் வரிசையில் அமர்ந்து
ராட்டை நூற்றுக் கொண்டிருந்த முதியவரின் அருகில் குனிந்து
அமர்ந்தபடி 'எப்படி நூற்பது' என்று சிரத்தையுடன் கேட்டுக்
கொண்டிருந்த அமைச்சர் பூங்கோதை முதியவருக்கு அடித்தது
அதிர்ஷ்டம். அங்கிருந்த அத்தனை வீடியோ காமராக்களும் அவரையும்
அவர் ராட்டை நூற்றதையும் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டன.
****
தலைமைச்
செயலகத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் காந்திஜி
எழுதிய ,"நான் கனவு காணும் இந்தியா" என்ற வாசகத்தைப் படித்து
உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
"பரம ஏழைகளும் இது தனது நாடு என்று எண்ண வேண்டும். இதன்
அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது
என்று அவர்கள் உணர்ந்திட வேண்டும். இந்நாட்டு மக்களில்
தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து
மக்களும் நல்லிணக்கத்துடன் கூடி வாழ்ந்திட வேண்டும். தீண்டாமை,
மதிமயக்கிடும் மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்கள் ஆகிய
சாபக்கேடுகள் அங்கில்லை. பெண்களும் ஆண்களுக்குரிய சம உரிமைகளை
அடைந்து மகிழ்வார்கள். உலகின் பல பகுதிகளில் வாழும் அனைவரும்
சேர்ந்து அமைதியைப் பேணுவார்கள், இதுதான் நான் கனவு காணும்
இந்தியா, இத்தகைய இந்தியாவை உருவாக்க நான் பாடுபடுவேன்"
நல்லதுதான். காந்திஜி உறுதி மொழிகளைப் பற்றிச் சொன்ன மற்றொரு
வாசகத்தையும் நினைவு கூர்வது நல்லது.
"ஏதோ லேசாக ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு அதிலிருந்து
பிறழ்கிறவன் துரும்புக்குச் சமமானவன். செப்புக்காசில் வெள்ளி
முலாம் பூசினால் அது தன் மதிப்பை இழப்பது மட்டுமன்றி
சொந்தக்காரனுக்கு தண்டனையும் வாங்கித்தரும். அதே போல உறுதி
மொழி பிறழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் தண்டனைக்குரியவன்,
அவன் தன் ஆண்மையை இழக்கிறான்".
****
கல்வி - சில
சிந்தனைகள் - சில கவலைகள்
காந்தி ஜயந்தியை ஒட்டி நலிந்தவர்களுக்குக் குரல் கொடுக்கும்
நந்தினி தன்னார்வ அமைப்பினின் சார்பில் கல்வி என்பது
எளியவர்களுக்கு எட்டாத கனியா என்ற தலைப்பில் நடந்த
கருத்தரங்கில் மூத்த கல்வியாளர் மு. ஆனந்த கிருஷ்ணன்,
உந்துனர் அறக்கட்டளை நிறுவனர் அ.கி. வேங்கடசுப்ரமணியன்
ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), ஞாநி ஆகியோர் பங்கு பெற்றனர். கல்வி என்பது
நுகர் பொருள் அல்ல, தரமான கல்விக்குக் கூடுதல் கட்டணம்
சரியல்ல, கல்வி நிறுவனங்கள் வியாபாரமாகி விடக்கூடாது,
குழந்தைகளுக்குக் கல்வி அளிக்காதது மனித உரிமை மீறல் செயல்,
கல்விக்கான நிதியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
என்பது போன்ற சமூக அக்கறையுடன் கருத்துக்கள் தெரிவிக்கபட்டன.
இந்தியா முழுவதிலும் சுமார் 22 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள்
இல்லை என்பதும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு பயில்வதற்கு ஒரு
கரும்பலகை கூட இல்லை என்று அரசு எடுத்த சர்வேயில் தெரிய
வந்திருப்பது அதிர்ச்சியையும் கவலையும் தருகிறது.
பெரும்பாலும் இந்தப் பள்ளிகள் பீஹார், ராஜஸ்தான், ஜார்கண்ட்
மாநிலங்களில்தான் உள்ளன.
*******