ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகும் மூன்றாவது அணியைப் பற்றி பேச்சு எழும். அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எல்லா கோஷ்டிகளும் பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என்ற கடலில் சங்கமமாகும்.
இந்த மூன்றாம் அணியை உருவாக்கத் துடிக்கும் கட்சிகள் கம்யூனிஸ்டுகளைத் தவிர எல்லாமே மாநிலக் கட்சிகள்தான்.கம்யூனிஸ்டுகளுக்கு இந்த முறை மேற்கு வங்காளத்தில் கிடைத்த அமோக வெற்றியும், கேரளாவில் அவர்களுக்குக் கிடைத்த ஆதரவும் தங்களைத் தவிர்க்கமுடியாத சக்திகளாக எண்ணி ஆட்டம் போட வைத்திருக்கின்றன - மத்தியில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற முடியுமா என்ற நைப்பாசையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர மற்ற இடங்களில் செல்லாக் காசு என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். மத்தியில் உலகமயமாக்கலை எதிர்த்துக் காங்கிரஸுக்கு எதிராகக் கொடி பிடிக்கும் இவர்கள்தான் மேற்கு வங்காளத்தில் உலகமயமாக்கல் கொள்கையைத் தீவிரமாக அமல் படுத்துகிறார்கள்.
காங்கிரசோ. பா.ஜ.க வோ சுய பலத்தினால் ஆட்சி அமைக்க முடியவில்லை - இரண்டு கட்சிகளிலுமே உட்கட்சிப் பூசல்கள். போதாக்குறைக்கு பா.ஜ.கவின் மதச் சார்புக் கொள்கை பல கட்சிகள் அதற்கு ஆதரவு கொடுக்கத் தடையாக இருக்கிறது - தங்களது பலத்தால் தேசியக் கட்சிகளான காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ. கவிற்கோ ஆதரவு தெரிவித்து அவர்களை அரியாசனத்தில் அமர்த்துவதை விட ஏன் தாங்களே ஒரு மூன்றாவது அணியாக அமைந்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம் .
ஆனால் மூன்றாவது அணியில் சேரக்கூடிய கட்சிகள் எல்லாமே நவக்கிரகங்கள் - யார் காலை எப்போது வாரிவிடலம் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள். சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயமும் ஆர்.ஜே.டி கட்சித் தலைவர் லாலுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் கூட மாட்டார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவுமோ கேட்கவே வேண்டாம். இதையெல்லாம்விட தப்பித்தவறி இந்த அணி ஆட்சிக்குவந்துவிட்டால் பிரதமந்திரி யார் என்பதில் குடிமிபிடி சண்டையே ஏற்படும்.
தான் ஆட்சியிலிருக்கும் வரை மூன்றாவது அணி பற்றி யோசிக்காத ஜெயலலிதா இப்போது, 'மூன்றாவது அணி என்றாலே கருணாநிதிக்கு நடுக்கம் வந்துவிடுகிறது - காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜகவுக்கும் கட்சி மாறி எப்படியாவது பதவியில் இருக்கத்துடிப்பவர் கருணாநிதி' என்கிறார் ஜெயலலிதா - இதே ஜெயலலிதா பா.ஜ.க அரசை கவிழ்ப்பதற்காக தில்லியில் டேரா போட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் - காங்கிரசுடனும் பா.ஜ.கவுடனும் மாற்றி மாற்றி சந்தர்ப்பவாதக் கூட்டமைத்து அவர்களை ஊசி முனையில் நிற்கச் செய்து பாடாய்ப் படுத்தி பம்பரமாய் ஆட்டியது யார் என்று எவரும் மறக்கவில்லை - ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
(Pot calling the kettle black) என்பார்கள். இப்போது மூன்றாவது அணிக்கு ஆதரவுதெரிவிப்பதும் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் தான் இடையில் புகுந்து பிரதமராக ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத்தான்.
அப்படியே இந்த மூன்றாவது அணிஅமைந்தாலும் இதில் இணையப் போகும் நெல்லிக்காய் மூட்டைகளிின் பூர்விகம் என்ன? திவீரவாதிகளுக்கு ஆதரவு தெரிப்பவர்கள், ஜாதி வெறியைத் தூண்டுபவர்கள், அராஜகத்தைத் தூண்டுபவர்கள், ஊழல் பெருச்சாளிகள் ஏற்கனவே கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள் - இவர்கள்தானே ஒன்று சேரப் போகிறார்கள்?
இன்றைய நிலையில் இந்தியாவிற்குத் தேவையானது மற்ற உதிரிக் கட்சிகளை நம்பாமல் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய தேசியக் கொள்கையும் நாட்டு ஒற்றுமையில் நம்பிக்கையுமுள்ள ஒரு கட்சி- அதற்கு பா.ஜ.கவும் காங்கிரசும் தங்கள் உட்கட்சிப் பூசலை மறந்துவிட்டு, ஜாதி மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் தொண்டு என்பதை மட்டும் மனதில் கொண்டு மக்களிடையே தங்கள் சக்தியை வெளிப்படுத்தி ஒரு சுயவளர்ச்சி அடையவேண்டும் - நடக்குமா? ஹூம்..!
****
இந்தியா அமெரிக்காவுடன் செய்யவிருக்கும் மின்சார தேவைக்கானஅணுசக்தி ஒப்பந்தம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது - நமது நாட்டுக்கு அணுசக்திக்கான எரிபொருளைப் பெறவேண்டும் என்பதற்காக போடப்படும் ஒப்பந்தம் - ஆனால் இதற்கு அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகள்! இனி அணு ஆயுத சோதனை எதையும் செய்யக்கூடாது, மற்ற அணு ஆயுத சோதனைக் குழுவின் மற்றும் அமெரிக்காவின் மேற்பார்வைக்குக்
கட்டுப்படவேண்டும், இரான் போன்ற நாடுகள் அணுஆயுத சோதனை (அது ஆக்க பூர்வமாக இருந்தாலும்)செய்தால் அதனை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவும் எதிர்க்கவேண்டும், குறிப்பாக அமெரிக்கா எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா அடிவருடி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் சுருக்கம் என்கிறார்கள். இப்போது பல நிபந்தனைகளை விதித்திருக்கும் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு அணு மின்சாரம் தயாரிக்கத் தேவையான எரிபொருள் தருவதைப் பற்றிக் குறிப்பிடப்படவே இல்லை என்கிறார்கள் - இந்தியாவிற்கு அணு சக்திக்கான எரிபொருள் தேவைதான் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்றும் கவனத்தில் கொள்ளவேண்டும். கண்களை விற்று ஓவியம் வாங்கினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை அமெரிக்காவிடம் தாரை வார்க்கப்போகிறோமா? எண்ணித்துணிக கருமம்......நமது நாட்டிலேயே கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டோ மரபு சாராத சக்திப்பொருள்களைக் கொண்டோ நமக்குத் தேவையான மின்சக்தியை நாமே உற்பத்தி செய்ய முடியுமா என்று ஆய்வு நடத்த வேண்டும்.
நம் நாட்டில் இத்தகைய ஆய்வுக்கான அறிவுக்கு பஞ்சமே இல்லை
****
மத்திய அரசு ஒவ்வொரு எம்.பிக்கும் தங்கள் தொகுதி மேம்பாட்டுக்காக 2 கோடி நிதி ஒதுக்குகிறது. இதில் கவலைப்படும் விஷயம் பல எம்.பி.க்கள் தங்கள் தொகுதி நிதியைச் செலவிடவே இல்லையாம். மத்திய உள்துறை மந்திரியே தனது ஒதுக்கீட்டில் 1.05 கோடி மட்டுமே செலவிட்டிருக்கிறாராம். இதுவரை 46 சதவிகித நிதி செலவிடப்படாமலே உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு அவசியமா என்பதே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. திறம்பட செலவிட முடியாவிட்டால் இந்த ஒதுக்கீட்டை நிறுத்துவதே சரியாயிருக்கும்.
****
சென்ற வாரமே குறிப்பிட்ட 'ஐயப்பன் சன்னிதியில் வேண்டாத விஷயங்கள் நடப்பதால் ஐயப்பன் கோபமாக இருக்கிறார்' என்ற செய்தி இன்று இன்னும் பூதாகாரமாயிருக்கிறது. உன்னிகிருஷ்ண பணிக்கர் ஒரு நடிகை சன்னிதியில் நுழைந்ததாகக் கூற ஜெயமாலா என்ற நடிகை 1987ல் தான் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று பாதம் தொட்டு வணங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க பரபரப்பான சூழ்நிலை- . இப்போது இந்தப் பட்டியலில் சுதாசந்திரனும் அடக்கம். இப்போது கோயிலில் பெண் வாடையுடன் கள் வாடையும் (பெண் கள் வாடையோ) இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆண் பக்தர்களே ஐயப்பன் மூலஸ்தானத்தை நெருங்கமுடியாதபோது ஒரு பெண் எப்படி நெருங்கியிருக்க முடியும் - மனிதர்களே மறந்து மன்னித்துவிடும்போது தெய்வம் இன்னும் 20 வருஷங்களுக்குப் பிறகு கோபம் அடங்காமல் இருக்குமா? ஒரு பெண் எப்படி ஐயப்பன் கோவிலுக்குள் செல்லமுடிந்தது? இந்தக் குற்றச்சாட்டை வைப்பதன் மூலம் பணிக்கர் என்ன சொல்ல நினைக்கிறார்? ஏகப்பட்ட மர்ம முடிச்சுக்கள்- தேவசம் குழு ஜெயமாலாவை கைது செய்ய எண்ணுகிறதாம்!!!
****
இப்போது மெகா சீரியல்களில் ஒரு புதுசீசன் - வியாதிபோல அநேக சீரியல்களிலும் தொடர்கிறது - முதல் மனைவி தான் உயிருடனிருக்கும்போதே தனது கணவனுக்கு இரண்டாவது கல்யாணம் செய்யப் பாடுபடுவதுதான் - கணவனே வேண்டாமென்றாலும் விடமாட்டார்கள் (ஒரு மனைவி தொல்லை போதாதா?) காரணம் வேறென்ன? குழந்தை பிறக்காததுதான். முதலில் ஓ(கோ)லங் களில் ஆரம்பித்தது- இப்போது மலர்கள், நிம்மதி எனத் தொடர்கிறது
****
வரவேற்கவேண்டிய விஷயத்தையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
யார் மனசில் யாரு, என ஜி.எஸ் பிரதீப் நடத்தும், போட்டியாளருடைய மனதிலிருப்பவரை சில கேள்விகள் மூலம் கண்டு பிடித்துச் சொல்லும் நிகழ்ச்சி (விஜய் டி.வி). இந்த நிகழ்ச்சி மலையாள சானலில் ஏற்கனவே பிரபலமாம்- மனுஷன் கேள்வி மேல் கேள்வியாகப் போட்டு மனதில் இருப்பவரை தோண்டியெடுத்துவிடுகிறார் - அவரது உலகளாவிய பரந்த அறிவு வெளிப்படுவதுடன், சில அசட்டுத்தனமான க்விஸ் நிகழ்ச்சிகளுக்கிடையே அறிவப்பூர்வமான ஒன்றாக இருக்கிறது.
****
காபி வித் சுசி என்று சுசி பிரபலங்களைப் பேட்டி காணும் நிகழ்ச்சி - இதுவும் விஜய் டிவியில்தான். இயல்பான கேள்வி- பதில்கள் மிகவும் சுவை- சென்றவாரம் ஜேசுதாசின் மகன் விஜய்யும் பின்னணிப்பாடகி சுஜாதாவும்- அப்பாவைப் போலவே குரலினிமை விஜய்க்கு- சுஜாதாவின் கலகலவேன்ற பளிச் சிரிப்பே சங்கீதம்.
****
ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் வாரம் ஒருமுறை ஒரு நடிகையிடம் அவருக்குப் பிடித்த பத்து விஷயங்களைக் கேட்கிறார்கள் நாட்டுக்குத் தேவையான சி(ல)ல்லரைத்தரமான கேள்விகள்:
உங்கள் உடலில் பிடித்த இரு கவர்ச்சியான பாகங்கள்?
நீங்கள் எந்த எட்டு பேருடன் டேட்டிங் போக விரும்புவீர்கள்?
பதில்களை சொல்லாமல் விடுவதே
கண்ணியம்.
*****