பெண்ணுக்கு நீதி
நாட்டின் முதல் ஐ.பி.எஸ். பெண்மணியான கிரன்பேடி அனைத்து
இந்திய மக்களாலும் பாராட்டப்படும் போலிஸ் அதிகாரி. அவர்
திஹார்ச் சிறையில் செய்த மாற்றங்களும், தில்லியில் தயவு
தாட்சண்யம் பார்க்காமல் கண்ட இடங்களில் நிறுத்தப்படும்
வாகனங்களை கிரேன் மூலம் தூக்கிய (இதனால் அவருக்கு 'கிரேன் பேடி' என்றே ஒரு பட்டம் உண்டு) துணிச்சலும் அனைவரது
கவனத்தையும் அவர் பால் ஈர்த்தன. இன்று அவருக்கு ஒரு வருத்தம்.
தில்லி போலிஸ் கமிஷனர் பதவியை சீனியாரிட்டிபடி அவருக்குக்
கொடுக்காமல் அவரது இளையவருக்குக் கொடுத்து விட்டார்களாம்.
மூன்று மாத விடுமுறையில் சென்றுவிட்டார்.
ஒரு பெண்ணைக் குடியரசுத் தலைவராக்கியதற்காகப் பெருமைப்பட்டுக்
கொள்ளும் அரசு, இன்னொரு தகுதி வாய்ந்த பெண்ணிற்கு இந்த
அநீதியை இழைக்கலாமா?
***
சந்தோஷம்
உலகத்திலேயே சந்தோஷமாக இருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது
இடத்தைப் பிடித்துள்ளது. இப்ஸோஸ் என்ற அமைப்பு நடத்திய
கருத்துக் கணிப்பில் இது வெளியாகியுள்ளது. முதல் இடம்
நெதர்லாந்து. இரண்டாவது இடம் அர்ஜெண்டைனா. மூன்றாவது இடத்தில்
இந்தியா, யு.எஸ், கனடா, மெக்ஸிகோ. (72% மகிழ்ச்சியாக
இருக்கிறார்கள்.) தற்போதையப் பொருளாதாரம் பற்றிய திருப்தியில்
இந்தியா இரண்டாவது இடம் (72%). எதிர்கால சமுதாய, பொருளாதார
வாய்ப்புகள் பற்றிய நம்பிக்கையில் முதல் இடம் (37%) ( அப்போது
மற்ற நாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்துக்
கொள்ளுங்கள்!)
எந்த அடிப்படையில் இந்தக் கணிப்பு என்றெல்லாம் ஆராய்ச்சி
பண்ண வேண்டாம். சந்தோஷமாக இருக்கிறோம் என்றால் சந்தோஷப்பட
வேண்டியதுதானே!
***
மீண்டும் மீண்டும் காதல்
சின்ன வயசில் காதல் என்றாலே இனம் புரியாத கவர்ச்சி, டிராயர்
சட்டையோடு உலாவும் பிராயத்தில் ஒரு பெண்ணைப் பார்த்ததும்
மனசிலேற்படும் கிளு கிளுப்பு தங்களது முதல் காதலாக வாழ்க்கை
முழுவதும் நிலைத்து நிற்கும் - அந்த முதல் 'காதலை' எத்தனை
பேர் மனதுக்குள் அசை போடுகிறார்கள்? டைம் பத்திரிகை
சமீபத்தில் 3000 பேரிடம் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் 60
சதவிகிதம் பேர் தங்கள் முதல் காதலை அடிக்கடி நினைவுகூர்வதாகக்
கூறினார்கள். பிரிட்டனில் ஒரு கணிப் பொறியாளர் இந்த
மாதிரியான ஆட்களுக்காவே
Friends
Reunited
என்ற இணையதளத்தை
ஏழு வருடங்களுக்கு முன்னால் துவக்கியிருக்கிறார். அதில்
இப்போது 11 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்களாம்.
திருமண வாழ்க்கையில் ஏற்படும் மனக்கசப்புகளையும்,
விவாகரத்தையும் தவிர்ப்பதற்கான ஒரு அமைப்பு விவாகரத்துக்களில்
5 சதவிகிதம் இணையம் வழி துவங்கும் 'ரொமான்ஸி'னால் ஏற்படுகிறது
என்று சொல்கிறது. ஷான் பான்ட், பள்ளி நாட்களில் சூ-வைக்
காதலித்தவர். ஆனால் காலப்போக்கில் அவர் வேறொரு பெண்ணை மணந்து
இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்திக்
கொண்டிருந்தார். ஒரு நாள் அவருக்கு எதிர்பாராது வந்த
மின்ன்ஞ்சல் அவரது வாழ்க்கையையே திசை மாற்றியது. அவரது
இளவயதுக் காதலி சூ-தான்
Friends
Reunited
இணைய தளம் மூலம் இவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கடிதம்
அனுப்பியிருந்தாள். தனது இல்லத்துக்கு மிக அருகாமையிலேயே
இளவயது மேனகை இருப்பது தெரிய வர ஒரு நாள் தேனீருக்காக சூ-வின்
வீட்டிற்குப் பான்ட் செல்ல, பிறகென்ன? 'ஐயோ பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு'தான். 17 வருட தாம்பத்திய உறவு முறிய, மனைவியை
விவாகரத்துச் செய்துவிட்டு தனது பழைய காதலியுடன்
இணைந்துவிட்டார் பான்ட்.
ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பழைய காதல் உறவு தொடரும்போது
தங்களது கணவனையும் குழந்தைகளையும் பிரிவதில் தயக்கம்
காட்டுவதில்லை. டேவிட் ராம்சேயின் மனைவியின் கதையும் இதுதான்.
பழைய காதலன் அவளுக்கு மெயிலுக்கு மேல் மெயிலாக மூன்றே
நாட்களில் 66 மெயில்கள் அனுப்ப, அவள் இறுதியாகத் தனது
குடும்பத்தைப் பிரிந்து பழைய காதலனுடன் செல்லத்
தீர்மானித்தாள். அவளை அவ்வாறு முடிவெடுக்க வைக்கச் செய்த
கடைசி இணையக் கடிதம் அவளது பழைய காதலனிடமிருந்து வந்த, "நான்
சின்னவயதில் சந்தித்த நீதான் இன்னும் என்னுடைய வாழ்வில்
அற்புதமான பெண், உன்னைக் கை நழுவ விட்டதற்காக நான் மிகவும்
வருத்தப்படுகிறேன்" என்பதுதான்.
'இணையம் உலகத்தை சிறிதாக்கியிருக்கலாம்! அதே சமயம் நமது
தனிப்பட்ட வாழ்வில் புகுந்து சர்ச்சைகளையும் குழப்பங்களையும்
ஏற்படுத்துகிறது' என்று சொல்கிறார் ஜான் ஸ்டாக் என்பவர்.
***
உங்க வேலையைச் செய்ங்கப்பா!
போஸ்ட் ஆபீஸில் இன்கம் டாக்ஸ் ரிட்டன்கள் வாங்குவதை நிறுத்தி
விட்டார்களாமே? (அப்படி வாங்கிக் கொண்டிருந்தார்களா என்ன?).
படிவங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யாமல் வாங்கியதால்
குளறுபடியாகி விட்டதாம். போஸ்ட் ஆபீஸில் ஸ்டாம்ப் ஒழுங்காகக்
கொடுத்துத் தபாலை ஒழுங்காக அனுப்பி வைத்தால் போதாதா? போஸ்ட்
ஆபீஸில் புத்தகம் விற்பது, பெட்ரோல் பங்கில் செல் போன்
ரிசார்ஜ் செய்வது, மருந்துக்கடை வைப்பது, நிரோத் விற்பது
எல்லாம் வேண்டாத வேலை. அதுதான் கீதாச்சார்யனே
சொல்லியிருக்கிறாரே, "மற்றவர் வேலையைச் செய்வதை விட, அவரவர்
வேலை எதுவானாலும் அதைச் செய்வதே மேலானது" என்று.
*******