பெண்ணே
நீ!
இந்தியா ஒரு பக்கம் பொருளாதாரத்திலும் வாழ்க்கை முறையிலும்
மிகுந்த முன்னேற்றம் கண்டாலும், மற்றொரு பக்கம் இன்னும்
பெண்கள் முன்னேற்றம் என்பது ஒரு பகல் கனவாகத்தான் இருக்கிறது.
இப்போது கிராமங்களில் கூட பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை
டி.வி யில் பார்க்கும் அளவு முன்னேறியிருக்கிறது நாடு. ஆனால்
இன்னும் பெண்குழந்தை என்பது ஒரு சாபக்கேடாகவும், செலவுக்
கணக்காகவும்தான் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி மருத்துவத்
துறையில் பெருகிவரும் இந்த நாளில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா
என்று தெரிந்துகொள்ள முடிவது, பெண் சிசுக் கொலைகளுக்கு
இன்னும் வசதியாக இருக்கிறது. டாக்டர்களும் தங்கள் காரிலேயே
கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று அறியப் பயன்படும்
கருவிகளை எடுத்துச் சென்று தங்களது வாடிக்கையாளர்களைத்
திருப்திப் படுத்துகிறார்கள். கருவிலேயே பெண் சிசுக்கள்
அழிக்கப்படுகின்றன.
இந்தியாவின் பல நகரங்களில் ஆண்கள் பிறப்பு விகிதம், பெண்கள்
பிறப்பு விகிதத்தைவிட அதிகமாக இருக்கிறது என்று யூனிசெப்
அறிக்கை கூறுகிறது. பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற வளம்
மிக்க மாநிலங்களில்தான் இந்த சிசுக்கொலை அதிகமாக இருக்கிறது
என்பது வேதனையான செய்தி. பஞ்சாபில் வடக்குப் பகுதிகளில்
ஆறுவயதுக்குட்பட்டவர்களில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 798
பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கிறார்கள். தேசிய சராசரி 927.
கடந்த இருபதாண்டுகளில் மட்டும் 10 மில்லியன் பெண்சிசுக்கள்
கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன எனச் சொல்கிறது
புள்ளிவிவரம். மொத்தத்தில் வெறும் 500 ரூபாய் செலவில்
முடியக்கூடிய கருச்சிதைவு முறையை விட்டு, பெண்ணை வளர்த்து
ஆளாக்கி 50,000 வரதட்சணை கொடுக்கவேண்டிய அவசியமென்ன
என்பதுதான் பல பெற்றோர்களின் கேள்வி. வரதட்சணை ஒழிந்தாலொழிய
பெண் சிசுக்கொலை ஒழியாது போலிருக்கிறது!
மகிழ்ச்சி
13 வயதிலிருந்து 24 வயது வரையானவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி
அளிக்கும் விஷயம் எதுவாக இருக்கும்? காதல், போதைமருந்து
அல்லது டிஸ்கோதே போன்ற நடனங்கள் என்று நீங்கள் நினைத்தால்
மிகவும் தவறு. பெரும்பாலானவர்கள் சொல்லுவது குடும்பத்துடன்
நேரத்தைச் செலவழிப்பதுதானாம். இந்த வயதுக்குட்பட்ட 1280
பேர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயின் முடிவுதான் இது.
அடுத்தபடியாக மகிழ்ச்சி தருவது நண்பர்களுடன் நேரத்தைச்
செலவிடுவது. 17 வயதான ஒரு இளைஞன் கூறுவது 'பெற்றோர்கள்தான்
எனக்கு அடித்தளமானவர்கள், நான் முட்டாள்தனமாக ஏதாவது செய்தால்
கூட என் அம்மா என்னை மன்னித்து என்னிடம் அன்பு காட்டுவார்.
இந்த எண்ணமே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' எனச் சொல்கிறான்.
பணம்தான் மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னவர்கள் குறைவு.
பணத்தைவிட நன்கு படித்த பெற்றோர்களைப் பெறுவதுதான் மேலான
விஷயமாகத் தெரிகிறது. 'உங்களது வாழ்க்கையின் ஹீரோ யார்?'
என்ற கேள்விக்கு அனேகரின் பதில் அம்மா அல்லது அப்பாதான்.
இதிலும் அப்பாவைவிட அம்மாதான் முந்திக்கொள்கிறாள்.
ஐந்தில் ஒன்று
பிரிட்டனில் ஐந்துபேரில் ஒருவர் தப்பான கணவனைத்
தேர்ந்தெடுத்ததற்காக வருத்தப்படுகிறார். விவாகரத்து செய்யவும்
தயாராக இருக்கிறார். இதைவிட மோசம் என்னவென்றால் பன்னிரண்டு
பேரில் ஒருவராவது, கல்யாணமே பண்ணிக் கொண்டிருக்கக் கூடாது
என்று நினைக்கிறார். ரட்போர்ட் பிங்லி வங்கிகள் 35-லிருந்து
44-வயதான பெண்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுதான் இது. 58
சதவிகித பெண்கள் மகிழ்ச்சியாகக் குடும்பம்
நடத்துகிறார்கள்தான். அனேக பெண்கள் தங்களுக்குக்
குழந்தைப்பேறு வேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்
செய்வன திருந்தச்செய்
"எந்தப் பணியைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும்,
குறிப்பிட்ட காலம் அல்லது நேரத்திற்குள் குறிப்பிட்ட பணியைச்
செய்து முடிப்பதில் அக்கறை செலுத்தவேண்டும், அவ்வாறு செய்ய
முடியாவிட்டால் நீங்கள் உங்கள் துறையிலும், பணியிலும்
தோல்வியைச் சந்திக்க நேரிடும், எந்த நிறுவனமானாலும்
வாடிக்கையாளர் திருப்திதான் முக்கியமாக இருக்கவேண்டும்"
இப்படிச் சொன்னவர் எந்த நிர்வாகத் துறை வல்லுநரும் அல்ல.
மும்பை டப்பாவாலா கூட்டமைப்பின் தலைவர் ரகுநாத் மெட்கே
பெங்களூருவில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு ஆற்றிய விரிவுரையின்
ஒரு பகுதிதான் இது.
லஞ்சத்திலிருந்து விடுதலை
ஐந்தாவதுதூண் என்று அழைக்கப்படும் அரசு சாராத தொண்டு நிறுவனம்
ஒன்று 2-லட்சம் 0 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்திருக்கிறது.
ஐம்பது ரூபாய் நோட்டுப்போல தோற்றமளிக்கும் இதில் 'நான் ---
ரூபாய் அளிப்பதற்கு உத்தரவாதமளிக்கிறேன்' என்ற வாசகத்திற்குப்
பதிலாக, ‘நான் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்’
என்று உறுதியளிக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
நோட்டுக்களை எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி
லஞ்சத்துக்கெதிரான ஒரு விழிப்புணர்ச்சியை நாடு முழுவதும்
ஏற்டுத்துவதுதான். வெற்றிபெறுமா?
காற்றில் பறக்குது
கலைமாமணி விருது வாங்கிய பொம்மலாட்டக் கலைஞர் இன்று மதுரையில்
பலூன் விற்றுக்கொண்டிருக்கிறார். பொம்மலாட்டத்திற்குத்
தேவையான பொம்மைகளை உருவாக்கும் கலைஞர் இவர். இராமாயணம்,
மகாபாரதம் போன்ற இதிகாசங்களைத் தவிர சுத்தம், சுகாதாரம்
மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சிகளைப் பரப்பவும்
இந்தக்கலை உப்யோகப்படுத்தப்பட்டது. இன்று ஆதரிப்போர் இல்லாமல்
இந்தக்கலை நசிந்து, கலைஞர்களும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
காற்றில் பறப்பது அவர்கள் விற்கும் பலூன் மட்டுமல்ல! அவர்கள்
பெற்ற பட்டமும்தான்!
இவள் அவள் இல்லை
1997-ல் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டதாக ஒரு வழக்கு நடந்து
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இப்போது
கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவள் வந்து, "நான் எங்கே
செத்துப் போனேன்? புதுக்கோட்டையிலே கல்யாணமாயிக் குடித்தனம்
நடத்திக்கிட்டிருக்கேன்" என்கிறாள். போலீஸார் 'இவள் அவள்
இல்லை' என்கிறார்கள். இப்போது வழக்கு மதுரை
உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.
மன்னிக்கவும், கொஞ்சம் மிகை
தமிழ் ஓசை என்ற நாளிதழ் தூய தமிழில் செய்திகள் வெளியிட்டுக்
கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து இந்த வாரம் கற்றுக்கொண்ட
தூய தமிழ் வார்த்தைகள்:
தானி -
Auto
அமர்த்தம் -
recruitment
கமுக்கம் -
secret,
confidential
மகிழுந்து -
Pleasure car
போக்கிரி -
Rowdy
என்றாலும், ராசீவ் காந்தி, சோம்நாத் சாட்டர்சி, பா.ச.க
என்பதெல்லாம்??? ஸாரி, கொஞ்சம் ஓவராக இல்லை? (ஜோதி பாசுவை
மட்டும் விட்டு வைத்தது ஏன்?)
தங்கலட்சுமி
வேலூர் மாவட்டம் திருமலைக்கோடி கிராமத்திற்கருகே ஸ்ரீ
நாரயணபீடம் சார்பில் 300 கோடி ரூபாய் மதிப்பில் மகாலட்சுமி
அம்மனுக்குத் தங்கக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர்
பரப்பளவில் 55,000 சதுரஅடிக்குக் கட்டப்பட்டுள்ள இந்தக்
கோவில் அமிர்தசரசின் தங்கக்கோவிலை விட பிரம்மாண்டமானதாம்.
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கக்கூடும் என்றும்
சொல்லப்படுகிறது. லட்சுமி அம்மனின் சிலை தவிர, மேற்கூரை
பிரகாரம் எல்லாமே தங்கத்தின் தகதகப்பில் மின்னுகிறதாம்.
கற்றுக்கொள்ளுங்கள்
ஒரு குழந்தையிடமிருந்து பெரியவர்கள் மூன்று விஷயங்களைக்
கற்றுக் கொள்ளலாம். ஒன்று எப்போதும் எந்தக் கவலையுமில்லாமல்
சந்தோஷமாக இருப்பது. இரண்டாவது எந்த நேரத்திலும்
சும்மாயிருக்காமல் துறுதுறுப்பாக ஏதாவது செய்வது. கடைசியாகத்
தனக்கு வேண்டியதை முண்டியடித்துச் சண்டைபோட்டுப் பெறுவது.
*******