தூண் பிளந்து
வரட்டும் தெய்வம்!
கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர
விசாரித்து அறிவதே மெய். சென்ற வார அமர்க்களம் - உமா குரானா
என்ற டில்லி பள்ளி ஆசிரியை மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளில்
ஈடுபடுத்துகிறாராம். அதற்காகப் பணம் வாங்கிக் கொண்டு
ஏஜண்ட்டாக செயல்படுகிறாராம். அதற்கான விடியோ, ஆடியோ ஆதாரங்களை
தொலைகாட்சி சேனல் ஒன்று ஒளி "பரபரப்பியது." அவர்
பயிற்றுவித்த பள்ளிக் கூடம் சூறை, அவர் மீது அதிரடித் தாக்கு,
பத்திரிகைகளில் தலையங்கங்கள், ஆசிரியருக்குக் கடிதங்கள்.
ஆசிரியை கைது, உடனடியாக டிஸ்மிஸ். இப்போது என்ன ஆயிற்று ?
அத்தனையும் பொய். தொலைக்காட்சியில் அழுது கொண்டு சாட்சி
சொன்ன "மாணவி" ஒரு பத்திரிகை நிருபர். பணம் கொடுக்கல்
வாங்கலில் ஆசிரியைக்கும் இன்னொருவருக்கும் நடந்த உரையாடலை,
சாமர்த்தியமாக, பாலியல் புகாருக்கு ஆதாரமாக நுழைத்து
விட்டார்கள்.
ஜன நாயகத்துக்கு நான்கு தூண்கள் என்கிறார்கள். சட்ட மன்றங்கள்,
நிர்வாகம், நீதி மன்றங்கள், கடைசியாக ஊடகங்கள். இந்த நான்கின்
மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்ட இந்த வேளையில் நாம்
நம்ப வேண்டியிருப்பது ஒரே தூண்தான். பிரகலாதன்
பிரார்த்தனைக்கு இணங்க, அதர்மத்தை அழிக்க வந்த நரசிம்மாவதாரத்
தூண்தான் அது.
******
மலையைப்
புரட்டிய மாமனிதர்
எல்லாம் போகட்டும். இந்த வாரம் நாம் படித்த நல்ல விஷயம்
ஒன்றை நினைவு படுத்திக் கொள்வோமே ?
பீஹார் கயா மாவட்டத்தில் காலர் கதி என்ற மலைப் பகுதி. மலையின்
எதிர் எதிர்ப் பக்கங்களில் மக்கள் வசிக்கும் பிரதேசங்கள்.
இடையில் குறுகிய ஒற்றையடிப் பாதை. 60 கிராமத்து மக்களும்
அந்த ஒற்றையடிப் பாதையைத்தான் பயன்படுத்திக்
கொண்டிருந்தார்கள். பாதையோடு பாதையாக ஊர்ந்து சென்றால்தான்
கடக்க முடியும். அரசாங்கத்துக்கு மனு மேல் மனு அனுப்பியும்
பிரயோசனமில்லை. எல்லாரும் விதியை நொந்து கொண்டு, ஊர்ந்து
போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் வித்தியாசமானவர்.
அதனால்தான் அவரைப் பற்றி இப்போது பேசுகிறோம். அவர் பெயர்
தசரத் மஞ்சி. ஒரு சுத்தியல், மண்வெட்டி, ஈட்டி சகிதம் 22
வருஷங்கள் தனியொற்றை ஆளாக லொட்டு லொட்டென்று மலையைச்
சுத்தியலால் தட்டிக் கொண்டிருந்தார், அலுக்காமல் சலிக்காமல்.
ஒரு நாள் கூட ஓய்வில்லை. 360 அடி நீளமும் 30 அடி அகலமும்
கொண்ட புதிய பாதையைப் போட்டு முடித்தார். அவருக்கு உணவு
கொண்டு வந்த மனைவி அதே மலைத் தொடரில் கால் இடறி விழுந்து
மரணம் அடைந்து விட்டார். இதனால் எல்லாம் தளரவில்லை மஞ்சி.
கடந்த ஆகஸ்ட்டில் 73 வயதில்
கான்ஸர் நோயால் இறந்து போனார் மஞ்சி. முடியாது என்பதற்கு
மூவாயிரம் காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் தசரத்
மஞ்சி செய்த மலையைப் புரட்டுகிற காரியத்தை நினைத்துப்
பார்ப்போம். வெறுமனே "செயற்கரிய செய்வார் பெரியர்" என்று
உருப் போட்டுக் கொண்டிருந்தால் போதாது.
******
பாரதி
நாட்டியக் கலைஞர்?
25 வருடங்களாக மேடையேறிவரும் பரதநாட்டியக் கலைஞர் ஷோபனா ரமேஷ்
தனது நடனத்தின் மூலம் அன்பு, உலக அமைதி என்ற பாரதியாரின்
லட்சியங்களைப் பரப்பி வருகிறார். 'நான் பாரதியின் தீவிர ரசிகை.
அவர் மறைந்து 86 ஆண்டுகள் ஆனாலும் அவரது ஒரே ஜாதி,
அனைவருக்கும் சம உரிமை எனும் கருத்துக்களை இன்றைய சூழலில்
அனைவரும் நினைவுகூற வேண்டும்' என்கிறார் இவர்.
******
பச்சைக்கிளி
பேசுது
அலெக்சிற்கு நிறங்கள் தெரியும், உருவங்கள் தெரியும், 100
ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் தெரியும். சின்னச் சின்ன பன்ச்
வர்த்தைகள் தெரியும். டி.வி. நிகழ்ச்சிகளில் அவன் மிகவும்
பிரபலம், இறந்தபோது வயது 31.
அந்த 'அவன்' ஒரு கிளிதான். கிளி என்றால் சொன்னதைச் சொல்லும்
என்பதை மாற்றி அதனால் புதுப்புது வார்த்தைகளைத் தெரிந்து
கொள்ள முடியும். நாம் பேசுவதைப் புரிந்து கொண்டு ஓரிரு
வார்த்தையில் பதில் சொல்லவும் முடியும் என்று சொல்கிறார்
இந்த ஆப்ரிக்கக் கிளியைப் பழக்கிய டாக்டர் பெப்பெர்பெர்க்.
பறவைகளின் மூளையைப்பற்றி நாம் கொண்டுள்ள எண்ணங்களை இந்த
ஆராய்ச்சி முழுதுமாக மாற்றிவிட்டது எனச் சொல்கிறார் ஒரு
விஞ்ஞானி. ஆனாலும் இந்தப் பறவைகளால் சிந்தித்து செயல்பட
முடியாது என்பது சிலரின் வாதம்.
******
அம்மா குரியர்
சர்வீஸ்
கெனோஜர் காட்டுப் பகுதியில் உள்ள அம்மா தாரினி துக்குராணி
என்ற கடவுளுக்குத் தேங்காய் உடைக்க வேண்டுமானால் அந்தப்
பக்கம் எந்த வாகனத்தைக் கைகாட்டி நிறுத்தினாலும் அவர்கள்
உங்களிடமிருந்து தேங்காயைப் பெற்றுக் கொண்டு பிராத்தனையை
நிறைவேற்றி விடுகிறார்களாம். அந்த வழி என்றில்லாமல் எந்த
பஸ்சின் டிரைவரிடம் கொடுத்தாலும் உங்கள் தேங்காய் ஒவ்வொரு
கையாக மாறி போக வேண்டிய இடத்திற்குப் போய்விடும்.
சக்திவாய்ந்த அம்மனிடம் மக்களுக்கு அவ்வளவு பக்தி. இது பக்தி
குரியர் செர்வீஸ்.
******
படித்தபின்
பேசு
'ஹைதராபாத் குண்டு வெடிப்பிற்குப் பிறகு
தமிழ்நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய
உளவுத்துறை செய்தி அனுப்பியிருக்கிறதா?' என்ற கேள்விக்கு "அப்படி
ஒன்றுமில்லை, வழக்கம்போல் வரும் முன்ஜாக்கிரதைக் கடிதம் தான்"
என்று மறுத்தார் டி.ஜி.பி. ராஜேந்திரன். ஆனால் உண்மையிலேயே
சென்னைக்குத் தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றி செய்தி
வந்திருப்பதை நிருபர்கள் சுட்டிக் காட்டியபோது, "நான்
இப்போதுதான் பதவி ஏற்றுக்கொண்டேன். இந்த ஃபைலைப் பார்ப்பதற்கு
நேரம் கிடைக்கவில்லை" என்கிறார் பொறுப்புமிக்க போலீஸ் அதிகாரி.
ஆமாம், அவர்களுக்குக் குப்பை அள்ளவே நேரம் போதவில்லையே!
******
புஷ்ஷிசம்?
எக்குத்தப்பாக ஏதாவது சொல்லி உளறிக்கொட்டிக் கிளறி
மூடுவது அமரிக்க அதிபர் புஷ்ஷிற்கு வாடிக்கை, மற்றவர்களுக்கு
வேடிக்கை ஆஸ்திரேலியாவில் ஏ.பி.இ.சி. என்ற ஆசியப் பொருளாதார
மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றவர் ஏ.பி.இ.சி. என்பதற்கு
பதிலாக ஓ.பி.இ.சி. என்று பலமுறை தவறுதலாகச் சொன்னார். இதைக்
கேட்டுஅனைவரும் சிரிக்க சமாளிஃபை பண்ணும் விதமாக அடுத்த ஆண்டு
நடைபெறும் ஓ.பீ.இ.சி. மகாநாடு என்று சொல்ல மறுபடியும் வெடிச்
சிரிப்பு. ஆஸ்திரேலியா ஓ.பீ.இ.சி. உறுப்பினர் இல்லை
என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னும் விடவில்லை.
ஈராக்கில் உள்ள ஆஸ்திரிய நாட்டு வீரர்களைச் சந்திக்க
ஆஸ்திரேலியப் பிரதமர் சென்றார் என்று குறிப்பிட்டு மறுபடியும்
குட்டு வாங்கிக்கொண்டார். ஈராக்கில் உள்ளது ஆஸ்திரிய
வீரர்களல்ல. ஆஸ்திரேலிய வீரர்கள்.
*******