முழு அடைப்பும்
உச்சநீதி மன்றமும்
உச்சநீதி மன்றம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்
கூடாது என்ற எண்ணத்தில் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும்
அக்டோபர் முதல் தேதியன்று அறிவித்த பந்த்திற்குத் தடை
விதித்தது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். ஆளும் கட்சியே
பந்த்தை அறிவிப்பதும் அரசு நிர்வாகத்தை துஷ்பிரயோகம் செய்து
பந்திற்கு ஆதரவு தேடுவதும் காலம் காலமாக அரசியல் அரங்குகளில்
நடப்பதுதான். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுமக்களின் காவலனாக
நின்று இந்த மாதிரி சமயங்களில் அவர்களது அடிப்படை உரிமைகளைப்
பாதுகாப்பது பாரட்டப் படவேண்டிய விஷயம்.
உச்சநீதிமன்றத்தைத் துச்ச நீதிமன்றமாகக் கருதி, பந்திற்கு
உண்ணா விரதம் என்று பெயர் கொடுத்து நிர்வாக
இயந்திரங்களையெல்லாம் முடக்கிய கூட்டணி அரசின் செயல் மாபெரும்
தவறென்றாலும் உச்சநீதிமன்றமும் இது விஷயத்தில் உணர்ச்சி
வசப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டம். 'நீதிமன்றத்தின் ஆணை
நிறைவேற்றப் படவில்லை என்பது உண்மையாக இருந்தால் (உண்மையா
பொய்யா என்றுகூட முழுமையாகத் தெரியாத நிலையில்) குடியரசுத்
தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'
என்று சொல்லியிருப்பது ஆனாலும் கொஞ்சம் ஓவர். முழு அடைப்பு
விஷயத்தில் உச்ச நீதிமன்றம் காட்டிய வேகத்தை ஏன் காவிரி
நீர்ப் பிரச்சினையில் கர்நாடகா அரசின் மீதும் முல்லைப்
பெரியார் அணைப் பிரச்சினையில் கேரளா மீதும் காட்டவில்லை
என்பது சாதாரண பாமரனின் கேள்வி. அரசியல்வாதிகள் உணர்ச்சி
வசப்படலாம் உச்ச நீதிமன்றமுமா?
நீயா? நானா?
மிட் டே என்ற நாளிதழின் நான்கு பத்திரிகையாளர்களுக்கு டில்லி
உயர் நீதி மன்றம் நீதி மன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக
நான்கு மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஓய்வு பெற்ற உச்ச
நீதி மன்ற முக்கிய நீதிபதி சபர்வால் அவர்களின் தலையீட்டினால்
அவருடைய இரு மகன்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டன என்ற
குற்றச்சாட்டிற்கான செய்திகளையும் கட்டுரைகளையும் மிட் டே
வெளியிட்டது. பொது நலம் கருதியே இந்த செய்திகள்
வெளியிடப்பட்டன என்று பத்திரிகையாளர்கள் வாதிட்டாலும் அவர்கள்
லட்சுமண ரேகையை மீறி விட்டார்கள் என்று அவர்களுக்கு தண்டனை
விதிக்கப்பட்டிருக்கிறது.
நீதி மன்றங்களுக்கு உரிய மதிப்பு அளிப்பது பற்றி இரு வேறு
கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் "இந்தியா போன்ற ஒரு ஜன
நாயக நாட்டில் அரசியல் சாசனப்படி பேச்சு, கருத்து அடிப்படை
சுதந்திரமளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில்
மக்களின் சக்தியே முதன்மையானது. மற்ற எந்த சட்டமும் அதற்கு
அடுத்த படிதான். அவர்களுக்கு நீதிபதிகள் குற்றம் இழைத்தால்
சுட்டிக்காட்ட உரிமை உண்டு" என்ற வாதப் பிரதிவாதங்கள்
தொடர்கின்றன. அடிப்படை சுதந்திர உரிமைகளுக்கும் நீதிமன்ற
அவமதிப்பிற்கான சட்டங்களுக்கும் இடையே எழுந்திருக்கும் இந்தப்
பிரச்னையில் அவ்வப்போது சந்தர்ப்பங்களை ஒட்டித்
திருத்தங்களும் தீர்ப்புகளும் வந்திருக்கின்றன.
'எந்த ஒரு துறையும், மனிதரும், நீதிபதிகள் உட்பட மக்களின்
கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்ன நியாயம்?' என
ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வியை எழுப்புகிறார்கள்.
அன்றும் இன்றும்
"ஹிந்துஸ்தான் ஹை தேஷ் ஹமாரா, ஜான்சே அப்னே ஹம்கோ ப்யாரா"
(இந்தியா நமது தேசம், இதை உயிரைவிட மேலாக மதிக்கிறோம்)
இப்படித் தொடரும் பாடலை அந்தத் தலைவர் ஹிந்தியிலேயே
படித்ததோடு கூடியிருந்தவர்களையும் சேர்ந்து சொல்லச் சொன்னார்.
மற்றொரு அமைச்சர், "எனது அமைச்சகம் சார்ந்த அறிக்கைகள்,
கடிதங்கள், ஒப்பந்தங்கள் எல்லாமே இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு
மொழிகளில்தான் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு இரு முறை இந்தி
மொழிப் போட்டிகள் நடத்தி வென்றவர்களுக்குப் பரிசுகள்
வழங்கப்படுகின்றன' என்றெல்லாம் மார்தட்டிப் பேசியிருக்கிறார்.
இதையெல்லாம் பேசியது முதலமைச்சர் கருணாநிதியும் கப்பல்
போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவும்தான். இந்தி
என்றாலே விளக்கெண்ணையாய் முகம் சுளித்து இந்தி எதிர்ப்பையே
தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு இந்தி எதிர்ப்பினாலேயே
ஆட்சிக்கு வந்தவர்களின் மன மாற்றம் நல்லதொரு அறிகுறி! கல்வித்
திட்டத்தில் மும்மொழித் திட்டத்திற்கு இந்த மன மாற்றம்
வழிவகுக்குமானால் வளரும் மாணவர்களின் நல்லதொரு
எதிர்காலத்திற்கு வகை செய்யும்.
சொல்வதும் செய்வதும்
மரங்களை வளர்ப்போம், மதங்களை வளர்க்கக் கூடாது - முதலமைச்சர்
கலைஞர்
பொறியியல் கல்லூரி அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில் பல
ஆண்டுகளாக நிழல் தந்த பெரிய மரங்கள் இரவோடு இரவாக
அகற்றப்பட்டன (செய்தி)
முரண்
தமிழகத்தில் சாராயம் ஆறாக ஓடுகிறது -- மத்திய அமைச்சர்
அன்புமணி
இலவச கலர் டீ.வி.யால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை
குறைந்துள்ளது - தலைமை செயலர் த்ரிபாதி
கண்ணில் பட்டது
தமிழ் நாடு சுற்றுலா வள்ர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு
போஸ்டரில் ராமரும் லட்சுமணரும் நின்றுகொண்டிருக்க, வானர
சைன்யம் கற்கள் சுமந்து சமுத்திரத்தில் பாலம் அமைத்துக்
கொண்டிருக்கும் காட்சி. ஓவியத்தின் கீழ் "ராம பிரானின்
தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர் தாங்கி
நிற்கிறது" என்ற வாசகமும் காணப்படுகிறது.
தவிர ராமேஸ்வரம் பற்றிய தமிழக சுற்றுலாத் துறையின் ஒரு
கையேட்டில் "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்திய சேது பந்தனம்
என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்" என்று
கூறப்பட்டுள்ளது.
(தகவல்: மு. ஸ்ரீனிவாசன், சென்னை, துக்ளக் இதழில்)
வத்சலாவிற்கு வயது 92
மத்தியப் பிரதேசத்தில் பன்னா புலிகள் உயிரியல் பூங்காவில்
வத்சலா என்ற பெண் யானைக்கு 92 வயதாகிறது. உலகிலேயே அதிக
வயதான இந்த யானை கின்னசில் இடம் பெறப் போகிறது.
நாணய மாற்றம்
மதுரையில் இப்போது 25 பைசா, ஐம்பது பைசா நாணயங்களுக்கு
பற்றாக்குறையாம். இவைகளை ஷேவிங் ப்ளேட் செய்யும் நிறுவனம்
வாங்கிக் கொள்கின்றனவாம் ப்ளேட் தயாரிக்க. அங்கு பிச்சை
எடுப்பவர்கள் இந்த 25, 50 பைசா நாணயங்களைக் கேட்டுப்
பெற்றுக்கொண்டு அவைகளை அதிக விலைக்கு அந்த நிறுவனத்திடம்
விற்று விடுகிறார்கள். 25 ரூபாய் அளவிற்க்கு மதிப்புள்ள
நாணயங்கள் ஐம்பது வரையில் விலை போகின்றனவாம்.
*******