<<<முந்தைய பக்கம்
?
இசைத்துறையில் தங்களுக்குள்ள ஈடுபாடு
மற்றும் "நிரோஷ்டா" ராகத்தில் தாங்கள் எழுதிய பாடலின் சிறப்பு
பற்றி பகிர்ந்துகொள்வீர்களா?
முன்னரே குறிப்பிட்டதுபோல் சங்கீதப் பரம்பரையில் வந்த
குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். மற்றபடி முறையான பயிற்சி
என்று எதுவும் கிடையாது. இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓரளவு
குரல் வளமும் உண்டு [மற்றவர்களின் கணிப்பு] வானொலியிலும்
ஒலிநாடாவிலும் கேட்டும், திரைப்படப் பாடல்களைக் கேட்டும்
கற்றுக் கொண்ட பாடல்கள் ஏராளம். திரைப்படப் பாடல்கள் என்றால்
50 ஆண்டுகளுக்கு முன் வந்த மீரா, சிவகவி, ஹரிதாஸ், நந்தனார்,
சகுந்தலை போன்ற படங்கள். தமிழ் என் தாய்மொழி. பிறந்து
வளர்ந்ததும் இருப்பதும் தமிழ் நாட்டில். படித்ததும் தமிழ்
இலக்கியம். என் Ph.D. ஆய்வும் தமிழ் இலக்கியத்தோடும் தமிழ்
இசையோடும் தொடர்புடையவை. ஆய்வின்போது சென்னைப் பல்கலை
கழகத்தில் இசைத் துறைப் பேராசிரியர்களோடு தொடர்பு கொண்டு
இசைத் தொடர்பான பல குறிப்புக்களையும் விளக்கங்களையும்
பெற்றேன். இந்தப் பின்னணியில்தான் தமிழ்ப் பாடல்கள் சில
இயற்றியுள்ளேன். அவற்றில் ஒன்றுதான் "நிரோஷ்டா" இராகப் பாடல்.
சென்னையில் டிசம்பர் சங்கீத சீசனில், மியூசிக் அகாடமியில்
காலை நேர ஆராய்ச்சி நிகழ்வில் இடம் பெற்ற நிரோஷ்டா இராகம்
குறித்த விமரிசனக் கட்டுரை ஒன்றை இந்துப் பத்திரிகையில்
படித்தேன். அதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
1877-1945ல் வாழ்ந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்கள்
சிறந்த சங்கீத வித்துவான். இசை உலகில் டாக்டர் பட்டம் பெற்ற
முதல் சங்கீத மேதை இவர். எப்போதும் ஏதாவது ஒரு இராகத்தையோ
பாடலையோ இவர் வாய் பாடிக்கொண்டேயிருக்கும். ஒரு சமயம் இவர்
உதட்டில் புண் ஏற்பட்டுப் பாடமுடியவில்லை. உதடு ஒட்டினால் வலி
ஏற்பட்டது. தமிழில் ப என்ற எழுத்தும் ம என்ற எழுத்தும்
உச்சரிக்கும்போது மட்டுமே உதடுகள் ஒட்டும். எனவே இவ்விரண்டும்
இல்லாமல் ஒரு இராகம் இயற்றி அதற்கு "நிரோஷ்டா" என்று
பெயரிட்டார். இது ஒரு வடமொழித் தொடர். வடமொழியில் உஷ்டம்
என்றால் எச்சில் என்பது பொருள். உதடு ஒட்டினால் எச்சில்படும்.
நிர் என்பது எதிர்மறைப் பொருள் தரும்.[prefix]. பயம் என்பதோடு
நிர் சேர்த்தால் நிர்ப்பயம் ஆகும். இதேபோல் விசாரம்
நிர்விசாரம் என்றாகி எதிர்மறையாகும். இப்படித்தான்
நிர்+உஷ்டம்="நிரோஷ்டா" இராகம் கண்டுபிடிக்கப் பட்டது. இவை
எல்லாம் வடமொழிச் சொற்கள்தாம். பாகவதர் வடமொழியில் தேர்ந்தவர்.
பத்திரிகையில் இந்த செய்தியைப் படித்தபின் நாம் ஏன் ப ம என்ற
இரு எழுத்துக்களும் வராமல் ஒரு பாடலை இயற்றிப் பார்க்கக்
கூடாது என்ற ஆவல் பிறந்தது. முயன்றெழுதி முருகன் மீது ஒரு
பாடலும் உருவாயிற்று. இசைமேதை
Prof.S.இராமநாதன்
மருமகனும், லாஸ் ஏஞ்சலிசில் உள்ள வீணை விதூஷகி கீதா பென்னெட்
அவர்களின் சகோதரியின் கணவருமான சங்கீத மேதை
K.S.ரகு
அவர்கள் என் பாடலை நிரோஷ்டா இராகத்திலேயே ஸ்வரப் படுத்திக்
கொடுத்தார். கலைமாமணி டாக்டர். சீகாழி சிவசிதம்பரம் [சீகாழி
கோவிந்தராஜனின் புதல்வர்] இப்பாடலைப் பெரிதும் பாராட்டியதுடன்
பங்குனி உத்திரத்திருநாளில் பழனி முருகன் சந்நிதியில் பாடி
அரங்கேற்றினார். அமெரிக்காவில் வாஷிங்டன் முருகன் கோயில்
கும்பாபிஷேகத்தின் போதும் இதனைப்பாடியுள்ளார். சங்கீதக்
கச்சேரிகளில் இப்பாடலைப் பாடும்போது முதலில் இராகத்தின்
சிறப்புக்களைச் சொல்லி ரோகண அவரோகண ஸ்வரங்களைச் சொல்லி "உதட்டளவில்
பாடாமல் உள்ளத்திலிருந்து முருகனைத் துதித்துப் பாடுகின்றேன்"
என்ற நீண்ட முன்னுரை கூறி இராக ஆலாபனையும் செய்து பின்
சரணத்தில் விரிவான ஸ்வரப் ப்ரஸ்தாரமும் செய்து நிரோஷ்டா
இராகத்தைப் பிரபலப் படுத்தியுள்ளார். பாடல் வருமாறு:
பல்லவி
கந்தா கார்த்திகேயா எந்தாய்
எனக்கருள்செய் குருநாதா - கந்தா
அனுபல்லவி
சுந்தரக் குஞ்சித சங்கரன் ஈன்றெடுத்த
செங்கனி அதரத்தழகன் நீயன்றோ - கந்தா
சரணம்
சிந்தா குலந்தனில் தீய்ந்தி டாதிருக்க
கஞ்ச நிகர்த்த அடியிரண்டை தாசன்
சரணென் றடைந்தேன் காத்தல்நின் கடனன்றோ
நெஞ்சங் கனிந்து கடைக்கண்களைத் திறந்து - கந்தா
சங்கீத நடன நிகழ்ச்சிகள் குறித்து நகைச்சுவையுடன்
விமர்சனங்களை எழுதி வந்த "விமர்சனப் பிதாமகர்" சுப்புடு
என்றழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அவர்கள்[சென்ற மார்ச்சு மாதம்
மறைந்துவிட்டார்] இப்பாடலுக்கு எழுதிய பத்திரிகை விமர்சனம்
வருமாறு
"சீஸனில் நான் மெம்மறந்து கேட்கும் கச்சேரி அண்ணாமலை
மன்றத்தில் ஆண்டு தோறும் துவக்கவிழாவன்று நடக்கும் சீர்காழி
சிவசிதம்பரம் கச்சேரி. பக்திப் பரவசமான பாட்டு.
சிதம்பரத்தின் கச்சேரியில் "நிரோஷ்டா" என்ற ஓர் அபூர்வ
ராகத்தில் “கந்தா கார்த்திகேயா” என்ற ஒரு பாடலை ஒரு தமிழ்ப்
பேராசிரியர் அலர்மேல்ரிஷி இயற்றியிருக்கிறார். 'நிரோஷ்டா
என்றவுடன் ஏதோ குடும்பக் கட்டுப்பாடு சமாச்சாரம் என்று
நினைத்து விடாதீர், இந்த இராகத்தின் வடமொழிப் பெயரைக் கண்டு
அஞ்சவேண்டாம். ராஜ ரத்தினம் நடித்த காளமேகம் திரைப்படத்தில்
இந்த ராகத்திலொரு பாடல் பாடியிருக்கிறார். வார்த்தைகள்
உதடுபடாமல் இருக்க வேண்டும். இது ஒரு விஷப் பரீட்சை. ஆனால்
ஆலாபனையும் சரி, கிருதி வழங்கலிலும் சரி, ஸ்வரப்
பிரஸ்தாரங்களிலும் சரி சிதம்பரம் துளிக்கூட தவறாமல் ஜமாய்த்து
விட்டார்."
M.S.சுப்புலஷ்மி அவர்கள் இறந்தது கேட்டவுடன் என்னுள் பெரிய
பாதிப்பு ஏற்பட்டு அதுவே ஒரு பாடலாய் உருக்கொண்டது. "எப்போ
காண்போமோ இசைக்குயில் எம், எஸ். ஸை என்று தொடங்கி அவர் பாடிப்
பிரபலமான பாடல்களைக் குறிப்பிட்டே ஒரு பாடல் எழுதினேன். அது
கலைமகள் பத்திரிகையில் ஜனவரி 2004 இதழில் பிரசுரமானது.
கோபாலகிருஷ்ண பாரதியின் "எப்போ வருவாரோ எந்தன் கலி தீர" என்ற
பாடலின் ஜோன்புரி இராக மெட்டில் அமைந்த பாடல் இது. சென்னையில்
கபாலி கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிவரஞ்சனி இராகத்தில்
கற்பகாம்பாள் மீது நான் இயற்றிய பாடலை கர்நாடக சங்கீதம்,
திரைப்படப்பாடல் இரண்டிலும் பிரபலமான உன்னிகிருஷ்ணன் அவர்கள்
பாடிப் பெருமை சேர்த்தார்.
?
HIV
பாஸிடிவ் நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கிய நூலான "Where
women have no Doctors"
ல் தங்களின் பங்களிப்பு என்ன?
கல்லூரிப் பணியில் இருந்த காலத்திலேயே ஆங்கிலத்திலிருந்து
தமிழில்
நிறைய மொழிபெயர்ப்புகள் செய்திருக்கின்றேன். தமிழ்வழி
மருத்துவக் கல்வி என்ற ஒரு திட்டத்துடன் சென்னை பல்கலைக்
கழகம் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு திட்டங்களில் என் பங்களிப்பும்
இருந்ததற்காக மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவித்தபோது அந்த
வரிசையில் நானும் இடம்பெற்றேன். அமெரிக்காவில் இந்திய
மேம்பாட்டு நிறுவனம்
[Association
for India's Development]
ஆங்கிலப் புத்தகம் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டது.
August Burns,
Ronnie Lovich, Jane Maxwell & Katherine Shapiro
ஆகியோர் சேர்ந்து எழுதி வெளியிட்ட அந்தப் புத்தகத்தின் பெயர்
"Where
women have no Doctors"- A Health Guide for Women"
இப்புத்தகம் பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப்
பிரச்சினைகள்களுக்கு மருத்துவ உதவி இல்லாத கிராமப்புறப்
பெண்களுக்கென உருவான புத்தகம். வறுமை காரணமாக சத்துணவு
காணாததால் ஏற்படும் உடல் கோளாறுகள், சமுதாயத்தில் கலாச்சார
நம்பிக்கைளின் அடிப்படையில் வேர் கொண்டுள்ள ஆண், பெண் ஏற்றத்
தாழ்வு பெண்களின் உடல் நலத்திற்கும் மேம்பாட்டிற்கும் தடையாக
இருப்பவற்றை விளக்கி பெண்களின் ஆரோக்யத்திற்கான அறிவுரைகளைக்
கூறும் புத்தகம். மேலும் சமுதாயத்தால் சீரழிக்கப்பட்ட பெண்கள்,
HIV
positive
என்று கண்டறியப் பட்ட பெண்கள், அவர்களுடைய குழந்தைகளின் கல்வி
எதிர்காலம் போன்ற பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது,
யாரை அணுகி ஆலோசனைகள் பெறுவது போன்றவைகள் அனைத்தும் இதில்
விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சமுதாய முன்னேற்றத்தின்
அடிப்படையில் உருவாகியுள்ள குழுக்களில் இடம் பெறும் சமுதாய
சுகாதார பெண் ஊழியர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.
பெண்களை மட்டுமே பாதிக்கும் உடல் நலப் பிரச்சினைகள் மற்றும்
ஆண்களைப் பாதிப்பதினின்றும் வேறுபட்டுப் பெண்களைப் பாதிக்கும்
சில பிரச்னைகள் போன்றவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள
விழையும் சமூக நலத் தொண்டர்களுக்கு இப்புத்தகம் மிக்க
பயனளிக்கும். இப்புத்தகத்தின் ஐந்து மொழிபெயர்ப்பாளர்கள்
வரிசையில் நானும் இடம் பெற்றிருக்கின்றேன்.
?
வானொலி, எழுத்து, இசை என பல
தளங்களில் உலவுகிறீர்கள். உங்களது ஆன்மாவின் அழைப்பு எது என
நீங்கள் எண்ணுகிறீர்கள்?
வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் நான் பங்கு கொண்ட
பெரும்பாலான நிகழ்ச்சிகளெல்லாம் என் பேராசிரியப்பணி
அனுபவங்களை வைத்து அமைந்தவை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு
காலங்கடந்து தொடங்கியுள்ள பணி. கட்டுரைகள் எழுதுவதுண்டு.
கவிதைகள், சிறுகதைகள் எழுதி கல்கி, கலைமகள், சிநேகிதி,
குங்குமம் அமுதசுரபி போன்றவற்றில் வெளியிடப் பட்டுள்ளன 'கலிபோர்னியாவிலிருந்து
வெளிவரும் "தென்றல்"தமிழ் மாத இதழில் ஐந்து ஆண்டுகள்
தொடர்ந்து தமிழ் நாட்டுக் கோயில்களைப்பற்றி எழுதியுள்ளேன்.
சமுதாய மேம்பாட்டில் உழைப்பைத்தந்துள்ள சான்றோர்களைப் பேட்டி
கண்டு எழுதியுள்ளேன். நிகழ்ச்சிகள் குறித்த விமரிசனங்களை
எழுதி அனுப்புவதும் உண்டு. இவைபோன்றவை எல்லாம் அண்மையில்தான்
ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இசை என் மூச்சோடு கலந்தது. தமிழ்ப்
பாடல்கள் நிறைய எழுதி அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக
அச்சில் கண்ணாரக் காணவேண்டும் என்பது என் அவா!
அவர் சொன்னதுபோல் சமுதாய மேம்பாட்டில் உழைப்பைத் தந்துள்ள
எத்தனையோ பேரைப்பேட்டி கண்ட ஒரு சமுதாய அக்கறையுள்ள
பெண்மணியைப் பேட்டிகண்டோம் என்ற மனதிருப்தியுடனும்,
மகிழ்ச்சியுடனும், அவருடைய கனவு வெகுவிரைவில் நனவாகட்டும்
என்ற வாழ்த்துக்களுடனும் விடை பெற்றோம்.
*******