"ஆன்மீகமும்
மதமும் தெய்வீகத்தை உணரவைக்கும் உன்னதம்" -
ரஜினி பெத்துராஜா
தேடல் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்கும் இருக்கும். ஏன் இந்தப்
பிரபஞ்சமே எதையோ தேடித்தான் சுழன்று கொண்டேயிருக்கிறது. "தேடலின்
முடிவு தெளிதல்" என்பது போல பதில்கள் ரத்தினச் சுருக்கமாக
இருந்தாலும் பதில்கள் ஒவ்வொன்றிலும் யதார்த்தம் இழையோடுகிறது.
யார் இந்த ரஜினி பெத்துராஜா? எழுத்தாளர், கவிஞர், பயணர்,
ஆன்மீகவாதி, இல்லத்தரசி என்று எப்படிச் சொன்னாலும் பொருந்தும்
என்றால் அவர்தான் ரஜினி பெத்துராஜா. இவரது தேடல்களின் தீர்வு
பயனுள்ள படைப்புகளானதால், பல விருதுகளின் தேடல்
பெத்துராஜாவானது.
இவர் "உலகம் எங்கள் குடும்பம்" என்ற பயண நாவலுக்காக தமிழக
அரசின் பரிசையும், அழ.வள்ளியப்பா விருதையும், புதுவை
எழுத்தாளர் சங்கம் அளித்த "சிறுவர் இலக்கியச் செல்வி" என்ற
பட்டத்தையும் வென்றிருக்கிறார். அழ.வள்ளியப்பாவிற்குப் பிறகு
குழந்தைகளுக்காக அதிகம் எழுதுவது ரஜினி பெத்துராஜாவாக மட்டுமே
இருக்கமுடியும். குழந்தைகள்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்
போகிறவர்கள் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட இவருடைய
குழந்தைகளுக்கான "எட்டாவது அதிசயம்", "சின்னஞ்சிறு கிளியே
கண்ணம்மா" மற்றும் "அந்நிய மண்ணில் இந்திய ஞானி" (ஸ்ரீ சிவாய
சுப்ரமுனிய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு) ஆகிய படைப்புகள்
மிகவும் பாராட்டுப் பெற்றவை. மேலும் இவருடைய "குழந்தைகளுக்குக்
குமாரசாமிராஜா", "கணாக்கண்டேன் தோழி" சிறுகதைத் தொகுப்பு, "பிரசாதப்
பூக்கள்" கட்டுரைத்தொகுப்பு, "மயிலிறகாய் மாறலாம்" ஆன்மீகக்
கட்டுரைத்தொகுப்பு, "யாரோ இல்லை எவரும்" கவிதைத் தொகுப்பு
ஆகியவை மிகவும் பிரபலமானவை. அவ்வப்போது பல்வேறு நாடுகளுக்குப்
பயணிப்பதால் பல கலாசாரங்கள பரிச்சயம். இருந்தும், நமது
இந்தியப் பண்பாட்டினை உயர்வாகக் கருதுகையில், நமது
கலாசாரத்தில் வேரூன்றிய விருட்சமாகத் தெரிகிறார். தொடர்ந்து
அவரின் பகிர்தலுக்குச் செல்வோம்.
»
முதன் முதலில் படைப்பாளியாக
எப்போது உணர்ந்தீர்கள்?
வீட்டில் நிறையப் புத்தகங்கள் வாசிப்பேன். சித்திரங்களும்,
படக்கதைகளும் மிகவும் கவரும். எனது ஏழாவது எட்டாவது வயதுகளில்
படைப்புகளை வாசிக்க ஆரம்பித்ததுதான். அது என்னைப்
படைப்பாளியாக உருவாக்கி இருந்ததையும் உணர்ந்தேன். பத்தாவது
வயதில் கதையே இல்லாத கதையை எழுதி பிரபல பத்திரிகை ஒன்றுக்கு
அனுப்பி வைத்தேன். அதில் பிரசுரமாகவில்லை.
»
ஆன்மீகம், சிறுகதை, நாவல், கவிதை,
சிறுவர் இலக்கியம், பயணக் கட்டுரை - இவற்றில் எது உங்களுக்கு
இலகுவாக வசப்படுகிறது? எதற்கு அதிக உழைப்புத் தேவையாக
இருக்கிறது?
சிறுகதையைப் பலகோணங்களில் பார்ப்பது, ஒரு கருவைச் சிறுகதை,
நெடுங்கதை, கட்டுரையாக ஆக்கிப் பார்த்துக் கொள்வேன்.
அனைத்துமே அவ்வவற்றிற்குரிய வெளிப்பாட்டின் போது எளிதாகவே
வசப்படுகிறது. ஆனால் மரபுக்கவிதைக்கு மட்டும் இலக்கணம்
மாறாமல் எழுத அதிக கவனம் தேவைப்படுகிறது.
»
தமிழில் சிறுவருக்கான படைப்புகள்
போதுமான அளவில் இருக்கின்றனவா?
சிறுவர்களின் மீதான அக்கறையுடன் பலர் சிறுவர்
இலக்கியத்துறைக்கு வந்துள்ளனர். அது இன்னும் அதிகமானால்
சிறப்பாக இருக்கும்.
»
நீங்கள் பல பரிசுகளையும்
விருதுகளையும் பெற்றிருக்கிறீர்கள். அவற்றுள் மிகவும்
விசேசமாக நீங்கள் கருதுவது எதனை?
ஒவ்வொரு பரிசையும் விருதையும் என்னை உற்சாகப்படுத்தி
முன்னேற்றத்திற்கு உதவிடும் பெரும் விசேசங்களாகவே கருதுகிறேன்.
»
ஆன்மீகக் கட்டுரைகள்
எழுதுவதற்கான உந்துதல் எப்படி வந்தது?
சிறுவயதுச் சூழல்தான் முதல் காரணம். ஆன்மீகச் சூழலில்
வளர்ந்த விதம், பல தீர்க்கதரிசிகளின் அறிமுகம், ஆன்மீக
வகுப்புகளுக்கு அறிமுகம், தியானப்பயிற்சி அனைத்துமே
எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது.
வழிபாடில்
மட்டுமல்லாமல் மனித நேயத்திலும் ஆன்மீகம் காணும் பயிற்சி
சிறுவயதில் பெரியோரின் வளர்ப்பினால் வந்திருக்க வேண்டும்.
தேடலும் தெளிதலுமாக அது தொடர ஆன்றோர்களின் ஆசியால் அளப்பரிய
ஆன்மீகத்தின் அடிகளை லேசாகத் தொட்டிருக்கிறேன்.
»
எழுத்தாளராக இருப்பதில் சிரமம்
ஏதேனும் உள்ளதா?
நம் அர்ப்பணிப்பு இலக்கியத்திற்கும், குடும்பத்திற்கும்
நிறைவாகத் தர இயலாத சூழல்கள் அதிகம் ஏற்படுவதே சிரமம் என்று
கூற வேண்டும்.
»
பல நாடுகளுக்கும்
பயணித்திருக்கிறீர்கள். அயல் நாட்டு இலக்கியங்களைத் தமிழில்
மொழிபெயர்க்கும் எண்ணம் உளதா?
இதுவரை இல்லை. இப்போது நிலாச்சாரல் மூலம் அந்த எண்ணம்
உருவாகியுள்ளது.
»
பயணங்களில் உங்களை அதிகம்
ஆர்வப்படுத்தும் அம்சம் எது? (இடங்களா? வெவ்வேறு கலாசாரங்களா,
மனிதர்களா, அனுபவமா, அல்லது வேறேதுமா?)
புதுப்புது அனுபவங்களே பயணம் செல்லும் ஆர்வத்தை
அதிகப்படுத்துகின்றன.
ஆஸ்திரேலியாவில் சுத்தமான கழிவறைகள், சாலை விதிகளை மீறாத
மக்கள், சுற்றுலாத்துறை, சுற்றுலாவுக்கான இடமாக சில இடங்களை
முறையாகப் பராமரிப்பது, க்யூவில் நிற்பதில் கொடுக்கும்
முக்கியத்துவம், நேரத்தைக் கடைப்பிடிப்பதில் காட்டும் ஆர்வம்,
மியூசியம் போன்று எங்கே சென்றாலும் இருக்கை வசதி,
சிரமமில்லாமல் பார்க்கும் வசதி, இவையெல்லாம் மிகவும்
கவர்ந்தன.
தென்னாப்பிரிக்காவில் இதே போன்ற அனுபவங்கள் இருந்தாலும் பல
இந்திய மக்களைப் பார்க்க முடிந்தது. இந்தியப் பண்பாட்டைக்
கடைப்பிடிப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்கர்களுக்கு இந்தியர்களை மிகவும் பிடித்திருக்கிறது,
காந்திஜி, நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திர உணர்வளித்தவர்களின்
நினைவுகளோடு இந்தியர்களை அணுகுகிறார்கள்.
கலாசாரம் என்று பார்க்கும்போது நமக்கு நிகர் நாம்தான்.
»
ஆன்மீகத்தையும் மதத்தையும்
எப்படி வேறுபடுத்துவீர்கள்?
உண்மையில் ஆன்மீகமும் மதமும் வேறானவை அல்ல. எது தெய்வீகம்
என்று தெளியவும், நம்மிலுள்ள தெய்வீகத்தை உணர வைக்கவும்
உருவான உன்னதம் அது. அதை வழிபாட்டு முறைகளைக் கொண்டு
வெவ்வேறாகக் கருத முடியவில்லை.
»
இல்லத்தரசி, எழுத்தாளர் மற்றும்
பயணர் என்று தங்களை எப்படிப் பிரித்துக்கொள்கிறீர்?
சொந்தங்களுக்கான ராகம் மீட்டும்போது குடும்பத்தலைவி. பிரபஞ்ச
ராகங்களைக் கேட்கும்போது எழுத்தாளர். 'யாதும் ஊரே யாவரும்
கேளீர்' எனும் நட்பு ராகம் இசைக்க ஆசைப்படுகையில் பயணி.
»
தாங்கள் பிரயாணித்த நாடுகளில்
பிரமிக்க வைத்த, குறிப்பிடும்படியான நாடு?
இந்தியாவில் காணப்படும் விருந்தோம்பல் எங்கும் காணக்
கிடைக்கவில்லை. கலாசாரம், பண்பாடு, ஆன்மீக வளம் காரணத்தால்
பிரமிக்க வைப்பது இந்தியா, இந்தியா... இந்தியாதான்.
»
இனி நீங்கள் படைக்க விரும்பும்
படைப்புகள் குறித்து புதிய திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு முறை எழுதும் போதும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
வித்தியாசமான கோணங்களில் விரிவதாக உணர்கிறேன். வித்தியாசமாகப்
படைக்கும் ஆர்வம் விரியும். உடனே நான் தொடங்கவிருக்கும்
பணியென்றால் அது என் தென்னாப்பிரிக்கப் பயணம்தான். தொடர்ந்து
சிறந்த சமூக நாவல் ஒன்றைத்தரும் எண்ணம் உள்ளது.
நாமும் அந்தச் சமூக நாவலை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம்
என்பதைச் சொல்லி, "ஒவ்வொரு படைப்பின் போதும் அந்தப்
படைப்பாளன் பிறக்கிறான்" என்ற தெளிவோடு விடைபெற்றோம்.
*******