யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது.
தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்:
யுக பாரதி தங்களின் இயற்பெயரா?
என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கியபோதே யுகபாரதி என்ற பெயரில்தான் எழுதி வந்தேன்.
தங்களின் இலக்கியப் பயணத்தின் துவக்கம் பற்றி...
எனது சொந்த மண் தஞ்சை . எனது தந்தை டி.கே.பரமசிவம், இடது சாரி சிந்தனை உடையவர். எங்கள் இல்லத்தில் எப்போதும் ஒரு அரசியல் சூழ்நிலை. தந்தை கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். 'வணக்கம் காம்ரேட்' என்று ஒரு கவிதை கூட எழுதினேன்.
எனக்கு அப்போது என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் மிகவும் இருந்தது. எனது தமிழாசிரியர் செல்வ கணேசன் என்பவர் எனக்கு முறைமையாக தமிழிலக்கணம் கற்றுக் கொடுத்தார். நான் பள்ளிப் படிப்பு முடிந்ததும் பாலி டெக்னிக்கில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்தேன். ஆனால் எனக்கு பத்திரிகையாளனாக வேண்டுமென்ற ஆர்வம். அந்த ஆசைகளைச் சுமந்து சென்னைக்கு வந்து வித்யாசங்கர் என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதும் கவிஞர் துரை அவர்கள் நடத்தி வந்த ராஜரிஷி என்ற பத்திரிகையில் ஒன்றரை ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தேன். பல்வேறு காரணங்களால் அந்தப் பத்திரிகை தொடர்ந்து வரமுடியாத நிலை. அந்தப் பத்திரிகையில் நிறைய கவிதைகள் எழுதி வந்தேன். நண்பர்கள் சிலர் என்னுடைய கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் யோசனையைக் கூறினார்கள். மனப் பத்தாயம் என்ற அந்த முதல் கவிதைத் தொகுப்பே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அப்போது எனக்கு வயது 22. தமிழக அரசின் பரிசையும் பெற்றது. பின்பு கணையாழியில் 5 ஆண்டுகள் ஆசிரியர் குழுவில் பணி புரிந்தேன். இப்படியாகத்தான் என் இலக்கிய பயணத்தின் துவக்க காலங்கள்.
கவிதைகள் தோன்ற வேண்டும், தோன்றி வருவதே கவிதை, கவிதை செய்ய முடியாது என்பது பற்றி உங்கள் கருத்து.
உண்மைதான். பாடல்கள் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் கவிதைகளைச் செய்ய முடியாது. கவிதை எழுதுவதற்கு, ஊடுருவிப் பார்க்கும் படியான ஒரு மூன்றாவது பார்வை அவசியம்.
எந்தக் கலைக்கும் ஒரு பயிற்சி தேவை. கவிதைக்கும் அது பொருந்துமா?
மரபு இலக்கணங்களை மீறி எழுதுவது கவிதைக்கான சுதந்திரமே தவிர கவிஞர்களுக்கானது அல்ல. மொழிப் பயிற்சியும் புலமையும் இல்லாதவர்களால் எழுதப்படும் கவிதைகள் ஒருபொழுதும் கவிதைக்கு அணி செய்யாது. குறைந்த பட்ச அடிப்படை இலக்கண அறிவு கூட இல்லாது எழுதுகிற பல புதிய கவிஞர்கள் நவீன கவிதை என்கிற போர்வையில் செய்து வரும் கவிதைகளைப் பார்த்தாலே இது புரியுமே!
வார்த்தை வித்தகங்கள் நிறைந்த கவிதைகளை விட யதார்த்தமும் எளிமையும் நிறைந்த கவிதைகளே மனதை நெகிழ்விக்கின்றன என்பது சரிதானா?
பிரளயம், பரிணாமம், சவுந்தர்யம், சரணாலயம், யவனம் மாதிரியான சமஸ்கிருத பதங்களை அழகுற அங்கும் இங்குமாக நுழைத்து விட்டால் அது ஏதோ விஷேமான அர்த்தங்களைத் தரக்கூடிய கவிதைகளாகக் கருதுபவர்கள் கூட உண்டு. ஆனால் கவிமணி சொல்லியது போல
'உள்ளத்துள்ளது கவிதை உண்மை தெளிந்துரைப்பதே கவிதை' என்பதே என் கட்சி. எளிமையும், நேரடித்தன்மையுமே ஒரு கவிதையின் உண்மையான ஒளி. எளிமையே வலிமையானது என்பதற்கு பாரதி முதல் கல்யாண்ஜி வரை சாட்சி.
திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களெழுதி வருகிறீர்கள். மெட்டுக்கேற்றவாறு பாடல்கள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது உங்களுக்கு நெருடல் ஏற்படுமா?
சமரசம் என்பதை இரண்டு விதமான கோணங்களில் பார்க்கலாம். வித்யா கர்வத்தோடு இருக்கக்கூடிய படைப்பாளியாக இருந்தால் ஒரு நல்ல சினிமாவைக்கூட ரசிக்க முடியாது. அதே சமயம் நீங்கள் நல்ல ரசிகனாக இருந்தால் மிகச்சிறந்த படைப்பாளியாக உருவாவதற்கு காரணிகளை காலம் உருவாக்கித் தரும். சமரசம் என்பதை தாழ்வான பொருளில் கருதுவதைவிட சக நண்பர்களுடன் ஒத்துப் போதல் என்ற அர்த்தத்தில் கொண்டால் இந்தப் பிரச்சினையே வராது. இலக்கியமும், சினிமாவும் இரு வேறு ஊடகங்கள் என்றே நான் கருதுகிறேன். இலக்கியப் பரிச்சயம் இருப்பதால் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றேனே தவிர சினிமாவால் என் இலக்கிய முகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
பட்டி மன்றங்களின் அளவிற்கு கவி அரங்கங்கள் அவ்வளவாக பிரபலமாகாதது ஏன்?
அப்படியே கவி அரங்கங்கள் நடந்தாலும் அது தனிமனிதரின் துதியாகவே இருக்கிறதே தமிழ் நாட்டில்.
காட்சி ஊடகங்கள் அதிகரித்து விட்ட பின்பு இலக்கியம் வாசிப்பதே குறைந்திருப்பதைக் காண்கிறோம். அதேபோல ஐந்தாண்டு காலமாக திராவிட இலக்கியங்கள் மீது நாம் கொண்டிருக்கிற அதிருப்தி கூட அல்லது மேடைத் தமிழ் மீது நமக்கு ஏற்பட்டிருக்கிற சலிப்பு என்பதாகக்கூட இதைப் பார்க்கலாம். தமிழ் வாழ்த்து, தலைவர் வாழ்த்து, பிறகு அரங்க வாழ்த்து என்று நீட்டி முழக்கி வெற்று வார்த்தைகளாக மேடைகளில் அரங்கேறுவதைக் காண மக்களுக்கு அல்லது நமக்கு போதிய நேரமின்மையும் அவசரகதியும், அனைத்தையும் தரிசிக்க வேண்டிய கட்டாயமும் இதற்குக் காரணமாகக் கருதலாம். சிறப்பான கவி அரங்குகள் இனி வரும் காலங்களில் மலையாளத்தில், வங்கத்தில் நிகழ்வதைபோல இங்கும் நிகழ்த்தப்பட்டால் நல்லது.
தமிழில் சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் தமிழில் இப்போது வருவதில்லையே?
சந்தைப் பொருளாதாரத்திற்கு உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஆட்பட்ட பிறகு புத்தக் சந்தைக்கான தேவை வேறு மாதிரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
Universal thoughts
உலக முழுமைக்குமான ஒற்றைச் சிந்தனையை காவியமாகவோ அல்லது நெடுங்காவியமாகவோ எழுதுவதால் அது மனித வளர்ச்சிக்கு எந்த அளவில் பயன்படும் என்பதைப் பார்ப்பதை விட அந்தப் புத்தகம் என்ன விலைக்கு விற்கும் என்பதையே விமர்சனமாகப் பார்க்கின்ற சூழல் இப்போது இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்தத் தமிழுக்கு அத்தகைய சந்தை மதிப்பு இருக்கிறதா என்பதைச் சேர்த்துத்தானே பார்க்க வேண்டும்?
சமுதாயப் பிரச்சினைகளை கவிதைகளில் கொண்டு வரலாமா? அதன் மூலம் தீர்வு காண முடியுமா?
வரதட்சணை, வேலை இல்லாத் திண்டாட்டம், பெண்ணடிமை, சாதிக் கொடுமை பற்றி எல்லா அநேகக் கவிதைகள் வந்தும், செத்தும் போய்விட்டன. எனவே பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்பது பொருளில்லை. கையாளுகிறவனின் திறமையைப் பொறுத்த விஷயம் இது.
இப்போதுள்ள பெண் கவிஞர்கள் பற்றி...
ஆண்டாளுக்குப் பின் பெண் கவிஞர்களே இல்லை என்பதெல்லாம் விவாதப் பிரியர்களின் வெற்றிலைப் பேச்சு. பெண் கவிஞர்கள்- கடந்த பத்தாண்டுகளில் நிறையப் பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும் அவர்கள் எத்தனை கவிதைகள் எழுதினார்கள் என்பதிலிருந்து எத்தனைக் கவிதைத் தொகுப்பு என்பது வரை. யார் யார் என்று பட்டியல் போடுவதில் ஒரு போதும் அக்கறை செலுத்தியதில்லை. நான் யாரென்று குறிப்பிடும் போது தவிர்க்கப் படுகிறவர்களின் எழுத்தை நிராகரித்ததாக அர்த்தப்படும். ஒவ்வொரு பெண் கவிஞரிடமும் அவரது கவிதைகளின் உள்ளீடாக மறைந்து கிடக்கும் உண்மைகளைத் தேட வேண்டும். எதுவுமே இல்லை என்று பொத்தாம் பொதுவான அபிப்ராயமே எக்காலத்தும் சந்தி சிரிக்கின்ற சட்டாம் பிள்ளைத்தனம்.
தங்களின் நூல்கள்...
நொண்டிக் காவடி, நானொருவன் மட்டிலும், தெப்பக் கட்டை., கண்ணாடி முன்,
முதலியன.
உங்களைப்பற்றி, உங்களுக்குப் பிடித்தது?
நீ யார் என்கிற வினாவோடு- எதிரியாகக் கருதும் மனோபாவத்தோடு யாரையும் எதிர்கொள்ள மனோபாவமில்லாதவன் நான். மொழியறியாத பிரதேசத்தில் சந்தித்துக் கொள்கிற இருவரை இணைக்கிற புன்னகை மிகவும் எனக்குப் பிடிக்கும்.
நிலாச்சாரல் வாசகர்களுக்காக ஒரு கவிதை...
இதோ என்னுடைய சில கவிதை நூல்கள். உங்களுக்கு எது வேண்டுமானாலும் பிரசுரித்துக் கொள்ளலாம்.
நொண்டிக்காவடி. தெப்பக்கட்டை, நானொருவன் மட்டும் என்ற தனது கவிதை நூல்களை நிலாச்சாரலுக்காக அன்புடன் அளிக்கிறார் யுக பாரதி. இதோ ஒரு சோறு பதம்:
இருபது கண் ராவணனுக்கு
இருந்தபோதும்
சீதையின் இரண்டே கண்கள்
என்னபாடு படுத்தியது
எதற்கும் முக்கியமில்லை
எண்ணிக்கை
பதத்திற்கு ஒரு சோறென்பது
பாமர சாதுர்யம்
*********