ஒரு மணி நேரம் எனக்காக, .பிளீஸ், ப்ளீஸ்.. ப்ளீஸ்ஸ்ஸ்...
சொல்வது யாரெனத் தெரிகிறதா? நம் உடலும், மனசும் தாங்க. நாம
நம்ம உடலை வருத்தி மூளையைக் கசக்கி எத்தனையோ வேலை
பார்க்கிறோம். அதுங்களுக்கும் ரெஸ்ட் வேணும். அதுங்க தங்களைப்
புத்துணர்ச்சியாக்கிக் கொள்ள கொஞ்சம் டைம் கொடுக்கணும்னு
நினைக்கிறோமா? நான் தூங்குறதைச் சொல்லலீங்க. உடற்பயிற்சி
செய்றதோட அவசியத்தைச் சொல்றேன்.
தினமும் உடல், மனப் பயிற்சிக்குன்னு ஒரு மணிநேரம் நாம
ஒதுக்கினாப் போதும். மிச்சம் 23 மணிநேரம் அச்சாணி பிசகாம
வண்டியைக் கொண்டுபோய் சேர்க்கிற மாடுகளைப்போல இந்த உடலும்,
மனமும் நமக்காக வேலை செய்யும்.
தினமும் நடக்கலாம், வேகமாக நடக்கலாம், ஓடலாம், கையைக் காலை
அசைத்து உடற்பயிற்சி செய்யலாம். உடலை வருத்திச் செய்யணும்னு
அவசியமே இல்லை. ரொம்ப இலகுவாகச் செய்யலாம். அதிகாலை வேக நடை
உடலுக்கு மிகவும் நல்லது. நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன்
செயல்பட, அதிகாலை உடற்பயிற்சி கைகொடுக்கும். காலையில் செய்ய
நேரமில்லாதவர்கள் அந்திமயங்குமுன் இனிய மாலை நேரங்களில்
செய்யலாம். அன்று வேலை செய்த களைப்புத் தீரச் செய்துவிட்டு
இனிதாக உறங்கலாம்.
கூட இன்னும் ஓரிரு நண்பர்களைச் சேர்த்துக் கொண்டால் உற்சாகம்
பிறக்கும். நீங்கள் காலையில் எழுவதற்கு சிறிது
சோம்பேறித்தனப்பட்டால் கூட, அவர்கள் வந்து எழுப்பிவிடுவார்கள்.
வெறும் நடையை விட, கையைக் காலை நன்றாக வீசி நடக்கும் வேக நடை
மிகவும் நல்லது. உடலின் சகலபாகங்களும் நன்றாக இயங்கும்.
ஓடுவதை விட வேக நடையே சிறந்தது என நிபுணர்களின் ஆய்வு
முடிவுகள் சொல்கின்றன. ஓடும்போது வியர்வை அதிகமாகி, உடலில்
அதிகக் கலோரிகள் எரிக்கப்பட்டாலும் இதயத்துடிப்பு
கன்னாபின்னாவென எகிறுவதால், வேக நடையே நல்ல பலன் கொடுக்கும்.
நம் புஜபல பராக்கிரமங்களை எடுத்துக்காட்ட வேண்டுமென்றால்
ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், உபகரணங்கள்
மூலம் செய்யப்படும் உடற்பயிற்சி நம் தசைகளை ஒழுங்குபடுத்தி
கவர்ச்சிகரமாகக் காட்டுமே தவிர, அவற்றால் சிறந்த பலன் உண்டு
என்று சொல்ல முடியாது.
நமக்குத் தேவை மனம் உற்சாகமாக இருக்கவேண்டும், உடல் சும்மா
சொடக்கெடுத்தாற்போல இருக்க வேண்டும். அவ்வளவே! நாள் முழுவதும்
கணினி முன் அமர்ந்து லொட் லொட்டென்று தட்டிக் கொண்டிருப்பதால்
பல பேருக்கு கைகளிலும், முதுகுத் தண்டிலும், முதுகுத் தசைப்
பரப்புகளிலும் வலியேற்படும். அதைச் சரிக்கட்ட, தினமும் நாம்
கொடுக்கும் சந்தாத் தொகை ஒரு மணி நேரம் மட்டுமே. பைசா
செலவில்லாத வைத்தியம் இந்த உடற்பயிற்சி. இல்லையெனில்
பின்னாளில், டாக்டருக்கு அவர் செலவழிச்சுப் படிச்ச தொகையை
நாம் கொடுக்கவேண்டியிருக்கும்.
நாங்கள் மூன்று இளசுகள் சேர்ந்துகொள்வோம். காலை ஆறு டு ஏழு
தான் நம்ம டைம். மொபைலில் மிஸ்டு கால் பறக்கும். அது தான்
நம்ம சிக்னல். ஆறு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் 20
நிமிடத்திற்கு வேக நடை. ஒரு மரத்தடியை ரீச் செய்து அங்கே 20
நிமிட எக்ஸர்சைஸ். மறுபடியும் கிளம்பினால் 20 நிமிடத்திற்கு
வேக நடை. அவ்வப்போது ரோட்டில் யோகா, கராத்தே க்ளாஸ்களுக்கும்,
நீச்சல் குளத்திற்கும் வண்டிகளில் பறக்கும் இளஞ்சிட்டுகளின்
மீது ஒரு சைட். ஹி..ஹி.. மனசுக்கு ஒரு ரிலாக்ஸேஷன் வேணாமா!!
வீடு வந்து சேர்ந்து, குளிக்க ஷவரில் தலையை விட்டால் போதும்...
அப்பப்பா! என்ன சுகம்! அப்போது கிடைக்கும் புத்துணர்வு நாள்
முழுக்க நீடிக்கும்.
அட! எங்க கிளம்பீட்டீங்க. தெரியும்! எக்சஸைஸ்
பண்றதுக்குத்தானே!? வாழ்த்துக்கள்!!
*******