|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
|
சாரல் 290 |
11 டிசம்பர் 2006
|
என்
அதீதமே,
இப்பவெல்லாம் மரணம் பற்றி அடிக்கடி நினைக்கவேண்டி
வருதுடி! என்னன்னே தெரியலே! ஆனா, நான் படிச்ச புத்தகங்கள்
என்ன சொல்லுதுன்னா, அப்பிடி வர்றது நல்லதுதானாம்!
அப்பத்தான் நாம் விழிப்புணர்வை அடைவோமாம்! இது எப்பிடியிருக்கு!
மனசைத் தேற்றிக்கொண்டு என் ‘கவிதை’யைப் படித்துப்பார்.
பிறகு பேசுவோம்... (என்ன செய்வது கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால்
உதை வாங்கித்தான் தீரணும் என்பதுபோல, என்கிட்டே மாட்டிக்கிட்டா
நான் எழுதுறதை நீ படிச்சுத்தானே ஆகணும்! அதானே உன்
தலைவிதி!)
என் மரணப் படுக்கை பற்றிய டயரிக் குறிப்பு
இதோ என் முன்
என் மரணப்படுக்கை
வசீகரமாய்...
தவிர்க்க வழியற்று...
இனி செய்வதற்கு ஏதுமில்லை
தன் இயக்கம் உறைந்து
அடங்கிற்றென் உயிர்...
பேசுவதை நிறுத்தி
மௌனத்தில் உறைந்ததென் நா.
கேட்பதை நிறுத்திற்றென்
செவிப்புலன்...
எங்கு போய் ஒளிந்ததோ தெரியவில்லை
இதுநாள்வரை என்னிடம் இருப்பதாய் நான்
நம்பிக்கொண்டிருந்த என் வீரம்:
பயம்! பயம்! பயம்!
மரணப் படுக்கையின் முன்
ஒரு திரைப்படம் போல் எல்லாம்
தெள்ளத் தெளிவாய்:
எதற்கெடுத்தாலும் அறைவிடும்
பீட்டி வாத்தியாருக்குப் பயந்தது
தண்ணி அடிச்சுட்டு வந்தாக்கூட
நல்லா பாடம் நடத்தும்
இங்லீஷ் வாத்தியாருக்கு மரியாதை கொடுத்தது
புரியிறாப்லே சொல்லிக் குடுத்த
கணக்கு வாத்தியாரை தெய்வம்போல் பார்த்தது
கல்லூரியில் அடித்த லூட்டி:
பேசிய ‘தப்பான’ கதைகள்
தினந்தினம் பகிர்ந்துகொண்ட ஒரே மாதிரியான
‘ஏ’ ஜோக்குகள்
மெஸ்காரிகளைப் பற்றிய வதந்திகள்
கல்லூரிப் பெண்களின் பிம்பங்கள்
அவர்களின் அசைவுகள், நடைகள்...
பக்கத்துவீட்டுப் பெண்ணின்
தேன் கலர் இடுப்பு
அதைக் கிள்ள முனைந்து தோற்றது
பின் கனவில் கிள்ளி சிலிர்த்தது
கடைக்காரனிடம் எடை பற்றிய தகறாறு
ஆட்டோக்காரனை அடிக்கப்போனது
கண்டக்டருடன் கட்டிப்பிடித்து உருண்டது
ச்சேச்சே! இதெல்லாம் எதுக்கு இப்போ!
ஏதாவது புதுசா
ஏதாவது வித்யாசமா
ஏதாவது சாதனையா
என்னதான் பண்ணிருக்கேன்?
ஏதாவது புதுவார்த்தை ஒன்னு
எனக்கே எனக்கேயான வார்த்தை ஒன்னு
உருவாக்க முடிந்ததா என்னால்?
என்ன எழுதுவதென் கல்லறையில்?
ஓஷோவின் கல்லறை வாசகம்போல இப்படி:
'பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
இத்தனாம் தேதிக்கும் இத்தனாம் தேதிக்குமிடையில்
இந்த பூமிக்கிரகத்தில் வலம் வந்தார்'
எத்தனாம் தேதி..
அட! பிறந்த தேதிகூட உண்மையான தேதியில்லையப்பா!
அது வாத்தியாரா ரெக்கார்ட் ஷீட்ல எழுதிக்கிட்டதுதானே!
சரி! இறந்த தேதியில் என்ன போடுவது!
அது முன்னமே எப்படித் தெரியும் யாருக்கும்?
அடக்கடவுளே!
(இப்பிடி இக்கட்டான சூழ்நிலையில் கடவுளா?
அவர் என்ன இளிச்சவாயனா உனக்கு?)
ஏதுமில்லை
ஏதுமில்லை
எழுதிவைக்க கல்லறை ஏதுமில்லை
எல்லாம் எரிக்கப்பட்டுவிடும்
எல்லாம் எரிக்கப்பட்டுவிடும்
கல்லறைளுக்கு ஏது இடம்
நீயும் தெருநாயும் ஒன்னுதானப்பா!
நிக்கவே இடமில்லாதப்போ
படுக்க இடம் கேட்டா எப்பிடி!
நீ ஒன்னுமில்லை:
ஒன்னுமே இல்லை!
படுக்க நடக்க உட்கார
எதுக்குமே இடமில்லை
எங்கள் நாட்டில்!
நாங்கள் பெருநகர வாசிகள்!
கிராமங்களை அழித்து
எல்லாருக்கும் நரக வாழ்வை வழங்குவோம்!
(மன்னிக்கவும்: நகர என திருத்திப் படிக்கவும்)
அட! எங்கே ஒளிந்ததென் மரணப் படுக்கை
அதுவும்கூட அங்கில்லையே!
அதுவும்கூட என் கனவுதானா!
மரணப் படுக்கை என்பது
அதிஆடம்பரமா இப்போ!
தறிகெட்டோடும் ஒரு
லாரியின் சக்கரம்
இடைவிடாது நடக்கும்
'விளையாட்டுத்தனமான' கலவரங்களில்
கூட்டத்தை நோக்கிச்சுடும்
போலீஸ்காரனின்
துப்பாக்கி ரவை...
ஒரு கனமான கோபக்கார மின்னல்...
அல்லது ரத்தக்குழாய் அடைப்பு
ஒரே க்ஷணம்தான்
எல்லாம் முடிய!
உன் மரணப்படுக்கை பற்றிய
டயரிக்குறிப்பெல்லாம்
சும்மா ஒரு
கவிதைத்தனமான கற்பனைதான்!
ம்ம்..! இப்ப பேசுவோம் வா! எப்பிடியிருக்கு கவிதை?
சுத்த சொதப்பலா? பரவாயில்லை! ஏன்னா, நம்ம வாழ்க்கை
அப்பிடித்தானடி சொதப்பலா இருக்கு! அதில் எந்த சாரமும்
இல்லை என்று அடித்துச் சொல்லலாம்! தற்கொலையை நோக்கியே
அனைத்து நவயுக மனிதனும் பயணிப்பதாக பெரிய ஆட்கள் சொல்கிறார்கள்.
இல்லாவிட்டால் விபத்துக்களில் போய்ச்சேர வாய்ப்புகள்
அதிகம். ஆக, இயல்பான மரணம் என்பது வெறும் கற்பனையாகத்தான்
இருக்கமுடியும் இல்லையா?
சரி அதை விடு! வாழ்வின் உன்னதமும் கவிதையும் களிப்பும்
முற்றிலும் செத்தா போய்விட்டன! இன்னும்கூட ‘நகர மணத்துடன்’
வீசும் அதிகாலைத் தென்றலை அனுபவிக்க முடிகிறதே! இன்னும்
அந்த தொழிற்சாலை தூசுபடிந்த தூரத்து மரங்களில் நிறம்
மாறிய ஒரு குயில் தன்னந்தனியே பாடுவதைக் கேட்கிறேனே!
மழைக்கால மதியமொன்றில் மொட்டைமாடியில் தனித்திருக்கயில்
என்மீது இதமாய் விழுந்த சூரியக்கதிர் எனக்களித்த சிலிர்ப்பை
என்னவென்பேனடி! அதோ எல்லா ரசாயனக் கழிவுகளுக்கும்
மிஞ்சி இன்னும் வானில் கூட்டங்கூட்டமாய் பறக்கும்
கொக்குகள்! அவற்றோடு நானும் பறப்பதை யாரிடம் சொல்வேன்!
அதோ தொலைதூரத்தில் மிஞ்சி இருக்கின்றனவே, கொஞ்சம்
காடுகளும் மலைகளும்! அடடா! அதோ அந்த மலைகளின்மீது
நகரும் கருமேகங்கள்! அவற்றினூடாய்... அவற்றினூடாய்...
நீராய் நீ! ஆம்! நீயேதான்! நீயிருக்க மரணமேதடி பெண்ணே
எனக்கு!
****** |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|