என் அம்பிஹே!
வீடு எரிந்து
கொண்டிருக்கையில் நிம்மதியாகத் தூங்கும் மூடனடி நான். இதை
உணரும் இந்தக் கணத்தில் தொண்டையை அடைக்குதடி துக்கம்!
எப்போதுதானடி நான் துயிலெழுவேன்? எப்போதடி நிகழும் என்
விடுதலை? எப்போதடி தப்பிப்பேன் வாழ்க்கை என்னும் கொடிய
எரியும் தழலின் பிடியினின்று? சொல்லடி அம்பிஹே! சொல்!
எப்போதாவது
வந்ததாடி இப்படிப்பட்ட கேள்விகளுனக்கு? நீதான் மாயாவாயிற்றே!
எல்லாக் கேள்விகளுக்கும் மூல ஊற்றே நீதானே! உனக்கெப்படி
உதிக்கும் இப்படியான சந்நியாசத்தனமான கேள்விகள்? கேள்விகளைப்
பிறப்பிப்பவளே நீதானே!
என்னை ஆட்டிப்
படைத்து அல்லலுற்று மடிந்து மண்ணோடு மண்ணாக்கும் மாய
மோகினியாயிற்றே நீ! அந்த உன் குரல்! அதில் என்னதான் மாயம்
வைத்திருக்கிறாயோடீ! நீயுதிர்க்கும் தேன்மொழி, உன் அதரங்களைக்
கடந்து, காற்று வெளியில் பயணித்து, என் செவிவழிப் பூராமல்-
என் நாபி வழியாகவல்லவா என்னுள் நுழைகிறது! அந்தத்
தேன்மொழியில், அப்படியே ஆடி அதிர்ந்து போகுதேடி என் நாபிக்
கமலம்!
என் அம்பிஹே!
உனக்கு ஒரு
வேண்டுகோள்: சற்றே நிறுத்திக்கொள் உன் ஆட்டத்தை. உன்
ஆட்டுவிப்புக்கெல்லாம் தொடர்ந்து ஆட இனியும் சக்தியில்லை
எனக்கு!
முதலில் நீ
பேசுவதை நிறுத்து! உன் குரல்வளையில் நில்லாது ஊறும் அமிழ்தச்
சொற்களை அங்கேயே தேக்கி வை! கொஞ்ச நாளைக்கு என்னைப் பாராதிரு!
உன் அமிழ்தப் பார்வை என்னுள் போந்து என் அசையா இருப்பைக்
குலைக்காதிருக்க அருள்புரி! அசைந்தாடி காற்றிலாடும் கொடி போல்
நடந்துசெல்வதை சற்றே நிறுத்து! செம்பூ மொட்டாய் ஒளிரும் உன்
வடிவான செதுக்கிய பாதங்கள் சற்றே ஓய்வுறட்டும்! கொஞ்ச
காலத்துக்கு உன் இனிய வடிவழகுச் செவியால் எதையும் கேளாதே!
சுற்றிலும் உலவும் அபஸ்வரங்கள் உன் பொன்னாபரணம் ஒளிரும்
அதியற்புதச் செவிமடல்களின் ஓவிய வளைவுகளை
வருத்தாதிருக்கட்டும்!
வாழ்க்கைதான்
நமக்கு எவ்வளவு எல்லையில்லா சுதந்திரத்தை அளித்திருக்கிறது:
நாம் பேசலாம் அல்லது பேசாதிருக்கலாம்; பார்க்கலாம் அல்லது
பார்க்காதிருக்கலாம்! இயங்கலாம் அல்லது இயங்காது சும்மா
அக்கடாவென்று கிடக்கலாம்! நாஸ்தியாக்கப்பட்டு நரங்குலைந்து
போய் குப்பையாய்க் கிடக்கும் இந்த வாழ்க்கையின் துர்வீதிகளில்
நடக்கலாம் அல்லது நடக்காதிருக்கலாம்! அப்படிப்பட்ட எல்லைற்ற
சுதந்திரம் நமக்கு அளிக்கப் பட்டிருப்பதாக ஞானமுனிகள்
சொல்லிப் போயிருக்கிறார்கள்! அத்தகு சுதந்திரம் நமக்கு
மட்டுமே! இயற்கையின் தூண்டுதல்களை மட்டும் ஆதாரமாகக்
கொண்டுள்ள இதர விலங்குகளுக்கு ஏதடி இந்த விடுதலை? அவையெல்லாம்
அவ்வவற்றின் போக்கில்! ஆனால்...ஆனால்... அந்த மிருகங்களைப்
போலவே நானும் நீயும் வாழவேண்டுமா என்ன! உலகில் உலவும்
கோடானுகோடி மனித மிருகங்கள், பிரக்ஞையும் விழிப்புணர்வும்
சுத்தமாய் இல்லாது வேரோடு அற்றுப் போய் இந்த மண்ணை
எவ்வளவுக்கெவ்வளவு நாசம் பண்ணமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நாசம்
பண்ணி வைத்திருப்பதை நீயும் நானும் அறிவோம்தானேடி?
நாம் கொஞ்சமாவது
விதிவிலக்காக இருப்போமடி அன்னமே! வாழ்வின் நீரை விட்டுவிட்டு
அதன் அமிழ்தத்தை மட்டும் பருகுவோம் நாம்! அதற்கு எந்த
ஆர்ப்பாட்டமும் தேவையில்லை! எந்த அசைவும் தேவையில்லை! எந்தப்
பேச்சும் எந்தச் செயலும் எந்த வேள்வியும் எந்தச் சடங்கும்
தேவையேயில்லை! நாம் சும்மா வெறுமனே ஏதும் செய்யாதிருப்போம்!
அதுவே போதும்!
அடக்கஷ்டமே!
எப்படிடிம்மா "சும்மா" இருப்பது! வாழ்க்கையின் மிகப்பெரிய
சவால் அல்லவா அது! எப்படி என்னால் சும்மா இருக்க முடியும்!
அப்படியே நான் சும்மா இருந்தாலும், சும்மா விட்டு விடுகிறாயா
நீ! அடித்து அப்பளமாக்கி சுட்டுப் பொரித்து உடைத்து நொறுக்கி
விழுங்கிவிட்டல்லவா வேறு வேலை பார்க்கிறாய்!
அம்பிஹே,
என் பிரச்சனையே
அதுதான்டி: எல்லாத்துக்கும் ஆதி காரணம் சாட்சாத் நீயாகவே
இருப்பதுதான் என் பிரச்சனையே! என் சகலத்தையும் சகல
அசைவுகளையும் சகல அதிர்வுகளையும் இயக்கி இந்த வாழ்க்கைச்
சாகரத்தில் தள்ளிவிட்டு, கெக்கெக்கே என கெக்கலி கொட்டிச்
சிரித்து மகிழும் அதிகொடும் பிசாசமடி நீயெனக்கு!
அம்பிஹே!
கொஞ்சம் தயவு
பண்ணி என்னை விட்டு விடேன்டியம்மா! பேயாய்ப் பிசாசாய் என்
முடியைப் பிடித்து ஆட்டிப் படைக்காதேடீ! உன்னிடம் இதற்கு மேல்
எனக்கு சொல்லத் தெரியவில்லை,போ! இம்மாதிரி விஷயத்தை
வெளிப்படுத்த எனக்கு ஒரு மொழியின் வார்த்தைகள் போதுமானதாக
இல்லையடி அம்பிஹே! உன்னிடம் இக்கணம் நான் வேண்டி நிற்பது உன்
எல்லையில்லாக் கருணை மட்டுமே!
"உன் அழகை
வார்த்தைகளில் சொல்லிவிட இயலாது. அதை என் இசைக் கருவியின்
மூலம் வேண்டுமானால் வாசித்துக் காட்டலாம்!" என்றானாமே ஒரு
இசைமேதை, தன் காதலியிடம்! அப்படி ஆகிவிட்டேனடி நான்! உன் தீரா
அழகில் நான் படும் கொடிய வேதனையை வார்த்தைகளில் வடிக்க
இடமில்லையடி அம்பிஹே! நீதான் கொஞ்சம் உன் உள்ளொளியால் - உன்
கடைக்கண்ணால் - என் உள்ளக்கிடக்கையைப் புரிந்து நோக்கி என்னை
உய்விக்கச் செய்து அருள் பாலிக்கணும்!
ஆனாலும் நீ
என்னைச் சும்மா விடுவதாயில்லையே! தொடர்ந்து என்னை ஒரு இசைக்
கருவியாக்கி இசைத்தபடியல்லவா இருக்கிறாய்! நான் சொல்வதை, என்
கோரிக்கையை எப்போது செவிமடுத்திருக்கிறாய் நீ! உனக்கு நான்
செல்லக்கிளி ஆயிற்றே! என்னை உன் பட்டு அதரங்களில் வைத்து
கொஞ்சிக் கொஞ்சியல்லவா என் உயிரெடுக்கிறாய்! என் றெக்கைகளை
முறித்து எங்கேயோ வீசிவிட்டாய்! அடுத்து, கண்ணுங்
கருத்துமாயிருந்து முளைக்க முளைக்க என் சிறகுகளைப்
பிய்த்தெடுத்து எங்கோ தூர வீசிவிடுகிறாய்!
தயை கூர்ந்து
என்னைப் பறக்க விடு! என் சிறகுகளை அப்படியே வளரவிடு! இன்னும்
எத்தனை யுகத்துக்குத்தான் உன் கொடும்பிடியில்
சிக்கித்தவிக்குமென் இன்னுயிர்?
தயை செய்! தயை
காட்டு! சற்றேனும் ஆதரவு நல்கு! கொஞ்சமேனும் இரக்கம் காட்டு!
ஏதோ நான்
பிழைத்துப் போகிறேன்!
என் உயிரில்
படர்ந்துள்ள உன் கொடும்பிடியை சற்றே தளர்த்திவிடு!
சாவகாசமாய்
மூச்சுவிட்டுக் கொள்கிறேன்!
எதுவும் வேண்டாம்
எனக்கு - விடுதலை தவிர! விடுதலையின் அகண்ட வெளியில் பறக்கவிடு
என்னை!
அந்தோ! எங்கே
விட்டாய்! எங்கே விட்டாய்! சிரிக்காதே! இந்த உன் சின்னூண்டு
சிரிப்பில்தானடி நான் சிக்கிச் சிறைப்பட்டுச் சீரழிந்து
சின்னாபின்னமாகிறேன்!
அய்யகோ! என்
செய்வேன்! என் செய்வேன்! எல்லாம் தலைகீழாகி விட்டால் என்னதான்
செய்வதடி நான்!
நீ
பேசாதிருக்கையில், அதிகமாய்ப் பேசி பேச வைக்கிறாய் என்னை! நீ
அசையாதிருக்கையில், அதிகமாய் அசைந்து, அசைந்தாட வைக்கிறாய்
என்னை! நீ பாராதிருக்கையில், அதிகமாய்ப் பார்த்து, ஒடுங்க
வைக்கிறாய் என் சப்த நாடியையும்!
நீ
நடவாதிருக்கையில், அதிகமாய் நடந்து, புளககிக்க வைக்கிறாய்
என்னை!
நீ
இயங்காதிருக்கையில்,அதிகமாய் இயங்கி, இயக்கி வைக்கிறாய் என்
உயிர்ப் படகை!
மொத்தத்தில்,
நான் வேண்டுவதை- என் கோரிக்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு
மனசுக்குள் மௌனமாய் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறாய்! என்னதான்
செய்வது உன்னை! உஸ்ஸென்று பெருமூச்செறிவதைத் தவிர வேறென்ன
செய்வது நான்!
இம்மடலில்
உனக்கென்று கவிதை ஏதுமில்லை. நீயே புத்தம் புதுப் புதிர்க்
கவிதையாயிருக்கையில் உனக்கேன் தனியாய்க் கவிதை?
*****