என் ஆனந்தவள்ளீ,
ஏன் இப்பிடி உன்னைக் கூப்பிடுறேன் தெரியுமாடீ? நான் எனக்குள்
சத்தும் சித்தும் பெற்று ஆனந்தத்தை நோக்கி முன்னேறும் மஹா
பயணத்தில் உன் பங்களிப்புதான் எவ்வளவு மகத்தானது என்பதை ஏதோ
ஒரு மின்னல் க்ஷணத்தில் இப்போது உணர்ந்துகொண்டதால்தான்!
இதற்குமுன் உன் அருமை தெரியாமலில்லை: ஆயினும் விடுமுறைக்
காலத்துக்கான நம் இந்தச் சிறு பிரிவுதான் எவ்வளவு நுண்மையான
உணர்வுகளை நம்மிலிருந்து வெளிக்கொண்டுவருகிறது!
அலமாரியில் கிடந்த நெளிநெளியாய் நெளிந்திருக்கும் உன் அந்த
கருப்பு ஹேர்பின் ஒரு பாம்பென விரிந்து என் உடல் பொருள் ஆவியை
அப்படியே ஆக்ரமித்துக் கொள்வதையும், சீப்பில் சிக்கியிருந்து
என்னுடன் மௌனமாய் மென்மையாய் உரையாடல் நிகழ்த்தும் உன் அந்த
நீண்ட சிறு முடிக்கற்றையும், அலமாரியில் வாடிக்கிடந்த அந்த
ஒற்றை மல்லிப்பூச்சரமும் எனக்களித்துவரும் அனுபவங்களை
எவ்விதம் வார்த்தைகளில் உரைப்பேன்?
அருகில் நீயிருக்கையில் நான் பெறும் அனுபவமோ வேறு மாதிரியானது:
படிக்கப்படிக்க சலிக்காத நல்லதொரு இலக்கியப் படைப்புபோல,
அருந்த அருந்தத் திகட்டாத தேவாமிர்தம்போல, பார்க்கப்பார்க்க
புதுப்புது நளினானுபவங்களுக்கு இட்டுச்செல்லும் அதிசிருங்கார
ரஸத்தைக்கொண்டதுதான் உன் முகமலர். உன் கண்களின் அகண்ட ஆழம்,
அதில் பொங்கும் பேரன்பு, பெருங்காதல், அதில் பாதரசமாய்த்
தெளிந்துருகும் தெளிவு..உன் அந்த அசிரத்தை தெறிக்கும்
விட்டேத்தியான பேச்சு: அதில் அதிநுணுக்கமாய் பின்னப்பட்ட உன்
மாயச் சொல்வலை, உன் கன்னமேட்டில் குறிஞ்சி மொட்டுக்களாய்
எப்பவாவது அரும்பியிருக்கும் சிச்சிறு பருக்கள்! அவற்றினூடாய்
சிக்கி அவதியுறும் என் கண்கள்! என்னென்ன மாதிரியான
அழகானுபவங்கள்! இன்னும் ராத்திரிப்பொழுதுகளில் என்
கண்களுக்குள் மீண்டும் மீண்டும் பூக்கும் அவ்வதிசயப் பூக்கள்,
என்னை எந்தெந்த லோகங்களுக்கெல்லாம் இழுத்துச்செல்கின்றன
என்கிறாய்! உன் பருவ விகாசத்தின் பெருமதர்ப்பினை, அதன்
செழுமையை நுண்மையாய் எனக்கு எடுத்தியம்பி என்னுள்
கள்ளூரச்செய்யும் போதானுபவத்தை அளித்திட அவையால் மட்டுமே
இயலுமடீ!!
எந்தவொரு கவிதானுபவத்தையும் நாமாக ஏற்படுத்திக்கொள்ள முடியுமா
என்ன! அப்படி ஏற்படுத்திக்கொள்ள முடிந்தால் தான் மனிதன்
அவனவனுக்கான சொர்க்கங்களை அவனவனே தொட்டுக்கொண்டுவிடுவானே!
ஆனால் மனிதன், அதுவும் சௌந்தர்யத்தேடலில் தன்னை
அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அபூர்வ மனிதன், இப்படியான
அனுபவங்களுக்காக சிலபல காலம் வருடக்கணக்கிலோ யுகக்கணக்கிலோ
அல்லவா காத்துக்கிடக்கவேண்டியிருக்கு! காத்திருத்தல்...காத்திருத்தல்...
செடி வளரும் வரையான காத்திருத்தல்... மொட்டு மலரும் வரையான
காத்திருத்தல்... அதுதான் எவ்வளவு உன்னதமான, சொல்லிலடங்காப்
பேரனுபவம்!
இப்படிப்பட்ட நுண்மையான அனுபவங்கள், நான் நீ என்ற
எல்லைக்கோடுகளையெல்லாம் தாண்டி அனைத்து இயற்கைக்குமான ஏதோவோர்
பொதுப்புள்ளியில் அல்லவா நிகழ்ந்தேறிவிடுகிறது! உனக்கும்
எனக்குமான அல்லது இயற்கையின் எல்லாப் படைப்புகளுக்கும்
பொதுப்புள்ளியாய் விளங்கும் அத்தகு ஆன்ம மையத்தை நானும்
நீயும் நம்மோடு சேர்ந்து இந்த இயற்கையும் கண்டடைவதற்காகத்தான்
நம் இந்த வாழ்க்கைப் பயணமோ...!? புரியவில்லை! ஆம். இதெல்லாம்
எதற்கென்றுதான் எனக்குப் புரியவில்லை. ஏன்தான் இப்படியான
அனுபூதிகள் எனக்கு மட்டும் வாய்க்கின்றனவோ! தெரியவில்லை!
ஒன்று மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது: பேரானந்தத்தின்
எல்லையில்லாது நீளும் கரங்களின் அணைப்பில் நிச்சயம் நானும்
ஒரு சிறு துளியாக இருக்கிறேன். அப்படி நான் இருப்பதை எனக்குக்
காட்டிக்கொடுத்தவளே நீதானடி அன்பே!
எதையும் சட்டெனப் புரிந்துகொண்டு விடுவதிலோ எதையும்
வேகவேகமாகச் செய்துமுடித்துவிடுவதிலோ எந்த மகத்துவமும்
இருந்துவிடப் போவதில்லையடி என் கண்ணம்மா! உன்னைப்
புரிந்துகொள்வதில் எனக்குண்டான சிக்கல் இன்னும் பல
பிறவிகளுக்கு புதிராகவே தொடரட்டும்! பல யுகங்களுக்கு இவ்வாறே
வாழ்ந்திருக்கிறேன் நான்: எனக்குத்தேவை நீ நல்கும் அந்த
அதிநுண்மையான அனுபூதிகள்... உன் அதீதப் பார்வையால்
நீயெனக்குக் கொடையளித்து வரும் பேரன்பின், பெருங்காதலின்
ரஸானுபவங்கள்..அவ்வளவே! அவற்றுக்காக நான் எத்தனை யுகங்கள்
வேண்டுமானாலும் காத்திருப்பேன்!
வெகுநாள் கழித்து நல்ல தோழன் ஒருவனிடமிருந்து வரும் மடலை உடனே
பிரித்துப் படித்துவிடாமல், அதைச் சற்றே அலமாரியில்
கிடத்திவைத்துவிட்டு மற்ற வேலைகளைப் சந்தோஷமாகவும்
நிறைவாகவும் பார்த்து முடித்தபின், விரல்களில் மெல்லிய இன்ப
அதிர்வுகள் படர மெதுவாகவும் கவனமாகவும் அதைப்
பிரிப்பதுபோலத்தான் உன்னையும் உன் புதிரையும்
கொஞ்சங்கொஞ்சமாய் நான் பிரிக்கவேண்டியிருக்கு! ஒரு குற்றவியல்
நாவலைப்போல,உடனே படித்துமுடித்து பின் குப்பையில்
தூக்கிக்கடாசிவிடும் அடிமுட்டாள்தனமான காரியத்தை நான்
ஒருபோதும் செய்யத்துணியேன்:
சாவகாசமாய், ஓய்வுமிக்கதொரு க்ஷணத்தில்... சாதாரண விழிகளுக்கு
எட்டாத லாவகத்துடன் என் பார்வைக்கென்றே நீ உன்
அடியாழத்திலிருந்து ஊறச்செய்யும் தேவாமிர்தத்தை
கொஞ்சங்கொஞ்சமாய், துளித்துளியாய் ரஸித்துப் புசிப்பதில்தான்
என் இருப்பின் பொருளே நிறைந்தடங்கிப் பொங்கும்! அந்த உன்
அமானுஷ்யமானதொரு லாவகத்திலிருந்தே எனக்கான அனுபூதிகள்
பிறந்தெழுந்து வளர்ந்து செழித்துப் பூத்து காய்த்துக் கனிந்து
என் தீராப்பசிக்கு விருந்தாகின்றன! உன் அந்த அந்தரங்கமான
பெருங்கொடை மட்டும் எனக்குக் கிட்டாது போயிருப்பின்,
இருப்பின் அர்த்தம் அறியாது ஒரு பிறவிக்குருடனைப்போல சர்வசதா
காலமும் நொந்துபுலம்பி, ஒரு ஆவியாய்ப் பூதமாய்
அலைந்துகொண்டிருப்பேன் இந்நேரம்!
வெளிப்பார்வைக்கு வெகுசாதாரணமாகத் தென்படும் நீ,
அமுதசுரபியாய் எனக்கு அளித்துவரும் அந்த சௌந்தர்யலகிரியை
நானும் உனக்களிக்க முடிகிறதா என்பதுதான் இப்போது என் குழப்பமே!
அல்லது உனக்கான அந்த என் பரிசை, லாவகமாய் வசப்படுத்தி
தன்னகத்தே ரகஸியமாய் என்னிடம் சொல்லாமல்
புதைத்துவைத்துக்கொள்கிறாயோ? இவ்வாறான அதிரகசியக் கலையில்தான்
தெரிந்தோ தெரியாமலோ எந்தளவுக்கு நீ கைதேர்ந்திருக்கிறாய்!
அதனால்தானேடி நீ என் ஆனந்த விளக்காய் எப்போதும் சுடர்விட டெரிகிறாய் என்னுள்!
எல்லா ரகஸியங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுவதில், நமக்கான
நம் பரஸ்பரப் புதிர்கள், காணாமல் தொலைந்துபோகக்கூடிய ஆபத்து
இருக்குதென்பதை இதை உனக்கு எழுதும் கணத்தில் உணர்கிறேன் நான்!
என் வெளிப்படையான பேச்சு, எனக்கான புதிரை
இழக்கச்செய்துவிடக்கூடும்தான்! எது எப்படியாயினும் நான் பேசப்
பிறந்தவன் – உன் இனிமையை, ஈடில்லா சௌந்தர்யத்தை,
வேர்ப்பலாவாய் என் அடியாழத்துள் நீ இனித்திருக்கும் ரகஸியத்தை!
அவ்விதம் உன் புதிர்களை விவரிப்பதால் இன்னும் நான் புதுபுதுப்
புதிர்களின் உடைமையாளன் ஆகக்கூடும் என்பதுதான் என் கருத்தே!
அவரவர்க்கான புதிர்களை அவரவர்தான் லாவகமாய்க் கையாளவேண்டும்.
அவ்விதம் கையாளத் தெரியாத கோடானுகோடி சக ஜீவிகள், கண்ணில்
புதிரேதுமற்று, நிறமிழந்து வெளுத்த வண்ணத்துப் பூச்சிகளாய்,
சாயம்போய், பிணக்களையோடு திரிவதை நீயும் நானும்
கண்ணுற்றிருக்கிறோம்தானே?
இப் பூமிக்கு வருகையில் நமக்களிக்கப்பட்டிருந்த குழந்தைமையின்
பேரழகை சுத்தமாய்த் தொலைத்துவிட்டலையும் சீர்கெட்ட முகங்களின்
அசிங்கத்தை நீயும் நானும் ஒருவேளை
புரிந்துகொண்டுவிட்டதால்தான் நமக்கான நம் குழந்தைமையை நம்மால்
தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கிறதோ என்னவோ! அதனால்தான் உன்
முகம், அந்த குழந்தைமை பளிச்சிடும் அன்பின்-அழகின்-தெளிவின்
இனிமையை கொஞ்சமும் நழுவிவிடாமல் முழுமையாய்க் கட்டிக்காத்து
வருகிறதோ? ஒன்றுமட்டும் நிச்சயம்: குழந்தைமையை
தக்கவைத்துக்கொள்ளும் இத்தகு முகங்களை தெருக்களில்,
கூட்டங்களில், மாநகரங்களின் நெரிசல்களில் மிகமிக அரிதாகவே
காண்கிறேன்... எல்லா முகங்களும் எந்திரங்களைப்போன்று இறுகிப்
போயிருப்பதைக் கண்ணுறுகையில் என் கண்களில் குருதி
கொப்பளிக்குதடீ! நல்லவேளை, லட்சத்தில் ஒருத்தியாய், அபூர்வ
நிகழ்வாய் நீ மட்டுமாவது கிடைத்தாய் எனக்கு!
உனக்கும் எனக்குமான அழுத்தமான ஒட்டுப்பசையாய் நம்மை பச்சென
ஒட்டவைத்துக்கொண்டிருக்கும் உன் அழகின் பேரினிமையை ஒருபோதும்
இழந்துவிடத் துணியாதே! அதை நீ யுகாதியுகத்துக்கும் தக்க
வைத்துக்கொண்டுவிடு! அப்படி அதை நீ தொலைத்துவிட்டு,
கோடானுகோடி மக்களைப்போல ஒருவித கொடூரமான எந்திரத்தன்மையில்
மூழ்கிப்போக நேர்ந்தால், அதைவிடத் துரதிருஷ்டம் உனக்கும்
எனக்கும் வேறெதுவும் இருக்காதடீ என் செல்லம்!
எக்காரணங்கொண்டும் என்னிடம் நீயும் உன்னிடம் நானும்
வெளிப்படையாக இருக்கத்தேவையேயில்லை. அது சுத்த அபத்தம்.
வீணாய்ப்போன,போய்க்கொண்டிருக்கும் இந்த நவீன உலகம் கட்டமைத்த
துர்தத்துவம் அது! தம்மை மனித எந்திரங்களாக
மாற்றிக்கொண்டுவிட்ட கோடானுகோடி மனித ஜீவிகளின் பொய்ப்புரட்டு
அது. வெளிப்படையாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நவீன மனிதன்,
ஏகப்பட்ட திருட்டுத்தனங்களோடும் தில்லுமுல்லுகளோடும்
அரசியல்களோடும் வாழ்ந்து சிதையும் கொடூரத்தை நீயும் நானும்
சாட்சியாய் நின்று பார்த்தவண்ணம் இருக்கிறோம்தானே?
நீ எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்தானடி நான்
பிதற்றிக்கொண்டே திரிகிறேன்! அதில்தானடி எனக்கான பேரின்பம்
ஒளிந்திருக்கு! உன்னைக் காரணமாக்கி என்னுள் சதா
பெருகிப்பொங்கும் அந்த உள்ளார்ந்த பிதற்றலில்தான் எத்தனை
பேரானந்தமடி எனக்கு!
சரி! கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்!
கடைசியாய் ஒன்று: நீ எனக்கு அதிகொடையாய் அளித்துவரும்
கவிதானுபவங்களை வெளிப்படுத்திட என்னிடம் வார்த்தைகள்
போதுமானதாக இல்லை! இருக்கும் அதே பழைய வார்த்தைகளை மட்டும்
வைத்துக்கொண்டு நான் படும்பாடு எனக்குமட்டுமே தெரியும்! அது
உனக்குப் புரியாமல்போனால் அது என் வெளிப்படுத்தும் திறனின்
குறை மட்டுமல்ல, இதையெல்லாம் சொல்ல மனிதர்களால்
கட்டமைக்கப்பட்ட ஒரு மொழியால் இயலவே இயலாது என்பதும் ஒரு
காரணம்! கப்பல் அதறப் பழசு! அதில் நான் ஏற்ற முனையும்
பொருட்களோ முற்றிலும் பொருந்தாதவை! சிக்கலானவை!
நீயோ மொழிகடந்த மோகனம்! உன் ஸ்ருங்கார லாவகத்தைப் பாட ஏது
மொழி? மௌனமேயல்லவா அதன் ஆதூரம்!
அடுத்த மடலில் பேசுவோம். அதுவரை அப்படியே ஆடாமல் அசையாமல்
எப்போதுபோல உன் குழந்தைமையின் இனிமைக்குள் ஆனந்தித்திரு- நான்
உனக்களிக்கும் இம்மடல் மாதிரியான வலிமிக்க தொல்லைகளும்
தொந்தங்களுமற்று!
*******