<<<சென்ற மடல்
"கர்மத்தின் பாதை மிகவும் சிக்கலானது. இந்த விஷயத்தில்
ஞானிகளும்கூட மிகவும் குழப்பமடைகிறார்கள்" - கிருஷ்ணர்.
என் அதீக்குட்டீ,
மன்னிச்சுக்கோடி! நீ இப்பிடி முகத்தை தூக்கி வச்சிட்டிருந்தா
நான் ரொம்ப வாடிப்போவேன்டி கண்ணூ! ரொம்ப நாள் எழுதாமெ விட்டது
தப்புத்தான், தப்புத்தான்! மன்னிச்சுக்கோடி ப்ளீஸ்!
கிருஷ்ணர் சொன்னது மாதிரி, சில கர்மவினைகள் (எப்போது செய்ததோ!)
என்னைப் பிடிபிடின்னு பிடிச்சு ஆட்டி வச்சா, என்னதான்டி
செய்வான் சின்னூண்டு இதயமுள்ள ஒரு மனுஷன்? சொல்லு!
அப்பிடித்தான் அன்னிக்கு ஒரு சின்ன வீடியோ படத்தை ஏதோவொரு
வலைத்தளத்துலெ பார்த்தேன். ஒரு சின்னூண்டு பாம்பு, ஒரு
முட்டையை -அது டயனோசர் முட்டை மாதிரி பெருசு -அதை அப்பிடியே
லபக்குன்னு முழுங்கப் பாக்குது. ஆனா அந்த சின்ன வாய்க்குள்ளே
அந்த முட்டை போவனாங்குது. பாம்போ, அதை விடுவனான்னு அப்பிடியே
முழுங்குது பாத்துக்க! அதைப் படம்பிடித்தவர் நல்ல
திறமைசாலிபோல: அப்படியே "க்ளோஸ் அப்"பில் அந்த துக்குனூண்டு
பாம்போட வாயும் அந்த முகவாய்த் தோலும் எப்பிடியெல்லாம்
விரிந்து கொடுக்குதுங்கிறதை- அந்தப்பாம்பே வெடித்துவிடும்
அளவுக்கு ஆகிவிட்டதை - நுண்மையா நுணுக்கமா
படம்பிடிச்சிருக்கார்!
கடைசியில் அந்தப் பாம்புக்கு வெற்றிதான்! எப்படியோ அந்த
முட்டையை முழுங்கியேவிட்டது! அதோடு மட்டுமில்லமால், அதை
ஜீரணித்து முட்டை ஓடுகளை அந்தச் சிறு பாம்பு கக்கியதைக்கூட
அந்த வீடியோ படத்தில் காட்டினார்கள்.
அதைப் பார்த்துமுடித்து பலநாட்கள் ஆனபின், ஏதோவொரு க்ஷணத்தில்,
அந்தப் பாம்பின் முட்டாள்தனமான அதே கர்மத்தைத்தான் அப்படியே
அட்ஷரம் பிசகாமல் நானும் செய்துகொண்டிருக்கிறேன் என்பது என்
மண்டையில் உறைத்தது!
நான் மட்டுமா, இந்த பூலோக மாந்தர் எனப்படும் கொம்புகளும்
வால்களும் இல்லாத பிராணிகள் எல்லாம் இதைத்தான்
செய்துவருகின்றன! தன் வாயில் சுத்தமாய்ப் புக வாய்ப்பில்லாத
முட்டைகளை நோக்கியே நம் அனைவர் கவனமும்! சரிதானே நான் சொல்வது?
எல்லோரும் செய்வதால் அதையே செய்யவேண்டிய அறியாமைக்குள் நானும்
இயல்பாய் வீழ்ந்துவிட்டேன்! அது அறியாமை என்றுகூட
எனக்குத்தெரிய இத்தனைகாலம் ஆச்சு! ஆனால், இப்படியே
எத்தனைகாலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு வாயால் கொழுக்கட்டை
சுட்டுக்கொண்டிருப்பது! இப்பிடி உன்னிடம் எத்தையோ முறை
பேசியிருக்கிறேன்; சொல்லியிருக்கிறேன்: என்ன புண்ணியம் அதனால்?
அதானால் என்னுள் ஏதேனும் மாற்றம் வந்ததா என்றால், இல்லை!
சுத்தமாய் இல்லை! ஆதலினால், மாந்தர்களே எதையும் யாரிடமும்
சொல்லாதீர்கள், பகிர்ந்துகொள்ளாதீர்கள் என்று நான் யாருக்கும்
அறிவுரைக்கப் போவதில்லை.என் கதையே இங்கு நாறும்போது
எனக்கெதுக்கு அடித்தவர் கதையெல்லாம்? அய்யோ, சாமி,
வேண்டாமப்பா அதெல்லாம்!
எதையாவது உன்னிடம் புலம்பிப் புலம்பியே என் தலையெல்லாம்
நரைத்ததுதான் மிச்சம்! வாழ்க்கை என்னும் கொடிய பித்தம் என்
மண்டையின் அனைத்துப்பரப்பிலும் முழுக்க நிரம்பி மூளையை
ஆக்ரமித்துக்கொண்டதில், என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வலி,வலி,வலி! மிகுபெரும் தலைவலி!
இப்பிடி கொடிய பித்தத்தோடும் அதிகொடிய தலைவலிகளோடும்
இருப்பதுதான் வாழ்க்கையென்றால், அப்படிப்பட்ட வாழ்க்கை
எதுக்குடியம்மா?! சொல்! அப்படிப்பட்ட வாழ்க்கையை
கண்டதுண்டமாய் வெட்டியெறிய வேண்டியதுதானே என்று நீ எளிதில்
கேட்டுவிடலாம்! ஆனாலும் நம் தலையில் நிரம்பியிருப்பது வெறும்
பித்தம் மட்டுமில்லைடி கண்ணு, அதுவே புளித்து ஒரு அதிபயங்கரப்
போதையாக அல்லவா உருமாறியிருக்கு!
அந்தப் பித்தம் தலையை விட்டுப்போனால்கூட எனக்குத்
தொந்தரவுதான் என்ற நிலை: எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும்!
அடக்கடவுளே, எவ்வளவு பெரிய இக்கட்டு இது!
நான் அந்த வீடியோ படத்தில் பார்த்த அந்தப்
பாம்புக்குட்டியாவது எப்படியோ சாமர்த்தியமாய் ஒருமுட்டையை
விழுங்கி, அதை ஜீரணித்தும் விட்டது! ஒருவேளை அதுக்கான லாவகம்
அதுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்கு?
எனக்கு கிடைத்துள்ள முட்டைகளோ மிகப்பெரியவை. என்னால்
அவற்றையெல்லாம் முழுங்கவே முடியாதென்று தெரிந்தும் அவற்றின்
முழுங்கியே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு. அந்தப் பாம்புக்காவது
ஒரு முட்டை. எனக்கோ, வண்டிமுட்டை! எல்லாத்தையும் ஒவ்வொன்னா
முழுங்கியாகணும்! அதுதானே வேடிக்கை! எனக்குச் சிரிப்பதா,
அழுவதா என்றே தெரியவில்லை! இன்னும் இதிலென்ன நகைச்சுவைன்ன,
இதையெல்லாம் விட்டுட்டு அப்படியே ஓடிர்றதும் இனி சாத்யப்படாது
என்பதுதான்.திரிசங்குக்கு சொர்க்கம் கிட்டுமா? அப்படியப்படி
அங்கங்கே தொங்கிக்கிட்டுக் கிடக்கவேண்டியதுதான்!
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நான் தவிக்கும்
தவிப்பை எப்படிடி உன் கிட்டே சொல்றது? அதனால்தான் எதையும்
உன்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன்! அப்படியே சொன்னாலும்
உன்னால் என் வலியைத் தாங்கிவிட முடியுமா என்ன! இன்பத்தை,
சந்தோஷத்தை, அன்பைப் பகிர்ந்துகொள்ளலாம் நாம். வலியை? அதும்
புற்றுநோய்போல் என்னைப் பீடித்துள்ள ஊழ்வினை என்னும்
கொடுவலியை எப்படி உன்னிடம பகிர்ந்துகொள்வது?
இப்ப என்னோட நிலைமை என்னன்னா, எனக்கு விதிக்கப்பட்ட அந்த
பழைய கர்மவினைகள் என்னும் என் வாய்க்குள் புகாத அந்த
அதிபெரும் முட்டைகளை ஒவ்வொன்றாய் நான் கஷ்டப்பட்டு
முழுங்கிட்டாலும், அதை ஜீரணித்து விடுகிற திராணி
எனக்கிருக்குதான்னு தெரியலடிம்மா! இதை நினைக்கும்போது அந்தச்
சின்னப்பாம்பு மேலே கொஞ்சம் பொறாமையாத்தான்டி இருக்கு! அதன்
லாவகம், அதன் திறமைகூட எனக்கில்லையோ என்ற சந்தேகம்
வலுத்துவிட்டது இப்ப.
அடடா, கொடிதினும் கொடிய வினை என்ன தெரியுமா? இப்படிப்
பாதியில் சிக்கி விடுபடும் வழிதெரியாமல் தவிக்கிறதுதான்டி!
இப்பிடி தவியாய்த் தவிக்கும் எனக்கு என்றுதான் விடிவோ தெரியலை!
இதுபோன்ற சில வினைகளைக் கையாள போதுமான அளவு எனக்கு இன்னும்
புத்தி வளரவில்லைபோல:அப்படித்தான் இருக்கணும்!புத்தி
வளராட்டாலும் பரவாயில்லெ, குழம்பிக் குப்பையாப் போகாமெ
இருந்தா சரிதான்! சரியா!
இப்பிடியான நேரங்களில் எனக்கு எதாவது வழிகாட்டமாட்டியா நீ?
நீயும் அப்படியே என்னைக் கைவிட்டுவிடுகிறாய்!
அதுமட்டுமில்லாமல் அழுதாலும் பிள்ளையை அவதான்னே பெறனும்ங்குற
பழமொழியெ நினைச்சுப்பாக்குற மாதிரி இருக்கு எனக்கும். என்
வினைகளை நான்தானே கடக்கணும்! உன்னால் என்ன செய்ய முடியும்
அதுக்கு? சரியா?
சரி, அதை விடு. எப்படியிருக்குது வாழ்க்கை அங்கு? உனக்கென்ன,
நீ எப்போதும் திருப்தியாகத்தான் இருப்பாய்! அது எனக்குத்
தெரியும்! அடாடா, உன்னைப்போல் மட்டும் என்னால்
இருக்கமுடிந்துவிட்டால்!
அதுவுமில்லாமல், அங்கிருந்தே உன் சுண்டு விரல் ஆட்டியல்லாவா
என்னை ஆட்டுவிக்கிறாய்! நான் சொன்ன லௌகீக –உலகியல் கர்மாக்கள்
மட்டுமா என்னைப் புரட்டியெடுக்குது, நீயும்தாண்டி என்னைப்
பாடாய்ப் படுத்தி வைக்கிறே! இவ்வளவு இருந்தும், வாழ்வின்
எல்லாப்படிகளையும் வெற்றிகரமா தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கை
எனக்கு இன்னும் இருக்கத்தான் செய்யுது!
ஆனா, என் பாதையில் நீண்ட நெடிய வழுக்குமரமாய் ஒய்யாரமாய்
நின்று பிரமிப்பூட்டும் உன்னைக் கடப்பதுதான் என் அதிமுக்கிய
சவாலா இருக்குடீ! உன்னைச் ஜெயிப்பதற்கான எத்தனையோ உபாயங்களை
அப்பப்போ நானும் முயன்றுமுயன்று பார்க்கத்தான் செய்கிறேன்!
நீயோ என்னைச் சவட்டிச்சவட்டி அடித்து சக்கையாக்கி ஊவென்று
ஊதிவிடுகிறாய்!
ஒருவேளை அப்படி உன்னைக் கடந்துவிட்டால் அப்புறம் நீ நானென்ற
வேறுபாடற்று பிரபஞ்சத்தின் எல்லைவரை ஒன்றாய்ப் பறக்கலாம் நாம்
நாமென்றாகி! நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் இரண்டறச்
சங்கமிக்கும் அந்த வைபவத்துக்கு முன் என் பாடு
திண்டாட்டம்தான்!
திண்டாட்டம் என்றால், சாதாரணத் திண்டாட்ட்மில்லை, படுபயங்கரத்
திண்டாட்டம்!
நீ அருகில் இருந்தாலும் கண்ணுக்கெட்டாத் தொலைவில்
அதிதூரத்தில் இருந்தாலும் எனக்கு எல்லாம் ஒன்றுதான். இடம்
தூரம் காலம் என்பதெல்லாம் சுத்தக் கற்பனைகள் என்று
புரியுமளவுக்கு என் புத்தி கொஞ்சம் வளர்ந்திருக்கு இந்தக்
க்ஷணத்தில்!! வாழ்க்கைக்குத் தூரமும் காலமும் ஒரு பொருட்டல்ல.
அது ஒரு பிரவாகம். அது எங்கும் நில்லாமல் போய்க்கோண்டேதான்
இருக்கு, முடிவற்று. அதில் நான் ஒரு துளி. நீயும்தான்!
புல்லின் தனித்தனி இதழ்களில் பிரிந்திருக்கும் நாம், ஏதோவொரு
காற்றசைவில் ஒன்றிணைந்து கரையப்போவது நிச்சயம் என்றபோதும்,
எந்தயுகத்தில் அதுக்கான காற்று வீசுமோ தெரியாது! அதுதான்
சிக்கலே! ஆனாலும்… விடாமல் கர்த்திருப்பேன் நான் உனைச்சேர,
அது எத்தனை யுகமாயினும் சரிதான்!உன்னில் நானும் என்னுள்
நீயும் கரைந்துருகிக் கலந்து அருவியாய் அலையடித்தோடும்
வைபவத்தில் நீயும் நானும் தனியுருக்களாய் இல்லாது
போயிருப்போம். அப்போது நீ நானாய், நான் நீயாய், நானும்
நீயுமற்று, அரூபாதீத வெளியில் பறந்துகொண்டிருக்கும் நம்
சூட்சும இருப்பு!
அப்போதுதான் பேதமற்றவன் ஆவேன் நான். பின்னர் உன்னை வெளியில்
எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை பார்! உனக்கு அப்புறம் மடல்
ஏதும் எழுதப்போவதில்லை. எப்படிச் சொல்லமுடியும்: அதிதீவிர
மாற்றங்கள் எந்த க்ஷணத்தில் நடக்குமோ யார் கண்டது! வாழ்வில்
எதையும் அறுதியிட்டுச் சொல்ல யாரால்தான் முடியும்! அதுதான்
கர்மத்தின் பாதை மிகவும் சிக்கலானதாயிற்றே. என் அருமைக்
கிருஷ்ணனே இதைச் சொல்லிவிட்டானே! பிறகென்ன சந்தேகம் அதில்!
சொல்லப்போனா, வாழ்வில் சஸ்பென்ஸே அதுதான்டி! எப்பவேணுமானாலும்
எதுவும் நடக்கலாம் யாருக்கும்! எங்கும்! எக்காலத்திலும்!
இன்னொன்றையும் ஞாபகம் வைத்துக்கொள்: இயற்கை கால நேர இட தூர
எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதுக்கு காலமோ இடமோ தூரமோ வெளியோ
ஒரு பொருட்டில்லை.
ஆதலினால், கவலை கொள்ளாதே நீ! மீண்டும் மீண்டும் சறுக்கினாலும்
விடாது முயன்றேறி உன் உச்சியைத் தொடுவேன்! அதுவரை
எப்போதும்போல் உனக்கான எல்லையற்ற வானின் ஆனந்த வெளியில்
சிறகடித்திரு!
உம்மென்று உன் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டிராதே. எனக்கு
உண்மையில் மடல் எழுத நேரமில்லை என்று உன்னிடம் பொய்
சொல்லமாட்டேன். உன்னிடம் விடாது அமானுஷ்யமாய்ப்
பேசிக்கொண்டிருப்பதால், எழுதவேண்டிய அவசியம் நேரவில்லை எனக்கு.
அதுதான் உண்மை! என் மீது கோபமானால், உன் அதியத்புத
மென்விரல்களை பூவாய்ச் சேர்த்துச் சொடுக்கி என் தலையில்
பலமாய் ஒரு குட்டு வை! எனக்கு இன்பவலி நல்கும் ஒரு புதிர்மிகு
பரிசாய் நிலைக்கட்டும் அது என் உச்சாந்தலையில்! அப்படியாவது
எனக்கு ஏதேனும் புத்தி வளருதா என்று பார்ப்போம்! சரியா?
ரொம்பநாள் ஆச்சு உனக்கு ஸ்பெஷலாய் கவிதை சொல்லி: உனக்கான
கவிதை இதோ:
நெடிதுயர்ந்து நீண்டு
வானைத்துளையிட்டுச் செல்லும்
வழுக்குமரத்திலேறி
சறுக்கி விழுகிறேன்
மீண்டும் மீண்டெழுந்து
கண்ணுக்கெட்டா உன் தீக்கரம்
விரல்சொடுக்கியழைக்கிறது
மீண்டும் எழவும்
மீண்டும் தன்னில்
ஏறவும் சொல்லி
என் உடம்பெங்கும்
காயங்களோடும் வலிகளோடும்
குருதிக் கோர்ப்புகளோடும்
இன்னும் தொடர்கிறது
என் வழுக்குமர ஏற்றம்:
நீயோ
துரு அண்டா இரும்புத் தூணாய்
நிமிர்ந்து நிற்கிறாய்
பிரபஞ்ச எல்லையை இலக்காக்கி
மேனியெங்கிலும்
சூழும் ஒளியுடன்.
பிறகு சந்திப்போம்... ஸாரி, இப்படிச் சொல்ல எனக்கு வரவில்லை.
எப்போதுபோல இனித்திருப்போம் என்னில் நீயும் உன்னில் நானுமாய்!
*******