சதாம் உசைன் - சர்ச்சைகள் தொடரும் ஒரு சரித்திர முடிவு
உலக அரங்கில் ஒரு நாடகம் நடந்து முடிந்தது. பேருக்கு, ஊருக்கு
விசாரணை என்ற பெயரில் தங்களை நியாயவாதிகளாகக் காட்டிக்
கொண்டவர்களின் வேஷம் முடிவிற்கு வந்துவிட்டது. அமெரிக்க
அதிபர் புஷ்ஷின் கனவு நிறைவேறியது - புத்தாண்டின் இனிப்புச்
செய்தியுடன்.
சதாம் உசைன் ஒன்றும் ஒரு பெரிய தியாகியோ நாட்டுக்காகத்
தன்னுயிரை ஈந்தவரோ
இல்லை. குறிப்பிட்ட ஒரு இனத்தவரின் மேல் வெறுப்பை உமிழ்ந்த
பல்லாயிரக்கணக்காவர்களைக் கொன்று குவித்தவர்தான், கொடுங்கோல்
ஆட்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு இலக்கணமாகத்
திகழ்ந்தவர்தான். அவருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை மிகவும்
குறைவானது- அதற்குமேல் ஒரு பெரிய தண்டனை இருக்கும் பட்சத்தில்.
ஆனால் யாருடைய செயலை யார் கண்டிப்பது என்பதுதான் கேள்வி.
உள்நாட்டு விவகாரத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்து ரசாயன
ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாகப் பொய்க் குற்றம் சுமத்தி
யுத்தம் என்றபேரில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தவர்
எப்படி நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கமுடியும்? புஷ்ஷின்
வெளிநாட்டுக் கொள்கையால் சமீபத்தில் நடந்து முடிந்த
தேர்தல்களின் அவர் கட்சி படு தோல்வியைத் தழுவியது- ஆனாலும்
இந்தத் தோல்வி கூட அவருக்குப் பாடம்
புகட்டவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூணேகால் என்று ஈராக்கை
விட்டு வெளியேற மறுத்து இன்னும் பல அப்பாவி உயிர்கள் பலியாகக்
காரணமாக இருப்பவர் புஷ்.
சதாமின் மறைவு இந்தியாவில் ஏற்படுத்திய விளைவுகள்
வேடிக்கையானவை- இப்போது அவரை நாட்டுக்காகப் பாடுபட்ட ஒரு
பெரிய தேசியத் தலைவராகச் சித்தரிக்க முயல்கின்றன சில கட்சிகள்.
சதாம் இந்திய நாட்டின் தோழர் என்று வர்ணிக்கின்றன.
கம்யூனிஸ்டுகளின் இந்தப் பார்வைக்குக் காரணம் சதாமின் மேல்
உள்ள அனுதாபம் அல்ல- அமெரிக்கர்கள் மேல் உள்ள மாறாத
வெறுப்புத்தான். சில கட்சிகள் மதச் சார்பின்மை என்ற
போர்வையில் ஒரு இஸ்லாமியர் உயிரைப் பறித்ததற்காக முதலைக்
கண்ணீர் வடிக்கின்றன. இதனால் ஏதாவது இஸ்லாமியர்களின்
ஒட்டுக்கள் தங்கள் பக்கம் திரும்பாதா என்ற நைப்பாசையில்.
இவர்கள்தான் பார்லிமென்டின்மேல் தாக்குதல் நடத்திய
அஃப்சலிற்கும்
வக்காலத்து வாங்குபவர்கள்.
சதாம் உசைனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட விதம் வேண்டுமானால்
தவறாக இருக்கலாமே தவிர தீர்ப்பு என்னவோ நியாயமானதுதான்.
போகிறபோக்கில் புஷ் தனக்குத் தெரியாமலே சதாம் உசைனுக்கு ஒரு
நல்லது செய்திருக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று சதாமுக்குத்
தூக்கு- அவரது ஆவி சொர்க்கத்தை அடைந்திருக்கும் என்கிறார்கள்
சிலர்!
***
காந்தியை மிஞ்சிய காந்தியவாதி
மகாத்மா காந்தி அதிக பட்சமாக உண்ணாவிரதம் இருந்த நாட்கள் 21.
அதையும் மிஞ்சி 25 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டார்
மம்தா பானர்ஜி. இவர் உண்ணாவிரதம் இருந்த மேற்கு வங்க
மாநிலத்தின் கவர்னராக மகாத்மாவின் பேரன் கோபால் காந்தி பதவி
வகிப்பது ஓர் உடன் நிகழ்வே. ஒப்புமை இத்துடன் முடிவடைகிறது.
விவசாய நிலங்களைத் தொழில்மயமாக்குவதற்காக கையகப்படுத்த
வேண்டுமா என்ற பிரச்சினைக்குள் நாம் இப்போது புகவில்லை. மம்தா
இப்போது எழுப்புகிற பிரச்னையும் இதுவல்ல. நிலத்தைக்
கையகப்படுத்துவதில் சரியான முறைகள் கையாளப் படவில்லை.
பலவந்தமாக நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவரது
குற்றச்சாட்டு. இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அவர்
சொல்கிறார். முதல் அமைச்சர் புத்ததேவ் இந்தக்
குற்றச்சாட்டுகள் சரியில்லை. ஆதாரங்களை எடுத்துத் தாருங்கள்.
திறந்த மனத்துடன் பேசி முடிவு காணலாம் என்கிறார். இதைப்
பலமுறை சொல்லிவிட்டார். இதுவரை செவி சாய்க்காத மம்தா,
பிரதமரும் குடியரசுத் தலைவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். அந்த மட்டில்
சந்தோஷம்.
மம்தாவின் உள் அந்தரங்கத்தைச் சந்தேகிக்க நாம் தயாராக இல்லை.
தொழில் விரோதிகளின் சதி என்று ரத்தன் டாடா சொல்லுவதையும்
ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. என்றாலும் மம்தா மேற்கொண்ட
உண்ணாவிரதம் காந்திய வழியிலான அறப்போர் இல்லை என்பதை மட்டும்
தெளிவாகச் சொல்லுவோம். இதற்கு ஹங்கர் ஸ்டிரைக் (பட்டினிப்
போர்) என்று வேண்டுமானால் பெயர் கொடுக்கலாமே தவிர உண்ணாவிரதம்
(Fast)
என்று பெயர் கொடுத்து காந்திஜியின் உண்ணாவிரதப் போர் முறையைக்
கொச்சைப் படுத்தக் கூடாது.
காந்திஜியின் அஹிம்சை அடிப்படையான போர்முறையில் உண்ணாவிரதம்
, பிரச்சினைக்குத் தீர்வு காணும் அனைத்து முயற்சிகளும் வெற்றி
பெறாத போது மேற்கொள்ளப் படுகிற கடைசி ஆயுதம்.
மம்தா சொல்லுகிற விஷயங்கள் அபிப்பிராயத்தைப் பொறுத்தவை இல்லை.
சரிபார்த்துக் கொள்ளக் கூடிய தகவல்களைப் பொறுத்த விஷயம்.
தகுந்த ஆதாரங்களை முன்வைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்க
வேண்டும். இது பலன் தரவில்லை என்றால் பத்திரிகைகள், நடுநிலைத்
தலைவர்கள், மின் ஊடகங்கள் மூலம் பொதுக்கருத்தை உருவாக்கி
இருக்க வேண்டும் . இதற்கும் அரசு பணியவில்லை, அல்லது தன்
தரப்பு வாதம் சரியில்லை என்று மம்தா உணரவில்லை என்றால், கடைசி
ஆயுதமாகவே உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்க வேண்டும். இதுவே
காந்திய வழி. சரியான வழிமுறையுமாகும்.
உயிருக்கு எந்த ஆபத்துமில்லாமல் மம்தா உயிர் தப்பியதில்
நமக்கு மகிழ்ச்சியே. இனி என்ன? புத்ததேவ் இருக்கிறார்.
மம்தாவும் இருக்கிறார். அவர் ஆதாரங்களும் இருப்பதாகச்
சொல்கிறார். பேச்சுவார்த்தைக்கும் தயார் இருவரும். இனி என்ன
நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மொத்தத்தில்
Mamtha has
outgandhied Gandhi.
***
வைகோவின் ம.தி.மு.க கட்சியில் பலத்த விரிசல்
ஏற்பட்டிருக்கிறது.
அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருந்த திரு.
கணேசனுக்கும் செஞ்சி ராமச்சந்திரனுக்கும் திடீர் ஞானோதயம்
ஏற்பட்டு தங்கள் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகக்
கண்டுபிடித்திருக்கிறார்கள். திரு. கணேசன் தன்னை அறியாமலேயே
வெளிவந்ததற்கான காரணத்தைச் சொல்லிவிட்டார்- மத்தியில் மந்திரி
பதவி வாங்கித்தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டாராம் வைகோ.
இப்போது ஜெயலலிதாவின் கூட்டிலிருந்து வெளிவந்தால் மறுபடியும்
வைகோவிடம் சேருவதை பற்றி யோசிக்கலாம் என்கிறார்கள்.
ஜெயலலிதாவிடம் தனது கட்சியை அடகு வைத்துவிட்ட வைகோ, கணேசனும்
செஞ்சியும் பிரிவதற்கு கருணாநிதியின் சதிதான் காரணம் என்று
சொல்கிறார். மேலும் அவரது பொதுக்குழுக் கூட்டத்தில் கலவரம்
ஏற்படுத்த கருணாநிதி திட்டம் தீட்டுகிறாராம். இது பற்றி
பிரதமருக்கும் குடியரசுத்தலைவருக்கும் கடிதம்
எழுதியிருக்கிறாராம். ஏன் புஷ்ஷையும் டோனி ப்ளெய்ரையும்
விட்டுவைத்தார் என்று தெரியவில்லை- அவர்களுக்கும் கடிதம்
எழுதியிருக்கலாமே.! பிரதமருக்குத் தன் நாற்காலிக்கு கொடுத்த
முட்டு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவே நேரம் போதவில்லை.
தி.மு.க விலிருந்து பிரிந்து வந்த நாளிலிருந்து இன்னும்
வளர்ந்து வரும் கட்சியாகவே ம.தி.மு.க இருந்து வருகிறது.
தனக்கென்று ஒரு கொள்கையில்லாத தலைவர். தனித்து நின்றால் ஒரு
இடம் கூடப் பிடிக்க முடியாதவர். நெற்றி நரம்பு புடைக்கப்
பேசுவதால் மட்டும் கட்சி வளர்வதில்லை- உள்ளத்திலே ஒளி
உண்டாயின்தானே வாக்கினிலே ஒளி உண்டாகும்? பிறரது நிழலிலேயே
குளிர்காயும் கட்சிக்கு ஏது வளர்ச்சி? ஜெயலலிதா இவரது
பலவீனத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு அவரைப் பகடைக் காயாகப்
பயன்படுத்துகிறார். கருணாநிதியைத் திட்டுவதற்குத் தனக்கு வாய்
வலிக்கும் போதெல்லாம் வைகோவிற்கு ஜெயா டி.வி யில் இரவு பத்து
மணிக்கு நேரம் ஒதுக்கி வசைபாடச் சொல்கிறார். வைகோவும் தனக்கு
இந்தமட்டில் டி.வி யில் வாய்ப்பளித்தார்களே என்ற
மகிழ்ச்சியில் கிளிப்பிள்ளை போல சதாம் உசைனின் தூக்கு
தண்டனையிலிருந்து பக்கத்து வீட்டுக் குழந்தை தடுக்கி
விழுந்தது வரை எல்லாவற்றிற்கும் கருணாநிதியின் சதிதான் காரணம்
என்று உணர்ச்சி கொப்பளிக்கக் கூறுகிறார்.
வைகோ கட்சியின் வளர்ச்சிக்கு வேறு யாரும் எதிரியல்ல- அவரேதான்
முக்கிய எதிரி. ம(க்கள்)தி.மு.க ம(றைந்த) தி(க்கு)
மு(க்காடும் )கட்சியாகிவிடும் நாள் தொலைவில் இல்லை
****
சொன்னார்கள்
"காவலர்கள் அணு அசைந்தாலும் அதை உன்னிப்பாக
கவனித்து மன்னனுக்குத் தெரிவித்து மக்கள் அமைதியாக
வாழ அனைத்து நடவடிக்கையும் எடுத்து ஒழுங்கான நல்ல
அமைதியான நாட்டை உருவாக்கிடப் பாடுபடுபவர்களென்று
திருக்குறளில் கூறியிருப்பது போல் காவலர்கள் செயல்
படவேண்டும் " - காவல் துறையின் 150வது
ஆண்டு விழாவில் முதலமைச்சர் கருணாநிதி
நாம் : உதாரணமாகக் ஊராட்சித் தேர்தலை
எடுத்துக்கொள்ளலாமா?
***
"என்னிடம் முப்பதுகோடி பணம் இருந்தால் வைகோவை விலைக்கு
வாங்கியிருப்பேன்"- தி.மு.க தலைவர் கருணாநிதி
நாம் : அரசுப்பணத்தில் இலவச டி.வி
கொடுப்பேன் என்று மக்களையே விலைக்க வாங்கியவராயிற்றே
நீங்கள்?
***
"அதிருப்தியாளர்களால் ம.தி.மு.கவிற்கு சிறு சிராய்ப்பு கூட
இல்லை" - வைகோ
நாம் : சும்மா வெறும் கேன்சர்தான்
***
"மத்திய அமைச்சர் பதவி என்பது என் கால் தூசுக்குச் சமம்"
- ம.தி.மு.கவிலிருந்து விலகிய
செஞ்சி ராமசந்திரன்
நாம் : சீ. சீ. இந்த பழம் புளிக்கும்
***
இந்த வார ஜோக்
"மூன்றே மாதம் பொறுங்கள். ஜெயலலிதா முதலமைச்சராக
வந்துவிடுவார். நான் போலீஸ் அமைச்சராக வருவேன்"
நகைச்சுவை நடிகர் எஸ். எஸ்
சந்திரன்
*****