தீர்ப்பினால் திருத்தம் வருமா?
ஏழாண்டுகளுக்குபின் தர்மபுரி பஸ் எரிப்பில் மூன்று கல்லூரி
மாணவிகள் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில்
அ.தி.மு.க.வைச்சார்ந்த மூவருக்கு மரண தண்டனையையும் 25
பேருக்கு யுள் தண்டனையையும் சேலம் செஷன்ஸ் நீதிமன்றம்
விதித்திருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையைக் கண்டித்து,
தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியினர் சிலர் ரகளை செய்ததின் ஒரு
கொடூரமான பகுதிதான் இந்த பஸ் எரிப்புச் சம்பவம். வழக்கம் போல
ஜெயா தொலைக்காட்சி இது பற்றி மூச்சு விடாமல் இருக்க, சன்
தொலைக்காட்சி இதைத் திகட்டும் வரை ஒளிபரப்பி மகிழ்ந்தது.
ஆனால் பஸ் கொளுத்தப்பட்டு மாணவிகள் எரிந்து இறந்த இந்தச்
சம்பவம் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் காலம் காலமாக
ஈடுபடுகிற வன்முறைக் கலாச்சாரத்தின் விளைவுதான். இந்தத்
தீர்ப்பு கொஞ்சமாவது ஒரு மனமாற்றத்தைக் கட்சிகளிடையே
ஏற்படுத்த வேண்டுமென விரும்புவது காலிழந்தவன்
கொம்புத்தேனுக்கு சைப்படுவது போலவோ?
***
சென்னை சங்கமமும், கலைஞரின் வழித்தோன்றலும்
சென்னையில் 1300 கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் என்ற
தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சி சென்னையின் பல பாகங்களிலும்
இம்மாதம் 20ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்ப்
பாரம்பரியக் கலைகள், பண்பாட்டுச் செய்திகள் மக்களுக்கு,
குறிப்பாக இளைஞகர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற குறிக்கோளோடு
நடத்தப்படுகிறது இந்த நிகழ்ச்சி.. கிராமியக் கலைகளும்
நாட்டுப் பாடல்களும், தெருக்கூத்துக்களும் பொதுவான இடங்களில்
நடைபெறுகின்றன. தமிழக அரசின் சுற்றுலா, பண்பாட்டுத் துறைகளும்,
தமிழ் மையமும் இணைந்து நடத்தும் இந்த விழாவின்
ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி. இந்த நிகழ்சியைத் துவங்கி
வைத்த கலைஞர், "இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் என்
வழித்தோன்றல் கனிமொழி, தமிழ் மொழியைப் பரப்பும் பணியில்,
கலையைப் பரப்பும் பணியில், தமிழை வளர்க்கும் பணியில் என்
வழித்தோன்றல், "என்று கூறியிருக்கிறார். (அரசியலில்?)
***
அன்றே சொன்னார்கள்!
உலக சமய சமரச சர்வதேச மகாநாட்டில் டாக்டர் இராதாகிருஷ்ணன்
03-10-1956ல்
நிகழ்த்திய உரையில் சில பகுதிகள் - என்றைக்கும்
சத்தியமான வாக்குகள் இவை:
"வெவ்வேறு சமயங்களிடையே சமரச உணர்வையும் ஒத்துழைப்பையும் நாம்
வளர்க்க வேண்டும். பரஸ்பர மதிப்புக் கொண்டிருப்பதன் மூலம்
மற்ற சமயங்களின் உயர்ந்த தன்மையை உணரவும், அவற்றால் பயனடைந்து
வளரவும் வழி பிறக்கிறது. எந்நேரமும் ஒரு சமயத்தை விலக்கவும்
வீழ்த்தவும் நாம் முயன்று கொண்டிருந்தால் பிற சமயங்களிடம்
நாம் மதிப்புக் கொள்ள முடியாது. மற்ற மக்களின்
நம்பிக்கையையும், விசுவாசத்தையும், பக்தியையும் நாம் கலைக்க
முயலக்கூடாது.
விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகளில் ஏற்படுள்ள மகத்தான
வளர்ச்சியின் பயனாக என்ன நேரிடுமோ என்ற அச்சத்திலும்
ஆபத்திலும் நாம் வாழ்கிறோம். இவ்வேளையில் விவேகத்தில்
ஈடுபாடும், ஆண்டவனிடம் அன்பும் கொண்டவர்கள் எந்தச் சமயத்தைச்
சேர்ந்தவர்கள் ஆயினும் சரி, ஒன்று கூடி, புனிதப் பணியில்
தோழமை கொண்டு மனிதன் மீட்சி பெற்று, உய்ய வழிகாட்டும்
சகோதரத்துவத்தை நிலைநாட்ட ஒருங்கே உறுதியுடன் உழைப்பது
அவசியம்."
இறை நம்பிக்கை
அல்லா வென்பார் சில பேர்கள்
அரன் அரி யென்பார் சிலபேர்கள்
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா நிர்வாணம்
என்றும் சில பேர்கள் சொல்வார்கள்
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே!
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888-1972)
***
அண்ணா சொன்னார்!
அறிஞர் அண்னா ஒரு அமெரிக்கப் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள்,
பேராசிரியர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில்
ஒன்று:
கேள்வி: உங்கள் நாட்டிற்கு ஜனநாயகம் புதிதாகையால் எப்படி
ஜனநாயகம் நிலைக்கப் போகிறது என்ற பயம் இருக்கிறதா?
பதில்: "ஜன நாயகம் எங்களுக்குப் புதிதல்ல. 2000 ஆண்டுகட்கு
முன்பே பனையோலையில் நாங்கள் விரும்புவோரின் பெயரை எழுதி ஒரு
மண் பானையில் போட்டு (குடவோலை முறை) ஊர் நாட்டாண்மைக்
காரர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆகவே நீங்கள் நினைப்பது போல்
எங்களுக்கு ஜனநாயகம் புதிதல்ல"
(நன்றி: எம்.எஸ். உதயமூர்தி அவர்களின் அமெரிக்காவில் அண்ணா,
எம்.ஜி.ர் என்ற நூல் - நம்மால் முடியும் இதழ்)
***
சொன்னார்கள்!
"பாட்டிலை எடுத்தால் தான் பாட்டு எழுத முடியும் என்ற ரீதியில்
இன்றைய இளம் பாடலாசிரியர் தமிழ் சினிமாவில் உள்ளனர."
- கவிஞர் வைரமுத்து (ஈரோடு அரிமா சங்கத்தின் சார்பில்
நடந்த ஒரு விழாவில்)
காவிரியும் கலைஞரும்
"நான் பிறந்தபோதுதான் காவிரிப் பிரச்னையும் பிறந்தது. இது வரை
11 கர்நாடக முதல்வர்களுடன் பேசியுள்ளேன், 7 மத்திய
அமைச்சர்களுடன் பேசியுள்ளேன"
(கலைஞர் கருணாநிதி ஒரு திருமண விழாவில் பேசியபோது)
அத்வானியும், வாஜ்பாயும் விதவை மாமியார்கள் போல் செயல்
படுகிறார்கள்.
- உமாபாரதி