ராஜ்ய சபையின் எம்.பி. என்ற முறையில் அவருடைய கவுஹாத்தி
மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 2 கோடி ரூபாயை முழுக்க
முழுக்கக் கல்விக்காகவே செலவழிக்கிறார் மன்மோஹன் சிங்.
முக்கியமாக, பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளுக்காகவும், பெண்
குழந்தைகளுக்கான கழிப்பறை வச்திகளுக்காகவுமே செலவழித்து
வருகிறார். இந்தப் பணம் தகுதியான முறையில்
செலவழிக்கப்படுகிறதாவெனத் தானே கண்காணித்து வருகிறார்
மன்மோகன். சிங்ஜி உங்களுக்கு ஒரு சல்யூட்ஜி!
***
அண்மையில் பி.பி.சி. மேற்கொண்ட ஒரு ஆய்வுப்படி இந்தியாவில்
55 சதவிகிதம் மக்கள் ஜாதி மத வித்தியாசங்கள் நாட்டின்
வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதெனச் சொல்கிறார்கள்.
1616 பேரிடம் நடத்திய இந்த ஆய்வில் சமூக நல்லிணக்கமே நாட்டின்
முன்னேற்றத்திற்கு முக்கியமானதெனக் கருதுகிறார்கள். ஒன்று
மட்டும் தெளிவாகிறது, பெரும்பாலான மனிதர்கள் தனிப்பட்ட
முறையில் எந்தவித வேறுபாடுமின்றி எல்லோரும் ஒரு குலம் என்ற
மனப்பான்மையுடன்தான் வாழ விரும்புகிறார்கள். ஆனால் குட்டையைக்
குழப்பி அதில் ஆதாயம் தேடுபவர்கள் மனச்சாட்சியற்ற சில
சந்தர்ப்பவாதிகள்தான்.
***
பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே பிரச்சினைகளைக் கிளப்பும்
கட்சி என்ற எண்ணம் பரவி வரும் வேளையில் எங்களாலும்
சமுதாயத்திற்கு நல்ல காரியம் செய்ய முடியும் என்று
சொல்வதுபோல் தமிழக பா.ம.க. கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்கள் ஒரு
நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும்
வகையிலும், வாகனங்கள் வெளிவிடும் நச்சுக் காற்றால் ஏற்படும்
பாதிப்புக்களை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் மாநில
சட்டசபைக்கு பஸ்ஸில் செல்வதற்கு பதிலாக சைக்கிளிலேயே பயணம்
செய்தனர்.
அவர்கள் கூறியது,
"சென்னை நகர வாகனங்கள் வெளியிடும் புகையினால் மக்களது உடல்
ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சைக்கிள் போன்ற
வாகனங்களைத் தேவைப்படும்போது உபயோகிப்பதால் சுற்றுச் சூழலைப்
பாதுகாக்க முடியும் என்று உணர்த்தவே இந்த முயற்சியில் ஈடு
பட்டோம்". சீரிய முயற்சி. கடக்க வேண்டிய தூரம் குறைவாக
இருக்கும் நேரத்தில் எதற்கெடுத்தாலும் ஸ்கூட்டர், பைக் என்று
எடுப்பதற்கு பதிலாக சைக்கிள் போன்ற வாகனத்தை உபயோகிப்பதால்
மாசும் கட்டுப்படும், எரி பொருளும் மிச்சமாகுமே!
***
நாங்க ரொம்ப ஏழைங்க, வீடு வாங்கக் கூட வசதியில்லை எனக்
கண்ணீர் விடுகிறார்கள் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.
நிலங்களின் விலைகள் தாறுமாறாக உயருவதால் இவர்களால் பணம்
கொடுத்து நிலம் வாங்க முடியவில்லையாம். இரண்டு கிரவுண்ட்
நிலமும் கொடுத்து 25 லட்சம் ரூபாய் கடனும் கொடுத்தால்
வசதியாக வாழலாமே என்கிறார்கள். மற்ற விஷயங்கள் என்றால்
முறைத்துக் கொள்ளும் மாற்றுக் கட்சிகள் கூட வந்தவரையில்
லாபம்தானே என்று கோரிக்கை விடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
ஞானசேகரனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்கள் இவர்கள் என்று நாம்
எதிர்பார்த்தால் தங்கள் பிரச்சினைகளுக்கு வழி தேடுகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் இலவச டி.வி,,வேட்டி, சேலை கூடக்
கேட்பார்கள் போலிருக்கிறது.
***
சொன்னார்கள்.
"அடிப்படைக் கோளாறு ஒன்றிருக்கிறது. கிரிக்கெட்
ஆட்டக்காரர்களை தெய்வத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் இந்த நாடு
வைத்து விட்டது. அதனால் தான் இந்த ஏமாற்றம், இந்த நிதானமின்மை
ஏற்படுகிறது."
சோ - துக்ளக்கில்
முதல்வர் பதவி தேள் கொட்டும் கிரீடம் என்பது அப்போதும்
தெரியும், இப்போதும் தெரியும், எப்போதும் தெரியும்.
முதல்வர் கருணாநிதி
கலைஞர் பிறந்ததும் அவர் தாயார் அவர் வாயில் ஊட்டியது காவிரி
நீர்.
அமைச்சர் துரை முருகன்.
காங்கிரஸ் தயாவால்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்பதைக்
கலைஞர் உணர வேண்டும்.
இளைஞர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெயகுமார்.
தே.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 50 சதவிகித இட
ஒதுக்கீடு வழங்குவோம்
விஜயகாந்த்.
*****