அடுத்த குடியரசுத்தலைவர் பதவிக்கு சோம்நாத் சட்டர்ஜி, ஷெகாவத், கரன்சிங் எனப் பல பெயர்கள் உலவி வருகையில் இப்போது இன்·போசிஸ் நாராயணமூர்த்தி பெயரும் அடிபட்டு வருகிறது. திரு நாராயணமூர்த்தியைத் தேர்வு செய்யலாமா? என்று இன்·போசிஸ் விழா ஒன்றிற்கு வருகைதந்த குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாமிடம் கேட்டபோது அவர் "அற்புதம், அற்புதம்" என்று சொன்னாராம். சொல்லப்போனால் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களை விட்டு இதுபோன்ற அறிவு ஜீவிகளைத் தேர்ந்தெடுப்பது வரவேற்கத் தக்கதுதான் ஆனாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலத்தில் அரசியல் கட்சியின் கட்டாயங்களுக்கு உள்ளாகி, பல சமயங்களில் தனது சுய சிந்தனைகளை இழக்க வேண்டியிருகிறது. இது பற்றிக் கலாமிற்கு நன்கு தெரிந்தும் நாராயணமூர்த்தியின் தேர்வுக்கு வரவேற்புக் கொடுத்திருப்பது 'தான் பெற்ற துன்பம் அவரும் படட்டுமே ' என்ற நோக்கத்தில் இருக்காது என்றே நம்புவோம் .
*****
அரசியல்வாதிகளின் வேடங்களை வெளிக்கொண்டு வருவதில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் வாக்குப் பதிவுகள் நடந்துவரும் இந்த வேளையில் சில நிருபர்கள் தங்களைத் தனியார் அமைப்பைச் சார்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் கன்னோஜ் தொகுதி வேட்பாளரிடம் 'நாங்கள் சொல்லும் ஒருவரைக் கொன்றால் உங்கள் தேர்தல் செலவுக்குப் பணம் தருகிறோம்' என்று சொல்ல, அதற்கு, 'நான் இதுவரை ஐந்துபேரை போட்டுத்தள்ளியிருக்கிறேன் இது எந்த மூலைக்கு? ஆள் யாருன்னும் அட்வான்சும் கொடுத்துட்டுப் போங்க, காரியம் கச்சிதமா முடிஞ்சுடும்' என்றாராம்! இவர்கள்தான் மக்களின் பிரதி நிதிகள்! இது எப்படி இருக்கு?
*****
பகுஜன் சமாஜ் கட்சி இன்னொரு சாதனையும் செய்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவதில் பல கட்சிகளுக்கிடையே இருந்த போட்டியில் இந்தக் கட்சி வெற்றிவாகை சூடியிருக்கிறது. இது தவிர, தேர்தலில் அதிகப்படியான கோடீஸ்வரர்களை நிறுத்தியதும் ஏழை பங்காளனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்தக் கட்சிதான்!
*****
உ.பி. தேர்தல் கண்காணிப்புக் குழு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் பகுஜன் கட்சி 33.33 சதவிகிதம் குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களை நியமித்திருக்கிறது. கோடீஸ்வர வேட்பாளர்கள் 35 சதவிகிதம். பா.ஜ.க. 27, சமாஜ்வாதி 26, காங்கிரஸ் 20 சதவிகிதம் எனத் தங்கள் பங்கிற்குக் கிரிமினல்களை வேட்பாளர்களாக நியமித்திருக்கின்றன. கோடீஸ்வரர்களுக்கும் குறைவில்லை.
இந்தக் கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும்தான் ஏழை மக்களின் நல்வாழ்விற்காகப் போராடப்போகிறார்கள். அமையப்போகும் சட்டசபை எப்படியிருக்கும் என்பதை இப்போதே தெரிந்து கொள்ளலாம்.
*****
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஜெயராஜன் என்பவர் மீதான கிரிமினல் வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளலது. இதனால் அதிருப்தி அடைந்த கட்சியைச் சேர்ந்த சிலர், நீதிபதியை மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தனர். இதனால் மன வேதனை அடைந்த நீதிபதி ரமாகாந்த், "'பயந்தால் உயிர் வாழ முடியாது. -என்ன செய்வார்கள்? - தலையைத்தானே அறுப்பார்கள்? ஒரே ஒரு வாழ்க்கைதான் எனக்கு உண்டு-. எனக்கு எது சரி என்று பட்டதோ அதைச் செய்வேன். யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவோ அச்சுறுத்தவோ முடியாது. எனக்கு ஏற்பட்டுள்ள வேதனையை யாரிடம் சொல்வேன்?" என்று புலம்புகிறாராம்.' நீதிக்குத் தலை வணங்கு' என்பார்கள். நீதிக்குத் தலையையே கொடுக்கத் தயாராய் இருக்கிறாரே இந்த வித்தியாசமான நீதிபதி!
*****