தமிழகத்தில் எத்தனை மயில்கள் இருக்கின்றன என்று உங்களால்
துல்லியமாகச் சொல்ல முடியுமா?
4994 மயில்கள் இருக்கின்றன என்ற தகவலை சட்டசபையில் சொன்னவர்
வனத்துறை அமைச்சர் திரு. செல்வராஜ். எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் யாராவது மொத்த மயில்களை எண்னிப்பார்த்து
அமைச்சர் பொய்யான தகவலைக் கொடுத்திருக்கிறார் என்று
சொல்லுவார்களா?
****
"தி.மு.க.
அமைச்சரவை இருக்கும் வரை காவிரிப் பிரச்சினை தீராது.
கருணாநிதிக்கும் துரை முருகனுக்கும் கர்நாடாகாவிலிருந்து
பொருள் ஆதாயம் பெறும் நிலை இருக்கும் வரை இப்பிரச்சினை தீராது."
இப்படிச் சொல்லியிருப்பவர் யாரென்று கேட்டால் சின்னக்
குழந்தைகூடச் சொல்லும். எந்த வழியில் போனாலும் முட்டுக்கட்டை
போடுவதற்கென்றே காத்திருக்கும் ஜெயலலிதா போன்றவர்கள்
இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் தீராது என்பது பொதுமக்கள்
அனுபவம்.
****
உச்ச நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித
இட ஒதுக்கீட்டிற்கான தடையை நீக்க மறுபடியும் மறுத்துவிட்டது.
தங்களது வாக்கு வங்கியாக இந்த இடஒதுக்கீட்டைக் கருதும்
தலைவர்கள் பொருமியிருக்கிறார்கள்.
கருணாநிதி சொல்லுகிறார், "நூறு கோடி மக்களின் தலையெழுத்தை
ஓரிரு நீதிபதிகள் நிர்ணயிப்பதா" என்று? 100 கோடி மக்களின்
தலையெழுத்தை வெறும் 544 எம்.பி.க்கள் மட்டும் நிச்சயம்
செய்வது மட்டும் சரியா? அதுவும் 30 சதவிகிதத்தினர் கிரிமினல்
வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் கொலை, கொள்ளை,
கடத்தல், லஞ்சம் என்று பல வழக்கிலும் சம்பத்தப்பட்டவர்கள்
நமது தலைவிதியை நிர்ணயிக்கும்போது இது ஒன்றும் தவறில்லை, கருணாநிதியின் லாஜிக் படியே பார்த்தாலும்.
****
மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு உமாநாத்
சொல்கிறர், "பொருளாதார நிபுணர் என்று தன்னைச்
சொல்லிக்கொள்ளும் திரு சிதம்பரம் நாட்டின் வேகமான பொருளாதார
வளர்ச்சியில் இந்த விலை உயர்வு இயற்கையானது என்று சொல்கிறார்.
இதற்கு மத்திய அரசு சரியான விலை கொடுக்க வேண்டியிருக்கும்".
அந்த விலை கூட உயர்வானதாகத்தான் இருக்குமென்று நம்பலாம்.
****
இதுவரை நமது எம்.பி.க்கள் லஞ்சம், கொலை போன்ற வழக்குகளில்தான்
தொடர்பு கொண்டிருந்தார்கள். இப்போது கடத்தல் வேலையிலும்
தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது
வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பாபுபாய் கடாரா என்ற பா.ஜ.க.
எம்.பி. முதலில் தான் சிக்கி மற்ற பல எம்.பி.க்களையும் சிக்க
வைத்துவிட்டார். பா.ஜ.க. தலைவர் அத்வானி, "இது வருந்ததக்க
விஷயம், தக்க நடவடிக்கை எடுத்துவிட்டோம். இதனால் கட்சியின்
பெயருக்கு ஒன்றும் இழுக்கு வராது" என்று சொல்கிறார் உண்மைதான்.
கட்சியின் பெயரைக் கெடுப்பதற்கு இது ஒரு சம்பவம்தானா? இன்னும்
நூற்றுக் கணக்கானவை இருக்கிறனவே?
நமது ஜனநாயகம் இந்த அரசியல்வாதிகளின் கையில் சிக்கிக்கொண்டு
குரங்கு கைப் பூமாலையாய் இருப்பதை எண்ணும்போது இந்தியாவின்
எதிர்காலம் பற்றிய கவலை எழுகிறது.
****
உ.பி. அலாஹாபாத்தில் சமாஜ்வாதிக் கட்சி முலாயம் சிங்கிற்கு
ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போன ஜெயலலிதா இந்தியில் சோனியா
காந்திக்கு எதிராக அர்ச்சனை செய்திருக்கிறார். அவர் இந்தியின்
சரளத்தைக் கண்டு அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்தார்களாம்.
ஜெயலலிதா ஜிந்தாபாத் என மக்கள் கோஷமாம். இசையைப்போலத்
திட்டுவதற்கும் மொழி வேறுபாடு கிடையாது போலும்!
****
சொன்னார்:
ரிலையன்ஸ், வால்மார்ட் ஆகியவற்றின் சில்லறை வணிகத்தை
எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அந்தக்
கடைகளுக்குப் பூட்டுப் போட்டுத்தான் நடத்த வேண்டும். அந்த
நிலைமைக்குத் தமிழக அரசு எங்களைத் தள்ளாது என நம்புவோம்1
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
*******