தில்லியில் கலைஞர்
பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார், ''தமிழகத்துக்கென்று
நதிநீர் ஆதாரம் ஒன்றும் இல்லை, அண்டை மாநிலங்களையே நம்ப
வேண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினை தீர ஒரே வழி நதிகளை
இணைப்பதுதான், இல்லையென்றால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு
வரும்" என்று.
பாரதியார் அன்று கனவு கண்டு, 'சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில்
பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்" என்று
சொன்னதும், வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையத்து
நாடுகளில் பயிர் செய்குவோம்' என்றதும் இன்றும் பகல் கனவாகவே
இருக்கின்றன.
***
கர்நாடகாவிலும்
கேரளாவிலும் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளித்துச் சட்டம்
இருந்தால், அத்தகைய சட்டம் தமிழ்நாட்டிலும் இயற்றப்படும்
என்று பொது மேடையில் உறுதியளித்திருக்கிறார் முதல்வர்.
அதென்ன "இருந்தால்?" இருக்கிறதா, இல்லையா என்று ஒரு (ரூபாய்!)
ஃபோன்கால் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? அதே மேடையில்
கவர்னரை வைத்துக்கொண்டு அவர் சொன்னது, "அத்தகைய சட்டத்துக்கு
ஒப்புதல் அளித்துக் கவர்னர் கையெழுத்துப் போடுவார்". ஆமாம்,
ஆட்டுக்கு தாடி போலத்தானே ஸ்டேட்டுக்கு கவர்னர் (கலைஞரின்
பழைய மேற்கோள்)?
***
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயலலிதா
மணமக்களை மங்களகரமாக வாழ்த்தினார். அவர் சொன்னது, "வாரிசு
யார் என்ற கருத்துக் கணிப்பின் மூலம் மதுரையில் மூன்று
அப்பாவிகள் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
எரிந்து போனவர்களின் குடும்பம் என்ன வேதனைப் பட்டிருக்கும்!
அவர்கள் சாபம் சும்மா விடுமா? தன் வினை தன்னைச் சுடும்.
இனிமேல் கேடுகாலம் ஆரம்பம். மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்."
***
மத்தியில் தகவல் தொழில் நுட்ப அமைச்சராக தயாநிதி மாறனுக்கு
பதிலாகப் பதவி ஏற்றிருக்கும் திரு ராஜா, இதற்கு முன்னால்
வனத்துறை மந்திரியாக இருந்தவர். அந்த இலாகவையே சரியாக
கவனிக்கவில்லை என்ற புகார் உண்டு, ஆனால் என்ன செய்வது?
கூட்டணி (அ)தர்மப்படி தகுதியுள்ளவரை அமைச்ராக்க முடியுமா?
தலைவருக்கு கூஜா தூக்குபவர்தானே அமைச்சராக முடியும்? "இதற்கு
முன்னாலிருந்த தயாநிதி மாறன் ஆங்கில அறிவு படைத்தவர். ஆனால்
ராஜாவுக்கு ஆங்கில அறிவு கிடையாதே" என்று யாரோ சொல்ல, "ஆங்கில
அறிவுள்ளவர்களெல்லாம் என்ன சாதித்திருக்கிறார்கள் அண்ணாவையும்
அம்பேத்காரையும் தவிர" எனப் பொரிந்திருக்கிறார் ராஜா.
படிக்காதவரெல்லாம் என்ன சாதித்திருக்கிறார்கள் காமரஜரைத்
தவிர எனக் கேட்கலாமோ? திருவள்ளுவர், "இதனை இதனால் இவன்
முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்றார். ஆனால்
கூட்டணித் தத்துவமோ, 'எதனை யாரோ எப்படியோ செய்யட்டும் என்
ஆட்சி நிலைக்கப் பெறின்' என்பதுதான்
***
ராஜ்யசபாவின் எம்.எல்.ஏ. பதவிக்காகக் கட்சியால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கனிமொழி அண்ணன் அழகிரியிடம் ஆசி
வாங்கியிருக்கிறார். அப்போது அழகிரியிடம், "உங்கள் அரசியல்
பிரவேசம் எப்போது?" என்று நிருபர்கள் கேட்ட போது, "நான்
எப்போதுமே பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. கெஞ்சா நெஞ்சன் என்று
என்னைத் தலைவரே கூறியிருக்கிறார், வேண்டுமானால் நீங்கள்
இப்போது எழுதிக்கொடுங்கள். நான் பதவி பெற்று வருகிறேன்" என்று.
அது சரிதான்! கலைஞர் ஆட்சியிலிருந்தால் கலைஞரது வீட்டுக்
கட்டுத்தறிக்குக்கூடப் பதவி கிடைக்கும்.
கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற
வதந்திகளுக்குக் கலைஞர் அளித்த பதில்:
கிடையவே கிடையாது.
No
rumour is confirmed unless it is denied.
"ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரத்தைத் தவிர்க்க தி.மு.க.
கூட்டணி நான்கு இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்று
கருணாநிதி சொல்லியிருக்கிறார். இதுதான் நியாயமான தேர்தல்.
இப்படித்தான் நடக்க வேண்டும், முறைப்படி நடக்கிறது" இப்படிப்
பாராட்டுரைகளை அள்ளி வீசியவர் யார்? கூட்டணியைச்
சேர்ந்தவர்களா? இல்லை! கலைஞரின் பரம அரசியல் எதிரியான
ஜெயலலிதாதான்! இப்படி திடீரெனக் கலைஞரின் மேல் பாசம் வரக்
காரணம்? ஓரு சீட்டுதான் நிச்சயம், இன்னொரு சீட் இழுபறி
என்றிருந்த நிலையில் கலைஞரே அ.தி.மு.க.விற்கு இரண்டு
சீட்டுக்களை விட்டுக்கொடுத்தால் பாசம் பொங்காதா என்ன?
***
இது என்ன புதுக்கதை?
ராஜ் டி.வி. சார்பில் கலைஞர் டி.வி. ஒளிபரப்பைத்
தொடங்குவதற்கு முன்பே சூரியன் அல்லது உதயம் என்ற பெயரில் ஒரு
டி.வி. தொடங்கிவிடும் என்று தெரிகிறது. இதன் நிர்வாகிகள்
ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் தயாநிதி, ஆற்காட்டார்
சகோதரர் தேவராஜ். இதுவே தி.மு.க.வின் அதிகாரபூர்வ சேனலாக
இருக்குமாம்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள்.
அதுபோலத்தான் சன் டி.வி.யிலிருந்து விலகி கலைஞர் டி.வி.
தனியாக ஆரம்பிக்கப்படுவதால் ரசிகர்களுக்கு லாபம். கலைஞர்
டி.வி. வெயில், இம்சை அரசன் என்று புதுப்படங்களை
விருந்தளிக்கத் தயாராகிறது. அதோடு ரஜினியின் சிவாஜியையும்
கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பப்போகிறார்களாம். அவசரப்படாதீர்கள்!
இப்போதல்ல, மூன்று வருடங்களுக்குப் பிறகு!
***
Without
comments:
என் மகன் அரசியலுக்கு வரமாட்டார். அவர் நல்ல குடிமகனாக
வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - சந்திரபாபு நாயுடு
*******