முதல்வர் மாயாவதி
மீதான தாஜ் தாழ்வார வழக்குக்கு அனுமதி தர மறுத்து விட்டார்
உ.பி. கவர்னர். அரசியல் நோக்கத்துக்காக இந்த வழக்குப்
போடப்பட்டது என்று சொல்லி நியாயம் வென்றதாகப் பராட்டியுள்ளார்
மாயாவதி. கவர்னர் மறுப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று
குற்றம் சாட்டியுள்ளது பா.ஜ.க. காங்கிரஸ் என்ன சொல்கிறது? "கவர்னர்
அரசியல் சட்டக் காவலர் ஆயிற்றே? அவரது செயலை விமர்சிக்கலாமா?
கூடவே கூடாது" என்கிறது. ஜனாதிபதி தேர்தலில் மாயாவதி ஆதரவு
தேவைப்படுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லாமல் முடிச்சுப்
போடக்கூடாது.
***
ஏழை எளியவர்கள்
குரல்களும் அரசாங்கத் தாழ்வாரங்களில் கேட்கும் போலத்
தெரிகிறது. தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நிலங்களை அடிமாட்டு
விலைக்குப் பெற்று, தொழில் முனைவோருக்கு வழங்குவதாகப்
புகார்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இதில் கையூட்டு, லஞ்ச
லாவண்யம், ஊழல் புகார்கள் இவற்றுக்கு நிறையவே இடமிருந்தது.
இனி வர இருக்கும் சட்டத்தின்படி, குறிப்பிட்ட முக்கியமான
தொழில்களுக்காக மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தித் தர
முடியும். அதுவும் தொழிலதிபர்கள், சந்தை விலைக்குக்
கூடுதலாகவே விலை கொடுக்க வேண்டியிருக்கும். மூன்று
ஆண்டுகளுக்குள் தொழில் தொடங்கவில்லையானால் நிலம் திரும்பப்
பெற்றுக் கொள்ளப்படும்.
***
வேலையில்லாத
கிழவிகள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைப்பதுபோல
ஆட்சியிலில்லாத சமாஜ்வாதி, அ.தி.மு.க., ம.தி.மு.க. தெலுங்கு
தேசம் போன்ற எட்டு கட்சித் தலைவர்கள் 'என் சோகக் கதையைக் கேளு
தாய்க்குலமே' என்ற பாணியில் ஒன்று கூடிப் பேசியிருக்கிறார்கள்.
வேறு என்ன புதிதாக விஷயம்? மூன்றாவது அணி பற்றித்தான்!! "எத்தைத்
தின்றால் பித்தம் தெளியும்? என்ற நிலையில் நாங்கள் இன்னும்
இருக்கிறோம்" 'என்பதைக் காட்டிக்கொள்வதுதான் இந்தக்
கூட்டத்தின் நோக்கம்.
***
அண்ணா தி.மு.க.
அலுவலகக் கட்டிடம் விதிமுறைகளுக்குப் புறம்பாகக்
கட்டப்பட்டிருப்பதாக நோட்டிஸ் அனுப்பியதும் ஜெயலலிதாவிற்கு
மூக்கிற்கு மேல் கோபம்;
வழக்கம்போல ஒரு திருமண விழாவில், "இவர்கள் நன்றாக
இருப்பார்களா? தி.மு.க.வைப் பூண்டோடு அழிப்பேன்,
வெங்காயத்தோடு வதக்குவேன்" என்றெல்லாம் சூளுரைக்க
ஆரம்பித்துவிட்டார். மு.க.வோ இந்த நோட்டிசுக்கும் அரசுக்கும்
சம்பந்தமில்லை என்று கழன்றுகொள்ள முயற்சி செய்கிறார். கொடநாடு
எஸ்டேட் விவகாரத்திலிருந்து தினமும் தமிழக அரசியல் களம் சூடு
பிடித்து வருகிறது.
"எனக்கு 59 வயதாகிறது. என் வாழ்நாளில் மதுவைத் தொட்டதுகூடக்
கிடையாது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதைத்
திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" - ஜெயலலிதா
தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள். அன்று நீங்கள்
விஜய்காந்த்தை மது அருந்தி சட்டசபைக்கு வருகிறார் என்றீர்கள்.
இன்று நீங்கள்!
***
ராஜ்யசபைக்குத்
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆறு
அங்கத்தினர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.
காங்கிரஸ் என்றாலே குழப்பம் என்றுதான் பெயர். வழக்கம்போல
சோனியா காந்தியின் முடிவுதான் இறுதி முடிவு. தான்
தேர்ந்தெடுக்கப்படாததால் கோபம் கொண்ட தமிழகக் காங்கிரஸ்
கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி முறுக்கிக் கொண்டு தலை
மறைவகிவிட்டார். சோனியாவிடம் டோஸ் வாங்கிய பிறகுதான்
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பி வந்தார். ஒரு
வார்ட் கவுன்சிலரைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும்
ஜனாதிபதியைத் தெர்ந்தெடுக்க வேண்டுமென்றாலும் அன்னை
சோனியாதான் இறுதி முடிவு செய்ய வேண்டும். இதுதான் காங்கிரஸ்
ஜனநாயகம்!
***
ஜூன் மாதம்
ஒன்றாம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர் எல்லாரும்
ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என்றார்கள். ஹெல்மெட்
வியாபரமும் அமோகமாக நடந்தது. முன்னூறு ரூபாய் ஹெல்மெட் 600
ரூபாய் வரை விற்றதாம். "எல்லா ஹெல்மெட்களும் விற்றாகிவிட்டன"
எனபதை முடிவாகத் தெரிந்து கொண்டு அரசு இப்போது மக்கள்மேல்
கரிசனம் கோண்டு ஹெல்மெட் சட்டம் மக்களுக்கு இடையூறாக இருக்கக்
கூடாது என்று சொல்கிறது. பெண்களும் குழந்தைகளும் அணிய
வேண்டாம் என்று இன்னொரு அறிக்கை. போலிஸ் நிர்வாகமும் மக்களும்
தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.
***
கர்நாடக
மாநிலத்தில் கழிப்பறை ஒன்றில் ஆண்களின் அடையாளச் சின்னமாக
பாரதியாரின் படம் வரையப்பட்டிருக்கிறதாம். உண்மை என்றால் இது
தமிழுக்கும் தமிழர்களுக்கும் கர்நாடக அரசு இழைக்கும் மிகப்
பெரிய அவமானம். அரசு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை
எடுக்கப்போகிறது? தமிழைச் செம்மொழி ஆக்கினால் மட்டும் போதாது.
தமிழுக்கு ஏற்படும் அவமானத்தைத் தட்டிக் கேட்கவும் வேண்டும்!
***
"சேதுசமுத்திரக்
கால்வாய்த் திட்டத்தை முழுமையாக அமல் படுத்தப்போவது அடுத்து
மத்தியில் ஆட்சிக்கு வரும் பா.ஜ.க. தான்!" - தமிழக பா.ஜ.க.
தலைவர் இல. கணேசன்
அப்படீன்னா சேது சமுத்திரத்திட்டம் வரவே வாய்ப்பில்லையா?
மதுரை மேற்கு மன்ற சட்டசபைத் தொகுதிக்கு எங்கள் வேட்பாளரை
அறிவிப்போம். வேறு எந்தக் கட்சியாவது ஆதரவு கொடுத்தால்
ஏற்றுக்கொள்வோம். வேறு கட்சிகள் ஆதரவு கேட்டால் கொடுப்போம்"
- பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்
ஆகக்கூடி மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு
நம்பிக்கையே இல்லையா?
*******