நமது குடியரசுத்
தலைவரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியோடு முடிகிறது.
தனது பதவிக் காலத்தில் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர் அவர்.
கலாமின் சிந்தனைத் திறனும், இளைஞர்களிடையே அவர் காட்டிய
பரிவும், அவரது எளிமையும் அவரை நாட்டின் முதல் குடிமகனாக
மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் நேசம் மிக்க நண்பனாகவும்
காட்டின. ஆனாலும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு வளைந்து
கொடுக்கும் சாமர்த்தியம் இல்லாததால் எந்தக் கட்சியுமே அவரை
மீண்டும் ஜனாதிபதியாக்க விரும்பவில்லை. நேர்மைக்கு
நெருக்கமாக இருப்பவர்கள் எப்போதுமே அரசியலுக்கு தூரமாகத்தான்
இருப்பார்கள்.
மாளிகையை விட்டுச் செல்லும்போது கலாம் அவர்கள் எடுத்துச்
செல்வது இரண்டே இரண்டு சூட்கேஸ்தானாம்! பிழைக்கத் தெரியாத
மனிதர்!
அப்துல் கலாமின் பிரிவால் பெரிதும் கவலைப்படுபவர்கள்
மாளிகையிலுள்ள தோட்டக்காரர்கள்தான். அவரது கண்காணிப்பில்
மொகல் கார்டன் செழித்து வளர்ந்திருக்கிறது, இனி புதிதாக வரும்
ஜனாதிபதிக்கு இந்தத் தோட்டத்தின் மேல் அக்கறையிருக்குமா
என்பது அவர்கள் கவலை!
****
"எங்களை ஓரம்
கட்டினால் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமில்லை மத்தியக்
கூட்டாட்சியிலும் ஆதரவை வாபஸ் பெறவேண்டியிருக்கும்" -
இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியச் செயலர்
'அட போங்கப்பா! இதையேதான் மூணு வருஷமாச் சொல்லிட்டிருக்கீங்க,
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இப்படியேச் சொல்லிப் புலம்புங்க,
அடுத்த தேர்தல் வந்துடும்!' அப்படின்னு ஒரேயடியா
ஒதுக்கிடாதீங்க. இந்த முறை மத்திய அரசு இடது சாரிகளின்
எதிர்ப்புக்கு பயந்து சிவராஜ் பாட்டிலை ஜனாதிபதி
தேர்தலிலிருந்து கழட்டி விட்டார்கள். இப்போது ஐக்கிய
முன்னேற்றக் கூட்டணியின் ஒருமித்த கருத்துள்ள வேட்பாளர்
ராஜஸ்தான் கவர்னராக உள்ள பிரதிபா பாட்டில். மொரார்ஜி தேசாய்
பிரதமராக இருந்த காலத்தில் இந்திரா காந்திக்குத் தோள்
கொடுத்து வலது கரமாக இருந்தவர், தேர்ந்தெடுக்கப்பட்டால்
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி.
****
"காங்கிரஸ்
எந்த வேட்பாளரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தினாலும் நாங்கள்
ஆதரவு தருவோம்" என உ.பி. முதல்வர் சொல்லிவிட்டார்.
காங்கிரசிடம் இந்த திடீர் பாசத்திற்குக் காரணம்?
"நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம், நீங்கள் உத்தரப்
பிரதேசத்திற்குத் திட்டக் கமிஷன் 70000 கோடி நிதி ஒதுக்க
ஏற்பாடு செய்யுங்கள்" என்று சோனியாவிடம் சொல்லிவிட்டராம்,
சோனியாவும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். அவர் கையிலிருந்தா பணம்
கொடுக்கப்போகிறார்?
****
தினசரிகள்,
பத்திரிகைகள், தொலைக்காட்சிச் செய்திகள் இத்தனையையும்
சேர்ந்தாற்போல் நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத்
தூங்கப் போனபோது குழப்படியாக ஒரு கனவு வந்தது.
சோனியாஜியிடம் ஒரு நிருபர் மைக்கைப் பிடித்துக் கொண்டு
கேட்கிறார், "இத்தாலிக்காரர் கோட்றோச்சி ஊழல் மன்னர் என்று
பட்டவர்த்தனமாகத் தெரிந்தும், அவரைத் தப்ப விட்டதுமல்லாமல்,
அவருக்குக் கோர்ட் செலவுகளையும் கொடுக்க வேண்டும் என்று
தீர்ப்பாகி விட்டதே?"
சோனியாஜி: (மேனி நடுங்க, கண்கள் சிவக்க) "நீதாண்டா ஊழல்காரன்,
ஊழல்காரன், ஊழல்காரன், போடா".
****
தமிழக
அமைச்சர் ஒருவர் தம் தம்பிக்கு ராஜ்ய சபை சீட் வாங்கித்
தந்துவிட வேண்டும் என்று தவியாய்த் தவித்தார். கலைஞரை
அணுகினார். கலைஞர் பொரிந்து தள்ளி விட்டார்: "ஏன்யா, உனக்குக்
கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி, மந்திரி பதவி, இப்படியே
ஒரே குடும்பத்துக்கே ஒட்டுமொத்த வாய்ப்புகளையும் வழங்கிட்டா
மத்தவங்க எல்லாம் ரோட்டிலே நிக்கறதா?"
அப்படிப் போடு அரிவாளை!
****
"ஜாலி கிழவர்"
என்று ஒரு பத்திரிகை கிண்டல் செய்கிற அளவுக்குத் தலைவர்
கலைஞரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தரம் தாழ்ந்து
போயிருப்பது உண்மையிலேயே வேதனை தரும் விஷயம். பெண் அரசியல்
தலைவரைப் பற்றி அவர் வெளியிடும் இரட்டை அர்த்த விமர்சனங்களும்
அங்கதங்களும் அவரது வயசுக்கும், பதவிக்கும் பொருத்தமில்லாதவை.
மாற்றுக்கட்சி அம்மையார் அப்படி எல்லாம் பேசுகிறார்,
எழுதுகிறார் என்றால் கூடக் கலைஞரிடம் நாம் எதிர்பார்ப்பது
நிதானமும் கண்ணியமும். வாழ்வின் உச்சகட்டத்தில் இத்தகைய
ரசனைக்குறைவான நையாண்டிகளால் தமது மரியாதை மிக்க பிம்பத்தை
இழக்கிறார் என்பதை அவருக்கு அன்புள்ளத்தோடு யார் எடுத்துச்
சொல்வது? வேண்டுமென்றே அம்மையார் அவரை உசுப்பிவிட்டு இப்படிப்
பேச/எழுத வைக்கிறார் என்று தோன்றுகிறது. முதுபெரும் தலைவர்
should he
play in to her hands?
தமது மகள் கனிமொழியை அரசியலில் ஈடுபடுத்தியிருக்கிற இந்தத்
தருணத்தில் அரசியலில் நுழையும் பெண்கள் பற்றித் தரம் தாழ்ந்த
விமரிசனங்கள் கூடாது என்ற ஒரு கலாசாரத்தை உருவாக்குவது
அவருக்கே நல்லதில்லையா?
இரு பெரும் தலைவர்களின் தரம் தாழ்ந்த வார்த்தைப்
பரிமாற்றங்களின் காரணமாக தமிழ்நாடு இந்த இரு கட்சிகளின் "வன்தொண்டர்களின்"
சண்டைக்களமாக மாறி வருகிறது. (ரவுடிகள் என்பதின் இடக்கரடக்கல்.)
யார் எடுத்துச் சொல்வது? பூனைக்கு யார் மணி கட்டுவது?
****
"தயாநிதி
மாறனின் நீக்கத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தைப் போக்கத்தான் என்னை
மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்கிறார்கள். அது
உண்மையல்ல"- கனிமொழி
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் அகராதியும்
வேறுதான் என்கிறார் ஒரு விஷயம் தெரிந்தவர்.
*******