குடியரசுத்
தலைவர் தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஏழு கட்சிக் கூட்டணியான
மூன்றாவது அணி சாணக்கியத்தனமாக அப்துல் கலாமைத்
தேர்ந்தெடுத்து, மற்ற கூட்டணிகளில் ஒரு குழப்பத்தை
ஏற்படுத்தியது. எப்படியோ காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கக் கூடாது
என்ற ஒரே எண்ணத்தில் பா.ஜ.க. கூட்டணியும் கலாம் தேர்தலில்
நின்றால் ஷெகாவத்தை நிறுத்துவதில்லை எனச் சொன்னது.
ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராவதை எதிர்க்கிறார்கள் என்று
சென்டிமென்டலாக 'பன்ச்' கொடுக்கிறது ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி. இடது சாரிகள் மட்டும் எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லையென்றால் சிவராஜ் பாடில்தானே வேட்பாளர் என்பதை
மறைத்து அல்லது மறந்துவிட்டு, வேறு வழியில்லாமல் கடைசி
நேரத்தில் நிறுத்தப்பட்டவர்தானே பிரதிபா பாட்டில்! 33
சதவிகிதம் என்று பல ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்
இன்று என்னவோ பெண்ணினத்திற்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
மூன்றாவது அணி அப்துல்கலாமை சந்தித்து அடுத்த குடியரசுத்
தலைவர் தேர்தலில் நிற்க வேண்டும் எனக் கேட்டபோது அவர் 'எல்லாக்
கூட்டணிக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து வாருங்கள் யோசிக்கிறேன்'
என்று மூன்றாம் அணி வீசிய அரசியல் வலையில் சிக்காமல்
சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொண்டவர் அதன் பின் நடந்த
நாடகங்களைப் பார்த்து போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை
என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
பிரதிபா பாட்டில் தேர்வு செய்யப்பட்டது ஒரு நகைச்சுவை சம்பவம்
என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. பத்து லட்சம்
ஓட்டுகளுக்கு மேல் உள்ள இந்தத் தேர்தலில் சமாஜ்வாதிக்
கட்சியின் ஆதரவும் இருப்பதால் பிரதிபா வெற்றியடைவது நிச்சயம்
- அதற்குள் ஏதேனும் அரசியல் திருப்பங்கள் ஏற்படாவிட்டால்!
இதுவரை ராஷ்டிரபதி என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இனிமேல்
ராஷ்டிரபத்னி என்றுதான் சொல்ல வேண்டும். - பால் தாக்கரே.
ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர் பிரதிபா பாட்டில்
வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார் போலிருக்கிறது.
பர்தா வழக்கத்தைச் சாடியிருக்கிறார். முகலாய வம்ச
அரசாட்சியின்போது ஏற்பட்ட வழக்கம் இது என்றிருக்கிறார். (தில்லித்
துருக்கர் செய்த வழக்கமடி என்று பாரதியும் பாடியுள்ளார்
என்பது வேறு விஷயம்.) நான் ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியாக
இருக்க மாட்டேன் என்று வேறு சொல்லியிருக்கிறார். என்ன
நினைத்துக் கொண்டிருக்கிறார்? ஆளும் கட்சி, மற்றும் "மதச்சார்பற்ற"
கட்சிகளின் ஆதரவு வேண்டும் என்று நினைக்கிறாரா, வேண்டாம்
என்று நினைக்கிறாரா? புரியவில்லை.
அவர் "பாட்டில்" சும்மா இருக்கக்கூடாதா என்கிறார் அறுவை
நண்பர்.
***
தொடரும் நாடகம்
- தொடர்பில்லாத காட்சிகள்.
காட்சி 1: பிரதமராகி, ஆட்சி அமைக்க உரிமை கோரி சோனியா காந்தி
ஜனாதிபதி கலாமைச் சந்திக்கிறார்.
காட்சி 2: ஜனாதிபதி கலாமின் மாளிகையிலிருந்து வெளி வரும்போது
தியாகத் திருவுருவமாக வருகிறார். அந்தராத்மாவின் குரல்
சொன்னபடி, நான் பிரதமர் வாய்ப்பைத் தியாகம் செய்கிறேன்.
மன்மோகன்சிங்தான் பிரதமர் என்கிறார்.
காட்சி 3: அப்துல் கலாம் ஜனாதிபதியாகத் தொடர ஆதரவு
மறுக்கிறார்.
***
●
இந்த நாட்டின்
தலைவிதியை நிர்ணயிப்பது மாநிலக் கட்சிகள்தான் - செல்வி
ஜெயலலிதா
ஹும் - அது எங்கள் தலைவிதி!
●
வேலையில்லாதவர்கள் மற்றும் ஓரம் கட்டப்பட்டவர்களால்
உருவாக்கப்பட்டது மூன்றாவது அணி - மத்திய அமைச்சர் இளங்கோவன்
எங்களைப் பாருங்கள் எங்கள் ஒரு
கட்சிக்குள்ளேயே எத்தனை அணிகள்? (சொல்ல மறந்தது)
●
நல்ல வேளை கே.ஆர்.
நாராயணன், ஆர். வெங்கடராமன் போன்றோரை வேட்பாளராக
அறிவிக்கவில்லை - அமைச்சர் இளங்கோவன்
அமைச்சருக்குக் கோபத்தில் இப்போது
கே.ஆர். நாராயணன் நம்மிடையே இல்லை என்பதுகூட மறந்துவிட்டதோ!
●
"ஆட்சி அதிகாரக்
கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார். அவர் மூலம் தனக்கும்
அந்த அதிகாரம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக்
குடியுரிமையைப் பெற முன்வந்தார் சோனியா. இருந்தாலும்
ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில்
அதிகாரத்தின்மீது தனக்கு எப்போதும் ஆர்வமில்லை என்று
பேசியிருக்கிறார். 'இந்தியக்குடியுரிமை பெறுவதையே விரும்பாமல்
16 ஆண்டுகள் தள்ளிப் போட்டேன்' என்று அந்தக் கூட்டத்தில்
சமீபத்தில் அவர் பேசவில்லை. இந்தியக் குடிமகளாக மனுச்
செய்தபோதுகூட எனது பெயரை, 'அந்தோனியோ மைனோகாந்தி' என்றும்
சோனியா என்பது என் புனைபெயரென்றும் எழுதினேன். இன்று வரை
அந்தோனியோ மைனோ என்ற பெயரை மாற்றிக் கொள்ளவில்லை' என்று அவர்
இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை. இத்தாலிய தேசிய சட்டப்படி
ராகுல் காந்தியும் பிரியங்கா வதேராவும் (இத்தாலியத்
தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலியக் குடிமக்கள்தான் என்பதையும்,
அது எப்போதும் அழிக்க முடியாமல் அவர்களோடு
ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும்
எவரிடத்திலும் சொல்ல மாட்டார்'" - சிந்தனையாளர், அரசியல்
விமர்சகர் எஸ். குருமூர்த்தி
அதான், நீங்க வெலாவாரியா
சொல்லீட்டீங்களே - ஆனா இது செவிடன் காதிலே ஊதிய சங்கு தான்!
*******