தண்ணீர்
தண்ணீர்!
மத்திய
நீர்வளத்துறை அமைச்சர் சோஸ் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச்
சமாளிக்க ஓர் அற்புதமான யோசனையைச் சொல்லியுள்ளார். வரும்
விருந்தாளிகளுக்குப் பெரிய டம்ளருக்கு பதிலாக சின்ன டம்ளரில்
தண்ணீர் கொடுங்கள் என்பது அவர் அறிவுரை. அதை விட நல்ல யோசனை
ஒன்று நமக்குத் தோன்றுகிறது. அவர்களை வாயைத் திறந்து காட்டச்
சொல்லி இங்க்-பில்லரால் டிராப் டிராப்பாக ஊற்றினால் என்ன?
****
அமைச்சர் அரிசி
அளப்பாரா?
மத்திய நிதி
மந்திரி ப.சிதம்பரம் மாணவர்களுக்குச் சொல்லியுள்ளார். மேல்
படிப்புக்கு வங்கி கடன் தரவில்லையென்றால் உடனே என் பெயருக்கு
ஒரு போஸ்ட் கார்டு எழுதிப் போடுங்கள் என்று. மாணவர்கள் மீது
அமைச்சருக்கு உள்ள அக்கறை பாராட்டுக்குரியது. ஆனால் அந்த
கார்டுகளின் மேல் அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்
என்பதுதான் விளங்கவில்லை. கடன் கொடுப்பது சம்பந்தமாக, நிதி
அமைச்சகம், ரிசர்வ் வங்கி, மற்றும் அந்தந்த வங்கித்
தலைமையகங்கள் தெளிவான உத்தரவுகள் பிறப்பித்திருக்கும்தானே?
அவை சரிவரக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்க
ஏற்பாடு செய்தால் போதாதா?
ஹார்வார்டில் படித்த சிதம்பரத்துக்கு,
Authority and
Responsibility go together
என்ற தத்துவம் தெரியாமல் இருக்காது. போஸ்ட் கார்டை
வைத்துக்கொண்டு கடன் கொடுக்க அவர் உத்தரவு போட்டு விட்டால்,
அப்புறம் அந்தக் கடன் சம்பந்தமான பொறுப்பு எங்களுக்கில்லை
என்று வங்கி அதிகாரிகள் கை விரித்து விடக்கூடுமல்லவா?
போகிற போக்கைப் பார்த்தால் உணவு அமைச்சரே முண்டாசைக்
கட்டிக்கொண்டு ரேஷன் கடையில் அரிசி அளந்து போட ஆரம்பித்து
விடுவார் போலத் தோன்றுகிறது.
****
சுயசரிதை
முன்னாள் துணை
ஜனாதிபதியாக இருந்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாய்ப்பை
இழந்த ஷெகாவத் சுயசரிதை எழுதப்போகிறாரம் (பொழுது போகவேண்டாமா?)
எஸ்.ஐ. ஆக வேலைபார்த்த போது நான்கு மணிநேரம் தற்காலிக பதவி
நீக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிடுகிறார். இவர் மீசை
வைத்துக் கொண்டால் இளமையாக இருக்கும் என்று இவரது அறைவாசியான
அத்வானி 1950-களில் கூற அதற்காக மீசை வைத்துக்கொண்டார். ஆனால்
இன்று வயதாகி மீசை போனாலும் பதவி ஆசை போகவில்லையே!
****
டாடாவுக்கு
டாடா
ஏதாவது ஒரு
திட்டத்தை அரசு கொண்டு வந்தால் அதை எதிர்ப்பது என்பது
எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணிக்கட்சியில் இருந்து
அதன் சுகங்களை அனுபவித்துக் கொண்டே குழிபறிக்கும் அரசியல்
கட்சிகளுக்கும் வாடிக்கையாகிவிட்டது. இப்படித்தான்
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏராளமாகக்
காணப்படும் இல்மனைட் கனிமங்களிலிருந்து
டைட்டானியம்-டை-ஆக்சைட் தயாரிக்கத் தமிழக அரசு டாடா
நிறுவனத்துடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கதியும்
ஆயிற்று. இது போடப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடனேயே
அதிமுக-வையும் முந்திக்கொண்டு, அங்கு வாழும் மக்களின் ஏழைப்
பங்காளனாகத் தன்னைக் காட்டிக்கொண்டு அரசுக்கு எதிராகப்
போர்க்கொடி தூக்கியது பா.ம.க. புதிதாக அரசியலில் குதிக்க
இருக்கும் சரத்குமாரும் சளைக்கவில்லை. சிங்கூரில் டாடாவிடம்
ஒப்பந்தம் செய்துகொண்ட இடதுசாரி எங்கூரில் வைப்பதற்கு மட்டும்
எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தது.வெறும் வாயை மெல்லும்
ஜெயலலிதாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு வாழும் ஏழை
மக்களுக்காகக் காதலாகிக் கசிந்து, கண்ணீர் விட்டு, போராட்டம்
என் தலைமையில் வெடிக்கும் என்று பொங்க ஆரம்பித்தார்.
பார்த்தார் கலைஞர்! 'நமக்கேன் வம்பு, நரி இடம்போனால் என்ன,
வலம்போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி'
என்ற சலிப்புடன், 'ஏதோ நல்லது செய்ய நினைத்தேன், கேட்டால் சரி,
இல்லாவிட்டால் உங்களுக்காச்சு, மக்களுக்காச்சு, போங்கப்பா'
என்ற விரக்தி நிலைமைக்கு வந்து விட்டார்.
இதில் வேடிக்கை
என்னவென்றால் 2002ம் ஆண்டு ஜெயலலிதாவே டாடாவுடன்
டைடானியம்-டை-ஆக்சைட் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
போட்டிருக்கிறார். இப்போது அந்த சமயத்தில் அங்குள்ள்
கலெக்டர்கள் கொடுத்த அறிக்கைகளினால்தான் அதைக்
கைவிட்டுவிட்டதாகக் கூறுகிறார். 'இது அண்டப்புளுகு,
கலெக்டர்கள் சாதகமாக அறிக்கை கொடுத்த போதிலும் தனக்கு
வேண்டப்பட்டவருக்கு சலுகை கொடுப்பதற்காகத்தான் ஜெயலலிதா
திட்டத்தைக் கை விட்டார் என்று பல ஆதாரங்களை அரசுக்
கோப்புகளிலிருந்து அள்ளிவீசுகிறார் கருணாநிதி. ஜெயலலிதா,
குட்டு வெளிவந்தவுடன் ஆவேசமாகக் கொதிதெழுந்து, 'என்மேல்
அவதூறா? கோர்ட்டில் சந்திக்கிறேன்' என்று பீலா விடுகிறார்.
மொத்தத்தில் ஒரு
திட்டம் நல்லதா கெட்டதா என்று திட்டத்தின் அடிப்படையில்
ஆராயாமல் அதைக் கொண்டுவந்தவர் யார் என்ற அடிப்படையில்
முடிவெடுப்பது நம் தமிழக அரசியலின் சாபக்கேடு. தமிழக அரசும்
புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் முன் குறைந்த பட்சம் தனது
கூட்டணிக் கட்சிகளுடனாவது ஆலோசித்து. அங்கு வாழும் மக்களின்
கருத்துணர்ந்து, திட்டத்தினால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய
நன்மைகளை எடுத்துக்கூறி, இதற்கான மண்வெட்டி வேலையைச் (spade
work)
செய்திருக்கவேண்டும். ஏதாவது ஒரு திட்டதை அறிவிப்பதும்
எதிர்ப்பு வந்தவுடன் அதைக் கைவிடுவதும் அரசாங்கத்தின் மேல்
மக்களுக்குள்ள நம்பகத்தன்மையை வெகுவாகக் குறைத்துவிடும்.
****
அடிப்பதுபோல
அடிக்கிறேன்
தனியார்
தொழிற்கல்விக் கூடங்களில் அதிகக் கட்டணம் வசூலிப்பவர்களின்
உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு திடீரென அறிவித்துக்
கல்லூரிகளில் ரெய்டும் நடத்தியிருக்கிறது. இவையெல்லாம் 'நான்
அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதுபோல அழு 'என்னும் கதைதான்
என்பது எல்லாருக்கும் தெரியும். தனியார் கல்லூரி அமைப்பவர்கள்
பெரும்பாலும் அரசியல்வாதிகள் அல்லது அவரது பினாமிகள்.
கல்லூரிகளை ஆரம்பிப்பவர்கள் அந்தக் கல்லூரிக்குக் காலூன்றிக்
கட்டிடம் எழுப்பு முன்பே மாணவர்களை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள்
இவர்கள் என்ன மக்களுக்கு சேவை செய்யவா கல்லூரி
ஆரம்பிக்கிறார்கள்? முதலீடு செய்யும் ஒவ்வொரு கோடிக்கும்
லாபம் எவ்வளவு என்று எதிர்பார்த்துத்தானே கல்லூரிகளைத்
துவக்குகிறார்கள்? எல்லாம் ராமதாசுக்கு இரண்டு கல்லூரிகள்
ஆரம்பிக்க அனுமதி கொடுத்தால் சரியாகிவிடும்.
*******