சுதந்திர அடிமைகள்
'மகாகனம் பொருந்திய இந்திய வாக்காளப் பெருமக்களே, நானும் எனது சகா ப்ரனாப் முகர்ஜியும் சொல்வதெல்லாம், புழுகு, அண்டப்
புழுகு, ஆகாயப் புழுகு, 'புழுகைத் தவிர வேறில்லை'.
அணுசக்தி ஒப்பந்தம் பற்றி நமது பிரதமர் மக்களவையில் பேசுவதைக் கேட்கும் போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
இவர்கள் சொல்கிறார்கள் 'ஹைட்' சட்டம் அமெரிக்க அரசுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் இடையே போடப்பட்ட சட்டமாம். அது நம்
இந்தியா செய்துகொள்ளும் 123 ஒப்பந்தத்திற்குப் பொருந்தாதாம். மன்மோகன்சிங் இப்படிப் புழுகிக் கொண்டிருக்கும் வேளையிலேயே
அமெரிக்க வெளி விவகார அதிகாரி ஒருவர், பூனையைப் பையிலிருந்து அவிழ்த்து வெளியே விட்டுவிட்டார். இந்தியா அணு ஆயுத
சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று. அதுமட்டுமல்ல இந்தியாவிற்கு மேலும் எரிபொருள் சப்ளை நிறுத்தப்படுவதோடு, பல
கோடிக்கணக்கான ருபாய் நஷ்டமும் ஏற்படும். இந்தியாவிற்கு யுரேனியம் தருவதாகச் சொல்லும் ஆஸ்திரேலியாவும், இந்தியா
அணுகுண்டு சோதனை நடத்தக் கூடாது என்று கூறுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது மக்களவையில் நாங்கள் சொல்வதுதான்
உண்மை என்று எப்படிக் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? அல்லது அமெரிக்க
அதிகாரிகளிடமாவது 'நாங்கள் உளவாக்கட்டிக்குச் சொல்கிறோம், நீங்கள் என்ன ஒப்பந்தம் போட்டாலும் நாங்கள் ரெடி' என்று கண்ணடித்து
ஜாடை காட்டியிருக்க வேண்டாமா?
இவர்கள் இப்படியென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஆக்ரோஷமாக இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக வெளிவேஷம் போடும் கம்யூனிஸ்டுகளும், 'மதவாதக் கட்சிகளுடன் சாய மாட்டோம்' என்ற நொண்டிச் சாக்கை வைத்துக் கொண்டு வாயளவில் ஒப்பந்தத்தை
எதிர்ப்பதோடு நிற்கும்போலவே தோன்றுகின்றது. வீடு தீப்பற்றி எரியும் வேளையில், அணைக்க ஒருவர் முன்வரும்போது, 'நீ வந்தால்
நான் அணைக்க வர மாட்டேன் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? இடதுசாரிக் கட்சியினர், 'தேனிலவு முடிந்து விட்டது,
இனி விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி என்று சொல்லும்போது மார்க்சிஸ்ட்டுகளோ, தேனிலவுதான்
முடிந்து விட்டது, திருமண பந்தம் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். சில சமயங்களில் இப்படிப்பட்ட தலைவர்களுக்கிடையே நாடு
மாட்டிக்கொண்டு 'ஙே' என்று விழிப்பதைப் பார்க்கும்போது மனதை நெருடத்தான் செய்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள்
நிறைவடைந்ததை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். இப்போதுதான் 60 அண்டுகள் ஆகின்றன. இந்த அரசியல் வியாதிகள் கையில்
சிக்கிக் கொண்டு இந்தச் சுதந்திரம் குரங்குகைப் பூமாலையாக சிதைந்து சின்னாபின்னமாவதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
Tail piece:
எலியட்ஸ் பீச் தாத்தாக்கள் உரையாடலில் ஒட்டுக்கேட்டது: "அணு ஆயுத ஒப்பந்தத்தை இப்படித் தாங்கு தாங்குனு தாங்கறாங்க, இந்த
மன்மோஹன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும். அமெரிக்காக்காரன் வந்து புகுந்துட்டா அந்த அம்மா இத்தாலிக்கு ஓடிப் போயிடுவா. இதுகள்
ரெண்டும்தான் இங்கே மாட்டிக்கணும். இது புரியாமல் குதிக்கிறதுகள்."
மன்னன் எவ்வழி
சுதந்திர தின விழாவில் பிரதமர் பேசும்போது லஞ்சமும் ஊழலும் தான் நமது நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன
என்று சொல்லியிருக்கிறார். லஞ்சத்தின் ஊற்றுக்கண்ணே இந்த அரசியல்வாதிகள்தானே? தேர்தலின்போது கட்சி ஜெயிக்க வேண்டும்
என்று பல கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட தாதாக்களுக்கும், மற்றும் லஞ்சப் பெருச்சாளிகளுக்கும் தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்படுகிறது.
போட்ட பணத்தை எடுக்க அவர்கள் நாட்டிலிருந்தும் மக்களிடமிருந்தும் சுரண்டுகிறார்கள், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.
குட்டரோச்சி பறந்தாச்சி
கடலில் அலை ஓய்ந்தாலும் ஓயும், ஆனால் போஃபோர்ஸ் பிரச்சினைக்கு மட்டும் முடிவே கிடையாது. இத்தாலிய அம்மா இங்கு
செங்கோலோச்சியிருக்கும்வரை குட்டரோச்சிகளுக்குக் கொண்டாட்டம்தான். அர்ஜென்டினாவில் அரெஸ்ட் செய்திருப்பதாகக் கூறினார்கள்.
அந்தச் செய்தியே நமக்கு உளவுத் துறையின் 'சாமர்த்தியத்தால்' வெகு தாமதமாகவே தெரிந்தது. எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்பியவுடன்
குட்டரோச்சியை இந்தியாவிற்குக் கொண்டு வரப்போவதாக 'பாவ்லா' காட்டினார்கள் உளவுத்துறை அதிகாரிகள். இவர்கள்தான் பிரிட்டனில்
முடக்கி வைக்கப்பட்டிருந்த குட்டரோச்சியின் கணக்கையும் விடுவித்தவர்கள். இப்போது எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு குட்டரோச்சி
இத்தாலிக்கே சென்றுவிட்டார். அங்கிருந்து சோனியாவிற்கு, 'என்னம்மா கண்ணு சவுக்கியமா?' என்று போனில் குசலம் விசாரிக்கிறாரோ
என்னவோ?
கூட்டணியின் குடைச்சல்
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து கூட்டணிக் கட்சிகளும் கலைஞரைப் பாடாய்ப் படுத்துகின்றன. பா. மோ(தல்) கட்சிதான்
குடைச்சல் என்றால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், தொல் திருமாவளவன் என்று எல்லாப் பக்கங்களலிருந்தும் தொல்லைதான். சுதந்திர
தின விழாவின்போது, எந்தக் கூட்டணிக் கட்சியுமே கவர்னர் அளித்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை. அவரவர்களுக்கு ஆயிரம்
ஆசைகள், நிறைவேறாத சோகங்கள், வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? தொல்(லை). திருமாவளவன் 'இந்த மாதிரி
விருந்துகளில் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை' என்று சொல்கிறார். சினிமா
ஷூட்டிங் செல்லும் நேரத்தை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது? பாக்கி எல்லாரும் சரி, இந்தக் காங்கிரசுக்கு என்ன வந்தது? எப்படி
அவ்வளவு துணிச்சல்? எல்லாம் கலைஞர் சோனியாவிற்கு ஃபோன் போட்டு சொன்னால் போதும், கப்சிப் காராபூந்திதான்.
தமிழகத்தில் எத்தனை எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ம.க. தலைவர் மத்திய அரசைப்பற்றி மூச்சு விடுவதில்லை. அணுசக்தி ஒப்பந்ததைப்பற்றி அவரிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம், அதனால் கூட்டணி என்ன முடிவு
செய்கிறதோ அதை ஏற்போம் என்று அரசுக்கு விசுவாசியாக மகன்மேல் உள்ள பாசத்தால் பதிலளித்துள்ளார். கருணாநிதி அன்புமணியை
மத்திய அமைச்சரவையிலிருந்து தூக்கக் காய்களை நகர்த்தினால் போதும், அய்யா சரியாகி விடுவார்.
உறவே மாயம்!
கருணாநிதிக்கும் மாறன் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் சரியாகும் என்ற பேச்சுக்கேக இடமில்லை என்ற நிலமையை
அடைந்திருக்கிறது, வழக்கமாக மாறன் பிறந்த நாள் விழாவில் கலைஞர் தலைமை தாங்க சன் அறக்கட்டளை சார்பில் பல
நன்கொடைகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை மாறனின் 73வது பிறந்த தினத்தின்போது இந்த விழா கலைஞரில்லாமல் தயாநிதி
மாறன் தலைமையில் நடந்தது.
மேலும் சன் டி.வி.யின் போக்கிலும் திடீர் மாற்றம். ஜெயலலிதா, ராமதாஸ், மற்றும் வை.கோ.வின் படங்களோடு செய்தித்
தொகுப்புகளும் ஒளிபரப்பாகின்றன. கலைஞர் ஓரம் கட்டப்படுகிறார். இனிமேல் உறவு நீடிக்க முடியாது என்ற நிலைமைக்கு மாறன்
குடும்பம் தள்ளப் பட்டுவிட்டது. இப்போது சுமங்கலி கேபிள் விஷனுக்கும் வேட்டு வைக்கும் வகையில் அரசு தனியாக கேபிள் நிறுவனம்
ஆரம்பிக்கப்போகிறது? இனி சமாதானத்திற்கு ஏது வழி?
அப்ப மட்டும் எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் சொல்வது: கருணாநிதியுடன் கூட்டணி வைத்திருப்பவர்கள் கூட்டணி தர்மத்தை மீறுகிறார்கள்.
நேரில் பார்க்கும்போது "அம்பி" மாதிரி அமைதியாக இருந்து கொண்டு, அறிக்கைகளில்
"அன்னியன்" மாதிரி எதிர்ப்பை அள்ளி வீசுகிறார்கள்.
கூட்டணி தர்மத்தை மீறினால் எப்படியெல்லாம் அவஸ்தை வரும் என்று கருணாநிதி உணர்ந்து கொள்ள சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
*******