பயணங்கள் இலவசம்!
லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய செல்வாக்கு இன்னும் சரிந்து
போகவில்லை என்று காண்பிப்பதற்காக பீகார் , ஜார்கண்ட்
மாநிலங்களின் பல மாவட்டங்களிலிருந்து தொ(கு)ண்டர்களை
பாட்னாவில் குவிக்கப் போகிறார். இதற்கென பல சிறப்பு ரயில்கள்
விட ஏற்பாடு செய்யப்படுகிறது. சில ரயில்களின் நேரம்
மாற்றியும் அமைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னால்
லாலுவின் மாமனார் மாமியார் செய்தது போல இந்தத் தொண்டர்களும்
டிக்கட் வாங்காமல் ஏறினால் யாரும் " உங்கள் அப்பன் வீட்டு
ரயிலா" என்று கேட்கவா முடியும்?
வாரி வாரி வசதிகள்!
தமிழக சட்ட சபையின் மழைக்காலத் தொடரில் அனைத்து சட்ட சபை
உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் ஓய்வூதியமாக மாதம் 3500
ரூபாய் வழங்கப்படும் என்ற தீர்மானம் அவசர அவசரமாக எந்த
எதிர்ப்புமின்றி நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் சட்ட சபை
உறுப்பினர்களாக இருந்த, இருக்கும் வரப்போகிற சட்டசபை
உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம்
3500 வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 32 லட்சம்
செலவாகுமாம் . ஒருமுறை சட்ட சபை உறுப்பினராக இருக்கும் தகுதி
மட்டுமே இதற்குப் போதுமானது.
இப்போது சட்டசபை உறுப்பினர்களுக்கு அவர்கள் செலவிற்காக
மாதம் 20000 ரூபாயும், சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கு
பெறும் நாட்களில் (அதை நடக்க விடாமல் செய்தாலும்
சரி) தினம் 500 ரூபாயும், தொகுதி பயணப்படி என மாதம்
ஒன்றுக்கு 5000 ரூபாயும் தரப்படுகிறது. இதைத் தவிர
இலவச மருத்துவ வசதி, தொலை பேசி வசதி, இருப்பிட வசதி
என வசதிகளுக்குக் குறைவே கிடையாது. தவிர, மாதம்
7000 ரூபாய் ஓய்வூதியம்! .( செய்தி ஆதாரம் தினமணி)
இப்போது இவை போதாதென வாரிசுக்களுக்கும் ஓய்வூதிய
வசதி. !
மக்களின் வாழ்க்கை வசதிகளைப் பெருக்க வசதி செய்து தரவேண்டிய
கடமைக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் மக்களின்
வரிப்பணத்திலிருந்தே தங்களுடைய, தங்களின் வாரிசுகளுடைய
வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வழிசெய்துகொள்வது எந்த நியாயம்?
ஓஓஓஓ...
ஆனந்தவிகடனில் ஞானி அவர்கள் 'ஓ' பக்கங்களில் கருணாநிதி
ஓய்வெடுக்கவேண்டும் என்று கூறிய கருத்து மிகப் பெரிய
சர்ச்சையை உருவாக்கியது அனைவருக்கும் தெரியும். எப்போதுமே
கருணாநிதிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சோ இது பற்றி
கூறுகையில, "இவரைவிட உடல்நலம் நன்றாக இருக்கும் இளைய
முதல்வர்களைவிட கலைஞர்தான் அதிகம் உழைக்கிறார். ஞாபகசக்தி
உட்பட எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை விட அவர் பின்
தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. 'இந்த வயதிலும் இவ்வளவு
உழைப்பா?'என்ற வியப்புதான் ஏற்படுகிறது" - வசிிஷ்டர் வாயாலேயே
பிரம்ம ரிஷி பட்டம். உண்மையிலேயே கலைஞரின் உடலுக்குத்தான்
வயது அவரது மனதிற்கில்லை!
இந்த சர்ச்சையினால் ஏற்பட்ட நிகர நஷ்டம் அல்லது லாபம்
ஞானியின் 'ஓ"பக்கம் ஆனந்தவிகடனில் நின்ற போனதுதான். ஞானி தனது
நண்பர்கள் சிலருக்கு அனுப்பிய மின் அஞ்சலில் தனது 'ஓ'பக்கங்கள்
நின்றுவிட்டன- இதுவரை ஆதரவளித்ததற்கு நன்றி என்று
குறிப்பிடுகிறார். விகடன் ஆசிரியர் நிறுத்தினாரா, இல்லை இவர்
நிறுத்தினாரா என்பது பற்றி தெரியவில்லை
இசட் +
செல்வி ஜெயலலிதா தனக்கு இசட் + பாதுகாப்பு வேண்டுமென
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். அவர்
கேட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்:
மெடல் டிடெக்டர், கடிதங்களைச் சோதனையிட வெடிகுண்டு
சோதனையிடும் கருவி, குண்டு துளைக்காத இரு வாகனங்கள் (ஒன்று
சசிகலாவிற்கு?),
Jammer
கருவி
சர்க்யூட் டி.வி, வாக்கி டாக்கி, வீட்டைச் சுற்றி விளக்கு.......!
அம்மாடி! இந்தப் பாதுகாப்பு போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா-?
அமெரிக்க ஜனாதிபதிகளுக்குக் கூட இந்த அளவு பாதுகாப்பு உண்டா
என்பது தெரியவில்லை தனி குண்டு துளைக்காத விமானமும்
சேர்த்துக் கேட்டிருக்கலாமே?
அசந்தர்ப்பமாக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில்,
அரசியல் தலைவர்கள் இந்த நாட்டின் பாதுகாக்கப்பட வேண்டிய
சொத்துக்கள் அல்ல, அவர்கள் உயிர்களுக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று
கூறியிருக்கிறது. 'இதுபோன்ற அரசியல் தலைவர்களை வெளியே
அனுமதிக்கக்கூடாது. இவர்களால் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல்
ஏற்படுகிறது பாதுகாப்பு என்பது அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தின்
சின்னமாகிவிட்டது" என்று வன்மையாகச் சாடியிருக்கிறது- ஏதோ
ஜெயலலிதாவைக் குறிவைத்தே கூறியிருப்பதுபோல இருக்கிறது.
பொய்யிலே பிறந்து...
‘சேது சமுத்திரத் திட்டம் 70 சதவிகிதம் முடிந்து விட்டது,
2008 நவம்பருக்குள் முடிந்துவிடும்' என்று கப்பல்துறை
அமைச்சர் டி.ஆர் பாலு பீலா விட்டுக்கொண்டிருக்கும் வேளையில்
இதுவரை 15 சதவிகித வேலை மட்டுமே நடந்திருக்கிறது என்ற தகவல்
திடுக்கிட வைக்கிறது. இன்னும் ஒராண்டில் மீதம் 80 சதவிகித
வேலையை முடிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் தடை விலகினாலும்
ஓராண்டில் 25 சதவிகித வேலைதான் முடியும் என்று மத்திய
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கூறுகிறது. பொய்
மூட்டைகளை அவிழ்த்துவிட்டே மக்களை மடையர்களாக்கும்
அரசியல்வாதிகள் என்றுதான் மாறுவார்கள்?
அதிகப் பிரசங்கி அண்ணாசாமி
இவர்கள் ( விஜய்காந்த், சரத் குமார் ) கல்லூரி முதல்வராகலாமே
தவிர தமிழக முதல்வராக முடியாது - நெப்போலியன், தி.முக எம்.
எல். ஏ
அ:அ: தமிழக முதல்வராவதற்கு
எந்தக் கல்வித்தகுதியும் வேண்டாம். கல்லூரி
முதல்வராவதற்குத்தான் தகுதிகள் நிறையத்தேவை என்பது தெரியாதா
உங்களுக்கு?
லோக்சபாவிற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கத்
தயார் - தமிழக பாஜக தலைவர் இல. கணேசன்
அ:அ:ஆமாம், நமக்கென்ன, ஜெயிப்பவர்கள்
தானே கவலைப்படவேண்டும்?
அணுசக்தி ஒப்பந்தம் முக்கியமல்ல மத்திய அரசு நீடிப்பதே
முக்கியம்
- தமிழக முதலமைச்சர் கருணாநிதி
அ:அ: நாடா பதவியா என்ற கேள்விவரும்போது
பதவிதானே முக்கியம்!
கிரிக்கெட் ஆட்டத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
கிரிக்கெட் மோகத்திற்கு எதிராக நான் மட்டும்தான் குரல்
கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக ஒருவரும் இல்லை. - பா. ம. க
நிறுவனர் மருத்துவர். ராமதாஸ்
அ:அ: குறைந்த பட்சம் பதினோர் பேர்
கூடவா ஆதரவாக இல்லை?
*******