ஜெயேந்திரர்
vs
ஜெயலலிதா சீசன் முடிந்துவிட்டது. தேர்தலும் அதையட்டிய
காமெடி சீன்களும் முடிந்துவிட்டன. இப்போது கண்ணகி
சீசன். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டியே இக்கட்டுரை.
மற்றபடி கற்பிற் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா, கோப்பெருந்தேவியா,
அல்லது அவர்களது அம்மாக்களா போன்ற “கல் தோன்றி மண்
தோன்றா காலத்தே முன் தோன்றிய “ மூத்த ஆராய்ச்சிக்குப்
போக விரும்பவில்லை. (போவதற்குண்டான “பெரும் புலமையும்”
பொறுமையும் எனக்கில்லை.)
சிலப்பதிகாரத்தையும், அதற்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளையும். கண்ணகி குறித்த பெரியாரின் விமர்சனத்தையும், பாவேந்தரின் “கண்ணகி காப்பியத்தையும்”, பொழுது போகாமல் படித்துக் கொண்டிருந்தபோது, கண்ணில் பட்ட சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இதன்றியும், கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரின் குணநலன்களை மனோதத்துவ ரீதியாக அலசி ஆராய்ந்து, அவை எப்படியெல்லாம் இம்மூவரின் வாழ்க்கைப் பாதை உருவாகக் காரணமாக அமைந்தன என்பது குறித்தும் ஒரு புத்தகம் படித்தேன். அதைப் பற்றி பின்னொரு சமயம் கூறுகிறேன்.
ஆதித்தமிழகம் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. சோழ நாட்டில் பிறந்து வளர்ந்த கண்ணகி, பாண்டிய நாட்டில் கணவனை இழந்து, சேர நாட்டில் சிலையானாள்.
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ, அரசுக்கட்டிலேறி ஆட்சி செய்யும் வாய்ப்பைத் துறந்தவர். சமணத்தைத் தழுவி, துறவறம் பூண்ட இளங்கோ, முத்தியை நாடி தவம் செய்யவில்லை. கையிற் கமண்டலமும், மயிற் பீலியும் ஏந்தி, சமணப்பள்ளியில் அமர்ந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அரசனையும், பிரபுக்களையும் மட்டுமே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்த தமிழை சாதரண மனிதர்களுக்கும் இறக்குமதி செய்தார். காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் 3ம் வருணத்தைச் சேர்ந்த வைசியனை ஏற்றி வைத்தார். அக்காலக்கட்டத்தில் அது பெரும் புரட்சியே. எனவே இது குடிமக்கள் காவியம் என வழங்கப்பட்டது. விதிப்பயனிலும், ஊழ்வினையிலும் மிகுந்த நம்பிக்கையுடைய சமணத்தை சார்ந்தவராதலால், நமக்கு கதையை அறிமுகம் செய்யப்புகும் போதே
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்ததோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுதூம் என்பதும்
சூழ்வினை சிலம்பு காரணமாக நாட்டுதூம்
யாம் ஒரு பாட்டுடைச் செய்யுள்.
என்று தம் சமயக் கொள்கையைப் பதிவு செய்கிறார்.
இதையே அப்துல் ரகுமான், தமது புதுக்கவிதை பாணியில்;
பால் நகையாள் வெண்முத்துப்பல் நகையாள்
கண்ணகிதன், கால் நகையால், வாய்நகை போய்
கழுத்து நகையும் இழந்த கதை.
என்று எளிமைப் படுத்தியிருக்கிறார்.
வாழ்த்துப்பாடலில், பிள்ளையாரையும் காணோம், பெருமாளையும் காணோம். பதிலாக திங்களையும், ஞாயிறையும், மாமழையையும் போற்றியிருக்கிறார். பல தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்பு காப்பியத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இன்றைய முழுமுதற் கடவுள் விநாயகன் கடைசிவரை காணப்படவில்லை.
கதை கண்ணகி கோவலன் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. கண்ணகி வயது 12, கோவலன் வயது 16. திருமணத்தில் தாலி உண்டா என்ற கேள்விக்கு இரு வேறு பதில்கள் உள்ளன .திருமண ஊர்வலத்தில் மங்கல அணியும் வருகிறது. ஆயின் அதை கோவலன் அவளுக்கு அணிவித்ததாக எந்த குறிப்பும் இல்லை. கணவனைப் பிரிந்திருந்த காலத்தில் மங்கல அணியைத் தவிர வேறு எதுவும் அணியவில்லை எனவும் குறித்திருக்கிறார். அந்த மங்கல அணி என்பதுதான் இன்றைய தாலியா என்பது சிறிது குழப்பமாகத்தான் இருக்கிறது.
இன்¨ றக்கு சுமார் 1800 வருடங்களுக்கு முந்தைய கண்ணகி பகுத்தறிவுவாதியல்ல. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாமுது பார்ப்பான் மறையோதிட தீ வலம் வந்து திருமணம் செய்து கொண்டவள் தான்.. பிறகு நடந்த கதை யாவரும் அறிந்ததே.
அந்நாளைய தமிழகத்தின் பூகோள அமைப்பு, எல்லைகள், சமயங்கள், சாதிகள், சடங்குகள், தெய்வங்கள், தொழிற்பிரிவுகள், அழகுக் குறிப்புகள், நீர்வளம், போன்ற பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
சித்திரா பெளர்ணமி நாளன்று இந்திரவிழாவில் ஏற்பட்ட ஊடலால் மாதவியை விட்டுப் பிரிந்து, கண்ணகியுடன், மதுரையை நோக்கி நடக்கிறான் கோவலன் சமணத் துறவியான கவுந்தியடிகளின் துணையுடன். பல நாட்கள் தொடரும் இந்தப் பயணத்தில், அவர்கள் கண்ட காட்சிகள், கோவில்கள், சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் என யாவும் அழகுத் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உறையூரிலிருந்து, மதுரை செல்லும் வழியில் ஒரு “மாமுது மறையோனை” சந்திக்கிறார்கள். மதுரைக்குச் செல்ல, பாதுகாப்பான வழியை கேட்கிறார்கள். அவர் வழியை மட்டும் சொல்லாமல், மாலிருஞ்சோலைக்குச் சென்று மணிவண்ணனை (இன்றய கள்ளழகர்) வணங்கி, அந்த மலையுச்சியுலுள்ள பிலத்தில் (மலைக்குகை) உள்ள புண்ணிய சரவணம் என்ற பொய்கையில் மூழ்கி எழுந்தால், அட்டமாசித்தியும் அடைவீர்கள் என இலவச அருள்வாக்கு சொல்கிறார். (இந்த இடத்தில் கள்ளழகர் கோவிலைப் பற்றியும், அதற்கு மேலேயுள்ள சுனையைப் பற்றியும் குறிப்பு வருகிறது. ஆனால் இவை இரண்டிற்கும் நடுவே இப்போதுள்ள அறுபடைவீடுகளிலில் ஒன்றான “பழமுதிர்சோலை”யைப் பற்றிய குறிப்பேதுமில்லை.)
பார்ப்பனர்களின் மந்திரஜாலங்களிலும், யாககுண்டங்களிலும் நம்பிக்கையற்ற சமணரான கவுந்தியடிகள்:
“நலம்புரி கொள்கை நான்மறையாள
பிலம்புக வேண்டிய பெற்றி இங்கு இல்லை
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பின் காணாயோ நீ
வாய்மையின் வழாது மன்னுயிர் ஒம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்”
அஷ்டமாசித்திகளையும் பெற மலைக் குகைக்குள் புக வேண்டிய அவசியமும், மணிவண்ணனைத் தரிசிக்க வேண்டிய தேவையும் தங்களுக்கில்லை. தங்களுடைய முற்பிறவி ரகசியங்களை, இப்பிறவியில் அமைந்துள்ள வாழ்க்கையை வைத்தே அறிந்துகொள்ளலாம் (வினைக் கொள்கை) அறவழியில் நின்று சகல உயிர்களையும் நேசிப்பர்களுக்கு கிட்டாதது ஏதுமில்லை. “நீ இடத்தைக் காலி பண்ணுப்பா” என்று பதிலடி கொடுக்கிறார், அழகுத் தமிழில்.
தமிழகத்தை இன்றளவும் வறுத்தெடுக்கும் வெய்யிலின் கொடுமையை, கண்ணகி தன் வழிப் பயணத்தில் படும் துன்பங்களின் மூலம் பதிவு செய்திருக்கிறார் வெய்யிலுக்குப் பயந்து, பகலெல்லாம் எங்கேயாவது பதுங்கியிருந்து, இரவெல்லாம் நடக்கிறார்கள்.
“கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல
படுங்கதிர் அமையப் பார்த்திருந்தோருக்கு”
கொடுங்கோல் மன்னவன், எப்போது ஒழிவான் என்று அவன் நாட்டு மக்களெல்லாம் எதிர்பார்ப்பது போல, சூரிய அஸ்தமனத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்களாம் ஒவ்வொரு நாளும். இவ்வாறு நாளைக்கு ஒரு காதமாக , பல நாட்கள் நடந்து நடந்தே மதுரையை அடைகிறார்கள்.புகாருக்கும் மதுரைக்கும் இடையே சுமார் 400 கி,மீ தூரம் உள்ளது. பிறகு நடந்தது யாவரும் அறிந்ததே.
கொலைக்களத்தில் கணவனின் சடலத்தைப் பார்த்துக் கதறுகிறாள். மன்னனைப் பழி தீர்க்கிறாள். மதுரையை எரிக்கிறாள். அங்கிருந்து கிளம்பி, மதுரையின் மேற்கு வாசல் வழியாக வெளியே வருகிறாள். இலக்கில்லாமல், நடந்து நடந்தே நெடுவேல் நெடுங்குன்றம் அடைகிறாள் (இன்றைய திருச்செங்கோடு என்கிறாகள்). கோவலன் இறந்து 14 நாட்கள் ஆகிவிட்டன. கண்ணகி பூவுலகிலிருந்து விடைபெற்றாள். ஏதோ வானவூர்தியில் ஏறிச் சென்றாள் என குறிப்பிட்டுள்ளார். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில், அவள் மலையுச்சிலிருந்து கீழே குதித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது.
கோவலன் மாதவியைப் பிரிந்தது சித்திரா பெளர்ணமியன்று. அன்று இரவே புகாரை நீங்கி விட்டான்.
ஆடித்திங்களில் பேரிருளையுடைய (அமாவாசை போலும்} கிருஷ்ணபட்ச அட்டமி, கிருத்திகை சேர்ந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் மதுரை கண்ணகியால் தீக்கிரையாக்கப்பட்டது. சித்திரா பெளர்ணமியிலிருந்து, ஆடி அமாவாசை வரையிலும் அதற்கு 14 நாட்களுக்குப் பின் வந்த ஆவணி பெளர்ணமி வரையிலுமாக சுமார் 3 மாதங்கள் அடங்கியுள்ளன.
தமிழகத்தில் இதற்குப் பிறகே, வெள்ளிக்கிழமை விளக்கு பூசைகளும், ஆடி மாத அம்மன் வழிபாடுகளும் தொடங்கியுள்ளன. பொற்கொல்ல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இன்றளவிலும், ஆடி அமாவாசையன்று, கோவலனுக்காக பூசை செய்கின்றனர்.
கோவலன், கண்ணகி முடிவை அறிந்து மாதவி பெளத்த துறவியானாள். அடைக்கல பொருளை பாதுகாக்கத் தவறிய குற்ற உண்ர்ச்சியால், மாதரி தீக்குளித்தாள். கவுந்தியடிகள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். கோவலன் தந்தை பெளத்த துறவியானர். கண்ணகியின் தந்தை அசீவகத் துறவியானார். இருவரின் தாயர்களும் உடன் இறந்தனர். தன் இனத்தை சேர்ந்த ஒருவனால், இத்தகைய மாபெரும் வீபரீதம் நடந்ததால், மனம் வெதும்பிய பொற்கொல்லர்கள் 1000 பேர் தங்கள் தலையை தாங்களே வெட்டி பலி கொடுத்துக் கொண்டனர்.
இங்ஙனமாக, மாதவி பாடிய கானல் பாணி கனக விசையரையும் கல் சுமக்க வைத்தது.
******