மார்ச் 15!
பக்கம் பக்கமாய் அலுவலகக் கணக்கை எண்களில் அடித்து அடித்து
(ஃபிகரைப் பார்த்துப் பார்த்து என் ஃபிகரே போச்சு?!) 'போதும்டா
சாமின்னு' ரிலாக்ஸ் ஆக நினைச்சப்ப.. மானிட்டர்ல கீழே ஒரு
சிவப்புக் கொடி ஆடியது.
ஏதோ மெயில் வந்திருக்கு. 'ப்ச்.. வேறென்ன.. அலுவலக சகா ஏதோ
டிடெய்ல் கேட்கறார்.. என்று ஓபன் செய்தால் மெசேஜ் ஃப்ரம் நிலா
டீம்!
வாவ்.. படித்ததும் ரெக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை
சைக்கிள். "ஏப்ரல் 15 ஒரு கெட்டுகெதர் வச்சுக்கலாமா?
குடும்பத்தோடு வரவும்"
முதலில் சென்னைவாசிகள் என்று தீர்மானித்து பின்பு
தமிழ்நாட்டுக்குள் என்று மாற்றம் கண்டு அடித்தது அதிர்ஷ்டம்
எங்களைப் (வை.கோபாலகிருஷ்ணன், ரிஷபன்) போன்ற வெளி
மாவட்டவாசிகளுக்கும்.
"பேஷா.. " என்று பதில் மெயில் அனுப்பினோம். அந்த வாரமே போக
வர டிக்கட் ரிசர்வ் செய்து விட்டு அதையும் மெயில் செய்தோம்.
8.30 மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கவும் என்று
முதல் குறிப்பு. (பிறகு கத்திபாரா, டைடல் பார்க் என்று இரு
இடங்களிலும்). தமிழ்நாட்டில் இருந்தும் முதல் தடவையாய்
கோயம்பேட்டை அன்றுதான் பார்த்தேன். பிளாட்ஃபார்ம்
1,2,3,4,5,6 என்று வரிசையாய் எண்கள். இந்த இடத்தில் எப்படி
நிலா டீமை அடையாளம் கண்டு பிடிக்கப் போகிறோம் என்கிற குழப்பம்.
மஞ்சு, கார்த்திகைப்பாண்டியன் இருவரும் அவரவர் மொபைல் எண்ணைக்
கொடுத்திருந்தார்கள். எட்டு மணிக்கு 'இங்கே வந்தாச்சு'
என்று முதல் தகவல் கொடுத்தோம். "நாங்களும் அங்கேதான் வரோம்"
"எப்படி அடையாளம் கண்டு பிடிக்கறது"
ஏதோ மாறு வேஷத்தில் வந்திருக்கிற மாதிரி கவலையாய்க் கேட்டேன்.
"வந்த உடனே ஃபோன் பண்றோம்"
8.20 க்கு மறுபடி அழைப்பு.
"ப்ளூ.. பிங்க் கலர்ல ரெண்டு பொண்ணுங்க கூட நான் நிக்கறேன்..
நீங்க எங்கே இருக்கீங்க?"
சுற்றுமுற்றும் பார்த்தால் இரண்டு பாட்டிகள்தான் அந்தக் கலர்
புடவையில் இருந்தார்கள்.
'ரெண்டு பொண்ணு' என்றதும் த்ரிஷா, அசின் மாதிரி (ஹி..ஹி..)
டீன் ஏஜில் இரண்டு பேரைத் தேடித் தேடி கடைசியில் ஒரு வழியாய்
முதல் பிளாட்பார்மில் எதிர் எதிரே செல்லில் பேசிக் கொண்டே
அடையாளம் கண்டு கொண்டோம்! குட்டீஸை அறிமுகப்படுத்தினார் மஞ்சு.
ஓ.. இவங்கதான் அந்த ரெண்டு பெண்களா! ஸ்மார்ட்டாய் எதிரில்
வந்தார்
KP.
(ஹி..ஹி) - நிலாச்சாரலின் ஒருங்கிணைப்பாளார். இந்த
கெட்டுகதெரின் பின்னணி பற்றிச் சொல்கிறார் கேபி:
"தென் தமிழகத்தின் மத்தியில் இருக்கும் எனக்கு வந்தது
நிலாவிடமிருந்து மெயில், 'அடுத்த மாதம் சென்னையில் நம்
குழுவினருடன் ஓர் சந்திப்பு.. நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்"'
என்று. நிலாச்சாரலின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி வரும்
குறிப்பிடத்தகுந்த அனைத்து படைப்பாளர்களையும் அழைக்க
வேண்டுமென்று அடுத்த மெயில். என்னென்ன வேலைகள்
இருக்கின்றன..என அடுத்தடுத்த மெயில்கள்.
நிலாவின் வழிநடத்துதலில் அனைத்து முக்கிய படைப்பாளர்களுக்கும்
அழைப்பு இ-மடல்கள் பறக்கவிட்டோம். சென்னை, சென்னையின்
புறநகர்ப் பகுதிகள், காஞ்சிபுரம், திருச்சி எனப் பல்வேறு
ஊர்களில் இருந்தும் நம் மக்கள் தத்தம் குடும்பத்தினருடன்
வந்து குவிந்துவிட்டனர்.
எங்கே, எப்போது, எப்படி சந்திப்பது என முதலிலேயே இ-மடல்களிலும்,
அழைபேசியிலும் உறுதி செய்துவிட்டதால், மக்கள் துல்லியமாக
நேரத்துக்கு வந்து நிற்க, பேருந்து நிலாச்சாரல் பேனருடன்
அழைத்துக்கொண்டு பறந்தது கேளம்பாக்கம் நோக்கி."
பஸ்ஸைப் பார்த்த உடனேயே நிலா குடும்பம் பெருசுதான் என்பதன்
அடையாளம் தெரிந்து விட்டது. ஆகிரா குடும்பம், ஷங்கரநாராயணன்,
அவர் மகன் வித்யாசாகர், அவருடன் பாடகி கம் சிநேகிதி கல்பலதிகா,
மதுமிதா என ஒவ்வொருவராய் ஏறிக் கொண்டே வந்தார்கள். வைகோ தமது
கேமராவால் சுட்டுக் கொண்டிருந்தார்.
மஞ்சு அவ்வப்போது (செல்லமாய்) குழந்தைகளிடம் அதட்டிக்
கொண்டிருக்க குட்டிப் பெண்களோ முழு சுதந்திரத்தில்!
பெரியவர்களுக்கு முன் அவர்கள்தான் எந்த பந்தாவும் இல்லாமல்
நண்பிகளாகி விட்டார்கள். கத்திபாரா, டைடல் பார்க் என்று
வழியில் நிலா குடும்ப அங்கத்தினர்கள் ஏறிக் கொள்ள
கேளம்பாக்கம் நோக்கி விரைந்தது.
AKR
கணீர்க் குரலில் ஒவ்வொருவரையும் குசலம் விசாரித்து டேஸ்ட்
புரிந்து அதே தளத்தில் அவர் உரையாடிக் கொண்டு வந்ததை
ரசித்துக் கொண்டிருந்தோம். என்னதான் ஒரே பேருந்தில்
இருந்தாலும் இன்னமும் ஒரு மெல்லிய திரை எங்கள் நடுவே இருந்ததை
உணர முடிந்தது. அத்தனை பேரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை.
அருகில் இருந்தவர்கள் மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
கேளம்பாக்கம் சம்ரட்சணாவிற்குள் நுழையும் போதே வித்தியாசமான
இடத்திற்குள் வருகிறோம் என்று புரிந்துவிட்டது. எதிர் கொண்டு
வரவேற்றார் நிலா! "பயணம் வசதியா இருந்திச்சா" என்று கேட்டதுமே
குளிர்ந்து போனது. உடன் சம்ரட்சணா சார்பில் சங்கீதா. "ஹலோ"
சொல்லி வரவேற்ற அந்த நிமிடம் முதல், கடைசியில் எங்களை
வழியனுப்பிய கடைசி நிமிடம்வரை அவரின் புன்சிரிப்பு மாறவே
இல்லை. கோயில் வளாகத்தினுள் சற்று நேரம் பேசினோம். நிலாவும்
அப்போதுதான் பலரை நேரில் பார்ப்பதாய்ச் சொன்னார். பிறகு வந்த
களைப்பிற்கு சற்று ஓய்வெடுக்க அழைத்துப் போனார்கள்.
"இடையில் எனது
கணவர் கால் சுளுக்கிக்கொண்டு சற்று நேரம் மிகவும்
அவதிப்பட்டபோது அருகிலிருந்த ரிஷபன், சுப்பராமன், ரமணி
மற்றும் பிற நண்பர்கள் மிகவும் முயன்று அவர் நலமடையத்
துணைபுரிந்த பண்பு என் நெஞ்சை விட்டு என்றும் அகலாது.
ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்தறியாதபோதும் இனம்புரியாத ஒரு
பாசப் பிடிப்பில் கட்டுண்டு அனைவரும் ஒரு குடும்பத்தினராக
நாள் முழுதும் கழித்தது வாழ்வில் என்றும் மறக்க முடியாத
சுகமான அனுபவம். இத்தகைய உறவுகள் கிடைத்தற்கரியவை."
என்கிறார் ஹேமா ராஜகோபாலன், துணை ஆசிரியர் ஏ.கே.ராஜகோபாலன்
அவர்களின் துணைவி
ஒரே நேரத்தில் நிலாவும் சூரியனும் இருக்க முடியாது என்பதாலோ
என்னவோ, பொறாமையுடன் சூரியன் கொஞ்சம் கூடுதலாகவே தகித்தார்.
விருந்தினர் அறைகளில் தஞ்சம் புகுந்தோம். இப்போது லேசான
காற்றில் திரை விலகிப் பேச ஆரம்பித்து விட்டோம். அப்புறம்
சாப்பாட்டிற்காக பயணம். இங்குதான் முழுத்திரையும் விலகி
எல்லோரும் ஒரே குடும்பமாய் சங்கமித்த நேரம். நிலா டீமைப்
பற்றிய அறிமுகத்துடன் தொடங்கி பிறகு எல்லோருமே தங்களைப் பற்றி
சொன்னார்கள். 'தாத்தா செல்லம்' நடராஜன் செல்லம் ஸ்ருதியையும்
அழைத்து வந்திருந்தார். புஷ்பா ராகவனின் அறுபதாவது பிறந்த
நாளை எப்படித் தெரிந்து கொண்டார்களோ, திடீரென்று ஒரு கேக்
வரவழைத்து அவரை வெட்டச் செய்து இன்ப அதிர்ச்சியில்
ஆழ்த்திவிட்டார்கள்!
"இந்த அனுபவத்தை எங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்ட போது
மிகவும் நெகிழ்ந்து நிலாக் குழுவினருக்கு அவர்கள் நன்றியைத்
தெரிவிக்கச் சொன்னார்கள். நிலாச்சாரலில் வரும் கதை,கவிதை,
கட்டுரை,விமர்சனம் என பல படைப்புகளை படித்து, படைத்தவர்களை
நேரில் கண்டு அளவளாவியபோது அடைந்த ஆனந்தம் மனதில் இனிய
உணர்வாய் தேங்கி நிற்கிறது. வந்திருந்த விருந்தினர்
அனைவரையும், குடும்பத்தாருடன் அறிமுகம் செய்தது அருமையிலும்
அருமை. நிலாச்சாரலை பின்புறம் இருந்து உருவாக்குபவர்களின்
அறிமுகம், நமக்குக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம்." என்கிறார்
புஷ்பா இந்த சந்திப்பு குறித்து.
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
என்பதற்கு மாறாக நிறையப் பேசி, நிறையவும் (நிறைவாகவும்)
சாப்பிட வைத்தார்கள். கொஞ்சம் சுற்றிப் பார்த்தபின்பு
மீண்டும் சம்ரட்சணா.
இப்போது சிவசங்கர் பாபாவுடனான சந்திப்பு. ஹாலில் எல்லோரும்
எவ்விதப் பரபரப்பும் இன்றி அமர்ந்திருக்க பாபா ஒவ்வொருவர்
அருகிலும் வந்து பேசி பிரசாதம் கொடுத்து வெகு சகஜமாய்
இருந்தார். குடும்பத்தின் மூத்தவரிடம் வந்து மகிழ்ச்சியைப்
பகிர்வது போல, பிரச்சனைகளைச் சொல்வது போல, அங்கிருந்தவர்கள்
ஒரு ஒழுங்குடன் வந்து போனார்கள். ஹாலின் ஒரு பகுதியில்
இனிமையான சங்கீதம். பஜன்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
ஷங்கரநாராயணனின் சிநேகிதி கல்பலதிகாவும் பாடினார். ம்ஹூம்.
கானமழை பொழிந்தார் என்றே சொல்ல வேண்டும்.
பாபாவுடன் உரையாட சந்தர்ப்பமும் கிட்டியது. ஷங்கரநாராயணனின்
மகன் வித்யாசாகர் 'இளங்கன்று பயம் அறியாது' என்பது போல
சரமாரியாய்க் கேள்விகள் கேட்க, பாபா முகத்தில் எந்த மாற்றமும்
இல்லாமல் இணக்கமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
"பாபா சிவஷங்கர் அவர்களுடன் கலந்து உரையாடிய ஒரு மணி நேரம்
வாழ் நாளில் மறக்கமுடியாது. பளீரென்ற குழப்பமில்லாத பதில் -
அந்த சந்திப்பு கிடைப்பது அரிதிலும் அரிது." என்று
நெகிழ்கிறார் புஷ்பா
நிலா குடும்பத்துடன் பாபா பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு மணி
நேரமும் காத்திருந்த அடியவர் கூட்டம் எவ்வித முணுமுணுப்பும்
இல்லாமல் அமர்ந்திருந்தது ஒரு ஆச்சர்யம் என்றால், நிலா
குடும்பத்திற்கு விடை கொடுத்து விட்டு எவ்வித அலுப்பும் இன்றி
பாபா அவர்களிடையே உரையாற்றத் தொடங்கியது இன்னொரு அதிசயம். 'அவர்
நம்மைக் கவனிப்பார்' என்கிற உத்திரவாதம்தான் பக்தரின்
காத்திருப்பின் ரகசியம்! வெளியே வந்தபின் சங்கீதா கோயிலுக்கு
அழைத்துப்போக அங்கே ஒரு மூதாட்டி (முகத்தில் என்ன அமைதி!)
வளாகத்தை சுத்தம் செய்து பிரகார சன்னிதிகளில் விளக்கு ஏற்றிக்
கொண்டிருந்தார்.
"இங்கே எப்படி இருக்கீங்க?"
"நிம்மதியா"
அவர் சொல்லும்போதே அந்த உணர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
பின்னர் டிபன் அருந்திக் கொண்டிருந்தபோதே
AKRன்
பாட்டு. ஐஸ்வர்யாவின் நடனம். பேருந்துக்கு வந்ததும்
கொஞ்சங்கூட களைத்துப் போகாத.. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பழக
ஆரம்பித்து இப்போது பிரியும் வேளை வந்து விட்டதே என்று
சிணுங்கும் மனசுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியவில்லை.
ஒன்றே ஒன்றைத் தவிர. 'பிரிவோம்.. சந்திப்போம்.. அடுத்த
கெட்டுகெதரில்..' என்கிற நிலாவின் பிராமிஸைத்தான் சொல்ல
முடிந்தது.
"கேலியாக நான்
பேசிய வார்த்தைகளை மிகவும் சகஜமாக எடுத்துக்கொண்டு அனைவரும்
மகிழ்ந்தது நெஞ்சைத் தொட்டது. இது போல் இன்னும் பல
சந்தர்ப்பங்கள் உங்கள் அனைவருடனும் கலந்து மகிழும் வாய்ப்பு
எப்போது கிடைக்கும் என்று மிகவும் ஆவலாய் இருக்கிறேன்."
என்றார் ஹேமா
இவைகள் அனைத்திற்கும் சூத்திரதாரி - பளீரென்ற சிரிப்பு,
பார்த்தவுடன் பல நாள் பழகிய அந்நியோந்யம், உபசரிப்பதிலும்,
குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தட்டிக் கொடுத்துச் செல்வதிலும்
நிலா என்ற நிர்மலா மனதிற்கு ஒரு குதூகலம்.
பேருந்தில் நிலா, அடுத்தமுறை சந்திப்போம் என்ற பொழுது,
எல்லோரும் பிரியும் தருணம் என்றதால் விருந்தினர்களின் கண்கள்
பனித்துளி ஆயிற்று." என்கிறார் புஷ்பா... அட, சிணுங்கல்
எனக்கு மட்டுமல்ல...
நினைவுப் பரிசுகள் வழங்கியபின் சங்கீதாவிற்கு மனப்பூர்வமாய்
நன்றி தெரிவித்து நிலா குடும்பத்தைத் திருப்பிக் கொண்டு விட
பேருந்து அரை மனதாய்க் கிளம்பியது. (ஆமா.. அடுத்த
get together
எப்போ?)
*******