முதுநிலை மீன்வள அறிவியல்
இரவைப் பகலாக்கும் வெளிச்சம், நகர்ப்புற நாகரீகத்தின்
அடையாளமாகத் திகழ்கிறது. இதில் பெரும்பாலோருக்கு
தெரியாத விஷயம் என்னவெனில் இரவினில் வெளிச்சம் நமக்கு
இடைஞ்சலைத் தரும் என்பதுதான்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டில், நிலம், நீர், காற்றுக்கு
அடுத்தப்படியாக அதிகப்படியான வெளிச்சமும் சூழல்
சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. அதீத வெளிச்சம் தாவர,
விலங்கினங்களைப் பாதிப்பதோடல்லாமல் மனிதர்களையும்
வெகுவாகப் பாதிக்கவல்லது. பூமியில் வாழும் அனைத்து
ஜீவராசிகளும் இரவு, பகல் என்ற சுழற்சியில்
அனுபவப்பட்டே பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து
வந்திருக்கின்றன. இந்த இரவு பகல் சுழற்சி வேறுபாடு
எதனால் ஏற்பட்டது?
நாசாவால் இரவினில் எடுக்கப்பட்ட பூமிப்பந்தின்
தோற்றம் கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண இரவில் வெறுங்கண்ணால் கிட்டத்தட்ட 3500
நட்சத்திரங்களையும், கிரகங்களையும்
பால்வீதியிலிருந்து வரும் வெளிச்சத்தையும் அடையாளம்
கண்டு கொள்ளமுடியும். ஆனால் பெருநகரங்களிலிருந்து
கிளம்பும் அதீத நட்சத்திரங்கள் கூட இரவினில்
கண்ணுக்குத் தெரிவதில்லை.
இத்தகைய விளைவால் நட்சத்திரங்களைக் காட்டி
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டக் கூட வழியில்லாத
நிலை இன்று பெருநகரங்களில் குறிப்பாக வட
அமெரிக்காவின் கிழக்குப்பகுதி, மேற்கு ஐரோப்பா,
ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களால் இருட்டில் இருக்க கண்களைப் பழக்கமுடியும்.
நமக்கு பூனை, புலி போல் இரவுப் பார்வை கிடையாதெனினும்,
நமது கண்களுக்கு இருட்டிற்கு பழக்கமாகும் தன்மை உண்டு.
ஆனால் பெரு நகரங்களில் பிறந்து வெளிச்ச வாழ்க்கைக்கு
உள்ளாகுபவர்களின் கண்களில் இச்சிறப்பம்சம் குறைந்து
வருகிறது.

பெருநகரங்களில் கட்டப்படும் அடுக்கு மாடி அலுவலகங்கள்
மற்றும் டவர்களில் இருந்து கிளம்பும் வெளிச்சம்
வலசைபோகும் பறவைகளை வழி தவறச்செய்து ஆயிரக்கணக்கான
பறவைகளின் சாவுக்கு வழிவகுக்கின்றது. கனடா நாட்டின்
டொரண்டோ நகரில் மட்டும் வருடத்திற்கு 24,000 பறவைகள்
இம்மாதிரி இறந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரையோரங்களில் அமைந்துள்ள சுற்றுலா இல்லங்கள்
மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் வெளிச்சம்
கடலாமைகளின் முட்டையிடுதலையும், முட்டையிலிருந்து
வெளிவரும் குஞ்சுகளையும் தவறான பாதைக்கு வழிநடத்திச்
சென்று அவற்றின் அழிவிற்கு அடிகோலுகின்றது.
ஒரு சிறிய டேபிள் லைட்டின் வெளிச்சம் இரவுத்
தவளைகளின் கண்பார்வையை தடுமாறச் செய்வதற்கு
போதுமானதாகும். மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு
ஆய்வின்படி ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தில் இரவு
ஆட்டத்தின் அதிகப்படியான விளக்கு வெளிச்ச வெள்ளத்தால்
சுற்றுப்புறங்களில் இருந்த தவளைகளின் இனப்பெருக்கம்
தடைபட்டதாம்.
உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி உயிர்வாழத்
தேவையான மற்ற காரணிகளைப்போல, வெளிச்சமும் தேவையான
அளவு இருப்பதும் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
மனித உடலும் 24 மணி நேர இரவு, பகல் சுழற்சிக்குப்
பழக்கப்பட்டதாகும். சிலபேருக்கு இரவில் விளக்கை
அணைத்தால்தான் தூக்கம் வரும். நமது மூளையில்
மெலடோனின் என்னும் ஹார்மோன் இருட்டினில் தான்
சுரக்கின்றது. பகலில் இது சுரப்பதில்லை. இந்த
மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி இரவினில் கண்விழிப்பதால்,
அதிக வெளிச்சத்தில் வேலை பார்ப்பதால் தடைபடுகிறது.
இதனால் விரக்தி, குழந்தைப் பேறின்மை, அசதி மற்றும்
கேன்சர் முதலியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக
அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இரவு ஷிப்டில் வேலை
செய்பவர்கள் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள்.
கனடா மற்றும் அமெரிக்கவில் பல்வேறு தன்னார்வ
அமைப்புகள் இரவின் இருளைப் பாதுகாக்கும் பொருட்டு
அப்பகுதி மக்கள் மற்றும் அரசாங்கங்களை இருட்டைப்
புறந்தள்ளாத விளக்கொளிகளை அமைக்குமாறு
வற்புறுத்துகின்றன.
எத்தனையோ ஆண்டுகளாக இரவின் அழகும், இரவில் வானில்
தெரியும் நட்சத்திரக் கூட்டங்களும்,
பல்லாயிரக்கணக்கான கவிஞர்களுக்கும்,
எழுத்தாளர்களுக்கும் ஓர் உந்து சக்தியாக இருந்து
வருகிறன. இந்த இரவின் இருட்டழகை இழப்பதா?
இரவின் இருட்டை என்ன
இரவல் வாங்கவா முடியும்?
வெளிச்சத்திற்கு வரட்டும் எண்ணங்கள்
வேண்டாத விளக்கொளிகள் விடைபெறட்டும்
பகலை விரட்டுவோம் இரவிலிருந்து
இரவை விரட்டுவோம் பகலிருந்து!
*****